Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

previous padalam   13 - ததீசி யுத்தரப் படலம்   next padalamThadheesi yuththarap padalam

Ms Revathi Sankaran (9.41mb)
(1 - 79)



Ms Revathi Sankaran (8.74mb)
(80 - 142)



Ms Revathi Sankaran (9.38mb)
(143 - 225)



Ms Revathi Sankaran (9.26mb)
(226 - 314)



Ms Revathi Sankaran (9.01mb)
(315 - 388)




(இந்த வண்ணமத்)

இந்த வண்ணமத் ததீசிமா முனிவரன் இயம்பக்
     கந்த மாமலர்க் கடவுள்சேய் நகைசெய்து கானிற்
          சிந்து மென்பொடு சிரத்தொகை அணியுமோ தேவர்
               வெந்த சாம்பரும் பூசுமோ பரனெனும் மேலோன். ......    1

(கழிந்த தீயுடல்)

கழிந்த தீயுடல் ஏந்தியே திரியுமோ கானில்
     இழிந்த கேசமுந் தரிக்குமோ ஏனத்தின் எயிறு
          மொழிந்த கூருமத் தோடுமேற் கொள்ளுமோ உலகம்
               அழிந்தி டும்படி உயிர்களை முடிக்குமோ அமலன். ......    2

(புலியின் ஈருரி)

புலியின் ஈருரி உடுக்குமோ தந்தியின் புன்றோல்
     வலிய தன்புயம் போர்க்குமோ செந்தழல் மழுமான்
          இலைகொள் முத்தலை வேற்படை ஏந்துமோ எங்கும்
               பலியு மேற்குமோ நிருத்தமுஞ் செய்யுமோ பகவன். ......    3

(மிக்க சாரதர்)

மிக்க சாரதர் படையெனத் திரியுமோ விடமே
     கக்கும் வெம்பணி பூணுமோ வெண்டலை கலமாச்
          செக்கர் மாமுடி தரிக்குமோ அம்பரந் திசையா
               நக்க னாகுமோ வேற்றுருக் கொள்ளுமோ நாதன். ......    4

(விடையும் ஏறுமோ)

விடையும் ஏறுமோ ஆலமுங் கொள்ளுமோ வீந்தோர்
     சுடலை தன்னினும் ஆடுமோ ஒருத்தியைச் சுமந்தோர்
          மடம கட்கிடங் கொடுக்குமோ மகவையும் பெறுமோ
               கடிய தோர்குணம் படைக்குமோ பரமெனுங் கடவுள். ......    5

(ஆதலால் உங்கள்)

ஆதலால் உங்கள் ஈசனோர் குணமிலன் அவனுக்
     கீத லின்றியாம் புரிகின்ற மகத்தவி எனலும்
          நாத னைக்கொலோ பழிக்குவன் இவனென நகையாக்
               கோதின் மாதவ முனிவரன் அழலெனக் கொதித்தான். ......    6

(தீர்த்தன் உண்மையை)

தீர்த்தன் உண்மையை உணர்கிலன் இவனொடு சிறிதும்
     வார்த்தை கூறுதல் தகாதுமால் அயன்முதல் வானோர்
          ஆர்த்தசங் கத்தில் இகழ்ந்தவற் கெதிர்மொழி யறைய
               ஈர்த்த தென்னுளம் உணர்த்துவன் சிலவென இசைந்தான். ......    7

(இந்த வாறிசைந்)

இந்த வாறிசைந் தெம்பெரு மான்றனக் கிவண்நீ
     நிந்தை போற்சில கூறினை நிமலனுக் கவைதாம்
          வந்த வண்ணமோர் சிறுவதும் உணர்ந்திலை மருண்டாய்
               புந்தி யில்லதோர் கயவநீ கேளெனப் புகல்வான். ......    8

(நிலவு கின்றதன்)

நிலவு கின்றதன் னருளுருக் கொண்டிடு நிமலன்
     தலைமை பெற்றிடு புங்கவர் தம்மைமுன் தந்தே
          உலகம் யாவையும் அளித்தருள் செய்திட உதவி
               அலகி லாவுயிர் யாவையும் அயன்கண்நின் றளிப்பான். ......    9

(மாய வன்கண்நின்)

மாய வன்கண்நின் றவையெலாம் போற்றிமற் றவைக்குத்
     தூய துப்புர வருத்தியே மேல்வினை தொலைச்சி
          ஆய வற்றிலோர் பற்பல வீடுற அருளி
               மேய ஆருயிர் உலகெலாம் பின்னரே வீட்டும். ......    10

(அன்ன வேலையில் அவை)

அன்ன வேலையில் அவையெலாம் அழித்தபின் னளிப்போர்
     என்ன நின்றவர் தம்மையும் ஒடுக்குறும் இதற்பின்
          முன்ன ருள்ளதோர் ஏகமாய் உறையும்எம் மூர்த்தி
               பின்னும் இம்முறை புரிந்திடும் என்றும்இப் பெற்றி. ......    11

(பரமன் இவ்வகை)

பரமன் இவ்வகை அடுந்தொறும் அடுந்தொறும் பலவாம்
     பிரம னாதியோர் என்பினைத் தரிக்குமப் பெரியோர்
          சிரமெலாந் தொடுத்த ணியலா அணிந்திடுஞ் சிகைதன்
               உரமு லாவுமுந் நூலென வேயணிந் துறையும். ......    12

(அல்ல தங்கவர்)

அல்ல தங்கவர் தங்களை முத்தலை அயிலால்
     மெல்ல வேயெடுத் தேந்திடும் அவர்தமை விழியால்
          தொல்லை நாளின் நீறாக்கியும் புனைந்திடுந் தூயோன்
               மல்லல் மாதவம் அனையவர் இயற்றிய வகையால். ......    13

(ஆத லால்தனை)

ஆத லால்தனை வியப்பதற் கன்றவை அணிதல்
     ஈத லாதொரு திறமுள தியாவரும் எவர்க்கும்
          நாத னேயிவன் என்றுதன் பாங்கரே நண்ணித்
               தீதெ லாமொரீஇ முத்திபெற் றுய்ந்திடுஞ் செயலே. ......    14

(என்பு நீறொடு)

என்பு நீறொடு கழியுடல் சிகைமுடி எனைத்தும்
     முன்ப ணிந்திடும் இயல்பினை முழுதுயிர்த் தொகைக்கும்
          அன்பு செய்திடுஞ் செயலிது வாமென அறிநீ
               பின்பு முள்ளதுங் கேண்மதி அகந்தையாற் பெரியோய். ......    15

(விண்ணு ளோர்)

விண்ணு ளோர்க்கெலாம் அல்லலே வைகலும் விளைத்து
     நண்ணும் ஆடகக் கண்ணினன் முன்னமோர் நாளில்
          மண்ண கந்தனை வௌவியே வயிற்றிடை வைத்துத்
               துண்ணெ னப்பிலம் புக்கனன் உயிரெலாந் துளங்க. ......    16

(கண்டு வானவர்)

கண்டு வானவர் யாவரும் அஞ்சினர் கரிய
     கொண்டல்நன் மேனியம் பண்ணவன் கோகன தத்தோன்
          துண்ட மாகிய விடத்திலோர் ஏனமாய்த் தோன்றி
               அண்ட மீதுபோய் வடவரை எனவளர்ந் தார்த்தான். ......    17

(ஓரி மைக்குமுன்)

ஓரி மைக்குமுன் பாதலந் தன்னில்மால் உற்றுக்
     கூரெ யிற்றினாற் பாய்ந்துபொற் கண்ணனைக் கொன்று
          பாரி னைக்கொடு மீண்டுமுன் போலவே பதித்து
               வீர முற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும். ......    18

(மாலும் அப்பகல்)

மாலும் அப்பகல் அகந்தையாய் உணர்வின்றி மருப்பால்
     ஞாலம் யாவையும் அழிதர இடந்தவை நனிசூழ்
          வேலை தன்னையும் உடைத்தனன் அன்னதோர் வேலை
               ஆல மார்களத் தண்ணல்கண் டெய்தினான் அங்கண். ......    19

(கண்டு கண்ணுதல்)

கண்டு கண்ணுதல் அவன்மருப் பொன்றினைக் கரத்தால்
     கொண்டு வல்லையிற் பறித்தலும் உணர்வுமுன் குறுக
          விண்டு மற்றதும் பறிப்பன்இங் கிவனென வெருவிப்
               பண்டு போலநின் றேத்தலும் போயினன் பரமன். ......    20

(அன்று கொண்டதோர்)

அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
     இன்றும் அங்கவன் மார்பிடைப் பிறையென இலங்கும்
          ஒன்று மற்றிது கேட்டனை நின்றதும் உரைப்பாம்
               நன்று தேர்ந்துணர் மறைகளும் இத்திறம் நவிலும். ......    21

(அடலின் மேதகு)

அடலின் மேதகு தேவரும் அவுணரும் அந்நாட்
     கடல்க டைந்திடும் எல்லையின் மந்தரங் கவிழ
          நெடிய மாலது நிறுவியே பொருக்கென நீத்தந்
               தடவி உள்ளணைந் தாமையாய் வெரிநிடைத் தரித்தான். ......    22

(தரித்த வேலைஅவ்)

தரித்த வேலைஅவ் வேலையை மதித்திடத் தன்கண்
     அருத்தி மிக்குறும் அமிர்தினைத் தருதலும் அதனைத்
          தெரித்து மற்றிது நமதென நமதெனச் செப்பி
               மருத்தின் நன்மையால் அமரரும் அவுணரும் மலைந்தார். ......    23

(மலைந்த போரினை)

மலைந்த போரினை நீக்கலன் மாயன்இவ் வரையை
     அலைந்த வேலையின் நிறுவியே வெரிநிடை ஆற்றி
          உலைந்தி டாவகை காத்துமா லெனப்பெரி துன்னக்
               கலந்த தால்அவன் உளத்தினில் அகந்தையங் கடலே. ......    24

(அகந்தை எய்தியே)

அகந்தை எய்தியே யாவையுந் தேற்றலான் அலைபோய்த்
     திகந்த முற்றிட வேலைகள் உழக்கினன் திரியச்
          சகந்த னக்கழி வெய்தலும் தனதருட் டன்மை
               இகந்த னன்கொலாம் கண்ணனென் றுன்னினன் எங்கோன். ......    25

(அற்றை நாளவண்)

அற்றை நாளவண் வல்லையில் ஏகியே அரிதன்
     முற்ற லாமையின் உருவினை நோக்கியே முனிந்து
          கற்றை வார்சடைக் கண்ணுதல் யாப்புறக் கரத்தாற்
               பற்றி யாங்கவன் அகந்தையும் வன்மையும் பறித்தான். ......    26

(நினைந்து தொல்லுரு)

நினைந்து தொல்லுருக் கொண்டனன் புகழ்தலும் நிலவைப்
     புனைந்த செஞ்சடை நின்மலன் அவுணரைப் போக்கி
          இனைந்த தேவருக் கமிர்தினை ஈகென ஏக
               வனைந்த மேனிமான் மாயையால் அவுணரை மாய்த்தான். ......    27

(மாய்த்து வானவர்க்)

மாய்த்து வானவர்க் கமுதினை நல்கினன் வையங்
     காத்த கண்ணனென் றுரைப்பரால் அவனுறு கமடம்
          மீத்த யங்கிய காப்பினை வாங்கியே விமலன்
               சாத்தி னான்முனம் அணிந்திடு மருப்புடன் சார. ......    28

(வாரி சூழ்புவி அகழ்)

வாரி சூழ்புவி அகழ்தரு கேழலின் மருப்பும்
     மூரி யாமையின் ஓடுமேற் கொண்டது மொழிந்தாம்
          தாரு காவனத் தெம்பிரான் பலிக்குறு தகவுஞ்
               சேர வேயவண் நிகழ்ந்தவுங் கூறுதுந் தெளிநீ. ......    29

வேறு

(முன்பு தாருக வன)

முன்பு தாருக வனத்தின் முனிவரர் யாரும் ஈசற்
     கன்பி லராகி வேள்வி அளப்பில புரிந்து தாமே
          இன்புறு முத்தி தன்னை எய்துவான் உன்னி அங்கம்
               துன்புற வாளா நோற்றுத் துணிவினால் ஒழுக லுற்றார். ......    30

(ஒழுகிய வேலை)

ஒழுகிய வேலை தன்னில் உயிர்க்குயி ராகி உற்றோன்
     பழுதினை அகற்றித் தன்னோர் பாங்கரில் உமையாள் மேவ
          விழுமிய கயிலை நாப்பண் வீற்றிருந் தருள்வோன் அங்கண்
               இழுதையர் புரியும் நீர்மை யாவையும் உணர்ந்தான் அன்றே. ......    31

(முன்னவன் இதனை)

முன்னவன் இதனை நாடி முழுதுணர் முகுந்தன் தன்னை
     உன்னினன் அன்ன பான்மை ஒய்யென உணர்ந்து மாலோன்
          என்னையும் முதல்வன் தன்பால் எய்துவான் பணித்தான் என்னாப்
               பன்னக அமளி நீத்துப் பணியினாற் கயிலை உற்றான். ......    32

(உற்றனன் நகர்முன்)

உற்றனன் நகர்முன் எய்தி உணர்த்திய நந்தி உய்ப்பப்
     பற்றலர் புரமூன் றட்ட பரனடி பணிந்து முன்போய்
          நிற்றலுங் குறிப்பால் அங்கண் நினைத்தன உணர்த்தி மாயன்
               பொற்றடஞ் செங்கை பற்றிப் புனிதன்ஆண் டெழுந்து போந்தான். ......    33

(கயிலையங் கிரியை)

கயிலையங் கிரியை நீங்கிக் கண்ணனை நோக்கித் தொன்னாள்
     இயலுறு நினது பெண்மை எய்துதி இவண்நீ யென்னப்
          புயலுறழ் மேனி மாயோன் பொருக்கென அளப்பில் காமர்
               மயலுறு பான்மை அங்கோர் மடந்தையாய் மருங்கு வந்தான். ......    34

(வந்திடு கின்ற)

வந்திடு கின்ற காலை மாயைசேர் பொருண்மை முற்றுந்
     தந்திடும்*1 உமையுங் காணில் தளர்ந்து வீழ்பான்மை தானும்
          அந்தமில் யாணர் மேல்கொண் டாயிடைப் பெயர்ந்தான் முக்கண்
               எந்தைதன் வடிவின் நீர்மை யார்விரித் துரைக்கற் பாலார். ......    35

(முன்பன துருவை)

முன்பன துருவை எல்லாம் முகனுறு விழியால் மாந்தித்
     துன்புறு மால்மீக் கொள்ளத் துண்ணென அரியுஞ் சோர்ந்தும்
          அன்புடை அருளால் வந்தான் மற்றவன் தனக்கு மாலோன்
               என்பதோர் பெயரும் அஞ்ஞான் றெய்திய போலும் அன்றே. ......    36

(நராரியின் உரிவை)

நராரியின் உரிவை நீத்து நக்கனே யாகி முக்கட்
     பராபரன் சூலத் தோடு பலிக்கலன் அங்கை கொண்டு
          முராரிதன் பாங்கர் செல்ல முனிவருக் கிருக்கை யாகத்
               தராதல மதிக்க நின்ற தாருகா வனத்திற் புக்கான். ......    37

(புக்கனன் மாலை)

புக்கனன் மாலை நோக்கிப் போந்துநீ நமைஎண் ணாது
     தொக்குறு முனிவர் வைகுஞ் சூழல்கள் தோறும் நண்ணி
          மிக்கமால் பூட்டி அன்னோர் விரதங்கள் மாற்றி நந்தம்
               பக்கநீ வருதி என்னப் பகர்ந்தனன் விடுத்துச் சென்றான். ......    38

(விடுத்தலும் முராரி)

விடுத்தலும் முராரி ஏகி வேள்வியுந் தவமுந் தாமே
     கொடுத்திடு முத்தி யென்னுங் கொள்கைசேர் முனிவர் யாரும்
          அடுத்திடும் அவைக்கண் எய்தி அளவையில் அநங்கர் வல்லே
               தொடுத்திடு சரங்க ளேபோல் துணைவிழி பரப்பி நின்றான். ......    39

(கண்டனர் முனிவர்)

கண்டனர் முனிவர் அம்மா கதுமெனக் காம வேட்கை
     கொண்டனர் விரத நோன்மை குலைந்தனர் மகத்தின் செய்கை
          விண்டனர் மதனீர் பாய மெலிந்தனர் வெதும்பி வேழம்
               உண்டிடு கனியாம் என்ன உணர்வுபோய் உருகா நின்றார். ......    40

(ஆலமார் கண்டத்)

ஆலமார் கண்டத் தெந்தை அருளினால் மாயோன் கொண்ட
     கோலமார் வடிவ மெல்லாங் குறிப்புடன் நோக்கி நோக்கிச்
          சீலமாம் அனைத்தும் வீட்டிச் செழுஞ்சுடர் மலர்ச்சி கண்ட
               ஓலமார் விட்டி லென்ன ஒல்லென வந்து சூழ்ந்தார். ......    41

(பார்கொலோ விசும்பு)

பார்கொலோ விசும்பு கொல்லோ பங்கயன் பதியோ காமன்
     ஊர்கொலோ முகுந்தன் வைகும் உலகமோ உறையுள் அன்றேல்
          நீர்கொலோ அமரர்க் காக நிருதரைத் தொலைத்தீர் உம்மை
               ஆர்கொலோ உணரு கிற்பார் அடியருக் கருளு மென்றார். ......    42

(என்றிவை பலவும் பன்னி இட - 2)

என்றிவை பலவும் பன்னி இடருழந் தெரியிற் பட்ட
     மென்றளிர் அலங்க லென்ன வெதும்பியே விரகத் தீயால்
          பொன்றினர் போன்று நின்றார் பொருவரு முனிவர் பொன்னார்
               கொன்றையஞ் சடையோன் செய்த செயலினைக் கூறல் உற்றேன். ......    43

(கண்ணனை விடுத்து)

கண்ணனை விடுத்துத் தானோர் கலனொடு சூலம் ஏந்தி
     எண்ணரும் முனிவர் வைகும் இருக்கையின் மறுகு சென்று
          பண்ணிசை மறைகள் பாடி ஐயமேற் படர்வார் போன்றான்
               உண்ணிகழ் உணர்வாய் என்றும் உயிரினுக் குயிராய் நின்றான். ......    44

(பாட்டியல் இசையை)

பாட்டியல் இசையை அங்கண் முனிவர்தம் பன்னி மார்கள்
     கேட்டலும் எவர்கொல் அம்மா கிடைத்தனர் அவரைக் காண்பான்
          வேட்டன விழிகள் இன்னே விரைவினில் சேறும் என்னா
               ஈட்டமொ டெழுந்து வீதி எய்தியங் கிறைவற் கண்டார். ......    45

(கண்ணுறு மாதர்)

கண்ணுறு மாதர் யாருங் காமன்ஐங் கணையின் மூழ்கி
     உண்ணிகழ் உணர்வு மாழ்க உயிர்பதை பதைத்துச் சோர
          அண்ணல்தன் காத லென்னும் ஆழ்திரைப் பட்டார் அன்னார்
               பண்ணிய செய்கை தன்னில் சிறிதியான் பகர்தல் உற்றேன். ......    46

வேறு

(காய மேல்அணி)

காய மேல்அணி கண்டிலம் இத்தவர்
     தூய பாடலைத் துண்ணெனக் கேட்டலும்
          மேய காமத்தின் வீழ்ந்தனம்*2 ஆகையால்
               மாய மேஇவ் வடிவம்என் பார்சிலர். ......    47

(ஐயர் செய்கை)

ஐயர் செய்கை அறிந்தனம் இவ்விடைப்
     பைய வந்து பலிதனைக் கேட்பது
          மெய்ய தன்றிது மெல்லிய லார்தமை
               மையல் செய்திட வந்ததென் பார்சிலர். ......    48

(நன்று நன்றிந்த)

நன்று நன்றிந்த நற்றவர்க் காந்துகில்
     ஒன்று நல்கி உணவளித் தோவிலா
          மன்ற லின்புற மங்கையர் ஏவரும்
               இன்று கொல்என் றிரங்குகின் றார்சிலர். ......    49

(மாறி லாஇவ் வனத்தி)

மாறி லாஇவ் வனத்திடை வந்தனன்
     வேறொ ரூரிடை மேவிலன் போலுமால்
          தேறில் யாமுனஞ் செய்திடு செய்தவப்
               பேறி தாமெனப் பேசுகின் றார்சிலர். ......    50

(ஈண்டு வந்த இருந்த)

ஈண்டு வந்த இருந்தவன் யாரையும்
     வேண்ட லன்இது மெய்மை அவன்பதம்
          பூண்டு காதலிற் போற்றுநர் போலமெய்
               தீண்டு தும்மெனச் செப்புகின் றார்சிலர். ......    51

(பூணி லங்கிய பொற்)

பூணி லங்கிய பொற்றொடி சங்கினம்
     மாணு றுந்துகில் மற்றிவை சோர்தலுங்
          காணு கின்றனர் கைநெரித் தஞ்சியே
               நாணி வீதி நடுவிருந் தார்சிலர். ......    52

(ஏமம் பாயமெய் எங்க)

ஏமம் பாயமெய் எங்கணுங் காமவேள்
     தூமம் பாயவை சூழ்ந்துயிர் வாட்டிட
          வாமம் பாய்புனல் போல்மயிர்க் கால்தொறுங்
               காமம் பாயக்க லுழுகின் றார்சிலர். ......    53

(பாசம் நீங்கிப் பரபதம்)

