Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   3 - அசுரர் தோற்று படலம்   next padalamasurar thOtRu padalam

Ms Revathi Sankaran (3.92mb)




(கந்தார் மொய்ம்)

கந்தார் மொய்ம்பிற் காசிபன் என்போன் கடிதங்கண்
     வந்தாள் செய்கை காணுத லோடு மகிழ்வெய்தி
          அந்தா உய்ந்தேன் யானென மின்கண் டலர்கின்ற
               கொந்தார் கண்டல் போல்நகை யோடுங் குலவுற்றான். ......    1

(ஆடா நின்றான் குப்பு)

ஆடா நின்றான் குப்புற லுற்றான் அவள்தன்மேல்
     பாடா நின்றான் யாக்கைபொ டிப்பிற் படர்போர்வை
          மூடா நின்றான் அன்னதொர் மாயை முன்சென்றான்
               வீடா நின்ற தன்னுயிர் காக்கும் விதிகொண்டான். ......    2

வேறு

(என்னேசெய வேண்டி)

என்னேசெய வேண்டிற்றவை எல்லாமிசை வாலே
     முன்னேபுரி கிற்பேன்இவண் முனிகின்றதை ஒருவி
          நன்னேயமொ டெனையாளுதிர் நனிவல்லையில் என்னாப்
               பொன்னேர்அடி மிசைதாழ்தலும் அவள்இன்னது புகல்வாள். ......    3

(வெருவுற்றிடல் இவணி)

வெருவுற்றிடல் இவணின்றஎன் வியன்மெய்யினுக் கியையுந்
     திருமிக்குறு தகவாகிய திறன்மேனியும் மேற்கொள்
          உருவொப்பதொர் வடிவும்முடன் உடனெய்திடு வாயேல்
               மருவுற்றிடு கின்றேனென மயில்சொற்றனள் அன்றே. ......    4

(ஏமுற்றிடு முனிவர்)

ஏமுற்றிடு முனிவர்க்கிறை இதுகேட்டலும் முன்னங்
     காமக்கடல் படிகின்றவன் களிசேர்தரும் உவகை
          நாமக்கட லிடைஆழ்ந்தனன் நன்றால்இஃ தென்றான்
               சேமத்திரு நிதிபெற்றிடும் இரவோன்எனத் திகழ்வான். ......    5

(அற்றேமொழி தருத)

அற்றேமொழி தருதன்மையில் ஆர்வத்தொடு தமியேன்
     குற்றேவல்செய் கிற்பேன்இளங் கொடியோரிடை யென்னாச்
          சொற்றேதவ முயல்வன்மையில் துகடீர்தரும் அனிலப்
               பொற்றேரவற் கிலதென்பதொர் புத்தேள்உருக் கொண்டான். ......    6

(அன்றாயதொ ருரு)

அன்றாயதொ ருருவெய்திய அறிவன்றனை வியவா
     நன்றாலுன தியல்பாமென நகையாக்கரம் பற்றாக்
          குன்றாகிய முலையாள்அவற் கொடுபோந்தனள் அங்கட்
               பொன்றாழ்கிரி யெனவோங்குமொர் பொலன்மண்டபம் புகுந்தான். ......    7

வேறு

(கற்பனை இன்றியே)

கற்பனை இன்றியே கடிதின் முன்னுறும்
     அற்புத மண்டபத் தாணை யால்வரும்
          பொற்புறு சேக்கையிற் பொருந்தி னாரரோ
               எற்படு கங்குலின் முதலி யாமத்தில். ......    8

(சூருறு வெம்பசி)

சூருறு வெம்பசி தொலைப்ப வைகலும்
     ஆரஞர் எய்தினோன் அரிதின் வந்திடு
          பேரமு துண்குறு பெற்றி போலவக்
               காரிகை தனைமுனி கடிதிற் புல்லினான். ......    9

(புல்லலும் எதிர்தழீ)

புல்லலும் எதிர்தழீஇப் புகரில் காசிபன்
     தொல்லையில் உணர்வொடு தொலைவில் செய்தவம்
          வல்லையில் வாங்குறு மரபில் அன்னவன்
               மெல்லிதழ் அமிர்தினை மிசைதல் மேயினாள். ......    10

(பின்னுற மாயவள்)

பின்னுற மாயவள் பெரிதுங் காமுறும்
     அன்னவன் புணர்தர அறிவ தொன்றையுந்
          தொன்னெறி அளித்தெனத் தொண்டைச் சேயிதழ்
               முன்னுறும் அமிர்தினை முனிக்கு நல்கினாள். ......    11

(உட்டெளி வின்றி)

உட்டெளி வின்றியே யுலப்பின் றோடிய
     மட்டறு காமமாம் வாரி யுற்றுளான்
          அட்டொளிர் பொன்னனாள் அல்கு லாஞ்சுழிப்
               பட்டனன் இன்பமாம் பரவை நண்ணுவான். ......    12

(தோமறு முனிவரன்)

