Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

previous padalam   1 - உபதேசப் படலம்   next padalamubadhEsap padalam

Ms Revathi Sankaran (4.40mb)




(மாயையின் வலியோ)

மாயையின் வலியோ னாகி மான்முத லோரை வென்றே
     ஆயிரத் தோரெட் டண்டம் அரசுசெய் துகநூற் றெட்டுக்
          காயம தழிவின் றாகிக் கடவுளர்க் கலக்கண் செய்த
               தீயசூர் முதலைச் செற்ற குமரன்றாள் சென்னி வைப்பாம். ......    1

(உலகினுள் மேல)

உலகினுள் மேல தாகி ஓங்குபே ரொளியாய் வான்மேல்
     தலைமைய தாகி வைகுஞ் சத்திய வுலகந் தன்னில்
          புலனுணர் முனிவர் தேவர் புதல்வர்கள் புடையிற் போற்ற
               மலரயன் தனது கோயில் மன்றில்வீற் றிருந்தான் அன்றே. ......    2

(இருந்திடு காலை)

இருந்திடு காலை வேதா யாவையும் அளிப்ப மேனாள்
     தெரிந்தருள் பதின்ம ராகுஞ் சீர்கெழு குமரர் தம்முட்
          பொருந்திய தக்கன் என்னும் புந்தியின் மேலோன் முன்செய்
               அருந்தவ நெறியால் ஈதொன் றையனை வினவ லுற்றான். ......    3

(தேவரின் முதல்வ)

தேவரின் முதல்வ ராகிச் சிற்குணத் தலைவ ராகி
     மூவரில் உயர்ந்தோ ராகி முடிவிலா ஒருவ ராகி
          ஓவற வுயிர்கள் தோறும் உயிரென வுறைவோ ராகி
               மேவினர் தம்மைத் தேற விளம்புதி மேலோ யென்றான். ......    4

(என்றுதன் மைந்தன்)

என்றுதன் மைந்தன் இவ்வா றியம்பலும் மலரோன் கேளா
     நன்றிது மொழிவன் கேட்டி நாரணன் தானும் யானும்
          அன்றமர் இயற்றும் எல்லை அழலென எழுந்து வானில்
               சென்றதோர் சிவனே யார்க்கு மேலவன் தெளிநீ என்றான். ......    5

(தருசெயல் வல்லோன்)

தருசெயல் வல்லோன் ஈது சாற்றலுஞ் செயலோர் மூன்றின்
     இருசெயல் புரியும் நீவிர் ஏதில ராகப் பின்னர்
          ஒருசெயல் புரியும் ஈசன் உங்களுக் கிறைவ னாகி
               வருசெயல் என்னே சிந்தை மயக்கற வுரைத்தி யென்றான். ......    6

(தற்புகழ் கருத்தின்)

தற்புகழ் கருத்தின் மிக்க தக்கன்ஈ துரைத்த லோடுஞ்
     சிற்பரன் நிலைமை அன்னான் அருளினால் தெரிந்த வேதாச்
          சொற்படு மறைகள் முன்நீ துகளறக் கற்றுத் தூய
               நற்பொருள் தெரிந்த வாறு நன்றுநன் றென்ன நக்கான். ......    7

(பின்னுற முடிப்பான்)

பின்னுற முடிப்பான் தன்னைப் பிரானெனத் தேற்றுந் தன்மை
     என்னென வுரைத்தி மைந்த எங்களைச் சுரரை ஏனைத்
          துன்னிய வுயிர்கள் தம்மைத் தொலைவுசெய் திடுவன் ஈற்றில்
               அன்னவன் என்னில் முன்னம் அளித்தவன் அவனே அன்றோ. ......    8

(அந்தநாள் ஒருவ)

அந்தநாள் ஒருவ னாகி ஆருயிர்த் தொகையைத் தொன்னாள்
     வந்தவா றொடுங்கச் செய்து மன்னியே மீட்டும் அன்னை
          தந்தையாய் உயிர்கட் கேற்ற தனுமுதல் அளிக்கும் முக்கண்
               எந்தைதன் செய்கை முற்றும் இனையதென் றிசைக்கற் பாற்றோ. ......    9