பாசம் நீங்கிப் பரபதம் ஈதென
     ஆசை யோடுகண் டன்புசெய் வாரென
          வாசம் நீங்கி வளையுகுத் தையர்தங்
               கோசம் நோக்கினர் கும்பிடு வார்சிலர். ......    54

(இளையி னோடுறும்)

இளையி னோடுறும் எந்தைதன் வேட்கையால்
     களையி னோடு கதுமெனச் சென்றுபால்
          அளையி னோடுறும் ஓதனம் அங்கைவீழ்
               வளையி னோடு வழங்குகின் றார்சிலர். ......    55

(பாவை மார்முன்)

பாவை மார்முன் பலிக்குறுந் தன்மையால்
     நீவி இன்றிஇந் நெற்றியங் கண்ணுதல்
          மேவும் நந்துகில் வீழ்கினும் வீழுக
               ஏவ மோஎமக் கென்றுரைப் பார்சிலர். ......    56

(போய நாணம் புகுந்த)

போய நாணம் புகுந்தது மால்உளந்
     தீயு மால்நிறை சிந்திய தாருயிர்
          வீயும் மெய்யும் விளிந்திடும் எம்முயிர்
               ஈயும் எங்களுக் கென்றுரைப் பார்சிலர். ......    57

(தண்டு லங்கொல்)

தண்டு லங்கொல் தவத்தர் இரப்பெனக்
     கொண்டு சென்று குறுகினர் காமமாம்
          மண்டு தீச்சுட வண்பொடி ஆதலும்
               அண்டர் நாயகன் போலணிந் தார்சிலர். ......    58

(வடிவி னால்எமை)

வடிவி னால்எமை மாலுறுத் தாளுமென்
     றடியில் வீழினும் ஆரருள் செய்கிலர்
          கடிது போவது போலுங் கருத்திவர்க்
               கிடுகி லீர்ஐயம் என்றுரைப் பார்சிலர். ......    59

(ஆர மற்றனர் ஆரமும்)

ஆர மற்றனர் ஆரமும் வீழமெய்
     ஈர மற்றனர் ஈரம் அதன்படை
          தீர மற்றனர் தீரவு மேகலா
               பாரம் அற்றனர் பாரமற் றார்சிலர். ......    60

(சூலம் உண்டு சுடர்)

சூலம் உண்டு சுடர்விழி மேல்நிமிர்
     பாலம் உண்டு படர்சடை யுண்டுசெங்
          கோல முண்டு குறைமதி உண்டிவர்
               ஆல முண்டவர் ஆகுமென் பார்சிலர். ......    61

(எந்தை யார்தம் இருங்கு)

எந்தை யார்தம் இருங்குறி யின்கணே
     சிந்து கின்ற திவலையொன் றல்லவோ
          உந்தி மேல்வந் துலகனைத் துந்தரும்
               அந்த நான்முகன் ஆனதென் பார்சிலர். ......    62

(சங்கும் ஆழியுந் தாங்கு)

சங்கும் ஆழியுந் தாங்குதல் இன்றியே
     பொங்கு காமரம் பொன்னந் துகிலொரீஇத்
          துங்க மாதவர் துண்ணென மால்கொள
               அங்கண் மேவும் அரியையொத் தார்சிலர். ......    63

(கட்டு செஞ்சடைக் கண்)

கட்டு செஞ்சடைக் கண்ணியின் உள்ளகப்
     பட்ட மான்எனப் பார்த்தகண் வாங்கலர்
          சட்டு வந்தனில் தாங்கிய ஓதனம்
               இட்டு வெள்ளிடை ஏமரு வார்சிலர். ......    64

(கிளியின் மேற்செலுங்)

கிளியின் மேற்செலுங் கேழ்கிளர் ஓதிமம்
     களிம யக்குறு காளகண் டத்திறை
          வெளியின் மேனியும் மெய்ப்படு கோலமுந்
               தெளிகி லாது தெருமரு வார்சிலர். ......    65

(அளியின் அட்ட அடி)

அளியின் அட்ட அடிசில்கொண் டாயிடைக்
     களிம யக்கங் கருத்துற ஏகியே
          ஒளியி னுக்கொ ளியாகி உள்ளாருரு
               வெளியி னுக்கு விரைந்தளிப் பார்சிலர். ......    66

(அண்ணல் மேனிகண்)

அண்ணல் மேனிகண் டார்வமுற் றாடைபோய்ப்
     பெண்ணின் நீர்மைப் பெருங்குறி மூடியும்
          கண்ணை மூடியுங் கைக்கடங் காமையால்
               விண்ணை மூடினர் போல்வெள் கினார்சிலர். ......    67

(விருந்த ராயிவண்)

விருந்த ராயிவண் மேவினிர் விண்ணவர்
     மருந்து போல்வதொர் வண்பதம் உண்டவை
          அருந்தி யேநல் லருள்புரிந் தோரிறை
               இருந்து போமென் றிசைத்திடு வார்சிலர். ......    68

(கையி லேந்து கல)

கையி லேந்து கலனொடு சூலமும்
     வையும் நம்மனை வந்திடும் பாலொடு
          நெய்யும் உண்டியும் நிற்றலும் உண்டியாம்
               உய்ய நீரிங் குறையுமென் பார்சிலர். ......    69

(பார்க்குமா தர்க்கும்)

பார்க்குமா தர்க்கும் பல்குழு ஆடவர்
     ஆர்க்கும் மையல் அளிக்கும் வடிவுளீர்
          சீர்க்கும் ஓடொன்று செங்கைகொண் டெங்கணும்
               ஏற்கு மோவிதென் என்றுரைப் பார்சிலர். ......    70

(இன்றுமைக் கண்டி)

இன்றுமைக் கண்டி யாங்களும் ஆடைபோய்
     ஒன்று காதலுற் றோய்ந்தனம் இங்கிது
          நன்று கூடுதிர் நங்களை நீரென
               நின்று கூறி நெடிதுயிர்த் தார்சிலர். ......    71

(நந்தும் இவ்வனம்)

நந்தும் இவ்வனம் நண்ணிய மாதவர்
     இந்த வேலையில் ஏகலர் யாவதுஞ்
          சிந்தை கொள்ளலிர் சேக்கையுண் டோரிறை
               வந்து போமென வாய்மலர்ந் தார்சிலர். ......    72

(எம்மை ஆரிட மாத)

எம்மை ஆரிட மாதரென் றெண்ணியோ
     வெம்மை பேசினும் மேவுகி லீர்பவம்
          உம்மை மேவுங் கொலோஒழிந் தார்கள்போல்
               அம்ம வந்தெமை ஆளுமென் பார்சிலர். ......    73

(ஆடை தாரும் அதன்)

ஆடை தாரும் அதன்றெனில் கொண்டதோர்
     வேடை தீரும் விளம்பு கிலீரெனில்
          கூட வாருங் குறிப்புமக் கென்னெனப்
               பாடு சேர்ந்து பகர்ந்திடு வார்சிலர். ......    74

(ஒல்லு கின்ற துமக்கி)

ஒல்லு கின்ற துமக்கிவ் வடிவினால்
     செல்லு கின்ற தெரிவையர் யாரையுங்
          கொல்லு கின்றது வோபலி கொள்வதோ
               சொல்லு மென்று தொடர்ந்திடு வார்சிலர். ......    75

(போற்றி இங்கெமை)

போற்றி இங்கெமைப் புல்லும்என் றாலுமால்
     ஆற்றி இன்பத் தணைகிலிர் யாவருஞ்
          சாற்று கின்றனர் சங்கரர் என்றுமை
               ஏற்ற தோவதற் கென்றுரைப் பார்சிலர். ......    76

(அணங்கின் நல்லவர்)

அணங்கின் நல்லவர் அண்ணல்தன் கோசமேல்
     நுணங்கு மாலொடு நோக்கி அதற்குமுன்
          வணங்கு மாறென மற்றவர் நாணுபு
               கணங்க ளோடு கவிழ்ந்துசென் றார்சிலர். ......    77

வேறு

(இன்னவர் பலருஞ்)

இன்னவர் பலருஞ் சூழா ஈண்டுபு கலையுஞ் சங்குந்
     துன்னிய கலனும் நாணுந் துறப்பருங் கற்புஞ் சிந்தி
          மன்னுயிர் ஒன்றுந் தாங்கி மால்கொடு தொடர எங்கோன்
               பொன்னடிக் கமலஞ் சேப்பப் புனிதமா மறுகிற் போனான். ......    78

(சில்லிடை வீணை)

சில்லிடை வீணை நாதஞ் செய்திடும் அஃதே அன்றிச்
     சில்லிடை மறைகள் பாடுஞ் சில்லிடைச் சிவநூல் ஓதுஞ்
          சில்லிடைத் தன்மெய் காட்டுஞ் சில்லிடை ஐயங் கேட்குஞ்
               சில்லிடை அன்பர் போல்தன் சீர்த்தியைப் புகழ்ந்து செல்லும். ......    79

(தேமலர்க் கமலை)

தேமலர்க் கமலை அன்ன தெரிவையர் தொழுங்கால் ஈசன்
     மாமலர்த் தாள்மேல் இட்ட மலர்களும் அன்னார் சிந்துந்
          தூமலர்த் தொடையுஞ் சங்குந் துலங்குபொற் கலனுங் காமன்
               பூமலர்த் தொடையும் ஈண்டப் பொலிந்ததப் புனித வீதி. ......    80

(ஊனுலாம் உயிர்கட்)

ஊனுலாம் உயிர்கட் கெல்லாம் உணர்வுடன் உயிராய் நின்றோன்
     வானுலாம் பலிக்கு வந்த வடிவினை நினைக்கின் மாயோன்
          தானுமா லாகி இன்னுந் தளர்வுறும் என்றால் அம்மா
               ஏனையோர் செய்கை தன்னை இனைத்தென இயம்ப லாமோ. ......    81

(செந்திரு வனைய)

செந்திரு வனைய மேனிச் சீறடிக் கருங்கட் செவ்வாய்ப்
     பைந்தொடி மகளிர் கற்பாம் பரவைகள் மதிக்கும் எண்ணில்
          மந்தரம் போன்றான் எங்கோன் மற்றவர்க் கெல்லாம் வெவ்வே
               றிந்திர ஞால மென்ன எல்லையில் உருக்கொண் டெய்தி. ......    82

(நீண்டஅந் நிகமம்)

நீண்டஅந் நிகமம் புக்க நிமலன்மேல் ஆர்வம் வைத்துக்
     காண்டகு மாதர் யாருங் கருவுறு நிலையராகி
          மாண்டகு வயாவும் மற்றோர் வருத்தமும் இன்றி யாங்கே
               ஆண்டகை மகார்க ளாக வாறெண்ணா யிரரைப் பெற்றார். ......    83

(எந்தைபால் விழைவு)

எந்தைபால் விழைவு செய்தாங் கிமைப்பினின் மடவார் ஈன்ற
     மைந்தர்கள் யாரும் ஐயன் மலரடி முன்னர்த் தாழ்ந்து
          புந்திகொள் அன்பின் நின்று போற்றிட அனையன் நீவிர்
               நந்தமை உன்னி ஈண்டு நற்றவத் திருத்திர் என்றான். ......    84

(நெட்டிருஞ் சடில)

நெட்டிருஞ் சடில மீது நிலவினை முடித்த அண்ணல்
     கட்டுரை செய்தல் கேளாக் கைதொழூஉ விடைபெற் றேகி
          உட்டெளி வெய்தி நோற்றாங் கொருசிறை இருந்தார் நாற்பான்
               எட்டுள பத்து நூற்றின் எண்டொகை முனிவர் யாரும். ......    85

(சேயென வந்தோர்)

சேயென வந்தோர் நோற்பச் சென்றுழித் தெரிவை மாராம்
     மாயிரும் பரவை நீத்தம் மால்கொடு தொடர்ந்து செல்லப்
          போயினன் என்ப மன்னோ புரியிகந் தரிமுன் ஈந்த
               ஆயிரங் கமலங் கொண்டோர் ஆழியை அளிக்க வல்லோன். ......    86

(போதலும் அதனை)

போதலும் அதனை நோக்கிப் பொற்றொடி யாகி நின்ற
     சீதரன் அமலன் தன்பாற் சேறலுந் தொடர்ந்து பின்னர்
          மாதவர் யாரும் போந்தார் மற்றதன் இயல்பு நோக்கி
               ஏதமில் கங்கை பாலாம் யமுனையைக் கடுத்த தன்றே. ......    87

(மெல்லியல் வடிவ)

மெல்லியல் வடிவ மாகி மேயினோன் தன்பால் வீழ்ந்து
     செல்லுறு முனிவர் ஆற்றத் தீவினை புரிந்த நீரால்
          அல்லுறழ் மிடற்றுப் புத்தேள் அவர்க்கெலாந் தனதாய் உள்ள
               தொல்லுரு மறைத்து வேறோர் வடிவொடு தோன்றி நின்றான். ......    88

(மடந்தை யாய்வந்த)

மடந்தை யாய்வந்த மாலோன் மணிமிடற் றிறைவன் தன்பால்
     அடைந்திட முனிவர் தத்தம் அரிவையர் தம்மை நோக்கித்
          தொடர்ந்தனர் இவரும் நம்போல் தோற்றனர் கலையும் நாணுங்
               கடந்தனர் இவனைக் கண்டு காதலித் தார்கொல் என்றார். ......    89

(மோனமா நெறியின்)

மோனமா நெறியின் நோற்கும் முனிவரர் முகுந்தன் தன்பால்
     ஆனமால் சிறிது நீங்கி அருங்குலப் பன்னி மார்கள்
          ஈனமா நிலையை நோக்கி இன்னலுற் றிரங்கி ஏங்கி
               மானமேல் கொண்டு வீடா மன்னுயி ரோடு நின்றார். ......    90

(பொன்னுலாம் அல்கு)

பொன்னுலாம் அல்கு லாள்இப் பொற்றொடி ஒருத்தி எம்பால்
     மன்னிய தவத்தைச் சிந்தி மால்செய்தாள் ஒருவன் வந்து
          பன்னிமார் கற்பை வீட்டிப் படுத்தினன் மோகம் அந்தோ
               என்னமா யங்கொ லீதென் றெண்ணினர் யாரும் ஈண்டி. ......    91

(எண்ணிய முனிவர்)

எண்ணிய முனிவர் தேறி இயம்புவார் கயிலை வைகுங்
     கண்ணுத லாகும் இன்னோர் கற்பினை உடைத்தான் யாமுன்
          பண்ணிய தவத்தை வீட்டப் பைந்தொடி யாகி வந்தோன்
               மண்ணுல கனைத்தும் உண்ட மாயவன் போலும் அன்றே. ......    92

(நந்தவந் தன்னை)

நந்தவந் தன்னை வீட்ட நாரணன் தானே நம்பால்
     வந்தனன் அன்றால் ஈசன் பணியினால் மாயை செய்தான்
          இந்திரை கேள்வன் செய்த தென்கொலோ எமது நோன்பு
               சிந்தினும் நன்றால் இன்னுந் தீர்வுநேர்ந் தியற்று கின்றோம். ......    93

(அங்கையிற் கபால்)

அங்கையிற் கபால்ஒன் றேந்தி ஐயம்ஏற் றிடுவான் போலச்
     சங்கரன் வந்து மற்றித் தாருகா வனத்தின் மேவு
          மங்கையர் கற்புச் சிந்தும் வசையுரைக் கொழிவு முண்டோ
               செங்கதிர் மதியஞ் செல்லுந் திசையெலாம் பரவும் அன்றே. ......    94

(தானொரு வேடங்)

தானொரு வேடங் கொண்டுந் தண்டுள வலங்கற் சென்னி
     வானவன் தன்னை விட்டு மற்றிவை அனைத்துஞ் செய்தோன்
          கானுறு கடுக்கை வேய்ந்த கண்ணு தலேகொல் என்றே
               மானவெங் கனலுஞ் சீற்ற வன்னியுங் கிளர நின்றார். ......    95

(நின்றிடு முனிவர்)

நின்றிடு முனிவர் யாரும் நெருப்பெழ விழித்துச் செம்பொற்
     குன்றுறழ் முலையி னார்தங் குழுவினைக் கூவி யார்பின்
          சென்றிடு கின்றீர் கற்பின் செய்கைய திகந்தீர் இங்ஙன்
               பொன்றுதல் அழகி தன்றேல் போமின்நும் புரியின் என்றார். ......    96

(இத்திற மாதர் கேளா)

இத்திற மாதர் கேளா ஈங்கிவர் தம்மைக் கண்டோர்
     முத்தராய் உறுவ தன்றி முடிவரோ முனிவர் தாமும்
          பித்தர்கொல் என்றே அன்னான் பிறங்குரு வினையுட் கொண்டு
               நித்தன தருளால் மீண்டு நீணகர் இருக்கை புக்கார். ......    97

(நீணகர் புகுந்த பின்)

நீணகர் புகுந்த பின்னர் நேரிழை மகடூஉ வாகித்
     தாணுவின் அயலின் நின்ற தண்டுள வலங்கற் புத்தேள்
          ஆணுவின் உருவு கொண்டான் அருளினால் அனைய தன்மை
               காணிய விரிஞ்ச னாதிக் கடவுளர் யாரும் வந்தார். ......    98

(கடவுளர் யாரும் வந்த)

கடவுளர் யாரும் வந்த காலையில் அங்கண் நின்ற
     முடிவறு முதல்வன் தன்னை முனிவொடு நோக்கி ஈண்டுக்
          கொடியதோர் வேள்வி ஆற்றிக் கொல்லுதும் இவனை என்னா
               மடமைகொள் முனிவர் சூழ்ந்து மற்றொர்தீ மகத்தைச் செய்தார். ......    99

(எள்ளுதற் குரிய)

எள்ளுதற் குரிய வேள்வி எரியதன் இடையே யாரும்
     உள்ளுதற் கரிய தோற்றத் துருமிடிக் குரல பேழ்வாய்த்
          தள்ளுதற் கரிய சீற்றத் தழல்விழித் தறுகட் செங்கால்
               வள்ளுகிர்ப் புலியொன் றம்மா வல்லையின் எழுந்த தன்றே. ......    100

(எழுதரு புலியை)

எழுதரு புலியை நோக்கி ஈசனை முடித்தி என்றே
     தொழுதனர் விடுப்ப ஆங்கே துண்ணென வருத லோடும்
          அழல்விழிப் பரமன் நேர்போய் அங்கையால் உரித்து மற்றவ்
               வுழுவையந் தோலை முன்னம் உடுத்தனன் தானையொப்ப. ......    101

(இங்கிது போய பின்)

இங்கிது போய பின்றை இறுதிசெய் கணிச்சி ஒன்று
     செங்கன லிடையில் தோன்றித் தீயவர் விடுப்ப ஏகிச்
          சங்கரன் தனது முன்னஞ் சார்தலும் அதனைப் பற்றி
               அங்கையில் ஏந்தி நீநம் அடுபடை யாதி என்றான். ......    102

(பின்னுற ஒருமான்)

பின்னுற ஒருமான் அங்கட் பிறந்தது முனிவர் எல்லாம்
     அன்னதை அரன்பால் உய்ப்ப அந்தரத் தெழுந்து பாய்ந்து
          தன்னெடுங் குரலால் வல்லே சராசரம் வீட்டிச் செல்ல
               முன்னவன் உயிர்கள் அற்றால் முடிவுறா தருட்கண் வைத்தான். ......    103

(மற்றதன் பின்றை)

மற்றதன் பின்றை எந்தை மான்பிணை அதனை நோக்கித்
     தெற்றென விளித்து நந்தஞ் செவியினுக் கணித்தாய் மேவி
          நிற்றலுங் கூவு கென்றே நீடருள் செய்து வாமப்
               பொற்றடங் கையிற் பற்றிப் பொருக்கென ஏந்தி நின்றான். ......    104

(ஏந்திய பின்னர்)

ஏந்திய பின்னர் வேள்வி எரியழற் கிடையே எண்ணில்
     பாந்தளங் கெழுந்து தீயோர் பணியினாற் சீற்றத் தோடும்
          போந்தன அவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பாற்
               சேர்ந்திடு பணிக ளோடுஞ் செவ்விதிற் புனைந்தான் எங்கோன். ......    105

(பணியெலாம் பணிய)

பணியெலாம் பணிய தாகிப் பரனிடைத் திகழப் பின்னர்
     அணிகெழு கனலின் நாப்பண் அசனிகள் எழுந்தா லென்னக்
          கணிதமில் பூத வெள்ளங் கதுமென எழலும் நீவிர்
               மணிகிளர் மிடற்றோன் வன்மை மாற்றுதிர் என்றே உய்த்தார். ......    106

(ஆரிடர் ஏவல் போற்றி)

ஆரிடர் ஏவல் போற்றி அண்டமுந் துளங்க ஆர்த்துச்
     சாரதர் வருத லோடுஞ் சங்கரன் அவரை நோக்கி
          நீரெமை அகன்றி டாது நிற்றலுந் தானை யாகிச்
               சேருதி ரென்றான் உற்றோர் தீவினை தீர்க்க வல்லான். ......    107

(ஆற்றல் சேர்பூதர்)

ஆற்றல் சேர்பூதர் யாரும் ஆதியீ துரைப்ப அன்னான்
     போற்றியே தானை யாகிப் புடையுற நிற்ற லோடுஞ்
          சீற்றமா முனிவர் வேள்வித் தீயில்வெண் டலைதான் ஒன்று
               தோற்றியே உலகம் யாவுந் தொலையநக் கெழுந்த தன்றே. ......    108

(நக்கெழு சிரத்தை)

