Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

previous padalam   18 - யாளிமுகன் வதைப் படலம்   next padalamyALimugan vadhaip padalam

Ms Revathi Sankaran (3.93mb)




(திண்டிறல் அவுணர்)

திண்டிறல் அவுணர்கோன் சிறுவன் வீந்ததும்
     மண்டமர் இயற்றிட வருநர் இன்மையுந்
          தண்டம துடைந்ததுந் தபனன் மாய்ந்ததுங்
               கண்டனன் இனையன கருதல் மேயினான். ......    1

(எந்தையை எள்ளி)

எந்தையை எள்ளினான் இருந்த கோநகர்
     சிந்தினன் புரத்தையுஞ் சிறிது வீட்டினன்
          வந்தவர் யாரையும் மாய்வு செய்தனன்
               புந்தியின் வெகுளியிற் சிறிது போக்கினன். ......    2

(ஏலவெம் போர்செய)

ஏலவெம் போர்செய எவரும் வந்திலர்
     ஞாலம தவிரொளி நடாத்து ஞாயிறு
          மேல்கடல் நீந்தினன் விரையப் போயினான்
               மாலையும் இவ்விடை வந்து நேர்ந்ததே. ......    3

(அறந்தனை நினை)

அறந்தனை நினைகிலா தல்லல் செய்பவர்
     உறைந்திடு நகரிதின் ஒற்றிற் போந்தயான்
          சிறந்திடும் அறுமுகத் தேவ தேவனை
               மறந்திட லாங்கொல்இம் மாலை காறுமே. ......    4

(ஏவரும் வழுத்திய )

ஏவரும் வழுத்திய எந்தை கந்தவேள்
     பூவடி தணந்திடு புலம்பும் இவ்விடைத்
          தேவர்கள் புன்மையுந் தீர வல்லையிற்
               போவது துணிவெனப் புந்தி தேற்றினான். ......    5

(தேற்றிய திறலுடை)

தேற்றிய திறலுடைச் செம்மல் இம்மென
     மாற்றலர் படுநில வரைப்பு நீங்கியே
          காற்றெனக் கனலெனக் காலன் என்னவெங்
               கூற்றென மறுகிடைக் குலவி ஏகினான். ......    6

(திறல்கெழு மொய்)

திறல்கெழு மொய்ம்புடைச் செல்வன் செல்லுழி
     மறுகிடை அவுணர்கள் மறலி மற்றிவன்
          குறுகலிர் நுங்களைக் கொல்வன் கொல்வனென்
               றறைகுநர் முறைமுறை அரற்றி ஓடினார். ......    7

(எஞ்சிய அவுணர்கள்)

எஞ்சிய அவுணர்கள் யாரும் இவ்வகை
     அஞ்சினர் இரிந்திட அழிந்து முன்னையாள்
          துஞ்சிய ஆவணத் தொகைகள் தந்தொராய்
               விஞ்சிய மகேந்திரம் விடுத்து நீங்கினான். ......    8

(புடையகல் மகேந்திர)

புடையகல் மகேந்திர புரத்தை நீத்தபின்
     விடைபொரு வலியினான் விண்ணின் பாலெழீஇ
          முடுகினன் வழிக்கொடு முருகற் போற்றியே
               வடதிசை இலங்கையின் வரைப்பு நண்ணினான். ......    9

வேறு

(ஆங்கது காலையில்)

ஆங்கது காலையில் அனைய
     பாங்கரின் மேவரு பழையோன்
          ஓங்கிய மூவெயி லுள்ளோர்
               தாங்கிய வன்மை தரித்தோன். ......    10

(முடியும் மகேந்திர)

முடியும் மகேந்திர மூதூர்
     வடதிசை யார்அரண் மன்னி
          உடைய இலங்கையின் ஓம்பும்
               படியறு காவல் பரித்தோன். ......    11

(ஆயிர மாமுகன்)

ஆயிர மாமுகன் அடுதோள்
     ஓய்வில் இராயிர முடையோன்
          ஞாயிறு தன்மகன் நகரின்
               வாயில்கள் அன்னதோர் வாயான். ......    12

(வடவரை ஆயிரம்)

வடவரை ஆயிரம் வந்தோர்
     உடல்கொடு மேவிய தொப்பான்
          படைபல பாணி பரித்தான்
               கடையழல் கான்றிடு கண்ணான். ......    13

(தண்ணளி யோரிறை)

தண்ணளி யோரிறை தானும்
     உண்ணிகழ் வற்ற உளத்தான்
          எண்ணரும் வெம்பவம் யாவும்
               பண்ணினன் அன்று பயின்றான். ......    14