(செங்கண்மால் தன்னை)

செங்கண்மால் தன்னை என்னைத் திண்டிறல் மொய்ம்பின் நல்கி
     அங்கண்மா ஞாலங் காப்பும் அளிப்பதும் உதவி யாமும்
          உங்கள்பால் இருத்து மென்றெம் முயிருள்நின் றியற்றா நின்றான்
               எங்களால் முடியுஞ் செய்கை யாவதும் இல்லை கண்டாய். ......    10

(உயிருள்நின் றியற்றல்)

உயிருள்நின் றியற்றல் அன்றி உற்றநஞ் சிந்தை உள்ளும்
     இயன்முறை வழாது காப்போன் இருவிழி யகத்து மானான்
          மயலுறு பொழுதும் எம்பால் வந்தருள் செய்வன் தானோர்
               செயல்புரி கின்றான் போல எம்மொடு செறிவன் அன்றே. ......    11

(எள்ளுறும் எண்ணெய்)

எள்ளுறும் எண்ணெய் என்ன எறிமணி அரவ மென்னக்
     கள்ளுறு போது கான்ற கடியெனச் சலாகை தன்னில்
          தள்ளுற அரிய சோதி தானென உலக மெங்கும்
               உள்ளொடு புறமு மாகி ஒருமையாற் பரவும் அன்றே. ......    12

(வேதமே முதலா வுள்ள)

வேதமே முதலா வுள்ள வியன்கலை அனைத்துந் தொன்னாள்
     ஓதினான் அவனே எங்கட் குரைத்திட உணர்ந்தா மன்றே
          ஈதுநீ அவற்றிற் காண்டி யாருமொன் றாகக் கொண்டாய்
               பேதையோ பெரிது மென்னப் பிதாமகன் இனைய சொற்றான். ......    13

(அவனிது புகற லோடும்)

அவனிது புகற லோடும் அருள்மகன் இசைப்பான் மேலாஞ்
     சிவனருள் வேதம் பூதத் திறத்தையும் உயிர்க ளோடும்
          எவரையும் பிரம மென்றே இசைப்பதென் எனது நெஞ்சங்
               கவலுறு கின்ற தெந்தை கழறுதி கடிதின் என்றான். ......    14

(என்னலுங் கமலத்)

என்னலுங் கமலத் தண்ண லியாவருந் தெரிதல் தேற்றா
     உன்னரும் பெற்றி ஈதென் றுணர்தரக் கேட்டி அன்னான்
          சொன்னதோர் மறைகள் தம்மில் துணிபுகேள் இறுதி யில்லா
               முன்னவற் காத லுண்மை ஒழிந்தன முகம னாமால். ......    15

(ஆதலால் ஈசன் அல்லா)

ஆதலால் ஈசன் அல்லா அனைவர்க்கும் உயிர்க்கும் ஐந்தாம்
     பூதமா னவைக்கும் ஏற்றம் புகலுதல் முகம னாகும்
          ஓதலா மேல தாக ஒருபொருள் புகழ வேண்டின்
               வேதபா ரகரை அன்றோ யானென விளம்பு கின்றார். ......    16

(யாதொரு பொருளை)

யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய் முக்கண்
     ஆதியை அடையும் அம்மா அங்கது போலத் தொல்லை
          வேதம துரைக்க நின்ற வியன்புகழ் அனைத்தும் மேலாம்
               நாதனை அணுகும் எல்லா நதிகளுங் கடல்சென் றென்ன. ......    17

(கேளினி மைந்த)

கேளினி மைந்த வேதக் கிளையெலாம் இயம்பு கின்ற
     சூளுரை சிவனே யெல்லாந் தோற்றுவித் தளித்து மாற்றி
          மீளவுந் தருகின் றானும் வியனுயிர்க் கருளை நல்கி
               ஆளும்நா யகனும் ஆதி அந்தமி லோனும் என்னும். ......    18

(அத்தனும் பகவன்)