நக்கெழு சிரத்தை அன்னோர் நாதன்மேல் விடுத்த லோடும்
     அக்கணம் அணுக வற்றால் அகிலம திறவா வண்ணம்
          முக்கணன் அருள்செய் தந்த முண்டமுண் டகக்கை பற்றிச்
               செக்கரஞ் சடைமேற் கொண்டுன் செயலினைப் புரிதி யென்றான். ......    109

(அறுகுறை முடிமேற்)

அறுகுறை முடிமேற் கொண்ட அமலனை நோக்கி நோக்கி
     மறுகிய முனிவர் தத்தம் வாய்மை மந்திரங் களேவி
          இறுதி செய்திடுதி ரென்ன இனையவை துடியொன் றாகிச்
               செறிதரு புவனம் யாவுஞ் செவிடுற ஒலித்த தன்றே. ......    110

(பொருவருந் துடியின்)

பொருவருந் துடியின் ஓதை பொம்மெனக் கேட்ட லோடுந்
     தரணியின் வானி னுள்ள சராசரம் யாவும் ஈசன்
          அருளினால் வீடிற் றில்லை அசனியின் ஆர்ப்புக் கேட்ட
               உரகர் தங்குலங்க ளென்ன ஓய்யென மயங்கிற் றன்றே. ......    111

(அத்துடி ஆர்த்துச்)

அத்துடி ஆர்த்துச் செவ்வே அமலன்முன் அணுக மற்றைக்
     கைத்தலம் அதனிற் பற்றிக் கறங்குதி கன்னத் தென்று
          வித்தக மரபில் யாரும் வியப்புற ஏந்தி நின்றான்
               இத்திறம் யாரே செய்வார் என்றனர் முனிவ ரெல்லாம். ......    112

(இனையது கண்டு)

இனையது கண்டு பின்னும் இறுதிசெய் இறைவற் கின்றால்
     அனைய தென்றறிதல் தேற்றார் அடுசினங் கடவத் தொல்லூழ்
          வினையது விளைவாற் பின்னும் வேள்வியை இயற்றல் உற்றார்
               முனிவரர் கனற்க ணேயோர் முயலகன் எழுந்த தன்றே. ......    113

(முயலகன் தன்னை)

முயலகன் தன்னை நோக்கி முகமனுஞ் சொற்றுத் தங்கள்
     செயலகன் றிருந்த வேள்வித் தீயையும் விளித்து நந்தம்
          இயலகன் றிடவே செய்த ஈசனை முடித்தி ரென்றே
               மயலகன் றிலாதார் உய்ப்ப வல்விரைந் தணைந்த அம்மா. ......    114

(வன்னியந் தேவும்)

வன்னியந் தேவும் உட்க வந்திடு கனலை யார்க்கும்
     முன்னவன் ஒருகை ஏந்தி முயலகன் தன்னை மெல்லத்
          தன்னடி அதனால் வீழத் தள்ளிஅக் கமலத் தாளை
               வென்னிடை அருளால் ஊன்றி விண்ணவர் போற்ற நின்றான். ......    115

(நிற்றலும் அதனைத்)

நிற்றலும் அதனைத் தீயோர் நெருப்பெழ விழியா இன்னும்
     உற்றனன் பரமன் அந்தோ உஞற்றி யாமுய்த்த வெல்லாம்
          இற்றன கொல்லோ என்றே இரங்கியே எண்ணில் சாபஞ்
               சொற்றனர் உலக மெல்லாந் தொலைப்பவன் தொலைய வென்றே. ......    116

(சங்கையில் முனிவர்)

சங்கையில் முனிவர் யாருஞ் சாற்றிய சாபம் யாவும்
     எங்கடம் பெருமான் முன்னும் எய்திய தில்லை அன்னோர்
          அங்கவன் தன்பால் உய்க்கும் அளவையில் இறுதி நாளிற்
               பொங்கெரி அதன்மேற் செல்லும் பூளைபோல் மாய்ந்த அன்றே. ......    117

(சாபமும் பயனின்)

சாபமும் பயனின் றாகத் தவத்தர்கள் யாருங் கொண்ட
     கோபமும் நீங்கி ஆற்றல் குறைந்தொரு செயலும் இன்றிச்
          சோபமும் நாணுங் கொண்டு துளங்கியே தொலைவி லாத
               பாபமும் பழியும் பூண்டு படிக்கொரு பொறையாய் நின்றார். ......    118

(ஏற்றமில் முனிவர்)

ஏற்றமில் முனிவர் தங்கள் ஏழைமை தனையென் னென்று
     சாற்றுதும் இறுதி இல்லாத் தாணுவை முடிப்பான் வேள்வி
          ஆற்றினர் பலவும் உய்த்தார் அறைந்தனர் சாபம் அற்றால்
               மாற்றிட அற்றோ தங்கள் வன்மையும் இழந்தார் மாதோ. ......    119

(கடுக்கையும் நதியும்)

கடுக்கையும் நதியும் பாம்புங் கலைமதிக் கொழுந்துஞ் சென்னி
     முடித்தவன் பதத்தில் ஊன்று முயலகன் மெல்ல மெல்ல
          எடுத்தெடுத் தசைத்த லோடும் ஏதுவங் கதனை நோக்கி
               நடித்தனன் என்றும் நீங்கா நடம்புரி கின்ற தேபோல். ......    120

(ஆண்டவ ணிமையா)

ஆண்டவ ணிமையா முக்கண் ஆதிநா யகன்அஞ் ஞான்று
     தாண்டவம் புரித லோடுஞ் சகமெலாந் துளங்கிற் றங்கண்
          ஈண்டிய வுயிர்கள் அச்சுற் றிரங்கிய நடுக்கம் எய்தி
               வீண்டனர் வேள்வி செய்து வினையினை ஈட்டும் வெய்யோர். ......    121

(நஞ்சணி கண்டத்)

நஞ்சணி கண்டத் தெந்தை நடநவில் செய்கை தன்னைக்
     கஞ்சனும் ஆழி யானுங் கண்டுகண் களித்துப் போற்றி
          நெஞ்சகம் மகிழ்ந்து பாங்கர் நின்றனர் மகவான் தன்னோ
               டெஞ்சிய அமரர் யாரும் இறைஞ்சுவார் போல வீழ்ந்தார். ......    122

(அருளொடு நிருத்த)

அருளொடு நிருத்தஞ் செய்யும் அண்ணலிப் புவனம் யாவும்
     வெருவுறு செயலும் வீழும் விண்ணவர் அயர்வு நோக்கித்
          திருநட மொழிந்து நிற்பத் தேவருந் தேவர் கோனும்
               பருவுடன் எழுந்து நின்று கைதொழூஉப் பாங்கர் உற்றார். ......    123

(மாதொர்பா கத்தோன்)

மாதொர்பா கத்தோன் தன்னை மதித்திடா முனிவர்க் கெல்லாம்
     போதமே யருள லோடும் பொருக்கென எழுந்து பொல்லா
          ஏதமே இயற்று கின்ற எம்பெரும் பிழைகள் யாவும்
               நாதநீ பொறுத்தி என்று நடநவில் கழல்முன் வீழ்ந்தார். ......    124

(பொறுத்தி எம்பிழை)

பொறுத்தி எம்பிழையை என்றே போற்றிசெய் முனிவர் தங்கள்
     திறத்தினை நோக்கி நந்தஞ் செந்நெறி யொழுகித் தீய
          மறத்தினை அகற்றி மேலை மாதவம் புரிதி ரென்று
               நிறுத்தினன் அடையா தார்க்கும் நீடருள் புரியும் நித்தன். ......    125

(முனிவரை நிறுவி)

முனிவரை நிறுவி அங்கண் முக்கணன் மீண்டு வெள்ளிப்
     பனிவரை ஏகி மாலும் பங்கயத் தவனும் வானோர்
          அனைவருந் தத்தம் பாலில் அடைந்திட அருளி அம்பொற்
               புனையிழை உமையி னோடும் பொருந்திவீற் றிருந்தான் அன்றே. ......    126

(உரித்திடும் உழுவை)

உரித்திடும் உழுவை வன்தோல் உரிமுத லுள்ள எல்லாந்
     தரித்ததும் எங்கள் நாதன் தாருகா வனத்தில் அன்று
          நிருத்தம தியற்றி நின்ற நீர்மையும் பிறவும் எல்லாம்
               விரித்திவண் உரைத்தாங் கேட்டி மேலதும் இயம்பு கின்றாம். ......    127

வேறு

(துங்க மால்கரி யாக்கை)

துங்க மால்கரி யாக்கையின் உலகெலாந் தொலைக்கும்
     வெங்க யாசுரன் என்பவன் மேருவின் மிசைபோய்ப்
          பங்க யாசனற் போற்றி செய்தருந் தவம்பயில
               அங்கண் நாடியே தோன்றினன் உலகெலாம் அளித்தோன். ......    128

(வேண்டு கின்றதென்)

வேண்டு கின்றதென் மொழிகென நான்முகன் விளம்ப
     ஆண்டு நோற்றிடுங் கயாசுரன் என்றனக் கடிகேள்
          மாண்டி டாதபே ராயுளும் ஆற்றலும் வயமும்
               ஈண்டு நல்குதி என்றலும் நகைத்திவை இசைப்பான். ......    129

(இந்த வண்ணநீ வேண்)

இந்த வண்ணநீ வேண்டிய தளித்தனம் இகலில்
     அந்தி வண்ணன்நேர் சென்றிடல் சேறியேல் அந்நாட்
          சிந்தும் இவ்வரங் கடைப்பிடி ஈதெனச் செப்பி
               உந்தி வந்தவன் போயினன் தனதுபே ருலகில். ......    130

(அன்ன காலையில் கயாசுர)

அன்ன காலையில் கயாசுரன் என்பவன் அயன்சொல்
     உன்னி ஈசன்மேற் போகலம் ஒழிந்தவர் தம்பால்
          துன்னி வெஞ்சமர் ஆற்றி எவ்வு லகமுந் தொலைத்தே
               இன்னலே புரிந்திருத் தும்என் றுன்னியே எழுந்தான். ......    131

(எழுதல் கொண்டிடும்)

எழுதல் கொண்டிடும் அவுணர்கோன் அமரர்கள் யாருங்
     குழுமியே அமர்வான் பதந்தொ றுந்தொறுங் குறுகி
          வழுவியே அவர்முரிந் திடப்பொ ருதுமற் றவரூர்
               முழுது மட்டுமா சுவர்க்கமேல் ஏகினன் முனிவால். ......    132

(போகி யோட மராற்றி)

போகி யோட மராற்றியே அன்னவன் புறந்தந்
     தேகவே துரந்துயர்த் திடுநாள் மருப்பி யானைத்
          தோகை வானுதி பற்றியே பன்முறை சுலவி
               மாக யாசுரன் ஓச்சினன் மகபதி மயங்க. ......    133

(பின்னர் அன்னதோர்)

பின்னர் அன்னதோர் பொன்னகர் அழித்தனன் பெயர்ந்து
     துன்னு மெண்டிசைக் காவலர் தமையெலாந் துரந்து
          தன்னி னங்களாம் அவுணர்கள் தம்மையுஞ் சாடி
               வன்னி யஞ்சிகை அரக்கர்தங் குழுவையும் மாய்த்தான். ......    134

(மஞ்சு நேர்தரு கயா)

மஞ்சு நேர்தரு கயாசுரன் புவிமிசை வைகி
     வெஞ்சி னங்கொடே மக்கள்தந் தொகையெலாம் வீட்டி
          நஞ்ச மாமெனத் திரிதலும் நாடி நற்றவர்கள்
               அஞ்சி யோடியே அரனமர் காசியை யடைந்தார். ......    135

(அருந்த வத்தர்கள்)

அருந்த வத்தர்கள் அடைதலுங் கயாசுரன் அவரைத்
     துரந்து காசியிற் சென்றிட அனையவர் துளங்கித்
          திருந்தும் அந்நகர் வாணர்தங் கிளையொடுஞ் செறிந்து
               விரைந்து போய்மணி கன்னிகை புகுந்தனர் வெருவி. ......    136

(இனிது வித்திய)

இனிது வித்திய தம்பயன் ஈவதே என்னத்
     தனது மந்திரம் முடிபவர் செவியிடைச் சாற்றிப்
          புனித மாயதன் னுருத்திர வடிவருள் புரியும்
               அனக நாயகற் பணிந்துநின் றின்னவா றறைவார். ......    137

(வெய்ய தந்தியாய்)

வெய்ய தந்தியாய் வந்தொரு தானவன் விரைவில்
     வைய கத்தையட் டெம்மையுங் கொல்லிய வருவான்
          ஐய நின்னதாள் அரணமென் றடைந்தனம் அடியேம்
               உய்ய வேயருள் புரியெனப் போற்றியே உறலும். ......    138

(அகில நாயகன்)

அகில நாயகன் மந்திரத் தப்பரி சனர்கள்
     தொகையி னோடுபோய் அரணமென் றடைதரு தொடர்பை
          முகிலை நேருருக் கயாசுரன் காணுறா முனியா
               இகலி யேமணி கன்னிகை வாயில்வந் திறுத்தான். ......    139

(வாயில் வந்திறுத்)

வாயில் வந்திறுத் துருமெனத் தெழித்தலும் மதித்துக்
     கோயி லெய்திய சனமெலாம் உளங்குலை குலையா
          ஆய கண்ணுதல் நிமலனைத் தழீஇ மயக்கடையத்
               தீயன் அன்னது நாடியும் அடும்வகை செறுத்தான். ......    140

(செறுத்து மற்றவன்)

செறுத்து மற்றவன் செல்லுழித் தேவர்கள் உய்யக்
     கறுத்த கந்தரத் தண்ணலாங் கத்திறங் கண்டு
          குறித்தெ லாமடும் உக்கிர வடிவினைக் கொண்டு
               நிறுத்தும் அண்டமேல் உச்சியின் முடிதொட நிமிர்ந்தான். ......    141

(விண்ணு லாவிய)

விண்ணு லாவிய அமரரும் முனிவரும் விழித்துக்
     கண்ணின் நாடரி தெனவிழி பொத்தினர் கவல
          அண்ணல் ஆயிர கோடிஆ தவர்திரண் டதுபோல்
               எண்ணி லாதபே ரொளியொடு தோன்றினன் எங்கோன். ......    142

(உக்கி ரப்பெரு)

உக்கி ரப்பெரு வடிவுகொண் டெம்பிரான் ஒருகால்
     நக்கு மெல்லென உரப்பலும் நடுங்கின அகிலம்
          அக்கொ டுந்தொனி ஒழிந்தில துகம்பல அயனும்
               மிக்க தேவரும் அவ்வொலி கேட்டலும் வெருண்டார். ......    143

(சொற்ற இத்திறம்)

சொற்ற இத்திறம் உக்கிர வடிவொடுந் தோன்றிக்
     கொற்ற மால்கரி அவுணன்முன் எம்பிரான் குறுக
          மற்றி வன்சிவ னாமெனத் தேறியும் மலைவான்
               உற்று நின்றனன் அயர்த்தனன் மலரயன் உரையே. ......    144

(மதித்து வேழமாந்)

மதித்து வேழமாந் தானவன் எதிர்தலும் வடவை
     உதித்த வன்னியும் அச்சுற எரிவிழித் தொருதன்
          கதித்த தாள்கொடு தள்ளவே கயாசுரன் கவிழ்ந்து
               பதைத்து வீழ்தலும் மிதித்தனன் சிரத்தையோர் பதத்தால். ......    145

(ஒருப தத்தினைக்)

ஒருப தத்தினைக் கவானுறுத் திருகரத் துகிரால்
     வெரிநி டைப்பிளந் தீரிரு தாள்புடை மேவக்
          குருதி கக்கியே ஒலிட அவுணர்தங் குலத்துக்
               கரியு ரித்தனன் கண்டுநின் றம்மையுங் கலங்க. ......    146

(கார்த்த சிந்துரத்)

கார்த்த சிந்துரத் தவுணர்கோன் விளிந்திடக் கரத்தால்
     ஈர்த்த தோலினை ஈர்த்தலும் உலகுயிர் யாவுந்
          தீர்த்தன் மேனிகொள் பேரொளி நோக்கியே தியங்கிப்
               பார்த்த கண்ணெலாங் கதிரிழந் தலமரப் பதைத்த. ......    147

(ஆளு நாயகன்)

ஆளு நாயகன் அஃதறிந் துயிர்த்தொகை அனைத்தும்
     வாளி லாதுகண் ணயர்வது மாற்றுதல் மதித்து
          நீளி ருங்கரி உரித்திடும் அதளினை நிமலன்
               தோளின் மேற்கொடு போர்த்தனன் அருள்புரி தொடர்பால். ......    148

(ஐயன் மிக்கதன்)

ஐயன் மிக்கதன் கதிரினைக் குருதிநீர் அறாத
     மையல் யானைவன் தோலைமேற் கொண்டனன் மறைத்தான்
          செய்ய கோளொடு கரியகோள் இருவருஞ் செறிந்து
               வெய்ய பானுவின் நடுவுறக் கவர்ந்துமே வியபோல். ......    149

(மிகவும் எம்பிரான்)

மிகவும் எம்பிரான் தன்சுடர் மாற்றி மெய்தளரும்
     அகில மேலவர் விழிக்கெலாந் தொல்கதிர் அருளித்
          தகவில் அச்சமும் அகற்றியே காத்தனன் தனக்கு
               நிகரும் மேலுமின் றாகியே அமர்தரு நிமலன். ......    150

(அந்த வேலையில் அமர)

அந்த வேலையில் அமரர்போற் றிசைத்தனர் அதுகேட்
     டெந்தை மாமணி கன்னிகை ஆலயத் தேக
          முந்து தந்திமால் அவுணற்கு வெருவி மொய்ம்பிழந்து
               சிந்தை மான்றுவீழ் பரிசனர் யாவருந் தெளிந்தார். ......    151

(செறிவு போகிய)

செறிவு போகிய சனத்தினோர் எழுந்தருட் டிறத்தால்
     கறைகொள் காலினான் குருதிஎன் பொடுதசை காணா
          இறைவ னேஅவன் தன்னைஅட் டானென எண்ணி
               அறையும் நேமிபோல் ஆடினர் பாடினர் ஆர்த்தார். ......    152

(காசி வாணரும்)

காசி வாணரும் முனிவரும் பணிந்தனர் கழல்கள்
     பூசை யாற்றவும் புரிவித்து வழுத்தியே போனார்
          ஈசன் வேழவன் தோல்புனை பேரருள் இதுகாண்
               பேசு வாம்இனி அயன்சிரம் ஏந்திய பெற்றி. ......    153

வேறு

(முன்னமோர் வைகல்)

முன்னமோர் வைகல் மாலும் முண்டகத் தயனு மாகப்
     பொன்னின்மால் வரையி னுச்சிப் பொலங்குவ டொன்றின் உம்பர்
          மன்னுழி முனிவர் தேவர் வரம்பிலோர் வந்தன் னாரைச்
               சென்னியால் வணக்கஞ் செய்து செங்கரங் குவித்துச் சொல்வார். ......    154

(மூவரின் முதலா)

மூவரின் முதலா னோரும் முதலிடை முடிவும் இல்லாத்
     தேவரும் எவையும் நல்குஞ் செல்வரும் பரமே லாகி
          ஓவரும் புவனத் துள்ள உயிர்க்குயி ராய்நின் றோரும்
               ஏவரெங் களுக்கு வல்லே இருவரும் இசைத்தி ரென்றார். ......    155

(என்றுரைத் திடலும்)

என்றுரைத் திடலும் வேதா எம்பிரான் பிணித்த மாயை
     தன்றலைப் படலால் யான்அத் தலைமையாம் பிரமம் ஆகும்
          நன்றிதைத் தெளிதிர் என்ன நாரணன் தானும் அற்றாய்
               உன்றனைத் தந்த யானே உயர்தரும் பிரமம் என்றான். ......    156

(இருவரும் இனைய)

இருவரும் இனைய பேசி எண்ணிலா வைகல் யாரும்
     வெருவரு நிலைய தாக வெய்துயிர்த் தழன்று மாறாய்ப்
          பொருவரு தருக்கஞ் செய்யப் போயினர் முனிவர் தேவர்
               ஒருவரும் இன்றி நம்மால் உற்றதிப் பெற்றி என்றே. ......    157

(போதலும் அனையர்)

போதலும் அனையர் பின்னும் பூசல்செய் திட்ட காலை
     வேதமுங் குடிலை தானும் வேறுவே றுருக்கொண் டெய்தி
          வாதம தியற்றல் என்று மன்னுயிர்க் குயிராய் ஆர்க்குந்
               தாதையாஞ் சிவனே வாய்மைத் தற்பரன் என்ற அன்றே. ......    158

(பண்டவர் உணர்ந்த)

பண்டவர் உணர்ந்த வேதப் பனுவலுங் குடிலை வாக்குங்
     கொண்டிலர் விலக்கிப் பின்னுங் கொடியவெம் பூசல் செய்யக்
          கண்டுமற் றதனை அன்னோர் கடுமுரண் தொலைக்கு மாறு
               கொண்டனன் கருணை யார்க்குங் குறித்தருள் கூரும் பெம்மான். ......    159

(அடிமுடி யிலாத)

அடிமுடி யிலாத வள்ளல் அமலமாம் ஒளியாய் விண்ணின்
     நடுவுற வந்து தோன்ற நாரணன் தானும் வேதக்
          கடவுளுஞ் சிவனாம் என்று கருதிலர் யாதோ இந்தச்
               சுடரென மருண்டார் மாயச் சூழ்ச்சியின் நீங்க லாதார். ......    160

(இயலது தெரிந்து)