தோமறு முனிவரன் சுரதத் தாற்றினாற்
     காமரு மதனநூல் கருத்திற் சிந்தியாத்
          தேமொழி மயிலொடு செறிந்து போகமார்
               பூமியி னோரெனப் புணர்தல் மேயினான். ......    13

(செம்மயி லன்ன)

செம்மயி லன்னஇத் தெரிவை தன்னிடை
     எம்மையும் இல்லதோர் இன்பம் இங்ஙனம்
          மெய்ம்மையின் நல்கிய விதியி னார்க்கியான்
               அம்மசெய் கின்றதோர் அளவுண் டோவென்றான். ......    14

(ஆறறி முனிவரன்)

ஆறறி முனிவரன் அநங்க நூன்முறை
     வீறொடு புணர்தலும் வெய்ய மாயவள்
          கீறினள் நகத்தினாற் கீண்ட பால்தொறும்
               ஊறிய காமநீர் ஒழுகிற் றென்பவே. ......    15

(உணர்வுடை முனி)

உணர்வுடை முனிவரன் உயர்ந்த விஞ்சையர்
     மணமுறை இதுவென மாயை தன்னொடு
          புணர்தொழில் புரிந்தனன் போக முற்றினான்
               துணையறும் இன்பெனுங் கடலில் தோய்ந்துளான். ......    16

வேறு

(அந்த வேலையில் முகு)

அந்த வேலையில் முகுந்தனும் அம்புயத் தவனும்
     இந்தி ராதியர் யாவரும் முனிவரர் எவருந்
          தந்தம் உள்ளமேல் நடுக்குற மாயவள் தன்பால்
               வந்து தோன்றினன் சூரபன் மாஎனும் வலியோன். ......    17

(துயக்கம் இல்லதோர்)

துயக்கம் இல்லதோர் சூரன்வந் திடுதலுந் தொல்லை
     முயக்க வேலையில் இருவர்பால் முறைமுறை இழிந்த
          வியர்ப்பில் வந்தனர் முப்பதி னாயிர வெள்ளம்
               வயக்க டுந்திறல் தானவர் யாரினும் வலியோர். ......    18

(அன்னர் தம்மையும்)

அன்னர் தம்மையும் முதலவன் தன்னையும் அங்கண்
     நின்மி னீரென நிறுவியே ஆயிடை நீங்கி
          மின்னு நூலணி முனியொடு மாயவள் வேறோர்
               பொன்னின் மாமணி மண்டபம் அதனிடைப் புகுந்தாள். ......    19

(மானை நேர்பவள்)

மானை நேர்பவள் ஆயிடைத் தொல்லுரு மாற்றி
     மேன சூரரிப் பிணாவுருக் கொள்ளலும் விரைவில்
          தானு மோர்திறல் மடங்கலே றாமெனச் சமைந்தான்
               மோன மாய்முனம் அருந்தவம் இயற்றிய முதல்வன். ......    20

(மங்கை யோடவன்)

மங்கை யோடவன் மடங்கலாய் மகிழ்வுடன் புணரக்
     கங்குல் வாயிரண் டாகிய யாமமேற் கடிதே
          அங்கை ஓரிரண் டாயிரம் ஆயிர முகமாய்ச்
               சிங்க மாமுகன் தோன்றினன் திடுக்கிடத் திசைகள். ......    21

(இத்தி றத்திவர்)

இத்தி றத்திவர் இருவரும் புணர்வுழி யாக்கை
     மெத்தி வீழ்தரும் வியர்ப்பினில் விறல்அரி முகராய்ப்
          பத்து நால்வகை ஆயிர வெள்ளமாம் படைஞர்
               கொத்தி னோடுவந் துதித்தனர் கூற்றுயிர் குடிப்பார். ......    22

(மற்றும் அத்தொகை)

மற்றும் அத்தொகை யோரையும் மாமகன் றனையும்
     நிற்றிர் ஈண்டென மாயவள் வீற்றொரு நிலயந்
          தெற்றெ னப்புகுந் தோர்பிடி உருக்கொடு சேரக்
               கொற்ற மால்களிற் றுருவினை முனிவனுங் கொண்டான். ......    23

(பேரு மும்மத)

பேரு மும்மத மால்களிற் றுருக்கொடு பிடிமேல்
     சேரு கின்றுழி மூன்றெனச் செல்லும்யா மத்தில்
          ஈரி ரண்டுவாள் எயிற்றுடன் யானைமா முகத்துத்
               தார காசுரன் தோன்றினன் அவுணர்கள் தழைப்ப. ......    24

(ஏலும் அங்கவர்)

ஏலும் அங்கவர் மெய்ப்படு வியர்ப்பினும் இபத்தின்
     கோல மானவர் தோன்றினர் அவர்குழுக் குணிக்கின்
          நாலு பத்தின்மேல் ஆயிர வெள்ளமா நவின்றார்
               மூல நாடியே இப்பரி சுணர்த்திய முனிவர். ......    25

(ஆண்டு தாரகன்)

