Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   2 - காசிபன் புலம்புறு படலம்   next padalamkAsiban pulambuRu padalam

Ms Revathi Sankaran (5.95mb)




(தேனீர் மையென)

தேனீர் மையெனப் புகல்வாள் சிறிதுந்
     தானீ ரமிலாள் தனிமா யவளே
          மானீர் உமதாம் வயின்உற் றனளோ
               ஏனீர் மொழியா திரிகின் றதுவே. ......    1

(சிலைவா ணுதலாள்)

சிலைவா ணுதலாள் திறன்மா யையெனும்
     வலைவீ சியெனா ருயிர்வவ் வினளால்
          கலையீர் இவண்நீர் அதுகண் டனிரோ
               நிலையீர் வெருளா நெடிதோ டுதிரால். ......    2

(கடிதேர் களிறே)

கடிதேர் களிறே கழிகா தலையாய்ப்
     பிடிதேர் பரிசாற் பெயர்வாய் தமியேன்
          நொடிதே தளரா நெறிநே டினையக்
               கொடியாள் தனையுங் கொணராய் கொணராய். ......    3

(அருளால் உனையே)

அருளால் உனையே அளியென் றனரால்
     பெரியார் அவர்சொற் பிழையா குவதோ
          தரியா அரியே தமியேன் உயிரைத்
               தெரிவான் நினைவோ திரிகின் றனையே. ......    4

(மேவிப் பிரிவாள்)

மேவிப் பிரிவாள் விழிபோல் அடுவாய்
     ஆவிக் குறவோ அலைமன் மதனப்
          பாவிக் கும்இனிப் படையாய் வருவாய்
               வாவிக் குவளாய் எனைவாட் டுதியோ. ......    5

(செந்தா மரைமேல்)

செந்தா மரைமேல் திருவாம் எனவே
     வந்தாள் தணியா மயல்செய் தகல்வாள்
          அந்தோ வினவா அவளைக் கொணர்வான்
               சந்தா கிலையென் சந்தே உரையாய். ......    6

(பொன்னிற் பொலிவு)

பொன்னிற் பொலிவுற் றிடுபூங் கமலந்
     தன்னில் துணையோ டுதழீஇத் தணவா
          அன்னப் பெடைகாள் அறனோ புகலீர்
               என்னைத் தனிவைத் தவளே கியதே. ......    7

(தணியா வகைமால்)

தணியா வகைமால் தமியேற் கருளித்
     துணியா அகல்வாள் படர்தொல் நெறியைக்
          குணியா வுரைசெய் குதியென் றிடினுங்
               கணியாய் இதுவோ கணிதன் இயல்பே. ......    8

(படைவேள் கணை)

படைவேள் கணையே பரிதிக் குறவே
     மடவார் முகமே மதியின் பகையே
          விடமே புரையும் விழிமெல் லியல்நின்
               னிடமே வருவாள் ஒளியா திசையாய். ......    9

(நின்றீர் மிகவு)

நின்றீர் மிகவுந் நெடியீர் பெரியீர்
     இன்றீ ரமிலா தெனைநீங் கினள்முன்
          சென்றீ ரவள்போஞ் செயல்கா ணுதிர்செய்
               குன்றீர் மொழியீர் குறைசெய் துளனோ. ......    10

(மயிலே ரியலாள்)

மயிலே ரியலாள் ஒருமா யவளே
     இயலே தறியேன் இவண்நின் றனளோ
          பயிலே சிலநீ பகர்வாய் அதனால்
               குயிலே எனதா ருயிர்கொள் ளுதியோ. ......    11

(நின்பால் வரவே)

நின்பால் வரவே நினைவாய் மொழிவாள்
     என்பால் இலையிவ் வழியே கினளால்
          மென்பா லெனமே வியமா ருதமே
               தென்பால் வருவாய் செயல்கூ றுதிநீ. ......    12

(ஆரத் தடமே)