இயலது தெரிந்து சோதி இடையதாய் எம்மை யாளக்
     கயிலையில் உமையா ளோடு கலந்துவீற் றிருக்குங் கோலச்
          செயல்கொடு பரமன் நண்ணச் சிவனெனச் சிந்தை தேற்றிப்
               புயலுறழ் மேனிப் புத்தேள் பொருக்கென எழுந்து தாழ்ந்தான். ......    161

(மாயையோர் சிறிது)

மாயையோர் சிறிதுந் தீரா மலரயன் நமது தந்தை
     ஆயவன் போந்தான் என்னா அச்சுத மூர்த்தி யேபோல்
          நேயமோ டெழுந்து தாழான் நெடியதன் உச்சிச் சென்னித்
               தீயதோர் வாயால் மேலாஞ் சிவனையும் இகழ்த லுற்றான். ......    162

(முண்டகம் இருந்த)

முண்டகம் இருந்த ஐந்து முகத்தவன் முதல்வன் தோற்றங்
     கண்டனன் இகழ வந்தக் கருணையங் கடலுஞ் சீற்றங்
          கொண்டிலன் சிறிது மற்றே கொண்டனன் என்னின் எல்லா
               அண்டமும் உயிரும் பின்னும் அழிவுறா திருக்கு மோதான். ......    163

(எகினம துயர்த்த)

எகினம துயர்த்த அண்ணல் இரும்பவந் தொலைப்ப ஏனைப்
     பகவர்தம் அகந்தை மாற்றப் பண்ணவர் மதர்ப்புச் சிந்த
          மிகபெருங் கருணை தன்னால் வேதநா யகனுள் ளத்து
               மகிழ்வொடு புரிந்தான் என்ப வயிரவக் கடவுள் தன்னை. ......    164

(நீலுறு சுடரின்)

நீலுறு சுடரின் மெய்யும் ஞெகிழிகள் அகற்றுந் தாளும்
     ஆலம துயிர்க்குஞ் செங்கேழ் அரவவெற் றரையுஞ் சென்னி
          மாலைகள் அநந்த கோடி வயின்வயின் பெயரும் மார்புஞ்
               சூலமும் பரசும் நாணும் துடியும்ஏந் தியபொற் றோளும். ......    165

(முக்கணுந் திங்க)

முக்கணுந் திங்க ளேபோல் முளைத்தவா ளெயிறும் வன்னிச்
     செக்கரஞ் சடையின் சீருஞ் செயிர்கெழு நகையு மாக
          உக்கிர வடிவு கொண்டாங் குதித்திடு வடுகன் தன்னை
               மைக்கிளர் கண்டத் தெந்தை நோக்கியே வகுத்துச் சொல்வான். ......    166

(திகழ்ந்தநஞ் சிறுவ)

திகழ்ந்தநஞ் சிறுவ னாகுஞ் செங்கம லத்தோன் சென்னி
     இகழ்ந்தது நம்மை உச்சி இருந்ததே அதனை வல்லே
          அகழ்ந்தனை கரத்தி லேந்தி அவனுயிர் நல்கித் தம்மைப்
               புகழ்ந்திடு முனிவர் தேவர் புரந்தொறும் போதி அன்றே. ......    167

(போந்தனை அனை)

போந்தனை அனையர் தங்கள் புலவுடற் சோரி தானே
     வாய்ந்ததோர் ஐய மாக வாங்குதி வாங்கும் வேலை
          வீந்தவர் தமக்கு மீட்டும் வியனுயிர் உதவி அன்னோர்
               ஆய்ந்திடும் அகந்தை மாற்றி அண்டமேல் அடைதி அம்மா. ......    168

(முன்புடைத் தாகும்)

முன்புடைத் தாகும் அண்ட முகடுதோய் பதத்தின் மன்னி
     மன்பதைக் குலங்கள் யாவும் வானவர் தொகையும் யாண்டுந்
          துன்பறக் காத்தி யென்று தூய நல்லருளை நல்கி
               அன்புடைக் கடலாம் எங்கோன் அமலமாஞ் சோதி புக்கான். ......    169

(ஆதியங் கடவுள்)

ஆதியங் கடவுள் அங்கண் அடைதலும் அமல மாகுஞ்
     சோதியும் அனையர் காணாத் தோற்றம தாக மாயோன்
          ஈதெலாந் தெரிந்து நிற்றல் இயற்கையன் றென்னா முக்கண்
               நாதனை இறைஞ்சி வல்லே நடந்துதன் பதியிற் புக்கான். ......    170

(அளந்து மண்கொண்ட)

அளந்து மண்கொண்ட மாயன் அகனகர் அடைத லோடுங்
     கிளர்ந்தெழு காரி வேதாக் கேழ்கிளர் உச்சிச் சென்னி
          களைந்துதன் நகத்தால் ஏந்தக் காலுறு குருதி நீத்தம்
               வளைந்தது புவியைத் துஞ்சி மலரவன் தானும் வீழ்ந்தான். ......    171

(சோரிநீர் நீத்த மாகி)

சோரிநீர் நீத்த மாகித் துண்ணென உலகங் கொண்டு
     மேருமால் வரையைச் சூழ வெய்யதன் நுதற்கண் தீயால்
          சேரவே வறப்பித் தந்தச் செங்கம லத்தி னானுக்
               காருயிர் நல்க லோடும் அவனுணர்ந் தெழுந்தான் அன்றே. ......    172

வேறு

(துயிலு ணர்ந்தவ)

துயிலு ணர்ந்தவ ராமெனத் தொல்லையில்
     பயிலு நல்லுணர் வெய்தலும் பங்கயன்
          வயிர வன்தன் மலரடி மீமிசை
               இயலும் அன்பொ டிறைஞ்சியுரை செய்வான். ......    173

(நெற்றி யங்கண் நிமலற்)

நெற்றி யங்கண் நிமலற் கியான்செயுங்
     குற்ற முண்டு குணிப்பில அன்னதால்
          பெற்று ளேன்இப் பெரும்பழி ஈங்கினிச்
               செற்றம் ஏதுந் திருவுளங் கொள்ளலை. ......    174

(இன்மை யாக இமை)

இன்மை யாக இமைப்பின் உலகடும்
     வன்மை கொண்ட வடுகநின் ஆரருள்
          நன்மையால் தொல்லை நல்லுணர் வெய்தினன்
               புன்மை யாவும் பொறுத்திடல் வேண்டுமால். ......    175

(தீய தான சிறிய)

தீய தான சிறியவிச் சென்னியுந்
     தூய தாகத் தொழும்பினன் கண்டுழி
          மாயை தீர மலர்க்கையிற் கோடிநீ
               மேய சூல வியன்படை என்னவே. ......    176

(என்ன இத்தகை)

என்ன இத்தகை பன்னி இறைஞ்சலுஞ்
     சென்னி நான்குடைத் தேவனை நோக்கியே
          அன்ன தாக என்றையன் அருளியே
               பொன்னின் மால்வரை நீங்கினன் போயினான். ......    177

(கால வேகன் கனன்)

கால வேகன் கனன்முகன் சோமகன்
     ஆல காலன் அதிபலன் ஆதியாச்
          சால நீடிய சாரதர் தானையை
               நீல மேனி நிமலன் உதவினான். ......    178

(எண்ணி லாஅக்)

எண்ணி லாஅக் கணங்களொ டெம்பிரான்
     நண்ணி ஒல்லை நவையுறு மாதவர்
          மண்ணின் மேய வனந்தொறும் வானவர்
               விண்ணின் எல்லை தொறும்விரைந் தேகினான். ......    179

(மெய்யின் ஊறும்)

மெய்யின் ஊறும் வியன்குரு திப்புனல்
     ஐய மாக்கொண் டனையர்தம் ஆவிகள்
          உய்ய வேபின் னுதவி உளமெலாந்
               துய்ய வாக்கினன் தொல்லருள் ஆழியான். ......    180

(வடுக அண்ணல்)

வடுக அண்ணல் அவ்வானவர் ஊரெலாங்
     கடிதின் நீங்கிக் கருவத்தை நீங்குறா
          நெடிய மாலுறை நீள்புரம் போயினான்
               முடுகி யேகினர் முன்கண நாதரே. ......    181

(அந்த மில்கணம்)

அந்த மில்கணம் ஆனவர் யாவரும்
     முந்தி ஏக முதற்பெரு வாயிலோன்
          தந்தி ரத்தலை வன்தடுத் தானரோ
               நந்தும் ஆழியும் நாரணன் போலுளான். ......    182

(கால வேகனை)

கால வேகனை ஆதிக் கணத்தவர்
     ஆல மென்ன அவனொடு போர்செய
          மேலை யோன் அங்கு மேவி அவனுடல்
               சூல மேற்கொந்தித் துண்ணென ஏகினான். ......    183

வேறு

(நிலமகள் ஒருபுடை)

நிலமகள் ஒருபுடை நிறங்கொள் பங்கய
     மலர்மகள் ஒருபுடை மருவப் பஃறலை
          குலவிய பணியின்மேற் கொண்டல் மேனியான்
               தலைமையொ டுறைதரு தானம் நண்ணினான். ......    184

(நிணங்கிளர் முத்தலை)

நிணங்கிளர் முத்தலை நெடிய வேல்இறை
     கணங்களின் நிரையொடு கடிது செல்லமால்
          அணங்கின ரோடெழா ஐயன் தாள்மிசை
               வணங்கிநின் றெந்தைநீ வந்ததென் னென்றான். ......    185

(என்றலுங் கண்ணுதல்)

என்றலுங் கண்ணுதல் இறைவன் யாமிவண்
     சென்றது பலிக்குநின் றிருந்து சென்னியில்
          ஒன்றிய குருதியே உதவு வாயென
               நன்றென நாரணன் நவின்று போற்றியே. ......    186

(தன்னுதல் அதனி)

தன்னுதல் அதனிடைத் தனாது செங்கையின்
     நன்னகத் தாலொரு நாடி வாங்கியே
          அன்னதொர் பொழுதினில் அரியுய்த் தானரோ
               துன்னிய குருதிநீர் சூலி ஏற்பவே. ......    187

(வீண்டிடு சோரியின்)

வீண்டிடு சோரியின் வெள்ளம் வெம்பணி
     பூண்டதொர் கண்ணுதல் பொலங்கைச் சென்னிமேல்
          ஆண்டொரு நூறுநூ றவதி உய்த்தலும்
               மாண்டது வேறொரு மயக்கம் வந்ததே. ......    188

(பாதியும் நிறைந்ததும்)

பாதியும் நிறைந்ததும் இல்லை பாணியின்
     மீதுறு பலிக்கலன் மிக்க வன்மைபோய்ச்
          சீதரன் சோர்தலுந் திருவும் ஞாலமும்
               காதலன் நிலைமையைக் கண்டி ரங்கினார். ......    189

(செஞ்சரண் அடைந்த)

செஞ்சரண் அடைந்தயர் தெரிவை மார்தமை
     அஞ்சலென் றருளியெம் மண்ணல் அச்சுதன்
          நெஞ்சுறு மயலினை நீக்கி யாங்கவன்
               உஞ்செழு மாறுசெய் துறையுள் நீங்கினான். ......    190

(நீங்கினன் பின்வரும்)

நீங்கினன் பின்வரும் நெடிய மாயனை
     ஈங்கினி திருத்திஎன் றியம்ப அன்னவன்
          ஓங்குநின் சூலமேல் உற்று ளான்தனைப்
               பாங்குற வருள்கெனப் பகர்ந்து வேண்டவே. ......    191

(கைத்தலை அயன்)

கைத்தலை அயன்தலைக் கபால்கொண் டுற்றவன்
     முத்தலை வேலினும் முடிந்த சேனையின்
          மெய்த்தலை வன்தனை விடுத்துத் தொல்லுயிர்
               அத்தலை நல்கியே அருள்செய் தானரோ. ......    192

(மாலுல கொருவியே)

மாலுல கொருவியே வடுகன் அன்னதோர்
     கோலமொ டேகணங் குழுமிச் சூழ்தர
          மேலுள புவனமேல் மேவி வைகலும்
               பாலனஞ் செய்தனன் பலஅண் டங்களும். ......    193

(அடுவதொ ரிறுதியில்)

அடுவதொ ரிறுதியில் கமலன் ஆணையால்
     கடவுளர் சென்னியுங் கமலன் ஆதியோர்
          முடிகளும் அட்டுயிர் முற்று மாற்றிநுண்
               பொடிபட இயற்றுமால் புவனம் யாவையும். ......    194

(பொறியுறும் உயிர்களு)

பொறியுறும் உயிர்களும் புவனம் யாவையும்
     இறுதியாய் அழிவுறும் ஈமத் தெல்லையின்
          மறையெனு ஞாளியை உயர்த்து மற்றவன்
               உறுவதோர் மகிழ்ச்சியால் உலவும் என்பவே. ......    195

வேறு

(கண்ட கங்கொள்)

கண்ட கங்கொள் கபால்கொடு காசினி
     விண்ட கந்தொறும் வெம்பலிக் குற்றதும்
          முண்ட கன்முத லோர்தமை எம்பிரான்
               தண்ட கஞ்செய் தலையளி யாகுமால். ......    196

(ஆற்றின் மல்கும்)

ஆற்றின் மல்கும் அவிர்சடை அண்ணல்பால்
     தோற்று கின்றதொர் தூயவன் சோரிநீர்
          ஏற்ற தன்மை இயம்பினம் ஈங்கினி
               வேற்றுருக் கொண்ட தன்மை விளம்புவாம். ......    197

வேறு

(முந்தொரு ஞான்று மூவு)

முந்தொரு ஞான்று மூவுலகும் போற்றிடும்
     இந்திரன் இமையவர் இனத்தொ டேகியே
          அந்தமில் கயிலையில் அரனைப் போற்றுவான்
               வந்தனன் அகந்தையும் மனத்தில் தாங்கியே. ......    198

(பொன்கெழு கடிமதில்)

பொன்கெழு கடிமதில் பொன்னங் கோயில்முன்
     மின்கெழு வச்சிர வேந்தன் சேர்தலுங்
          கொன்கெழு பாரிடக் கோலந் தாங்கியே
               முன்கடை நின்றனன் முடிவின் முன்னையோன். ......    199

(நின்றிடும் ஒருவனை)

நின்றிடும் ஒருவனை நெடிது நோக்கியே
     இன்றுனைக் கண்டனன் யாரை ஐயநீ
          மன்றவும் விருந்தினை வள்ள லைத்தொழச்
               சென்றனன் வேலையென் செப்பு கென்னவே. ......    200

(மற்றது காலையின்)

மற்றது காலையின் மகேசன் யாவதுஞ்
     சொற்றில னாகியே சூர்த்த நோக்குடன்
          உற்றிட மேல்வரும் ஊற்றம் உன்னலன்
               செற்றம தாயினன் தேவர் செம்மலே. ......    201

(அண்டரும் அகந்தை)

அண்டரும் அகந்தையன் ஆற்ற வுந்திறல்
     கொண்டனன் என்றுதன் குலிச மாப்படை
          கண்டகன் எறிதலுங் கடவுள் மேற்படா
               நுண்டுக ளாகியே நொய்தின் மாய்ந்ததே. ......    202

(மருத்துவன் வச்சிரம்)

மருத்துவன் வச்சிரம் மாய்ந்து போதலும்
     புரத்தினை யட்டருள் புனிதன் அவ்வழிக்
          கிருத்திம வுருவினை நீங்கிக் கேழ்கிளர்
               உருத்திர வடிவினை ஒல்லை தாங்கினான். ......    203

(உயர்ப்புறு சடிலநின்)

உயர்ப்புறு சடிலநின் றூறு தண்புனல்
     அயர்ப்புறு மகபதி அகந்தை கண்டட
          மயிர்ப்புறம் எங்கணும் வந்து தோன்றலின்
               வியர்ப்புவந் தடைந்தன மேனி முற்றுமே. ......    204

(எள்ளுதல் செய்திடும்)

எள்ளுதல் செய்திடும் இவன்தன் ஆருயிர்
     கொள்ளுதும் எனச்சினங் கொண்ட தீயொடும்
          உள்ளுறு காலெழீஇ ஒருங்கு சென்றெனப்
               பொள்ளென உயிர்ப்பழல் புகையொ டுற்றதே. ......    205

(குறுகிநின் றாற்றலால்)

குறுகிநின் றாற்றலால் குலிச மாப்படை
     எறிதரு கொடியனை எய்த வேளெனச்
          செறுகனல் விழியெனச் செப்பச் சேறல்போல்
               நெறிதரு புருவமும் நெற்றி சேர்ந்தவே. ......    206

(பற்றலர் புரங்களோ)

பற்றலர் புரங்களோ உலகின் பன்மையோ
     முற்றுயிர் ஈட்டமோ முடிக்கப் பேதையைச்
          செற்றிடல் வசையவன் செயலைக் காண்டுமென்
               றுற்றனன் முறுவலும் உதித்த தொல்லையில். ......    207

(துடித்தன துவரிதழ்)

துடித்தன துவரிதழ் உரப்பித் தூயவாய்
     இடித்தன சேந்தன இரண்டு கண்களும்
          விடத்தினை நுகர்ந்தவன் வெகுளித் தீயினுக்
               கடுத்திடு துணைவர்தம் அமைதி போலவே. ......    208

(அக்கணம் இவ்வகை)

அக்கணம் இவ்வகை யார்க்கும் ஆதியாம்
     முக்கணன் நான்முகன் முதல தேவரும்
          மிக்குள உயிர்களும் வெருவ வெய்யதோர்
               உக்கிர வடிவுகொண்டு ருத்து நின்றனன். ......    209

வேறு

(நிற்கின்ற எம்பெருமான்)

நிற்கின்ற எம்பெருமான் பெருஞ்சீற்றந் தனைநோக்கி நெஞ்சமாகுங்
     கற்குன்றம் நடுநடுங்கப் பதைபதையா அஞ்சியவன் கழலின் வீழ்ந்தே
          எற்குன்றன் மாயமெலாந் தெரிந்திடுமோ மாலயனும் இன்னுந் தேறார்
               பொற்குன்றச் சிலையானே வினையேன்செய் பிழையதனைப் பொறுத்தி என்றான். ......    210

(போற்றிப்பன் முறை)

போற்றிப்பன் முறைதாழும் புரந்தரனை அஞ்சலென்று புரிந்து நோக்கி
     மேற்றிக்கில் வீழ்கின்ற செங்கதிரோ இதுவென்ன வேலை மேற்றன்
          சீற்றத்தீ யினைவீசி ஆங்கவற்கு விடைகொடுத்துச் செல்கென் றேவி
               ஏற்றிற்செய் அரியணைமேல் உறையுள்புகுந் துமையொடும்வீற் றிருந்தான் எங்கோன். ......    211

வேறு

(கூற்று வன்தனிக் கூற்ற)

கூற்று வன்தனிக் கூற்றன் மந்திரம்
     வீற்றி ருந்திடும் வேலை வாய்தனில்
          ஆற்றல் சேர்புனற் கரசன் பால்விடு
               சீற்ற மானதோர் சிறுவன் ஆனதே. ......    212

(ஆன பாலனை அம்பு)

ஆன பாலனை அம்பு ராசிதன்
     கானு லாந்திரைக் கரங்களால் தழீஇத்
          தான வேசன்என் தனயன் ஆயினான்
               நான லாதியார் நற்றவஞ் செய்தார். ......    213

(ஊழி பேரினும்)

ஊழி பேரினும் உலகம் பேரினும்
     வாழி வாழியென் மைந்த நீயெனாக்
          கேழில் ஆசிகள் கிளத்திப் போற்றினான்
               ஆழி மால்கடற் கரசன் என்பவே. ......    214

(நசைகு லாவிய நரலை)

நசைகு லாவிய நரலை காத்திட
     வசைவி லான்சிறி தழுத வேலையில்
          வசையி லாதுயர் வானும் மண்ணுமெண்
               டிசையும் யாவையுஞ் செவிடு பட்டவே. ......    215

(நூன்மு கத்தினோர்)

நூன்மு கத்தினோர் நுனித்துக் காணுறு
     நான்மு கத்தினோன் நாடி இவ்வொலி
          வான்மு கத்திடை வருமி தேதெனா
               மீன்மு கத்துலாம் வேலை மேவினான். ......    216

(வேலை சேரஅவ்)

வேலை சேரஅவ் வேலை வேலையுஞ்
     சால வன்பினால் தவிசொன் றிட்டுநீ
          ஏல மேவுகென் றிருத்தி யான்பெறும்
               பாலன் ஈங்கிவன் பார்த்தி யாலெனா. ......    217

(கையில் நீட்டலுங்)

கையில் நீட்டலுங் கடிது வாங்கியே
     ஐயன் தன்மடி அதனில் சேர்த்திடத்
          துய்ய புல்லணந் தொடர்ந்து பற்றினான்
               மையல் மைந்தனுந் தனது வன்மையால். ......    218

(நார்த்தொ டுத்தெனும்)

நார்த்தொ டுத்தெனும் நான்கு தாடியும்
     ஈர்த்துத் தூங்கலும் இணையில் வேதனும்
          ஆர்த்தி எய்தினான் அவன்கண் ஏயவன்
               சீர்த்தி கான்றெனச் சிந்திற் றொண்புனல். ......    219

(காறொ டர்ந்திழி)

காறொ டர்ந்திழி கலங்கு கட்புனல்
     ஆறு போலிய அகலம் தன்வழிச்
          சேறல் மேயது செறிவுற் றீண்டியே
               வேறொர் வேலைபோல் வேலை புக்கதே. ......    220

(முக்கண் நாயகன்)

முக்கண் நாயகன் முனிவு தன்னிடைப்
     புக்க காலையிற் புனல்வ றந்திடு
          மைக்க ருங்கடல் வறுமை நீங்கிற்றால்
               மிக்க நான்முகன் விழியின் நீரினால். ......    221