அத்தனும் பகவன் தானும் அருவமும் உருவு மாகுஞ்
     சுத்தனும் உணர்தற் கொண்ணாச் சோதியு மியாண்டு மேவுஞ்
          சித்தனும் அநாதி தானுந் தேவர்கள் தேவு மென்று
               நித்தனும் உயிர்க்குள் நீங்கா நிருத்தனும் அவனே என்னும். ......    19

(மூன்றெனும் உலகந்)

மூன்றெனும் உலகந் தன்னில் முளைத்திடு பொருளை யெல்லாம்
     ஈன்றருள் புரியுந் தாதை எனுந்திரயம் பகனும் யார்க்குஞ்
          சான்றென நிற்கின் றோனும் தாணுவும் பரனுந் தன்னைப்
               போன்றவர் உயர்ந்தோர் இல்லாப் புங்கவன் தானும் என்னும். ......    20

(அண்ணலும் ஏகன்)

அண்ணலும் ஏகன் தானும் அளப்பருங் குணத்தி னானும்
     கண்ணனும் அயனுந் தம்மால் காணிய நில்லான் தானும்
          பெண்ணொடாண் அலிய தென்னும் பெற்றியி லோனும் யாரும்
               எண்ணிய எண்ணி யாங்கே ஈபவன் தானும் என்னும். ......    21

(விதிமுதல் உரைக்க)

விதிமுதல் உரைக்க நின்ற வியனுயிர்த் தொகைகட் கெல்லாம்
     பதியென அருளுந் தொன்மைப் பசுபதி தானும் அன்னோர்க்
          கதிகனென் றெவருந் தேற ஆங்கவர் துஞ்ச வெந்த
               பொதிதரு பலியும் என்பும் புனைபவன் தானும் என்னும். ......    22

(ஊன்புகும் எவரை)

ஊன்புகும் எவரை யுந்தன் ஒண்குணத் தொடுக்கித் தானே
     வான்புக லாகி நின்று மற்றவர் குணங்க ளூடு
          தான்புக லில்லா தோனுந் தன்னியல் இனைய தென்றே
               யான்புக லரிய தேவும் ஈசனும் அவனே என்னும். ......    23

(அன்றியும் ஒன்று கேண்)

அன்றியும் ஒன்று கேண்மோ அம்புய னாதி யாகி
     நின்றவர் தம்மை யெல்லாம் நீக்கியச் சிவனென் றுள்ள
          ஒன்றொரு முதல்வன் தானே உய்த்திடு முத்தி வேண்டின்
               என்றும்அஃ தியம்பிற் றென்னின் யாவரே தேவர் ஆவார். ......    24

(பரசிவன் உணர்ச்சி)

பரசிவன் உணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையு மென்றும்
     விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல்
          உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே
               பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றும் உண்டோ. ......    25

(இன்னமும் பலவுண்)

இன்னமும் பலவுண் டன்னாற் கியம்பிய மறையின் வாய்மை
     அன்னதை எனக்கும் உன்னி அறையொணா தறைவன் என்னில்
          பன்னெடுங் காலந் தேயும் பகரினும் உலவா தென்பால்
               முன்னமீ துணர்ந்தா யேனும் மோகமுற் றாய்கொல் ஐயா. ......    26

(காரெழில் புரையும்)

காரெழில் புரையும் மேனிக் கண்ணனை என்னைப் பின்னை
     ஆரையும் புகழும் வேதம் அரன்றனைத் துதித்த தேபோல்
          ஓருரை விளம்பிற் றுண்டோ உரைத்தது முகமன் என்றே
               பேருல கறிய முன்னும் பின்னரும் விலக்கிற் றன்றே. ......    27

(நான்மறை தனிலோர்)

நான்மறை தனிலோர் பாகம் நாரமார் கடவுட் சென்னி
     மேன்மைய தியம்பும் எம்மை விண்ணவர் தம்மை ஏனைப்
          பான்மைகொள் பூதந் தன்னைப் பல்பொருள் தனையும் பாதி
               தான்மொழிந் திடுமால் ஈது தவறல உணர்தி தக்கோய். ......    28