ஆரத் தடமே அருள்நீ ரினைஉள்
     ளீரத் தினையென் றெவரும் புகல்வார்
          சாரிற் சுடுவாய் தளரேல் எனவே
               சோர்வுற் றிடுமென் துயர்தீர்க் கிலையே. ......    13

(களிசேர் மயிலே)

களிசேர் மயிலே கவிரா கியவாய்க்
     கிளியே குயிலே கிளைதான் அலவோ
          தளரா வகைநீர் தகவே மொழியா
               அளியேன் உயிருக் கரணா குதிரால். ......    14

(அறவே துயர்செய்)

அறவே துயர்செய் தணுகா திகலித்
     துறவே துணிவாள் தொடர்புந் தொடர்போ
          உறவே யினிநீர் உவள்போம் நெறியைப்
               புறவே தமியேன் பெறவே புகல்வீர். ......    15

(எனவே பலவும்)

எனவே பலவும் இயல்சேர் முனிவன்
     மனமால் கொடுசொற் றிடமற் றதனை
          வினவா மகிழா வியன்மெய்ம் மறையா
               அனமே யனையாள் அவணுற் றிடலும். ......    16

வேறு

(நோற்குறு முனிவன்)

நோற்குறு முனிவன் தன்பால் நொய்தென மாயை யெய்தித்
     தீர்க்கலா மையல் பூட்டிச் செய்தவம் அழித்தாள் அந்தோ
          பார்க்கிலன் இதனை யென்னாப் பரிவுசெய் தகன்றான் போலக்
               கார்க்கடல் வரைப்பின் ஏகிக் கதிரவன் கரந்தான் அன்றே. ......    17

(தந்தைகா சிபன்)

தந்தைகா சிபன்என் றோதுந் தவமுனி யவன்பாற் சார
     வந்துளாள் யாயே அன்றோ மற்றிவர் தலைப்பெய் கின்ற
          முந்துறு புணர்ச்சி காண்டல் முறைகொலோ புதல்வற் கென்னாச்
               சிந்தைசெய் தகன்றான் போன்று தினகரக் கடவுள் சென்றான். ......    18

(அந்தமில் நிருதர்)

அந்தமில் நிருதர் என்னும் அளவைதீர் பானாட் கங்குல்
     வந்திடு மின்னே யென்னா வல்லையின் மதித்து வானத்
          திந்திரன் ஆணை போற்றும் இலங்கெழில் நேமிப் புத்தேள்
               சிந்துவிற் கரத்தல் போன்று செங்கதிர்ச் செல்வன் போனான். ......    19

(வேலையின் இரவி)

வேலையின் இரவி செல்ல விண்ணவர் யாருங் கொண்ட
     வாலிய திருவுஞ் சீரும் வன்மையும் அகல மாயை
          பாலுறும் அவுணர் தானைப் பல்குழுப் பரவிற் றென்ன
               மாலையும் இருளின் சூழ்வும் வல்லைவந் திறுத்த வன்றே. ......    20

(மாகமேல் நிமிர்ந்த)

மாகமேல் நிமிர்ந்த செக்கர் மாலையம் பொழுது நல்கூர்ந்
     தீகெனா இரக்கும் நீரார்க் கிம்மியின் துணைய தேனும்
          ஒகையால் வழங்கா நீதி ஒன்னலான் ஒருவன் செல்வம்
               போகுமா றென்ன வாளா பொள்ளெனப் போயிற் றாமால். ......    21

(இரும்பிறை உருவின்)

இரும்பிறை உருவின் எஃகார் கூர்ங்குயத் தினுமீர்க் கல்லா
     வரம்பறும் இருளின் கற்றை கணங்களும் மருளு நீராற்
          பரம்பிய தியாண்டு மாகிப் பாரெனப் பட்ட மாது
               கரும்படாம் ஒன்று மேற்கோள் காட்சியைப் போன்ற தன்றே. ......    22

(வண்டுழாய் மோலி)

வண்டுழாய் மோலி மைந்தன் மாலிருட் கங்குல் வேழத்
     தெண்டரு வதனம் பட்ட இரும்புகர்ப் புள்ளி யென்ன
          அண்டர்தந் தருக்கள் சிந்தும் அணிமல ரென்ன வான்றோய்
               கொண்டலிற் படுமுத் தென்னத் தாரகை குலவிற் றன்றே. ......    23