(பதுமன் அவ்வழிப்)

பதுமன் அவ்வழிப் படர்ம யிர்த்தொகை
     மதலை கையினும் மரபின் நீக்கியே
          கதுமெ னப்பல கரங்க ளாலெடுத்
               துததி தன்கையில் உயிர்த்து நீட்டினான். ......    222

(நீட்டி யோரிறை)

நீட்டி யோரிறை நினைந்து நீயிது
     கேட்டி யொன்றியாங் கிளத்து வோம்இவன்
          ஏட்டு லாயதேன் இதழி சென்னியிற்
               சூட்டும் எம்பிரான் முனிவில் தோன்றினான். ......    223

(கருதி டான்ஒரு)

கருதி டான்ஒரு கடவுள் தன்னையும்
     வரமும் வேண்டலன் ஏது மற்றிவன்
          ஒருவ ராலுமீ றுற்றி டானரோ
               பரமன் சீற்றமே யான பான்மையால். ......    224

(தேவர் தேவர்கோன்)

தேவர் தேவர்கோன் திசையினோர் வெரீஇப்
     போவ ரேயெனில் பொருகிற் பாரெவர்
          நீவி ரேனுமுன் நிற்றல் அஞ்சுவீர்
               ஏவ ரேஇவன் எதிர்நிற் பார்களே. ......    225

(ஆயுந் தொன்னெறி)

ஆயுந் தொன்னெறி அமரர் யாவரும்
     ஈயுஞ் சாபம்வந் திவனை நேருமோ
          காயுந் திண்டிறற் கடவுட் டன்மைசேர்
               தீயுந் தீயுநின் சிறுவன் வெம்மையால். ......    226

(நானும் அஞ்சுவன்)

நானும் அஞ்சுவன் நளினை காவலன்
     தானும் அஞ்சுவன் தவறில் வேள்விசெய்
          கோனும் அஞ்சும்வெங் கூற்றும் அஞ்சுமவ்
               வானும் அஞ்சும்இம் மண்ணும் அஞ்சுமே. ......    227

(பாச னங்களே பரவ)

பாச னங்களே பரவ ஞாலமேல்
     தேசில் வெய்யகோல் செலுத்தி யாங்கவர்
          ஆசி செய்யநீ டரசு செய்வனால்
               ஈசன் அன்றியார் இவனை வீட்டுவார். ......    228

(என்னு மாத்திரத் திவ)

என்னு மாத்திரத் திவன்த னக்குநீ
     நன்ன லந்திகழ் நாமம் ஒன்றினைப்
          பன்னு கென்னநீ பரித்த லால்இவன்
               தன்ன தொண்பெயர் சலந்த ரன்எனா. ......    229

(பேரிட் டொல்லை)

பேரிட் டொல்லையில் பிரமன் தானுறை
     ஊரிற் போயினான் உததி பற்பகல்
          சீரிற் போற்றலுஞ் சிறுவன் காளையாய்ப்
               பாரிற் சேர்ந்தனன் அவுணர் பாற்பட. ......    230

(சென்று பாரிடை)

சென்று பாரிடைத் திசைகள் யாவையும்
     வென்று வாசவன் விண்ணு ளோர்நிதிக்
          குன்று சேர்தரக் கொடுமை செய்தனன்
               துன்று கின்றதொல் லவுணர் சூழவே. ......    231

(பொன்னெ டுங்கிரி தனி)

பொன்னெ டுங்கிரி தனிற்புத் தேளிரு
     மன்னும் வைகலும் வான நாடெலாந்
          தன்னை நேரிலான் தான வர்க்கெலாம்
               நன்ன யப்பொடு நல்கி னானரோ. ......    232

(வச்சி ரப்படை மன்)

வச்சி ரப்படை மன்னன் பொன்னகர்
     நச்சும் வண்ணமோர் நகரஞ் செய்கென
          அச்ச லந்தரன் அருளத் தானவர்
               தச்சன் அவ்வழி சமைத்து நல்கினான். ......    233

(பாந்தள் மீமிசை)

பாந்தள் மீமிசை பரிக்கு நேமிசா
     லாந்த ரம்மென அறைய நின்றதோர்
          ஏந்தல் மாநக ரிடையில் தானவர்
               வேந்தர் போற்றிட அரசில் மேயினான். ......    234

(கால நேமியாம்)

கால நேமியாம் அவுணன் கன்னிகை
     வேலை நேர்விழி விருந்தை யென்பவள்
          கோல நாடியே குரவன் கூறிட
               ஏல வேமணந் தின்பம் எய்தினான். ......    235

(பாரில் அவ்வழிப்)

பாரில் அவ்வழிப் பன்னெ டும்பகல்
     சீரின் வைகினான் தேவர் யாவரும்
          மேரு வுற்றனர் அவரை மேவியாம்
               போர்செய் வோமெனப் புகன்று போயினான். ......    236

(துங்க வீரர்கள்)

துங்க வீரர்கள் தொழுச லந்தரன்
     அங்கண் மேவலும் அமரர் வெய்யவன்
          இங்கும் வந்தனன் என்செய் வோமெனாச்
               சிங்கங் கண்டதோர் கரியின் தேம்பினார். ......    237

(தேம்பு கின்றவர்)

தேம்பு கின்றவர் செய்வ தோர்கிலார்
     பாம்ப ணைத்துயில் பவனை உன்னியே
          ஓம்பு கென்றலும் உவண மீமிசை
               ஏம்ப லோடும்வந் திமைப்பில் எய்தினான். ......    238

(வருச லந்தரன்)

வருச லந்தரன் மாறு கொண்டெழ
     இருப தாயிரம் யாண்டு பல்படை
          உரிய மாயைகொண் டுருத்தெ ழுந்துமால்
               பொருதும் வென்றிலன் புகழ்ந்து போயினான். ......    239

(கொண்டல் மேனி)

கொண்டல் மேனியன் கொடியன் தன்னொடு
     மண்டு போரிடை மலையும் வேலையில்
          அண்டர் வாசவன் அஞ்சி ஆலமார்
               கண்டன் மேவிய கயிலை எய்தினார். ......    240

வேறு

(அற்றா கின்ற வேலையின் வே)

அற்றா கின்ற வேலையின் வேலை அருள்மைந்தன்
     பற்றார் தம்மை நாடினன் யாண்டும் பார்க்கின்றான்
          கற்றார் ஏத்துங் கண்ணுதல் மேய கயிலாயத்
               துற்றார் கொல்லென் றுன்னி வெகுண்டான் ஊர்போந்தான். ......    241

(தூண்டா ஒற்றால்)

தூண்டா ஒற்றால் பெற்றிடு சேனைத் தொகையோடு
     மீண்டா நிற்பான் தென்க யிலைக்கென் றெழும்வேலை
          வேண்டாம் வேண்டாம் நித்த னுடன்வெஞ் சமர்செய்யின்
               மாண்டாய் என்றாள் இல்லென வாழும் மதிவல்லி. ......    242

(குலந்தனில் வந்தாள்)

குலந்தனில் வந்தாள் கூறிய மாற்றங் குறிக்கொள்ளான்
     நலந்தரு கின்ற செய்வினை ஓரான் நவைபாரான்
          புலந்தரு செற்றம் மீக்கொள யாதும் பொறையின்றிச்
               சலந்த ரனாம்பே ருண்மைய தென்னச் சாதித்தான். ......    243

(சோனா மேகம்)

சோனா மேகம் போற்படை மாரி சொரிகின்ற
     சேனா யூகஞ் சூழ்தர வாழித் திருமைந்தன்
          போனான் எங்கோன் தென்க யிலைக்கோர் புடையாக
               வானா டுள்ளோன் ஆங்கது காணா மறுகுற்றான். ......    244

(தாண்டும் பாய்மாத்)

தாண்டும் பாய்மாத் தேர்கரி வீரர் தற்சூழ
     ஈண்டும் வந்தான் தீயவன் ஆவி இறும்வண்ணங்
          காண்டும் என்னா வாசவன் வானோர் கணமோடும்
               வேண்டும் வெள்ளிக் குன்றுறு கோயில் மேவுற்றான். ......    245

வேறு

(முந்திய வாயிலின்)

முந்திய வாயிலின் முறைபு ரிந்திடு
     நந்தியை வணங்கியுள் நடுக்கஞ் செப்பலும்
          அந்தமில் பண்ணவன் அருளை நாடியே
               உந்திட இந்திரன் உறையுள் போயினான். ......    246

(குணங்களின் மேற்படு)

குணங்களின் மேற்படு குழகன் மால்வரை
     அணங்கொடு வீற்றிருந் தருளும் எல்லைபோய்
          வணங்கினன் தொழுதனன் வலிய துன்பினால்
               உணங்குதன் மனக்குறை உரைத்தல் மேயினான். ......    247

(நிலந்தனை வளைந்த)

நிலந்தனை வளைந்த முந்நீரில் வந்தவன்
     சலந்தரன் எனும்பெயர்த் தறுகட் டானவன்
          மலைந்தெமை வென்றிட மாசுற் றோடினேன்
               நலந்தரு கின்றபொன் னாடு நீத்தனன். ......    248

(வெந்துயர் எய்தியே)

வெந்துயர் எய்தியே மேரு வின்புடை
     உய்ந்தனன் யானென ஒளித்து மேவினன்
          அந்தவண் ணத்தையும் அறிகுற் றாங்கவன்
               வந்தனன் அவ்வழி மாலை உன்னினேன். ......    249

(மாலும்வந் தணுகியே)

மாலும்வந் தணுகியே மலைந்து தோற்றிடா
     மேலுமங் கவன்தனை வியந்து போயினான்
          நீலகண் டத்தனே நினது மால்வரை
               ஏலவந் துற்றனன் இதுவுங் கேட்டனன். ......    250

(ஈங்கும்வந் துற்றன)

ஈங்கும்வந் துற்றன னியாவ துன்னியோ
     ஆங்கது தெரிகிலேன் அளியன் துன்பமுந்
          தீங்குறு சலந்தரன் திறலும் வாழ்க்கையும்
               நீங்குதல் உன்னுதி நிமலநீ என்றான். ......    251

(வரையெறி படையின)

வரையெறி படையினன் மாற்றங் கேட்டுநின்
     பருவரல் ஒழிகெனப் பகர்ந்து போக்கியே
          கருணையின் நீர்மையாற் கணிச்சி வானவன்
               ஒருதனி ஆடலை உள்ளத் துன்னினான். ......    252

(நான்றகுண் டிகையின)

நான்றகுண் டிகையினன் நரைகொள் யாக்கையன்
     ஊன்றிய கோலினன் ஓலைக் கையினன்
          மூன்ற னல்வளர்ப் புறுமுனி வரேயெனத்
               தோன்றினன் தனக்கொரு தோற்றம் வேறிலான். ......    253

(விம்மலை உற்றிடு)

விம்மலை உற்றிடு விரதர்க் காகமுன்
     கைம்மலை உரித்தவன் கயிலை என்றிடும்
          அம்மலை ஒருபுடை அணுகுந் தானவர்
               செம்மலை எதிர்கொடு செல்லல் மேயினான். ......    254

(இந்திரன் இமையவர்)

இந்திரன் இமையவர் இனத்தொ டீண்டியே
     வந்தனை செய்தனன் மறைந்து பின்வர
          அந்தணர் வடிவுகொண் டவுணர் காவலன்
               முந்துற வெய்தியே முதல்வன் கூறுவான். ......    255

(எங்குளை யாரைநீ)

எங்குளை யாரைநீ எவரை நாடியே
     இங்குறு கின்றனை இயம்பு வாயென
          அங்கணன் மொழிதலும் அந்தண் வேதிய
               சங்கைய தில்வகை சாற்றக்கேள் என்றான். ......    256

(நிலந்தனில் உற்று)

நிலந்தனில் உற்றுளேன் நேமி காதலன்
     சலந்தரன் என்பவன் தமியன் வானவர்
          உலைந்திட நுதல்விழி ஒருவன் தன்னுடன்
               மலைந்திட வந்தனன் வல்லையீண் டென்றான். ......    257

(அவ்வுரை வினவியே)

அவ்வுரை வினவியே அண்ணல் எண்ணமுஞ்
     செவ்விது செவ்விது தீதுண் டோவெனா
          எவ்வமில் புகழ்ச்சிபோல் இகழ்ந்து காட்டிடா
               நவ்வியங் கைத்தலன் நகைத்துச் செப்புவான். ......    258

(கயிலையங் கிரியுறை)

கயிலையங் கிரியுறை கண்ணு தற்பிரான்
     அயலுற இருப்பன்யான் அவனொ டேயமர்
          முயலுறு கிற்றியேல் முடிதி உய்ந்திடுஞ்
               செயலினை நினைத்தியேற் செல்கமீண் டென்றான். ......    259

(பண்ணவன் இனைய)

பண்ணவன் இனையன பகர்தல் கேட்டலும்
     எண்ணமில் சலந்தரன் எரியிற் சீறியே
          கண்ணழல் கதுவுறக் காயம் வேர்வெழத்
               துண்ணென உயிர்த்திவை சொற்றல் மேயினான். ......    260

(சிறியவன் போலெ)

சிறியவன் போலெனைச் சிந்தித்*3 தீரியான்
     பெறுவதோர் சயமெலாம் பேசி யாவதென்
          இறைவரை யீண்டுநின் றெனது வன்மையை
               அறிகுதிர் அறிகுதிர் அந்தணீர் என்றான். ......    261

(என்றிவை சலந்தரன்)

என்றிவை சலந்தரன் இசைப்ப யாமுமுன்
     வன்றிறல் காணிய வந்த னம்மெனாத்
          தன்திரு வடியினால் தரணி யின்மிசை
               ஒன்றொரு திகிரியை ஒல்லை கீறினான். ......    262

(ஆங்கது திகிரியொன்)

ஆங்கது திகிரியொன் றாக அந்தணன்
     ஈங்கிது சென்னியில் ஏற்றி வன்மையால்
          தாங்குதல் வல்லையோ என்று சாற்றலும்
               தீங்குறு சலந்தரன் இனைய செப்புவான். ......    263

(புங்கவர் யாரையும்)

புங்கவர் யாரையும் புறங்கண் டேன்வரு
     கங்கையை அடைத்தனன் கார்கொள் வேலையில்
          அங்கியை அவித்தனன் அரியை வென்றனன்
               இங்கிது தாங்குவ தரிய தோவெனா. ......    264

(புரத்தழல் கொளுவி)

புரத்தழல் கொளுவியோன் பொறித்த நேமியைக்
     கரத்திடை எடுத்தனன் கனங்கொண் டெய்தலின்
          உரத்திடைப் புயத்திடை உயிர்த்துத் தாங்கியே
               சிரத்திடை வைத்தனன் தேவர் ஆர்க்கவே. ......    265

(செழுஞ்சுடர்ப் பரி)

செழுஞ்சுடர்ப் பரிதியைச் சென்னி கோடலால்
     ஒழிந்திடு சலந்தரன் உச்சி யேமுதற்
          கிழிந்தது முழுதுடல் கிளர்ந்து சோரிநீர்
               இழிந்தது புவிதனில் இழுமென் ஓசையால். ......    266

(பரிதியங் கடவுள்)

பரிதியங் கடவுள்அப் பதகன் தன்னுடல்
     இருபிள வாக்கியே இறைவன் தன்னிடை
          உருவுகொண் டுற்றதிவ் வுலகம் யாவையுங்
               குருதியம் பெருங்கடல் வளைந்து கொண்டதே. ......    267

(பாதல நிரயமாம்)

பாதல நிரயமாம் பாழி யூடுநீ
     போதென எருவைநீர் போந்த தாயிடை
          ஆதியங் கடவுள்அவ் வவுணன் சேனையைக்
               காதினன் விழிபொழி கனலின் தானையால். ......    268

(பரந்திடும் அவுணர்)

பரந்திடும் அவுணர்தம் பகுதி வீட்டியே
     கரந்ததொல் வடிவினைக் காட்டி நிற்றலும்
          புரந்தரன் முதலினோர் வணங்கிப் போற்றிஎம்
               அரந்தையை அகற்றினை ஐயநீ என்றார். ......    269

(முன்புறு புரந்தரன்)

முன்புறு புரந்தரன் முதலி னோர்க்கெலாம்
     இன்புறு தொல்லர சியற்ற நல்கியே
          அன்புடன் விடைகொடுத் தமல நாயகன்
               தென்பெருங் கயிலைமேற் சேர்ந்து வைகினான். ......    270

(ஆவியை இழந்திடும்)

ஆவியை இழந்திடும் அவுணர் காவலன்
     தேவியை விரும்பியே திருவின் நாயகன்
          மாவிர தியரென மற்ற வன்மனைக்
               காவி னுள்இருந் தனன்கை தவத்தினான். ......    271

(இருந்திடும் எல்லை)

இருந்திடும் எல்லையில் ஏமக் கற்புடை
     விருந்தைஎன் றிடும்அவள் வேந்தன் செய்கையைத்
          தெரிந்திலள் ஆற்றவுஞ் சிந்தை நொந்துமெய்
               வருந்தினள் உய்ந்திடும் வண்ணங் காண்கிலாள். ......    272

(பரிதலுற் றிரங்கினள்)

பரிதலுற் றிரங்கினள் பதைத்துச் சோர்ந்தனள்
     ஒருதனித் திருக்கிலள் உரையும் ஆடலள்
          திரிதலுற் றுலவினள் செய்வ தோர்கிலள்
               இருதலைக் கொள்ளியின் எறும்பு போன்றுளாள். ......    273

(கல்வரை யேந்திய)

கல்வரை யேந்திய காளை யைப்புணர்
     தொல்வரை ஊழினால் துன்பம் நீங்கலா
          மெல்வரை அன்னதோள் விருந்தை மேவினாள்
               இல்வரை இகந்திடா ஏமக் காவினுள். ......    274

(மடவரல் வருதலும்)

மடவரல் வருதலும் வைகுண் டந்தனில்
     கடைமுறை போற்றிடும் இருவர் காவலர்
          அடலரி ஆகியே ஆர்த்து முன்னுற
               இடியுறும் அரவுபோல் ஏங்கி ஓடினாள். ......    275

(மடந்தையங் கிரித)

மடந்தையங் கிரிதலும் மடங்க லானவர்
     தொடர்ந்தனர் பின்வரத் துளங்கிச் சோலையின்
          இடந்தனில் முனியென இருந்த வெய்யனை
               அடைந்தனள் அடைதலும் அஞ்சல்நீ என்றான். ......    276

(என்றருள் புரிதலும்)

என்றருள் புரிதலும் இகல்வெஞ் சீயமாய்ப்
     பின்றொடர் காவலர் பெயர்வுற் றோடினார்
          நின்றவள் இருந்தவன் நிலைமை நோக்கியே
               நன்றிவன் இயல்பென நவில்வ தாயினாள். ......    277

(எந்தையெம் பெரு)

எந்தையெம் பெருமகேள் எனது காதலன்
     அந்தமில் ஈசன்மேல் அமருக் கேகினான்
          வந்திலன் இன்னமும் மாய்வுற் றான்கொலோ
               உய்துள னேகொலோ உரைத்திநீ என்றாள். ......    278

(இரங்கினள் இவ்வகை)

இரங்கினள் இவ்வகை இசைப்ப மாதவன்
     வரங்கெழு தானையின் மன்னர் மாயையால்
          குரங்கென ஈருருக் கொண்டு கொம்மென
               உரங்கிளர் சலந்தரன் உடல்கொண் டெய்தினார். ......    279

(இருபிள வாம்அவ)

இருபிள வாம்அவ னியாக்கை கொண்டுசென்
     றரிவைமுன் இட்டனர் அதனைக் காண்டலும்
          வெருவினள் பதைத்தனள் வீழ்ந்த ரற்றினாள்
               ஒருவினள் உயிரென உணர்வு நீங்கினாள். ......    280

(வருந்தலை வருந்த)

வருந்தலை வருந்தலை மங்கை நீயெனாக்
     கரந்தனை ஓச்சியே காதல் நீர்மையால்
          இருந்தவன் எழுப்பலும் எழுந்து தேறியே
               விருந்தைகை தொழுதிவை விளம்பல் மேயினாள். ......    281

(நின்னிகர் மாதவர்)

நின்னிகர் மாதவர் நிலத்தின் இல்லையால்
     என்னுயிர் காத்தியேல் எனது நாயகன்
          பொன்னுட லந்தனைப் பொருத்தி அவ்வுயிர்
               தன்னையும் அமைத்தனை தருதிநீ என்றாள். ......    282

(ஆயது காலையில் அவுணன் யா)

ஆயது காலையில் அவுணன் யாக்கையை
     ஏயென ஒன்றுமா றியற்றி மாதவன்
          மாயம தாகியே மறைந்து மற்றவன்
               காயம திடைதனில் கலந்து வைகினான். ......    283

(புல்லிய குரங்கென)

புல்லிய குரங்கெனப் புகுந்த கள்வரும்
     ஒல்லையின் மறைந்தனர் உயர்ச லந்தரன்
          தொல்லுடல் புகுந்தரி துண்ணென் றேயெழ
               மெல்லியல் கண்டனள் வியந்து துள்ளினாள். ......    284

(உய்ந்தனன் கணவ)

உய்ந்தனன் கணவனென் றுளத்தில் உன்னியே
     வெந்துயர் அகன்றனள் விருந்தை என்பவள்
          வந்தனை போலுமென் மகிண நீயெனா
               அந்தமில் உவகையால் அவனைப் புல்லினாள். ......    285

(புல்லிய விருந்தை)