(நம்மையும் பரமென்)

நம்மையும் பரமென் றுன்னி நாதனிற் சிறப்புச் செய்யும்
     வெம்மைகொள் நெஞ்சர் தீரா விழுமவெந் நிரயம் வீழ்வர்
          தம்மையஃ தெடுத்தல் செய்யா சமமெனப் புகல்கிற் போர்கள்
               எம்மையுந் துயர மென்னும் இருங்கடற் படுப்பர் அன்றே. ......    29

(கானுறு புலித்தோ)

கானுறு புலித்தோ லாடைக் கண்ணுதற் கடவுட் கன்பர்
     ஆனவ ரென்றும் அன்னாற் கடித்தொழில் புரிந்து வாழும்
          வானவ ரென்றும் எம்மை வழுத்தினர்க் கருள்வோம் அல்லா
               ஏனையர் தம்மைத் தெவ்வென் றேண்ணியே இருத்தும் யாமே. ......    30

(பதியரன் பாசந்)

பதியரன் பாசந் தன்னில் பட்டுழல் பசுநாம் என்றே
     விதியொடு மறைகள் கூறும் மெய்ம்மையைத் தெளிய வேண்டின்
          இதுவென வுரைப்பன் யாங்கள் இவ்வர சியற்ற ஈசன்
               அதிர்கழல் அருச்சித் தேத்தும் ஆலயம் பலவுங் காண்டி. ......    31

(அவனருள் பெறாது)

அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை அல்லால்
     அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரு மில்லை
          அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை ஆணை
               அவனல திறைவன் இல்லை அவனைநீ யடைதி என்றான். ......    32

ஆகத் திருவிருத்தம் - 8310




(எண்=செய்யுளின் எண்)

*1-1. மாயையின் - மாயை செய்வதில்.

*1-2. சூர்முதலை - சூரபன்மனை.

*2-1. புதல்வர்கள் - உபப்பிரமர்கள்.

*2-2. அயன் - பிரமதேவன்.

*3. ஐயனை - பிரமதேவனை.

*4. சிற்குணம் - தூயகுணம்.

*5. அன்று - ஒரு பிரம கற்பத்தில்.

*6. தருசெயல் வல்லோன் - படைக்கும் தொழிலில் வல்ல பிரமன்.

*7-1. சொற்படு - சத்தவடிவான.

*7-2. நக்கான் - சிரித்தான்.

*10. கண்டாய் - முன்னிலையசை.

*11. ஓர் செயல் - அழித்தலாகிய ஒரு தொழில்.

*12-1. ஒருமையால் - ஒன்றாகி வியாபித்து.

*12-2. பரவும் - நிற்பன்.

*13-1. பெரிதும் பேதையோ - நீ மிகவும் பேதையே.

*13-2. பிதாமகன் - பிரமன்.

*14. பிரமம் - பரம்பொருள்.

*15. முகமன் - உபசார மொழி.

*17. இங்கு, "யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே, மாதொரு பாகனார்தாம் வருவர்" எனவரும் சிவஞான சித்தியார் அடிகளை ஒப்புநோக்குக.

*21. இங்கு, "எண்ணிய எண்ணியாங்கே ஈபவன்" என்பதனோடு, "மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீீயே" என்ற அப்பர் சுவாமிகள் தேவார அடி ஒப்புநோக்கற்பாலது.

*22-1. விதி - பிரமன்.

*22-2. பலி - சாம்பல்.

*26. மோகம் - மயக்கம்.

*27-1. என்னை - இங்குப் பிரமனை.

*27-2. ஆரையும் - பிறரையும்.

*28-1. நாரம் - கங்கை.

*28-2. பாதிதான் - பாதி வேதம்தான்.

*30. தெவ் - பகைவர்.

*32-1. அவன் - இங்குச் சிவன்.

*32-2. யாரும் - மற்றைய உலக வாசிகளும்.

*32-3. ஆணை - உறுதி.



previous padalam   1 - உபதேசப் படலம்   next padalamubadhEsap padalam

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]