(துண்ணென உலக)

துண்ணென உலக முற்றுஞ் சூழ்ந்தபே ரிருளா நஞ்சைத்
     தெண்ணில வாகி யுள்ள செங்கையால் வாரி நுங்கி
          விண்ணவர் புகழ நீல வியன்நிறந் தன்பாற் காட்டுங்
               கண்ணுதல் போன்று முந்நீர்த் தோன்றினன் கதிர்வெண் டிங்கள். ......    24

(அழுந்துறு பாலின்)

அழுந்துறு பாலின் வேலை அமரர்கள் கடைந்த காலைச்
     செழுந்துளி மணிக ளொடுந் தெறித்தென உடுக்கள் தோன்றக்
          கழுந்துறும் அவுணர் என்னுங் காரிருள் தொலைய அங்கண்
               எழுந்ததோ ரமுதம் போன்றும் இலங்கினன் இந்து வென்பான். ......    25

(இரவெனும் வல்லோன்)

இரவெனும் வல்லோன் ஞால மென்பதோர் உலையில் வேலைக்
     கரியுறு வடவைத் தீயில் களங்கொடு வெண்பொன் சேர்த்தி
          விரைவொடு செம்மை செய்து மீட்டுமோர் மருந்தால் தொல்லை
               உருவுசெய் தென்னச் செங்கேழ் ஒளிமதி வெளிய னானான். ......    26

(அண்டருங் ககன)

அண்டருங் ககன மென்னும் அகலிருந் தடத்திற் பூத்த
     விண்டதோர் குவளை ஆம்பல் போலுமால் மீன்கள் வெள்ளைப்
          புண்டரீ கத்தைப் போலும் புதுமதி அதன்கட் டேனார்
               வண்டினம் ஒப்ப தன்றே மாசுதோய் களங்க மாதோ. ......    27

(அலைதரு நேமி)

அலைதரு நேமி என்னும் ஆன்றதோர் தடத்தின் பாலாம்
     நிலவெனும் வலையை யோச்சி நிழல்மதிப் பரதன் ஈர்த்துப்
          பலநிறங் கொண்ட மீன்கள் பன்முறை கவர்ந்து வான்மேற்
               புலருற விரித்த தேபோற் பொலிந்தன உடுவின் பொம்மல். ......    28

(கழிதரும் உவரி)

கழிதரும் உவரி நீத்தங் கையகப் படுத்து மாந்தி
     எழிலிகள் வான மீப்போய் இருநிலத் துதவல் காணூஉப்
          பழிதவிர் மதியப் புத்தேள் பாற்கடல் பருகி யாண்டும்
               பொழிதரும் அமிர்தம் என்னப் புதுநிலாப் பூத்த தன்றே. ......    29

(மலர்ந்திடுங் கடவு)

மலர்ந்திடுங் கடவுட் டிங்கள் வாணிலாக் கற்றை எங்குங்
     கலந்தன உலகில் யாருங் களித்தனர் குமுத மாதி
          அலர்ந்தன தளிர்த்த சோலை அம்புயப் போது செவ்வி
               புலர்ந்தன ஒடுங்கு கின்ற புகைந்தன பிரிந்தோர் புந்தி. ......    30

(அல்லவை புரியா)

அல்லவை புரியா ரேனும் அறிவினிற் பெரியா ரேனும்
     எல்லவர் தமக்கு நண்பாய் இனியவே புரிதற் பாற்றோ
          பல்லுயிர்த் தொகைக்கும் இன்பம் பயந்திடு மதிகண் டன்றோ
               புல்லிய கமல மெல்லாம் பொலிவழிந் திட்ட வன்றே. ......    31

(திங்களின் மலர்ந்த)