புல்லிய விருந்தையைப் புணர்ந்து மாயவன்
     எல்லியும் பகலுமோர் இறையும் நீங்கலான்
          அல்லியந் தேனுகர் அளியைப் போல்அவண்
               மெல்லிதழ் அமுதமே மிசைந்து மேவினான். ......    286

(காய்கதிர் நுழைவு)

காய்கதிர் நுழைவுறாக் கடிமென் காவினுள்
     மேயினன் பலபகல் வேளின் நூல்வழி
          ஆயதோர் வைகலின் அரன தாணையால்
               மாயம தயர்த்தனன் மலர்க்கண் துஞ்சினான். ......    287

(துஞ்சிய வேலை)

துஞ்சிய வேலையில் துணைவி யாகிய
     பஞ்சினின் மெல்லடிப் பாவை பார்த்திவன்
          வஞ்சகன் வஞ்சகன் மாய னேயெனா
               அஞ்சினள் நெஞ்சகம் அழன்று நீங்கினாள். ......    288

(அருந்ததி அன்ன)

அருந்ததி அன்னகற் பழிந்த தன்மையால்
     வருந்தினள் உயிர்த்தனள் மாயம் யாவையும்
          பொருந்திய தன்னுயிர்ப் போத நீர்மையால்
               தெரிந்தனள் சீதரற் கிதனைச் செப்புவாள். ......    289

(மாவலி யுடையதோர்)

மாவலி யுடையதோர் மடங்க லாயினோர்
     காவல ரிருவர்அக் காவ லாளர்உன்
          மேவல ராயுற வேந்த னாகிநீ
               ஓவலை குரங்கொடு திரிதி ஒண்புவி. ......    290

(பொற்புறு கணவனை)

பொற்புறு கணவனைப் போல வந்தெனைப்
     பற்பகல் புணர்ந்தனை பகைவர் மாயையால்
          கற்புடை மனைவியைக் கவர்ந்து போகநீ
               சொற்படு பழியினைச் சுமத்தியால் என்றாள். ......    291

(இக்கொடு மொழி)

இக்கொடு மொழிபுகன் றெரியை மூட்டியே
     புக்குயிர் துறந்தனள் புலம்பி யாங்கவள்
          அக்குறு சுடலைநீ றாடி வாடினான்
               மைக்கடல் மேனியன் மாலின் மூழ்கியே. ......    292

வேறு

(அத்துணை தன்னி)

அத்துணை தன்னின் வானோர் அம்புயன் கயிலை யேகி
     நித்தனை இறைஞ்சி மாயோன் நிலைமையை உணர்த்தும் போழ்தில்
          சத்தியங் கதனைத் தேர்ந்து தலையளி செய்து தானோர்
               வித்தினை உதவி ஈது விண்டுமுன் இடுதிர் என்றாள். ......    293

(ஈதலும் அதனை)

ஈதலும் அதனை வேதா இருகையால் ஏந்திச் சென்னி
     மீதுறக் கொண்டு போந்து விருந்தைதன் ஈமந் தன்னில்
          தாதுறு பலியின் வித்தித் தடங்கட லமுதம் பெய்ய
               மாதவன் முன்னம் ஆங்கோர் துளவமாய் மலிந்த தன்றே. ......    294

(தண்டுள வான)

தண்டுள வான தாங்கோர் தையலாய் நின்ற காலைக்
     கண்டனன் தருவின் கேள்வன் கனலிடைப் புகுந்தாள் மீது
          கொண்டிடு காதல் நீங்கி அவள்வயிற் கூட்டம் வெஃக
               அண்டரும் அயனும் மாலுக் கருங்கடி இயற்றி ஈந்தார். ......    295

(கடியுறு துளவம்)

கடியுறு துளவம் என்னுங் கன்னியைக் கொண்டு கஞ்சக்
     கொடியுறு தகைமைத் தான கோநகர் குறுகி வேறோர்
          படியுறு பெற்றித் தல்லாப் பல்பெரும் போகம் ஆற்றி
               முடியுறு சூட்டு மாக முடித்தனன் முளரிக் கண்ணன். ......    296

(அவன்சலந் தரனை)

அவன்சலந் தரனை வீட்டும் ஆழியை வாங்கப் பன்னாள்
     சிவன்கழல் வழிபட் டோர்நாள் செங்கணே மலராச் சாத்த
          உவந்தனன் விடைமேல் தோன்றி அப்படை உதவப் பெற்று
               நிவந்தனன் அதனால் வையம் நேமியான் என்ப மாதோ. ......    297

வேறு

(போற்ற லார்தம்)

போற்ற லார்தம் புரமடு புங்கவன்
     வேற்று ருக்கொள் வியனருட் டன்மையைச்
          சாற்றி னாம்இனித் தன்னிகர் இல்லதோர்
               ஏற்றின் மேல்வருந் தன்மை இயம்புவாம். ......    298

(இன்ன நான்குக)

இன்ன நான்குகத் தெல்லை இராயிரம்
     மன்னு கின்றதொர் வைகல்அவ் வைகல்தான்
          துன்னு முப்பது தொக்கதொர் திங்களாம்
               அன்ன தாறிரண் டால்வரும் ஆண்டரோ. ......    299

(ஆண்டு நூறுசென்)

ஆண்டு நூறுசென் றால்அயற் காயுவும்
     மாண்டு போமது மாற்கொரு வைகலாம்
          ஈண்டு நூல்களெ லாமிவை கூறுமால்
               காண்டி யாலிவை கற்றுணர் பேதைநீ. ......    300

(ஆய தன்மையில்)

ஆய தன்மையில் அச்சுதற் காயுவும்
     மாயும் எல்லையின் மன்னுயிர் யாவையுந்
          தேயும் அண்டஞ் சிதைந்திடும் எங்கணும்
               பாயி ருங்கன லேபரந் துண்ணுமால். ......    301

(ஆன காலை அகிலமும்)

ஆன காலை அகிலமும் ஈமமாய்த்
     தூந லங்கொடு தோன்றுமச் சூழலில்
          தானு லாவித் தனிநடஞ் செய்திடு
               ஞான நாயக னாயகி காணவே. ......    302

(பெருகு தேயுப்)

பெருகு தேயுப் பிரளயம் அன்னதில்
     தருமம் யாவினுக் குந்தனித் தெய்வதம்
          வெருவி யாமிவண் வீடுது மேலினிப்
               புரிவ தேதெனப் புந்தியிற் சூழ்ந்ததே. ......    303

(ஆறு லாஞ்சடை)

ஆறு லாஞ்சடை அண்ணலைச் சேர்வனேல்
     ஈறிலா தென்றும் உற்றிடு வேனெனாத்
          தேறி யேஅறத் தெய்வதஞ் செங்கணான்
               ஏற தாயொ ரெழிலுருக் கொண்டதே. ......    304

(ஏற்றின் மேனிகொண்)

ஏற்றின் மேனிகொண் டீசன்முன் ஏகியே
     போற்றி யானின்று பொன்றிடுந் தன்மையை
          மாற்றி யாற்றல் வழங்கிநிற் கூர்தியாம்
               பேற்றை எற்குப் பிரானருள் என்னவே. ......    305

வேறு

(இறத்தலை இன்மை)

இறத்தலை இன்மையும் யான மாய்த்தனைப்
     பொறுத்திடுந் தன்மையும் பொருவில் வன்மையும்
          உறைத்திடும் அன்பும்வா லுணர்வும் நல்கியே
               அறத்தனிக் கடவுளுக் கண்ணல் கூறுவான். ......    306

(முதலயல் இடைகடை)

முதலயல் இடைகடை மொழிய நின்றிடுஞ்
     சதுர்வித யுகந்தனில் தருமத் தின்திறம்
          இதுவென நான்குமூன் றிரண்டொன் றாகிய
               பதமுறை யூன்றியே படியிற் சேறிமேல். ......    307

(ஈங்குன திடந்தனில்)

ஈங்குன திடந்தனில் யாமெக் காலமும்
     நீங்கலம் இருந்தனம் நீயும் வந்துநம்
          பாங்கரின் அடைந்தனை பரிவொ டூர்தியாய்த்
               தாங்குதி யாரினுந் தலைமை பெற்றுளாய். ......    308

(எண்ணுநந் தொண்ட)

எண்ணுநந் தொண்டர்கள் இயற்று பாவமும்
     புண்ணிய மாநமைப் புறக்க ணித்துளார்
          பண்ணிய அறமெலாம் பாவ மாகுமால்
               திண்ணமீ தருமறை தானுஞ் செப்புமே. ......    309

(மைதவிர் அடியர்)

மைதவிர் அடியர்செய் பவமு மற்றுளார்
     செய்திடு தருமமுந் திரிப தாகியே
          எய்திடு கின்ற தியாம்உன் றன்னிடை
               மெய்திகழ் உயிரென மேவும் பான்மையால். ......    310

(நின்னிடை யாமு)

நின்னிடை யாமுளோம் நீயும் ஊர்தியாய்
     மன்னுதி எமதுபால் மற்றி தல்லதை
          இன்னுமோர் வடிவு கொண் டெம்மைப் போற்றுதி
               அன்னதும் உணர்கென அருளிச் செய்தரோ. ......    311

வேறு

(கூர்ந்த சூலக் கொடு)

கூர்ந்த சூலக் கொடும்படை வானவன்
     சார்ந்து போற்றுந் தருமக் கடவுளை
          ஊர்ந்தி டுந்தனி யூர்திய தாகியே
               சேர்ந்தி டும்படி சீரருள் செய்தனன். ......    312

(அந்த நாண்முத)

அந்த நாண்முத லாதிப் பிரான்றனைச்
     சிந்தை மேல்கொண்ட சீருடை யன்பர்முன்
          நந்தி யாகும் நலம்பெறும் ஊர்திமேல்
               வந்து தோன்றும் வரம்புரி பான்மையால். ......    313

(சாற்றும் அவ்விடை)

சாற்றும் அவ்விடைக் கேதனைத் தாங்குபேர்
     ஆற்றல் ஈந்த செயலறிந் தல்லவோ
          மாற்ற லார்புரஞ் செற்றுழி மாயவன்
               ஏற்றின் மேனிகொண் டெந்தையைத் தாங்கினான். ......    314

(ஆத லால்அரன்)

ஆத லால்அரன் அவ்விடை யூர்ந்திடல்
     ஏத மோவன் றிதுநிற்க தெண்டிரை
          மீது தோன்றும் விடத்தையுண் டானென
               ஓதி னாய்அதன் உண்மையைக் கேட்டிநீ. ......    315

வேறு

(நிருதர் தம்முடன்)

நிருதர் தம்முடன் அவுணரும் அமரரும் நேர்ந்து
     திருகு வெஞ்சினத் தொருபகல் முந்துபோர் செய்ய
          இருதி றத்தினும் பற்பலர் வல்லையில் இறப்ப
               வெருவி யன்னது கண்டனர் அமரினை விடுத்தார். ......    316

(மேலை வானவர் அவுண)

மேலை வானவர் அவுணர்தங் கோவொடு விரவிக்
     கால மெண்ணில இருந்துபோர் செய்வது கருதி
          நாலு மாமுகத் திறையவன் பதத்தினை நணுகிச்
               சீல மோடவன் தாள்மலர் பணிந்துரை செய்வார். ......    317

(ஒல்கு மாயுளை)

ஒல்கு மாயுளை உடையரேம் பற்பகல் உஞற்று
     மல்கு பேரமர் இயற்றுவான் பாற்கடல் மதியா
          அல்க லின்றிய அமிர்தினை வாங்கியே அடிகேள்
               நல்கு வாயெமக் கென்றலும் அயன்இவை நவில்வான். ......    318

(ஆதி மாயவற் கிச்)

ஆதி மாயவற் கிச்செயல் மொழிகுவம் அவனே
     ஓத வேலையைக் கடைந்தமு தளித்திடும் உண்டால்
          சாதல் வல்லையில் வந்திடா தென்றயன் சாற்றிப்
               போது நாமென அவரொடும் பாற்கடல் புகுந்தான். ......    319

(நனந்த லைப்படு)

நனந்த லைப்படு பயங்கெழு தெண்டிரை நடுவண்
     அனந்தன் மீமிசைத் துயிலுறும் மூர்த்தியை அணுகி
          மனந்த வாதபேர் அன்பொடு நான்முகன் வழுத்த
               நினைந்து கண்விழித் தொய்யென எழுந்தனன் நெடியோன். ......    320

(நீவிர் இவ்விடை)

நீவிர் இவ்விடை வந்தவா றென்னென நெடியோன்
     பூவின் மேல்வரு பண்ணவன் அவுணர்கள் பொருவில்
          தேவர் வேந்தர்கள் வேண்டிய குறையினைச் செப்ப
               ஆவ தென்றதற் கியைந்தனன் அளித்திடும் அருளால். ......    321

(அருள்பு ரிந்தெழு)

அருள்பு ரிந்தெழு மாயவன் மந்தரம் அதனை
     உருள்பு ரிந்திடு மத்தென நிறுவியே உடலாம்
          பொருள்பு ரிந்திடும் மதியினை மதலையாப் புரியா
               இருள்பு ரிந்தவா சுகிதனை நாணென யாத்தான். ......    322

(ஒருபு றத்தினில்)

ஒருபு றத்தினில் அமரர்கள் ஒருபுறத் தவுணர்
     இருபு றத்தினும் ஈர்த்திட நல்கியிப் புவிசூழ்
          தருபு றக்கிரி யனையமத் தடிமுடி தன்மெய்
               வருபு றத்தினுங் கரத்தினும் பரித்தனன் மாலோன். ......    323

(ஆன தன்மையின்)

ஆன தன்மையின் மாயவன் பரித்துழி அமரர்
     கோனும் வானவர் யாவரும் அவுணருங் கோமான்
          தானும் வாசுகி பற்றியே வலியுறுந் தகவால்
               வானி லாவுமிழ் பாற்கடல் மறுகிட மதித்தார். ......    324

(மதித்த வேலைய)

மதித்த வேலையவ் வேலையி னுடைந்தென வாய்விட்
     டதிர்த்த தேவரும் உலைந்தனர் குலைந்தன அகிலம்
          கதித்த மேருவுஞ் சலித்தன ஒலித்தன கரிகள்
               பதைத்து வெய்துயிர்த் தொடுங்கின நடுங்கின பணியே. ......    325

(உடைந்து போவது)

உடைந்து போவது கொல்லென அமரர்கள் ஒருங்கே
     தொடர்ந்து தம்பெரு வலிகொடே மந்தரஞ் சுழலக்
          கடைந்து வேலையைக் கலக்குழி ஈர்த்திடுங் கயிறாய்
               அடைந்த வாசுகி பொறுக்கலா தயர்ந்ததை அன்றே. ......    326

(ஊன்று பேதுற வெய்)

ஊன்று பேதுற வெய்தியே யாற்றவெய் துயிர்த்துத்
     தோன்று வெஞ்சினங் கொண்டுமெய் பதைத்துநாத் துடிப்ப
          ஆன்ற ஆயிரம் வாய்தொறும் ஆலகா லத்தைக்
               கான்ற தத்துணை அளக்கரும் உமிழ்ந்தது கடுவே. ......    327

(ஈற்றுக் கோடியின்)

ஈற்றுக் கோடியின் எழுமுகிற் கோடியின் இருண்டு
     கூற்றுக் கோடியின் மறங்கொடு திசைதொறுங் குலவுங்
          காற்றுக் கோடியின் விரைவினால் வடவையங் கடுந்தீ
               நூற்றுக் கோடியிற் பரந்ததவ் விடமெலாம் நொய்தின். ......    328

(ஓட லுற்றெழுந் தவ்)

ஓட லுற்றெழுந் தவ்விடஞ் சூழ்தலும் உலையா
     ஓட லுற்றனர் தானவர் உம்பரா யுள்ளோர்
          ஓட லுற்றனர் முனிவரர் ஓடலுற் றனரால்
               ஓட லுற்றனர் உலகெலாம் படைத்திடும் உரவோர். ......    329

(தண்டு ழாய்முடிப்)

தண்டு ழாய்முடிப் பண்ணவன் இனையதோர் தன்மை
     கண்டு மந்தரங் காப்புவிட் டுள்ளமேற் கவற்சி
          கொண்டு நாமின்று போற்றுதும் ஈதெனக் குறியா
               அண்ட ராதியர் மேற்செலும் விடத்தின்முன் அடுத்தான். ......    330

(மேல்வ ருங்கொடு)

மேல்வ ருங்கொடு விடத்தின்முன் னுறுதலும் வெகுண்டு
     சால அங்கது தாமரைக் கண்ணன்மேல் தாக்கி
          மூல முள்ளதோர் வச்சிர மணிநிற முருக்கி
               நீல வண்ணமே யாக்கிய தவனும்நின் றிலனால். ......    331

(கோல காலமாய்)

கோல காலமாய் உலகெலாம் அடுந்தொழில் கொண்ட
     ஆல காலமுன் நிற்கலார் அரிமுத லானோர்
          மூல காலமும் இறுதியும் இன்றியே மூவாக்
               கால காலன்வாழ் கயிலையை அடைந்தனர் கடிதில். ......    332

(முந்து வெவ்விடஞ்)

முந்து வெவ்விடஞ் சுடுதலால் இரிந்தவர் முக்கண்
     எந்தை எம்பெரு மாட்டிவாழ் கயிலையில் எவரும்
          வந்த தற்புத நீரதோ வெருவினால் மைந்தர்
               தந்தை தாயிடத் தன்றியே யாங்ஙனஞ் சார்வார். ......    333

வேறு

(ஆயவர் கயிலையில்)

ஆயவர் கயிலையில் அமலற் காகிய
     கோயிலின் முதற்பெருங் கோபு ரத்திடை
          நாயக நந்தியந் தேவை நண்ணியே
               போயதெந் துயரெனப் புகன்று போற்றினார். ......    334

(போற்றிய பின்னுற)

போற்றிய பின்னுறப் புகுந்த வாறெலாஞ்
     சாற்றினர் கேட்டலுந் தகுவர் தேவர்கள்
          வீற்றுற அவண்நிறீஇ வேதன் மாறிசைக்
               கோற்றொழி லார்தமைக் கொண்டு போயினான். ......    335

(நடைநெறி யருள்புரி)

நடைநெறி யருள்புரி நந்தி யெம்பிரான்
     கடைநிலை ஐந்தவாங் காப்பில் எண்டிசை
          அடைதரு மன்னரை அருளின் நோக்கியிவ்
               விடைதனில் உறுதிரென் றியம்பி யேகியே. ......    336

(அருள்முறை நாடிமால்)

அருள்முறை நாடிமால் அயனென் றுள்ளதோர்
     இருவரை அமலன்முன் எய்த உய்த்தலுங்
          கருணையங் கடல்தனைக் கண்டு போற்றினார்
               பரவச மாயினார் பணிந்து பன்முறை. ......    337

(போற்றினர் நிற்றலும்)

போற்றினர் நிற்றலும் புரத்தை முன்அடும்
     ஆற்றலின் உம்பரான் அரிநின் மேனிதான்
          வேற்றுரு வாய்இவண் மேவிற் றென்னெனச்
               சாற்றினன் யாவையும் உணருந் தன்மையான். ......    338

(மெய்வழி பாடுசெய்)

மெய்வழி பாடுசெய் மேலை யோர்க்கெலாம்
     உய்வழி புரிபவன் இனைய ஓதலும்
          மைவழி மேனியன் மானம் உள்ளுற
               அவ்வழி இனையன அறைதல் மேயினான். ......    339

(வஞ்சின அவுணர்கள்)

வஞ்சின அவுணர்கள் வான மேலவர்
     வெஞ்சின அமரினில் விளிந்த வேலையில்
          எஞ்சலில் ஆயுவுற் றிகல்செய் வாமெனப்
               புஞ்சமொ டயனொடு புகறல் மேயினார். ......    340

(அன்னமென் கொடி)

அன்னமென் கொடியினன் அனைய ரோடுபோந்
     தென்னொடு கூறினன் யானெ ழுந்தரோ
          உன்னருள் பெற்றிலன் உணர்ந்தி டாமலே
               மன்னிய அமிழ்திவண் வருதல் வேண்டினேன். ......    341

(தானவர் அமரர்கள்)

தானவர் அமரர்கள் சதுர்மு கத்தவன்
     ஏனையர் தம்முட னியானின் றெய்தியே
          பானிறை கடல்கடை பொழுதிற் பாயெரி
               யானது மருளுற ஆலம் போந்ததே. ......    342

(உன்றன தருள்பெறா)

உன்றன தருள்பெறா உண்மை நாடியே
     இன்றுல குயிரெலாம் இறக்க அவ்விடஞ்
          சென்றதி யாவருந் தெருமந் தோடினார்
               நின்றவென் மெய்யையிந் நிறம தாக்கிற்றே. ......    343

(வேற்றுரு வாக்கியெ)

வேற்றுரு வாக்கியென் மெய்யில் தாக்கலும்
     ஆற்றலன் அகன்றனன் அனையர் தம்மொடே
          ஏற்றம தானவெம் மிடர்கள் யாவையும்
               ஆற்றுநர் யாருளர் மற்று நீயலால். ......    344

(உன்னருள் பெறாம)

உன்னருள் பெறாமல்அவ் வுததி சேர்தலால்
     இன்னதொர் இன்னல்வந் தெய்திற் றாதலால்
          நின்னடி அடைந்தனம் நீடு தீயெனத்
               துன்னிய கொடுவிடந் தொலைக்கச் செல்லுமால். ......    345

(ஆரணம் யாவையும்)