ஆண்டு தாரகன் தன்னையும் அவுணர்கள் தமையும்
     ஈண்டு நிற்றிரென் றோர்மணி மண்டபத் திறுத்து
          மாண்ட யாமமேல் தகர்ப்பிணா உருக்கொள மாயை
               பூண்ட அன்பினான் செச்சையின் உருக்கொடு புணர்ந்தான். ......    26

(புணர்ந்த காலை)

புணர்ந்த காலையில் அசமுகி தோன்றினள் புவியோர்க்
     கணங்கு செய்தகர் முகவராய் அங்கவர் வியர்ப்பில்
          கணங்கொள் முப்பதி னாயிர வெள்ளமாங் கணிதத்
               திணங்கு தானவர் உதித்தனர் இமையவர் கலங்க. ......    27

(மீள மற்றவர்)

மீள மற்றவர் தம்மையும் நிறுவிவே றுள்ள
     சூளி கைப்பெரு மண்டபந் தொறுந்தொறும் ஏகி
          யாளி வல்லியம் புரவிமான் ஒரிஎண் கேனங்
               கூளி ஆதியாம் விலங்கின துருவெலாங் கொண்டார். ......    28

(இறுதி யில்லதோர்)

இறுதி யில்லதோர் விலங்கின துருவுகொண் டிரவின்
     புறம தாகிய புலரிசேர் வைகறைப் பொழுதின்
          முறையின் மாயையும் முனிவனும் ஆகியே முயங்கி
               அறுப தாயிர வெள்ளமாம் அவுணரை அளித்தார். ......    29

(மிகுதி கொண்டிடும்)

மிகுதி கொண்டிடும் இரண்டுநூ றாயிர வெள்ளந்
     தகுவர் தம்மையுஞ் சூரனே முதலினோர் தமையும்
          புகலும் ஓரிராப் பொழுதினில் அளித்ததற் புதமோ
               அகில மும்வல மாயவட கிச்செயல் அரிதோ. ......    30

(ஆங்க வெல்லையின்)

ஆங்க வெல்லையின் அண்டமா யிரத்தெட்டின் உள்ளுந்
     தீங்கு கொண்டிடுங் குறிகளுள் ளனவெலாஞ் செறிந்து
          நீங்க லின்றியே நிகழ்வன நீர்மைகண் டெவரும்
               ஏங்கு கின்றனர் விளைவதென் னோவென இரங்கி. ......    31

(அல்லெ னும்பொழு)

அல்லெ னும்பொழு திறத்தலும் மாயவ ளரிவைத்
     தொல்லை நல்லுருக் கோடலும் முனியும்அத் துணையே
          வல்லை தன்னுரு முன்னையிற் கொண்டனன் மற்றவ்
               வெல்லை தன்னிடை உதயவாய் அணுகினன் இரவி. ......    32

(நிட்டைக் கேற்றிடு)

நிட்டைக் கேற்றிடு முனிவனை மாயவள் நிசியில்
     விட்டுப் போந்திலள் அற்புதம் என்விளைந் ததுவோ
          கிட்டிக் காண்பன்என் றுதயமாங் கிரிப்புறத் தணுகி
               எட்டிப் பார்த்தனன் என்னவே உதித்தனன் இரவி. ......    33

வேறு

(எல்லைவந் திடுத)

எல்லைவந் திடுதலும் ஈன்ற மாயவள்
     செல்லுறும் அப்புவி செறிந்து சேணினுஞ்
          சொல்லிய திசையினுந் துவன்றி யார்த்திடும்
               ஒல்லெனுஞ் சனத்தினை உவந்து நோக்கினாள். ......    34

(விண்டுறு தானவர்)

விண்டுறு தானவர் வெள்ளம் யாவையுங்
     கண்டனன் எந்தைதன் கருமம் இச்செயல்
          கொண்டிலம் மாயையிற் கூடிற் றீதெனா
               அண்டரும் அற்புதம் அடைகுற் றான்முனி. ......    35

(பற்பகல் அருந்த)

பற்பகல் அருந்தவம் பயின்ற தூயனும்
     பொற்புறு மாயையும் புதல்வர் தந்தொகை
          அற்புத மோடுகண் டன்பின் நீரராய்
               நிற்புழித் தெரிந்தனன் நேரில் சூரனே. ......    36

(இருமுது குரவரும்)

இருமுது குரவரும் ஈண்டுற் றாரவர்
     திருவடி வணங்கியாஞ் செய்தி றத்தினை
          மரபொடு வினவுதும் வம்மின் நீரெனா
               அரிமுகன் தாரகன் அறியக் கூறினான். ......    37

(அறைகழல் இளைய)

அறைகழல் இளையவர் அதனைத் தேர்வுறீஇ
     உறுதியி தாமென வுரைத்துப் பின்வரத்
          துறுமல்கொண் டிருந்ததன் தொல்ப தாதியை
               நிறுவினன் அவ்விடை நின்று நீங்கினான். ......    38

ஆகத் திருவிருத்தம் - 1959



previous padalam   3 - அசுரர் தோற்று படலம்   next padalamasurar thOtRu padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]