திங்களின் மலர்ந்த செவ்வித் தேன்முரல் குமுதம் எங்கோன்
     பங்கமுற் றார்கண் மேவான் பதுமம்ஏன் ஒடுங்கிற் றென்னாத்
          தங்களில் உரைத்தல் போலாஞ் சசிக்கது உண்மை எம்பால்
               இங்கிலை யென்ப போன்ற இசையளி பொதிந்த கஞ்சம். ......    32

(கங்குல்வந் திறுத்த)

கங்குல்வந் திறுத்த காலைக் கடிமனைக் கதவம் பூட்டிச்
     செங்கண்மால் தன்னைப் புல்லித் திருமகள் இருந்தா ளென்னக்
          கொங்கவிழ் கின்ற செங்கேழ்க் கோகன தங்கள் எல்லாம்
               பொங்கிசை மணிவண் டோடும் பொதிந்தன பொய்கை யெங்கும். ......    33

வேறு

(ஆனதோர் காலையில் அம)

ஆனதோர் காலையில் அமரர் தம்மையுந்
     தானவர் தம்மையுந் தந்த காசிபன்
          வானகம் எழுதரும் மதியின் தெண்ணிலா
               மேனிய தடைதலும் வெதும்பி னானரோ. ......    34

(குலைந்தனன் தன்)

குலைந்தனன் தன்னுளங் குறைந்த வன்மையன்
     அலந்தனன் உயிர்த்தனன் அறிவு சோர்ந்தனன்
          புலர்ந்தனன் ஒடுங்கினன் புலம்பி அங்கண்வான்
               நிலந்தனில் எழுதரு நிலவை நோக்கினான். ......    35

(காலையில் எழுந்த)

காலையில் எழுந்தசெங் கதிரின் நாயகன்
     மாலையம் பொழுதினில் மறைந்து கீழ்த்திசை
          வேலையில் விரைவுடன் மீண்டும் வந்துளான்
               போலும்அந் தோவிது புதுமையோ வென்பான். ......    36

(ஞாயிறும் அன்றெ)

ஞாயிறும் அன்றெனில் நடுவ ணாகியே
     பாயிரும் புணரியுட் பயின்று தோன்றலால்
          ஏயென உலகட எண்ணி யாண்டுறுந்
               தீயெனுங் கடவுளே திங்கள்அன் றென்பான். ......    37

(இந்துவென் றுல)

இந்துவென் றுலகெலாம் இசைப்ப நின்றதோர்
     செந்தழற் கடவுள்இத் திசையிற் செல்வுழி
          வந்ததோர் சோதிகொல் வானம் எங்கணும்
               அந்தியஞ் செக்கரென் றடைந்தவா றென்பான். ......    38

(காண்டகு மதியென)

காண்டகு மதியெனக் கழறுஞ் செந்தழல்
     மூண்டிடு புகைகொலோ முன்னம் வானமும்
          ஈண்டுறு தரணியுந் திசையும் எங்குமாய்
               நீண்டதோர் இருளென நிமிர்ந்தவா றென்பான். ......    39

(தெண்டிரைப் பிற)

தெண்டிரைப் பிறந்திடுந் திங்கட் செந்தழல்
     கொண்டது வாலிதாங் கோலங் காரிடைக்
          கண்டனன் இத்திறங் கரையில் ஆவிகள்
               உண்டதிற் பெற்றதிவ் வுருவமே யென்பான். ......    40

(ஊனமில் செக்கராய்)

ஊனமில் செக்கராய் உதித்துப் பின்னரே
     வானிற னாகிய மதியத் தீத்தரத்
          தானிறை புலிங்கமே அலது தாரகை
               மீனெனப் படுவது வேறுண் டோவென்பான். ......    41

(மால்கடல் அதனிடை)

மால்கடல் அதனிடை வந்த பான்மையால்
     ஆலமி தாகுமால் அமரர்க் கன்றெழு
          நீலமெய் யுருவினை நீத்துத் திங்களின்
               கோலமொ டின்றிவட் குறுகிற் றோவென்பான். ......    42

(இங்கிவை யாவுமன்)