ஆரணம் யாவையும் அறிந்து நாடொணாப்
     பூரண வுமையொடு பொருந்தி இன்னதாம்
          ஏரண வுருவுகொண் டிருக்கை எம்மையாள்
               காரண மன்றியே கருமம் யாவதோ. ......    346

(தீயென எழுதரு)

தீயென எழுதரு சீற்ற வெவ்விடம்
     ஆயதை மாற்றியே அளியர் தங்களை
          நீயருள் புரிகென நீல்நி றந்திகழ்
               மாயவன் உரைத்தனன் வழுத்தி நிற்கவே. ......    347

(மாதிர இறைவரும்)

மாதிர இறைவரும் வானு ளோர்களும்
     நீதியில் அவுணரும் நின்ற எல்லையில்
          நாதனை வழுத்தலும் நம்பன் கேட்டரோ
               ஏதிவை அரவம்என் றியம்ப லோடுமே. ......    348

(வானவர் அவுணர்கள்)

வானவர் அவுணர்கள் மாதி ரத்தவர்
     ஏனையர் வல்விடத் தின்னல் உற்றுளார்
          கோநகர்க் கடைதொறுங் குழுமி ஏத்தினார்
               ஆனதிவ் வொலியென அயன்வி ளம்பவே. ......    349

(கறுத்திடும் மிடறுடை)

கறுத்திடும் மிடறுடைக் கடவுள் நந்தியைக்
     குறிப்பொடு நோக்கியே கொணர்தி யாலெனப்
          புறத்திலம் மேலவன் போந்து மற்றவர்
               திறத்துடன் உறையுளில் செல்ல உய்ப்பவே. ......    350

(வந்தவர் யாவரும்)

வந்தவர் யாவரும் வணங்கி ஈசனைப்
     புந்தியில் அன்பொடு போற்றி யாற்றவும்
          நொந்தனம் விடத்தினால் நொய்தில் அன்னதைச்
               சிந்தினை எமக்கருள் செய்தி என்னவே. ......    351

வேறு

(ஈதெலாங் கேட்ட)

ஈதெலாங் கேட்ட மேலோன் இறைவியை நோக்கி இன்னோர்
     ஓதலா மாற்றம் உன்றன் உளத்தினுக் கியைவ தாமோ
          மாதுநீ புகறி யென்ன வந்துநின் னடைந்தார் வானோர்
               ஆதலால் அவர்க்கு வல்லே அருள்புரிந் திடுதி என்றாள். ......    352

(வண்டமர் குழலெம்)

வண்டமர் குழலெம் மன்னை மற்றிவை இசைத்த லோடும்
     அண்டரு மகிழ்ச்சி எய்தி ஆதியங் கடவுள் தன்பால்
          தொண்டுசெய் தொழுகு கின்ற சுந்தரன் தன்னை நோக்கிக்
               கொண்டிவண் வருதி யால்அக் கொடுவிடந் தன்னை என்றான். ......    353

(என்றலும் இனிதே)

என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன் ஏகி யாண்டுந்
     துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடுவந் துய்ப்ப
          ஒன்றொரு திவலை யேபோல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி
               நின்றிடும் அமரர் தம்மை நோக்கியே நிமலன் சொல்வான். ......    354

(காளக வுருவு கொண்)

காளக வுருவு கொண்ட கடுவினை உண்கோ அன்றேல்
     நீளிடை அதனிற் செல்ல நெறிப்பட எறிகோ என்னா
          வாளுறு மதிதோய் சென்னி வானவன் அருள அன்னான்
               தாளுற வணங்கி நின்று சதுர்முகன் முதலோர் சொல்வார். ......    355

(ஐயநீ யன்றி யாரிவ்)

ஐயநீ யன்றி யாரிவ் வனல்விட மாற்று நீரார்
     செய்யகைக் கொண்ட ஆற்றாற் சிறிதெனக் காட்டிற் றன்றே
          வெய்யதோர் இதனை இன்னே விட்டனை என்னிற் பின்னை
               உய்வரோ யாரும் இன்னே ஒருங்குடன் முடிந்தி டாரோ. ......    356

(முடிவிலா உனக்கே)

முடிவிலா உனக்கே அன்றோ முன்னுறு பாக மெல்லாம்
     விடமதே எனினு மாக வேண்டுதும் இதனை வல்லே
          அடியரேம் உய்யு மாற்றால் அருந்தினை அருள்மோ என்னக்
               கடிகமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனிநீ ரென்றான். ......    357

(என்றனன் விரைவில்)

என்றனன் விரைவில் தன்கை ஏந்திய விடமுட் கொள்ளச்
     சென்றது மிடற்றில் அன்ன திறத்தினை யாரும் நோக்கி
          இன்றெம துயிர்நீ காத்தற் கிங்கிது சான்றாய் அங்கண்
               நின்றிட வருடி என்றே நிமலனைப் போற்றல் உற்றார். ......    358

(போற்றலும் மிடற்றில்)

போற்றலும் மிடற்றில் எங்கோன் பொலன்மணி அணிய தென்ன
     மாற்றருந் தகைமைத் தான வல்விடம் நிறுவி அன்னார்க்
          கேற்றநல் லருளைச் செய்ய யாவரும் இறந்தே இன்று
               தோற்றின ராகும் என்னச் சொல்லரு மகிழ்ச்சி கொண்டார். ......    359

(மாமகிழ் சிறந்து நிற்கு)

மாமகிழ் சிறந்து நிற்கும் மாலயன் முதலோர் தம்மைத்
     தூமதி மிலைச்சுஞ் சென்னித் தொல்லையோன் அருளால் நோக்கிக்
          காமரு கடலை இன்னுங் கடைதிரால் அமுதுண் டாகும்
               போமினீர் இன்னே என்னப் போற்றினர் வணங்கிப் போனார். ......    360

(போனவர் தொன்மை)

போனவர் தொன்மை போலப் புணரியைக் கடைந்த காலை
     மேனிகழ் அமிர்த மேனை வியன்பொருள் பலவும் வந்த
          வானவர் தாமே பெற்றார் மற்றவை தம்மை ஆலம்
               ஆனதை அமலன் உண்ட தவருயிர் அளித்த தன்றே. ......    361

(கடல்விடம் நுகர்ந்த)

கடல்விடம் நுகர்ந்த தொல்லைக் கடவுள்பின் னழிக்குங் காலை
     உடலுயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய விடம தன்றோ
          சுடலைய தாகும் அந்தச் சுடலைகாண் அனைய சோதி
               நடநவில் கின்ற எல்லை நாடருந் தகைமைத் தஃதே. ......    362

(அங்கதும் அன்றி)

அங்கதும் அன்றி எந்தை அகிலமு முடித்த ஞான்றின்
     எங்கும்வெள் ளிடைய தாகி ஈமமாம் அவ்வீ மத்து
          மங்கையுந் தானு மேவு மற்றிது தவறோ அன்னான்
               கங்கையை முடிமேற் கொண்ட காதைமேல் உரைத்தும் அன்றே. ......    363

(ஈசனை ஒருஞான்)

ஈசனை ஒருஞான் றம்மை எழில்பெறு கயிலைக் காவில்
     பேசலள் ஆடல் உன்னிப் பின்வரா விழியி ரண்டுந்
          தேசுறு கரத்தாற் பொத்தச் செறிதரு புவனம் யாவும்
               மாசிருள் பரந்த தெல்லா உயிர்களும் வருத்தங் கொள்ள. ......    364

(திங்களின் கதிரும்)

திங்களின் கதிரும் ஏனைத் தினகரன் வெயிலுந் தீயின்
     பொங்குசெஞ் சுடரும் ஏனைப் புலவர்தங் கதிரு மற்றும்
          எங்குள ஒளியும் மாய்வுற் றிருள்நிறம் படைத்த மாதோ
               சங்கரன் விழியால் எல்லாச் சோதியுந் தழைத்த நீரால். ......    365

(தன்னிகர் பிறரி)

தன்னிகர் பிறரி லாத தற்பரன் விழியி ரண்டுங்
     கன்னிகை கமலக் கையாற் புதைப்பஅக் கணம தொன்றின்
          மன்னுயிர்த் தொகைகட் கெல்லாம் வரம்பிலா வூழி யாக
               அன்னதோர் பான்மை நோக்கி அருளுவான் நினைந்தான் அன்றே. ......    366

(ஓங்குதன் நுதலின்)

ஓங்குதன் நுதலின் நாப்பண் ஒருதனி நாட்டம் நல்கி
     ஆங்கது கொண்டு நாதன் அருள்கொடு நோக்கி யாண்டும்
          நீங்கரு நிலைமைத் தாகி நின்றபேர் இருளை மாற்றித்
               தீங்கதிர் முதலா னோர்க்குச் சிறந்தபே ரொளியை ஈந்தான். ......    367

(மண்ணுறு புவனத்)

மண்ணுறு புவனத் துள்ள மாயிருள் முழுதும் நீங்க
     உண்ணிகழ் உவகை மேல்கொண் டுயிர்த்தொகை சிறத்த லோடுங்
          கண்ணுதல் இறைவன் செய்கை கவுரிகண் டச்சம் எய்தித்
               துண்ணென விழிகள் மூடுந் துணைக்கரம் வாங்கி னாளால். ......    368

(சங்கரன் விழிகள்)

சங்கரன் விழிகள் மூடுந் தனாதுகை திறக்கும் எல்லை
     அங்குலி யவையீ ரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
          மங்கையத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து
               கங்கையோர் பத்தா யாண்டுங் கடல்களிற் செறிந்த அன்றே. ......    369

(ஆயிர நூறு கோடி)

ஆயிர நூறு கோடி அணிமுகம் படைத்தி யாண்டும்
     பாயிரு நீத்த மாகிப் பரவலும் அதுகண் டஞ்சி
          மாயனும் அயனும் வானோர் மன்னனும் பிறரும் போற்றி
               மீயுயர் கயிலை நண்ணி விமலனை அடைந்து தாழ்ந்தார். ......    370

(அடிமலர் தொழுதே)

அடிமலர் தொழுதே எந்தாய் அறிகிலோம் இதுவோர் நீத்தங்
     கடல்களும் அன்றால் யாண்டுங் கல்லென விரைத்தி யாரும்
          முடிவுறு திறத்தால் அண்டம் முழுவதுங் கவர்ந்த முன்னாள்
               விடமெனப் பரித்தே ஈது விமலநீ காத்தி என்றார். ......    371

(என்றலும் நதிகள்)

என்றலும் நதிகள் தோற்றம் இயம்பி எவ் வுலகுஞ் சூழ்போய்
     நின்றவந் நீத்தந் தன்னை நினைத்தவண் அழைத்து நாதன்
          ஒன்றுதன் வேணி மேல்ஓர் உரோமத்தின் உம்ப ருய்ப்ப
               மன்றலங் கமலத் தோனும் மாலுமிந் திரனுஞ் சொல்வார். ......    372

(மேதினி யண்ட)

மேதினி யண்ட முற்றும் விழுங்கிய கங்கை உன்றன்
     பாதியாள் கரத்தில் தோன்றும் பான்மையால் உனது சென்னி
          மீதினிற் செறிக்கும் பண்பால் விமலமாம் அதனில் எங்கண்
               மூதெயில் நகரம் வைகச் சிறிதருள் முதல்வ என்றார். ......    373

(இறையவன் வேணி)

இறையவன் வேணி யுள்புக் கிருந்ததோர் கங்கை தன்னில்
     சிறுவதை வாங்கி மூவர் செங்கையுஞ் செறிய நல்க
          நிறைதரும் அன்பால் தாழ்ந்து நிகழ்விடை பெற்றுத் தத்தம்
               உறைநகர் எய்தி அங்கண் உய்த்தனர் அனைய நீத்தம். ......    374

(அந்நதி மூன்று)

அந்நதி மூன்று தன்னில் அயனகர் புகுந்த கங்கை
     பன்னருந் திறலின் மிக்க பகீரதன் தவத்தால் மீளப்
          பின்னரும் இமையா முக்கட் பெருந்தகை முடிமேல் தாங்கி
               இந்நில வரைப்பிற் செல்ல இறையதில் விடுத்தல் செய்தான். ......    375

(நானில மிசையே)

நானில மிசையே உய்த்த நன்னதி சகரர் எல்லாம்
     வானுயர் கதிபெற் றுய்ய மற்றவர் என்பிற் பாய்ந்து
          மீனெறி தரங்க வேலை மேவிய திஃதொன் றல்லால்
               ஏனைய நதிகள் தொல்லை இடந்தனில் இருந்த அன்றே. ......    376

(தொல்லையில் இறை)

தொல்லையில் இறைவி அங்கைத் தோன்றிய கங்கை நீத்தம்
     ஒல்லையில் உலகங் கொள்ளா தடக்கிய உண்மை அன்றோ
          அல்லிருள் அனைய கண்டத் தாதியங் கடவுள் முன்னோர்
               மெல்லியல் தன்னை வேணி மிசைக்கொண்டா னென்னு மாறே. ......    377

(மாதுமை வசத்த)

மாதுமை வசத்த னாகி மருவுவான் என்றி அன்னாள்
     நாதன தருளே எல்லாம் நண்ணுவித் தருளும் வண்ணம்
          பேதக மாகித் தானோர் பெண்ணுருக் கொண்டு மேவும்
               ஆதலின் அவள்வந் துற்ற தன்மையை அறைவன் கேட்டி. ......    378

(தொல்லையோர் கமல)

தொல்லையோர் கமலத் தண்ணல் தோன்றியே இருந்த காலைப்
     பல்லுயிர்த் தொகுதி தன்னைப் படைப்பது கருதி முன்னர்
          வல்லையிற் சனக னாதி மைந்தர்நால் வரையுநல்க
               நல்லுணர் வெய்தி அன்னோர் நற்றவ ராகி உற்றார். ......    379

(அன்னதற் பின்னர் வேத)

அன்னதற் பின்னர் வேதன் அளிப்பதும் அல்கா தாக
     இன்னலுற் றிரக்கம் எய்தி யாதினிச் செய்வ தென்னா
          முன்னுறு குமர ரோடு முகுந்தன திடத்தில் எய்திப்
               பொன்னடி வணக்கஞ் செய்து தன்குறை புகன்று நின்றான். ......    380

(நின்றிடு கின்ற காலை)

நின்றிடு கின்ற காலை நேமியங் கரத்து வள்ளல்
     இன்றிது நம்மால் முற்றா தீசனால் அன்றி யென்னா
          நன்றுணர் முனிவ ரோடு நான்முக னோடும் வெள்ளிக்
               குன்றினில் ஏகி நாதன் குரைகழல் பணிந்து சொல்வான். ......    381

(அண்டர்கள் முதல்வ கேண்)

அண்டர்கள் முதல்வ கேண்மோ அம்புயன் படைப்பின் உள்ளங்
     கொண்ட னன்அதுமல் காதால் குறையிது நீக்கு கென்ன
          வண்டுள வத்தி னானை மைந்தரை அயனை நோக்கி
               நுண்டுகள் படவே ஈசன் நொய்தென வீறு செய்தான். ......    382

(ஏகனை ஆகி வைகும்)

ஏகனை ஆகி வைகும் எந்தைதன் னிடப்பா லான
     வாகுவை நோக்கும் எல்லை மற்றவண் உமையாள் தோன்றப்
          பாகம திருத்தி அன்னாள் பரிவொடு கலந்து மேவிக்
               கோகன தக்கண் ணானைக் குமரரை அயனைத் தந்தான். ......    383

(தந்துழி ஈசன் தன்)

தந்துழி ஈசன் தன்னைத் தனயரும் அயனும் மாலும்
     வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி
          நத்தம தருள தாகு நங்கையோ டினிது சேர்ந்தாம்
               முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி என்றான். ......    384

(என்னலும் உவகை)

என்னலும் உவகை எய்தி யாமினி உய்ந்தோம் என்னா
     அன்னையொ டத்தன் தன்னை அளியொடு வலஞ்செய் தேத்திப்
          பின்னரும் வணக்கஞ் செய்து பெயர்ந்தனர் பின்பு வேதா
               மன்னுயிர்த் தொகுதி யெல்லாம் வரன்முறை படைக்கல் உற்றான். ......    385

(மாற்றலர் புரமூன்)

மாற்றலர் புரமூன் றட்ட வானவன் உமையா ளோடும்
     வீற்றிருந் தருள லாலே விழைவுடன் ஆண்பெண் மேவி
          ஆற்றவும் இன்ப மெய்தி ஆவிகள் பெரிது மல்க
               நாற்றிசை முகத்தன் செய்கை நன்றுற நடந்த தன்றே. ......    386

(தேனமர் கமலத்)

தேனமர் கமலத் தண்ணல் செய்தொழில் முற்று மாற்றால்
     ஆனதன் னருளை யாங்கோ ராயிழை யாக நல்கி
          மேனிகழ் கருணை தன்னால் மேவுவ துணராய் ஏனை
               வானவர் போலெங் கோனை மதித்தனை மதியி லாதாய். ......    387

(காமரு வடிவாய்)

காமரு வடிவாய் எங்குங் காண்பது சத்தி அங்கண்
     மாமய மாகி நின்றான் மன்னிய சிவனாம் ஈது
          தூமறை முதலா வுள்ள தொல்லைநூல் புகலும் அன்னார்
               தாமொரு புதல்வன் தன்னைத் தந்தவா சாற்று கின்றாம். ......    388

ஆகத் திருவிருத்தம் - 9185




*1. பா-ம்: தந்திடு முறையும்.

*2. பா-ம்: வீழ்ந்தன வாகையால்.

*3. பா-ம்: சிந்திப்பீரியான்.

(எண் = செய்யுளின் எண்)

*1. கந்தமாமலர் - சிறந்த தாமரைமலர்.

*2-1. கேசம் - மயிர்; இது பிரம்மாவிஷ்ணுக்களின் சிகை.

*2-2. ஏனத்தின் எயிறு - பன்றிக்கொம்பு.

*2-3. கூருமம் - ஆமை.

*3-1. தந்தி - யானை.

*3-2. பலி - பிச்சை.

*3-3. பகவன் - சகல குணங்களும் உடையவன்; சிவன்.

*4-1. வெண்டலை - தசை நீங்கிய தலை.

*4-2. அம்பரம் - ஆடை.

*4-3. நக்கன் - நிருவாணி.

*6. ஈதல் இன்று - கொடுப்பதில்லை.

*7-1. தீர்த்தன் - பரிசுத்தன்; சிவபெருமான்.

*7-2. சங்கம் - சபை.

*8-1. நிந்தைபோல் - பழிப்பினையுடையவைபோல்.

*8-2. சிறுவதும் - சிறிதும்.

*8-3. கயவ - கீழ்மகனே!.

*9. மேல் வினை - ஆகாமியவினை.

*10. துப்புரவு - போகம்.

*12-1. உரம் - மார்பு.

*12-2. முந்நூல் - பூணூல்.

*13-1. அயில் - சூலம்.

*13-2. நீறாக்கி - விபூதி ஆக்கி.

*15-1. கழியுடல் - வெண்டலை.

*15-2. முடி - தலைகள்.

*16. ஆடகக் கண்ணினன் - இரணியாட்சன்.

*17-1. கொண்டல் நன் மேனியம் பண்ணவன் - திருமால்.

*17-2. கோகனதத்தோன் துண்டமாகிய இடத்தில் - பிரமனுடைய நாசியினிடத்தில்.

*17-3. துண்டம் - நாசி.

*17-4. ஏனம் - (வெள்ளைப்) பன்றி.

*17-5. வடவரை - மேருமலை.

*18. பொற்கண்ணன் - இரணியாட்சன்.

*19-1. மருப்பால் - கொம்பினால்.

*19-2. இடந்து - கிளரி.

*19-3. வேலை - கடல்.

*22. வெரிந் - முதுகு.

*23. மருத்து - அமிர்தம்.

*24. அகந்தையங் கடல் - அகங்காரமாகிய கடல்.

*25-1. திகந்தம் - திக்கின் முடிவு.

*25-2. இகந்தனன் - இகழ்ந்தனன்.

*26. முற்றல் ஆமை - முதிய ஆமை.

*28. கமடம் மீத் தங்கிய காப்பு - ஆமை ஓடு.

*29-1. கேழல் - பன்றி.

*29-2. மூரி - பெரிய.

*30. வாளா - வீணாக.

*31-1. அங்கண் - இங்குத் தருகவனம்.

*31-2. இழுதையர் - அறிவிலிகள்.

*32-1. முதல்வன் - இறைவன்; சிவன்.

*32-2. பன்னக அமளி - சேஷசயனம்.

*33. பற்றலர் - பகைவர்; திரிபுரர்.

*35. யாணர் - அழகு.

*36. முன்பன் - முதல்வன்.

*37-1. நராரி - நரசிங்கம்.

*37-2. உரிவை - தோல்.

*37-3. நக்கன் - நிருவாணி; சிவன்.

*37-4. முராரி - திருமால்.

*38. மால் பூட்டி - மேகத்தை உண்டாக்கி.

*39. அளவைஇல் அநங்கர் - அளவற்ற மன்மதர்கள்.

*40-1. விண்டனர் - விடுத்தனர்.

*40-2. மதநீர் - காம நீர்.

*40-3. வேழம் உண்டிடு கனி - வேழம் என்னும் நோய் பிடித்த விளாங்கனி. இக்கனி உள்ளீடின்றி இருக்கும். இதனைத்தான் 'யானையுண்ட விளாம்பழம்' என்பது.

*41-1. ஓலம் - இரைதல்.

*41-2. விட்டில் - விட்டிற் பறவை; இஃது உருவைக் கண்டு அழியும் தன்மையது.

*43. பன்னி - சொல்லி.

*44-1. கலன் - பிட்சாபாத்திரம்.

*44-2. மறுகு - வீதி.