இங்கிவை யாவுமன் றேர்கொள் வேலையில்
     வெங்கனல் முழுவதும் விடமும் ஆர்ந்தெழீஇ
          மங்குலிற் சிதறிட வானிற் புக்கனன்
               திங்களே யாமிது திண்ணம்என் கின்றான். ......    43

(இனையன மருட்கை)

இனையன மருட்கையால் இசைத்த காசிப
     முனிவரன் என்பவன் முன்னை மாயையை
          நினைபவ னாகியே நெடிது காதலால்
               அனையவள் தனைவிளித் தரற்றல் மேயினான். ......    44

வேறு

(கொங்குண் கோதை)

கொங்குண் கோதைத் தாழ்குழல் நல்லீர் கொடியேன்முன்
     எங்கு மெங்குங் காணுறு கின்றீர் எழின்மின்னின்
          பொங்குஞ் சோதி போலெதிர் புல்லும் படிநில்லீர்
               மங்கும் போதோ சேருதிர் நெஞ்சம் வலியீரே. ......    45

(முன்னஞ் செய்தீர்)

முன்னஞ் செய்தீர் காதலை நோன்பை முதலோடும்
     பின்னஞ் செய்தீர் மாரனை ஏவிப் பிழைசெய்தீர்
          சின்னஞ் செய்தீர் நல்லுணர் வெல்லாஞ் சிறியேனுக்
               கின்னஞ் செய்யும் பெற்றியும் உண்டேல் இசையீரே. ......    46

(வாகாய் நின்ற)

வாகாய் நின்ற குன்றமும் யாவும் வருவித்தீர்
     ஏகா நின்றீர் இவ்விடை தன்னில் ஏனைநீங்கிப்
          போகா நின்றீர் வல்லையின் மீண்டும் புவியெங்கும்
               ஆகா நின்றீர் நுஞ்செயல் யாரே அறிகிற்பார். ......    47

(பற்றே நும்பால்)

பற்றே நும்பால் ஆயினன் முன்னம் பயில்செய்கை
     அற்றேன் வேளால் ஆற்றவும் நொந்தேன் அஃதாயும்
          உற்றேன் அல்லேன் உம்மொடும் இன்னும் உழல்கின்றேன்
               பெற்றேன் வாளா மாய்ந்தனன் என்னும் பிழையொன்றே. ......    48

(நேயங் கொண்டீ)

நேயங் கொண்டீ ராமென வந்தீர் நெறிநில்லா
     மாயங் கொண்டீர் வன்றிறல் கொண்டீர் மயல்செய்யுங்
          காயங் கொண்டீர் ஆருயிர் நிற்கக் கருதீரேல்
               தாயங் கொண்டீர் கூற்றொடு போலுந் தனிவந்தீர். ......    49

(வேண்டேன் வேறோர்)

வேண்டேன் வேறோர் மாதரை நும்பால் வியன்மோகம்
     பூண்டேன் உம்மை மாயவ ரென்னும் பொருள்கண்டேன்
          ஈண்டே சென்றீர் போல்கர வுற்றீர் எய்தீரேல்
               மாண்டேன் இன்னே ஆருயிர் நிற்பான் வருவீரே. ......    50

(ஒன்றே யாகும்)

ஒன்றே யாகும் மாயம தால்நீ ருலகெல்லாம்
     வென்றே செல்வீர் என்னுயிர் கொள்வான் விழைவீரேல்
          நன்றே நன்றே நல்குவன் யானே நனிநண்பால்
               சென்றே யோர்கால் மாமயல் தீரச் சேர்வீரே. ......    51

(என்னா வென்னா)

என்னா வென்னா இத்தகை பன்னி இடராழித்
     துன்னா மாழ்கிச் சோர்தரும் எல்லைத் துகடீரும்
          மின்னா கின்ற மாயவள் அன்னான் விழிகாண
               முன்னாய் நின்றாள் எவ்வினை கட்கு முதலானாள். ......    52

ஆகத் திருவிருத்தம் - 1921



previous padalam   2 - காசிபன் புலம்புறு படலம்   next padalamkAsiban pulambuRu padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]