*44-3. பண்ணிசை மறைகள் - பண்ணோசையோடு உள்ளாளக்கீதம்.

*47. காயமேல் - உடலின்மேல்.

*49-1. துகில் - ஆடை.

*49-2. ஏவரும் - எவரும்.

*51-1. பதம் - பாதம்.

*51-2. மெய் - உடல்.

*53-1. ஏமம் - கலக்கம்.

*53-2. தூம் அம்பு - விடும் அம்புகள்.

*53-3. வாமம் - முலை.

*53-4. புனல் - பால் நீர்.

*54-1. வாசம் நீங்கி - ஆடை இழந்து.

*54-2. வளை - வளையல்.

*54-3. கோசம் - ஆண்குறி.

*55-1. இளை - இளமை.

*55-2. அளை - தயிர்.

*55-3. ஓதனம் சோறு.

*56-1. நீவி - ஆடை.

*56-2. ஏவமோ - குற்றமோ.

*58. தண்டுலம் - அரிசி.

*59-1. கடிது - விரைந்து.

*59-2. ஐயம் இடுகிலீர் - பிச்சையிடாதீர்கள்.

*62-1. இரும் குறி - பெருமை பொருந்திய ஆண்குறி.

*62-2. திவலை - துளி.

*63-1. சங்கு - பாஞ்ச சன்னியம்; வளையல்.

*63-2. ஆழி - சக்கரம்; மோதிரம்.

*63-3. பொன்னம் துகில் - பீதாம்பரம்; அழகிய ஆடை.

*64-1. செஞ்சடைக் கண்ணி - செஞ்சடையாகிய வலை.

*64-2. சட்டுவம் - அகப்பை.

*64-3. கிளியின் மேற்செலும் கேழ்கிளர் ஓதிமம் - திலோத்தமையாகிய கிளியின்மேல் ஆசைகொண்டு தொடர்ந்து சென்ற அழகு பொருந்திய பிரமதேவனாகிய அன்னம்.

*67. பெண்ணின் நீர்மைப் பெருங்குறி - பெண்தன்மைக்குரிய பெண்குறி.

*68-1. மருந்து - தேவாமிர்தம்.

*68-2. பதம் - சோறு.

*69. கலன் - பிரம கபாலம்.

*72-1. இந்த வேலையில் - இப்பொழுது.

*72-2. ஏகலர் - வாரார்.

*72-3. சேக்கை - படுக்கை.

*74-1. வேடை - விரகதாபம்.

*74-2. குறிப்பு - கருத்து.

*76. சங்கரன் - இன்பத்தைச் செய்பவன்.

*79. சிவநூல் - சிவாகமம்.

*82-1. கற்பாம் பரவைகள் - கற்பெனும் கடல்களை.

*82-2. மதிக்கும் - கடைகின்ற.

*83-1. நிகமம் - வீதி.

*83-2. கரு - கருப்பம்.

*83-3. வயா - கருப்பநோய்.

*83-4. ஆண்டகை மகார்கள் - ஆண்மக்கள்.

*86. ஓர் ஆழி - ஒப்பற்ற சுதரிசனம் என்னும் சக்கரப்படை.

*87-1. சீதரன் - திருமால்.

*87-2. கங்கை - இது தெளிந்த நீர்.

*87-3. யமுனை - இது கலங்கிய நீர்.

*87-0. கங்கை மாயோன் உள்ளத்திற்கும், யமுனை தாருக முனிவர் உள்ளத்திற்கும் உவமைகளாகும்.

*90-1. மோனமா நெறி - மௌன வழி.

*90-2. மானம் - அபிமானம்.

*90-3. வீடா - இறவா.

*93. இந்திரை கேள்வன் - இலக்குமி நாயகன்; திருமால்.

*94. கபால் - கபாலம்.

*98-1. மகடூஉ - பெண்.

*98-2. தாணு - அசைவில்லாதவன்; சிவன்.

*99. தீமகம் - அபிசார வோமம்.

*100. பேழ்வாய் - பிளந்த வாய்.

*101-1. முடித்தி - சொல்வாயாக.

*101-2. உழுவை - புலி.

*101-3. தானை - ஆடை.

*102-1. கணிச்சி மழு.

*102-2. தீயவர் - தாருகவன் முனிவர்.

*104. வாமம் - இடதுபாகம்.

*105-1. பாந்தள் - பாம்பு.

*105-2. பணிகளோடு - பாம்புகளோடு.

*106. அசனி - இடி.

*107. ஆரிடர் - முனிவர்.

*109. நக்கு எழு சிரம் - சிரித்தலையுடைய வெண்டலை.

*110-1. இனையவை - இங்கு, மந்திரங்கள்.

*110-2. துடி - உடுக்கை.

*111-1. ஓதை - ஓசை.

*111-2. பொம்மென - விரைந்து.

*111-3. உரகர் - நாகங்கள்.

*113. முயலகன் - இவன் ஒரு பூதம்.

*114-1. முகமன் - உபசார வார்த்தை.

*114-2. சொற்று - உரைத்து.

*115. வன்னியந்தேவு - அக்கினி தேவன்.

*116. உஞற்றி - உண்டாக்கி.

*117-1. இறுதி நாளில் பொங்குஎரி - ஊழித்தீ.

*117-2. பூளை - பூளைப்பஞ்சு.

*119. ஏழைமை - அறியாமை.

*120. கடுக்கை - கொன்றை.

*121. விண்டனர் - விலகி நின்றனர்.

*124-1. போதம் - நல்லுணர்ச்சி.

*124-2. பொல்லா ஏதம் - பெரும்பிழை.

*128. துங்க மால் - பெரிய மதமயக்கம் பொருந்திய.

*129. அடிகேள் - சுவாமியே.

*130-1. அந்தி வண்ணன் - சிவபெருமான்.

*130-2. சேறியேல் - செல்லுவாயாயின்.

*133-1. போகி - இந்திரன்.

*133-2. நால் மருப்பு - ஐராவதம்.

*135. மஞ்சு - கரிய மேகம்.

*136. மணி கன்னிகை - காசியிலுள்ள கங்கைக் கரையின் ஓர் கட்டம்.

*137-1. மந்திரம் - தாரக மந்திரம்; பிரணவம்.

*137-2. முடிபவர் - இறப்போர்.

*138. தந்தியாய் - யானையாக.

*139-1. அகிலநாயகன் - விசுவநாதர்.

*139-2. மந்திரம் - ஆலயம்.

*140-1. உரும் - இடி.

*140-2. தெழித்தல் - கர்ச்சித்தல்.

*140-3. தழீஇ - தழுவிக்கொண்டு.

*143. உகம் பல - பலயுகம்.

*145. வடவை - வடவமுகாக்கினி.

*146. இச் செய்யுள் கஜசம்மார மூர்த்தியின் கோலத்தைச் சித்தரித்துக் காட்டுவது.

*147-1. சிந்துரத்தவுணர்கோன் - கயாசுரன்.

*147-2. தீர்த்தன் - பரிசுத்தன் - சிவன்.

*148. அதன் - தோல்.

*149-1. செய்யகோள் - செம்பாம்பு; ராகு.

*149-2. கரியகோள் - கரும்பாம்பு; கேது.

*149-3. பானு - சூரியன்.

*151. பரிசனர் - தொண்டர் முதலியோர்.

*153-1. காசிவாணர் - காசிவாசிகள்.

*153-2. வழுத்தி - துதித்து.

*153-3. பெற்றி - தன்மை.

*155. இருவரும் - பிரம விஷ்ணுக்களாகிய நீங்கள்.

*156. பிரமம் - மேலான கடவுள்.

*157. தருக்கம் - சண்டை.

*158-1. பூசல் - சண்டை.

*158-2. குடிலை - பிரணவம்.

*161. புயல் உறழ் மேனிப் புத்தேள் - திருமால்.

*163. ஐந்து முகத்தவன் - ஐந்து முகங்களையுடைய பிரமதேவன்.

*164-1. எகினம் - அன்னப்பறவை.

*164-2. வேதநாயகன் - சிவபெருமான்.

*165-1. ஞெகிழிகள் - சிலம்புகள்.

*165-2. செங்கேழ் - செந்நிறம்.

*165-3. வெற்றரை - நிருவாணம்.

*166. வடுகன் - வயிரவக் கடவுள்.

*168-1. புலவு - மாமிசம்.

*168-2. சோரி - இரத்தம்.

*169. மன்பதைக் குலங்கள் - மக்கட் கூட்டம்.

*171-1. காரி - வயிரவன்.

*171-2. உச்சிச் சென்னி - நடுத்தலை.

*176. கோடி - கொள்வாயாக.

*178. நீலமேனி நிமலன் - வயிரவக் கடவுள்.

*181. புரம் - நகர்; வைகுண்டம்.

*182. தந்திரத் தலைவன் - விடுவசேனன்.

*186-1. கண்ணுதல் இறைவன் - வயிரவக் கடவுள்.

*186-2. இவண் - இங்கு.

*186-3. பலி - பிச்சை.

*187-1. நுதல் - நெற்றி.

*187-2. சூலி - வயிரவன்.

*187-3. ஒரு நாடி - ஒரு நரம்பு.

*188. அவதி - அளவு; காலம்.

*189. திருவும் ஞாலமும் - திருமகளும் பூமகளும்.

*191. சூலமேல் உற்றுளான் - விடுவசேனன்.

*192. கபால் - கபாலம்.

*193. பாலனம் - பாதுகாத்தல்.

*195. ஞாளி - நாய்.

*199-1. வச்சிரவேந்தன் - இந்திரன்.

*199-2. கொன் - அச்சம்.

*199-3. பாரிடம் - பூதம்.

*199-4. முன்கடை - தலைவாசல்.

*200. விருந்தினை - புதியை.

*201. சூர்த்த - அச்சம் தரத்தக்க.

*202. கண்டகன் - இரக்கமில்லாத இந்திரன்.

*203-1. மருத்துவன் - இந்திரன்.

*203-2. கிருத்திமம் - பூதம்.

*208. துவர் இதழ் - செவ்விதழ்.

*210. கற்குன்றம் - கல்மலை.

*212. மந்திரம் - ஆலயம்.

*213-1. அம்புராசி - கடல்.

*213-2. தானவேசன் - தானவர் தலைவன்.

*215-1. நசை - விருப்பம்.

*215-2. நரலை - கடல்.

*218-1. புல்லணம் - தாடி.

*218-2. மயல் மைந்தன் - பித்தன் (சிவன்) மகன்; இவன் கோபாக்கினியால் உதித்தவன்.

*219-1. தூங்கல் - தொங்குதல்.

*210-2. ஆர்த்தி - துன்பம்.

*220. அகலம் - மார்பு.

*222. உததி - கடல்; வருணன்.

*224. மற்று - அசை.

*227. நளினை - திருமகள்.

*228-1. பாசனங்கள் - அசுர பரிவாரங்கள்.

*228-2. வீட்டுவார் - கொல்லுவோர்.

*229-1. சலந்தரன் - கடலால் வளர்க்கப்பட்டவன்.

*229-2. சலம் - கடல்.

*229-3. தரம் - தரித்தல். ஆகவே கடலால் தாங்கப்பட்டவன் 'சலந்தரன்' என்பதாம்.

*233-1. நச்சும் - விரும்பும்.

*233-2. தானவர் தச்சன் - அசுர தச்சன்; கம்மியன்.

*234-1. நேமி - பூமி.

*234-2. சாலாந்தரம் - சாலந்தரபுரி; இது சலந்தராசுரன் நகரம்.

*235. விருந்தை - இவள் கற்பிலும் அழகிலும் அறிவிலும் சிறந்தவள். காலநேமி என்னும் அசுரன் மகள்; விருந்தையைப் 'பிருந்தை' எனவும் கூறுவர்.

*237. துங்கம் - உயர்வு.

*238-1. உவணம் - கருடன்.

*238-2. ஏம்பல் - ஆசை.

*241. வேலை அருள்மைந்தன் - சலந்தராசுரன்.

*243-1. சலந்தரனாம் பேர் உண்மை - கோபத்தைச் சுமந்தவன் சலந்தரன் என்பதாம்.

*243-2. சலம் - கோபம்.

*243-3. தரன் - சுமந்தவன்.

*253-1. நான்ற - தொங்குகின்ற.

*253-2. ஓலை - ஓலைக்குடை.

*253-3. மூன்று அனல் - மூவகை அக்கினி.

*253-4. கைம்மலை - யானை.

*253-5. தானவர் செம்மல் - சலந்தரன்.

*257. நேமிகாதலன் - வருணன் மகன்.

*258-1. எவ்வம் - குற்றம்.

*258-2. நவ்வி - மான்.

*260. பண்ணவன் - அந்தண வடிவுகொண்ட சிவன்.

*262-1. தரணி - பூமி.

*262-2. திகிரி - சக்கரம்.

*265-1. பொறித்த - உண்டாக்கிய.

*265-2. நேமி - சக்கரப்படை.

*267-1. பரிதி அம் கடவுள் - சக்கரமாகிய தெய்வம்.

*267-2. பதகன் - கீழ்மகன்; சலந்தரன்.

*268-1. பாழி - இடம்.

*268-2. எருவை நீர் - இரத்தம்.

*268-3. காதினன் - அழித்தனன்.

*268-4. கனலின் தானை - தீப்பொறியாகிய சேனை.

*271-1. திருவின்நாயகன் - திருமால்.

*271-2. மாவிரதியர் - சிவமூர்த்தியை எண்ணித் தவம் இயற்றும் ஒரு தவசி.

*272. ஏமம் - இன்பவடிவு.

*274-1. கல்வரை - கோவர்த்தனகிரி.

*274-2. மெல்வரை அன்ன - மெல்லிய மூங்கிலைப்போன்ற.

*275-1. கடைமுறை - வாயில்.

*275-2. காவலர் இருவர் - துவார பாலகர்.

*275-3. அரி - சிங்கம்.

*276-1. இரிதல் - ஓடுதல்.

*276-2. மடங்கல் - சிங்கம்.

*276-3. வெய்யனை - இங்குத் திருமாலை.

*277-1. சீயம் - சிங்கம்.

*277-2. காவலர் - துவார பாலகர்கள்.

*278-1. எனது காதலன் - என்னுடைய கணவன்; சலந்தராசுரன்.

*278-2. கொல் - ஐயப்பொருள்.

*279. தானையின் மன்னவர் - சேனைக்காவலர்.

*280. அரிவை - பிருந்தை.

*284-1. புல்லிய - இழிந்த.

*284-2. துள்ளுதல் - மகிழ்ச்சி மிகுதியால் குதித்தாடுதல்.

*286-1. புல்லிய - தழுவிய.

*286-2. எல்லியும் - இரவும்.

*287-1. கதிர் - சூரிய வெளிச்சம்.

*287-2. கடி - அச்சம்.

*287-3. வேளின் நூல் - மன்மதாகமம்.

*287-4. மாயமது அயர்த்தனன் - (தான் கொண்ட) மாயை மறந்து; முற்றெச்சம்.

*287-5. துஞ்சினான் - தூங்கினான்.

*289. தன் உயிர்ப்போத நீர்மையால் - தனது சீவபோதத் தன்மையால்.

*290-1. மாவலி - மிக்க வலிமை.

*290-2. மேவலராய் உற - பகைவராய்ப் பொருந்த. இங்குப் பகைவர் இராவணனும் கும்பகர்ணனும் ஆவர்.

*290-3. அரசன் - இஃது இராமனை உணர்த்தும்.

*291. கற்புடைய மனைவி - இங்குச் சீதையை உணர்த்தும்.

*292-1. அக்கு - என்பு.

*292-2. சுடலைநீறு - சுடுகாட்டுச் சாம்பல்.

*292-3. ஆடி - புரண்டு.

*293-1. சத்தி - உமாதேவியார்.

*293-2. வித்தி - (துளசி) விதை.

*294-1. தாது - புழுதி.

*294-2. பலி - சாம்பல்.

*295-1. கூட்டம் - சேர்க்கை.

*295-2. அருங்கடி - அரிய திருமணம்.

*297-1. அவன் - இங்குத் திருமால்.

*297-2. நிவந்தனன் - உயர்ந்தனன்.

*298. ஏறு - இடபம்.

*299-1. உகம் - யுகம்.

*299-2. இன்ன - (பிரமனுக்கு) இத்தன்மையான.

*303-1. தேயுப்பிரளயம் - அக்கினிப் பிரளயம்; இதில் தருமத் தெய்வம் மட்டும் அழியாது என்பது நூற்றுணிபு.

*303-2. தருமம் யாவினும் தனித்தெய்வதம் - எல்லோர்க்கும் பொதுவான தருமத் தெய்வம்.

*306. யானம் - வாகனம்.

*307-1. சதுர்வித யுகம் - கிரேத, திரேத, துவாபர, கலி என்னும் நான்கு வகை யுகங்கள்.

*307-2. பதம் - கால்.

*307-3. சேறி - செல்வாய்.

*309. புறக்கணித்துளார் - அலட்சியம் செய்தவர்கள்.

*311. இன்னுமோர் வடிவு - மானுட வடிவு.

*314-1. செற்றுழி - அழித்தபோது.

*314-2. ஏற்றின் மேனி - இடப வடிவம்.

*316-1. நிருதர் - இராக்கதர்.

*316-2. அவுணர் - அசுரர்.

*320-1. நல்+நந்து+அலைப்படு - நனந்தலைப்படு.

*320-2. நந்து - சங்கு.

*320-3. பயம் - பால்.

*322-1. மதலை - தூண்.

*322-2. நாண் - கயிறு.

*323. புறக்கிரி - சக்கரவாளகிரி.

*324-1. பரித்துழி - தாங்கியவுடனே.

*324-2. மறுகிட - கலங்கும் வண்ணம்.

*325-1. கரிகள் - திக்கு யானைகள்.

*325-2. பணி - அட்ட நாகங்கள். வேலையின் இன்: சாரியை.

*327-1. அளக்கர் - பாற்கடல்.

*327-2. கடு - விஷம்.

*328. ஈற்றுக்கோடி - யுக முடிவு.

*330. போற்றுதும் - காப்போம்.

*331-1. மூலம் - முன்னர்.

*331-2. முருக்கி - கெடுத்து.

*332-1. கோலகாலம் - பேரொலி.

*332-2. மூலகாலம் - தோற்றம்.

*332-3. மூவா - அழியா.

*333. வெருவினால் - பயமுற்றால்.

*338. அரி - திருமாலே!.

*340-1. ஆயு - ஆயுள்.

*340-2. புஞ்சம் - கூட்டம்.

*346. ஏரணம் - அழகு.

*348-1. மாதிர விறைவர் - திசைகாவலர்.

*348-2. அரவம் - ஓசை.

*349-1. கோநகர் - (இக்) கயிலையின்.

*349-2. கடைதொறும் - திருவாயில்கள் தோறும்.

*353-1. அண்டரும் - அடைதற்கரிய.

*353-2. சுந்தரன் - இவர் இறைவனின் அணுக்கத் தொண்டரில் ஒருவர்; பின்னர் பூமியில் சுந்தரமூர்த்தியாக வந்து தோன்றியவர்.

*355-1. காளகவுருவு - கருமை நிறம்.

*355-2. உண்கோ - உண்ணவோ.

*355-3. எறிகோ - எறியவோ.

*357. அருந்தினை அருள்மோ - அருந்தி அருள்க.

*359. பொலன்மணி - அழகிய நீலமணி.

*361-1. புணரி - பாற்கடல்.

*361-2. ஏனை வியன்பொருள் - மற்றைய மேலான காமதேனு, கற்பகத்தரு முதலிய பல பொருள்கள்.

*364-1. ஒரு ஞான்று - ஒரு தினம்.

*364-2. பொத்த - மூட.

*366. புதைப்பட - மூட.

*367. ஒரு தனி நாட்டம் - இங்கு நெற்றிவிழி.

*368. துணைக்கரம் - இரு கரங்கள்.

*369. அங்குலி அவை ஈரைந்தும் - பத்து விரல்களிலும்.

*371. கல்லென - கலீரென.

*372. நீத்தம் - சலம்பிரவாகம்.

*373-1. மேதினி அண்டம் - பிருதிவியண்டம்.

*373-2. பாதியாள் - உமை.

*373-3. விமலமாம் - பரிசுத்தமானதாம்.

*374-1. சிறு வதை - ஒரு சிறிது.

*374-2. மூவர் - திருமால், பிரமன், இந்திரன் என்ற மூவர்.

*375. பகீரதன் - இவன் சகரர் வம்சத்தில் வந்த ஒரு அரசன். மிக்க முயற்சியுடையன்.

*376-1. நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலங்கள்; பூமியுமாம்.

*376-2. சகரர் - இவர் அயோத்தி நகரை அரசுபுரிந்த சகரன் புதல்வர்கள்; இவர்கள் அறுபதினாயிரவர் ஆவர்.

*379-1. தொல்லை - முன்னொரு கற்பம்.

*379-2. சனகன் ஆதி மைந்தர் நால்வர் - சனகன், சனந்தனன், சநாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு புதல்வர்கள்.

*381. முற்றாது - முற்றுப்பெறாது.

*382-1. மல்காதால் - மலிவுற்றதில்லை.

*382-2. மைந்தர் - சனகாதியர்.

*383. வாகு - தோள்.

*386-1. ஆற்றவும் - மிகவும்.

*386-2. ஆவிகள் - உயிர்கள்.

*388-1. காமரு - அழகிய. காமர்+உ; உ - சாரியை.

*388-2. தந்தவா - பெற்ற விதத்தை.



previous padalam   13 - ததீசி யுத்தரப் படலம்   next padalamThadheesi yuththarap padalam

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]