(மீளில் சினத்ததி)

மீளில் சினத்ததி வேகக்
     கோளரி யைத்தரு கொடியோன்
          யாளி முகத்தவன் என்போன்
               வாள்வய முற்றிடு வலியோன். ......    15

வேறு

(பெருந்தகை யாங்கவன்)

பெருந்தகை யாங்கவன் பெயர்ந்த காலையின்
     அருந்திறற் சூரனை அடைந்து மீண்டுபின்
          மருந்துறழ் தன்மகன் மாட்சி தேர்வுறீஇ
               இருந்தனன் வருந்தியே இலங்கை தன்னிடை. ......    16

(சண்டவெங் கதி)

சண்டவெங் கதிகொடு தமியன் சேறலுங்
     கண்டனன் யாரிவன் கள்வன் போலுமால்
          விண்டலம் நீந்தியே மேவு வானெனத்
               தொண்டுசெய் உழையரில் ஒருவன் சொல்லுவான். ......    17

(நங்குல நாயக)

நங்குல நாயக நவில்வன் கேட்டிநீ
     செங்கதிர் முளைத்துழிச் செல்வற் காணிய
          பொங்கொளி மகேந்திர புரத்திற் போந்தனை
               இங்குநின் திருமகன் இருந்து காப்பவே. ......    18

(போந்திடு கின்ற)

போந்திடு கின்றபின் புணரி தன்னுள்வான்
     நீந்தினன் நீங்கிவன் நேர வன்னதை
          வாய்ந்திடு பெருந்திறல் மடங்கற் பேரினான்
               காந்திய கனலெனக் கண்டு சீறினான். ......    19

(சீறினன் படையொடு)

சீறினன் படையொடு சென்று தாக்கலும்
     வீறொடு வருமவன் வெகுண்டு வாளுரீஇ
          மாறமர் இயற்றியே மற்ற வன்றனைக்
               கோறல்செய் தொருவிறல் கொண்டு மேயினான். ......    20

(மின்னவிர் பூணுடை)

மின்னவிர் பூணுடை வீர மொய்ம்பினான்
     இன்னதோர் இலங்கையின் இடைக்கட் பாய்ந்தனன்
          அன்னவன் அடிபொறா தாழி உற்றதாற்
               பொன்னகர் வளனொடும் அங்கட் புக்கபோல். ......    21

(புக்கிட அளப்பிலர்)

புக்கிட அளப்பிலர் பொன்ற ஏனையோர்
     அக்கணம் எழுந்தனர் அவற்கண் டஞ்சியே
          திக்கொடு வானமுஞ் சிந்த நின்மகன்
               மைக்கடல் அகமொரீஇ வல்லை எய்தினான். ......    22

(வெய்தென இவண்)

வெய்தென இவண்வரும் வீர னோடமர்
     செய்தனன் வாள்கொடு செவ்வி அன்னதின்
          மைதவழ் மேனியின் மதலை மார்புதாள்
               கைதலை யொருதலை கண்ட மாக்கினான். ......    23

(பூழியம் புயமுடை)

பூழியம் புயமுடைப் பொருநன் பின்னுறக்
     கேழுறு வானெறி கிளர்ந்து போந்திடா
          வாழிய மகேந்திர வரைப்பிற் புக்கனன்
               ஆழுறும் இலங்கையும் ஆழி மேலெழ. ......    24

(சூருறை திருநகர்)

சூருறை திருநகர் துன்னி யாயிடைச்
     சீரினை முழுவதுஞ் சிந்தி நங்குல
          வீரரொ டேயமர் விளைத்து வென்றவண்
               நேருநர் இன்மையின் நீங்கி னானரோ. ......    25

(என்னலும் உருமினும்)

என்னலும் உருமினும் இடித்த சொல்லினன்
     வன்னிகொள் உயிர்ப்பினன் மடித்த வாயினன்
          துன்னிய வியர்ப்பினன் சுழலுங் கண்ணினன்
               மெய்ந்நிறை வெகுட்சியன் விளம்பல் மேயினான். ......    26

(காண்டியென் கடி)

காண்டியென் கடிமுறை கடந்து மைந்தனை
     ஈண்டுயிர் வவ்வியே இறைவன் ஊர்புகா
          மீண்டிடு கள்வன்இவ் வீரந் தன்னொடே
               மாண்டிட அடுகுவன் வன்மை யாலென்றான். ......    27

(என்றிவை விளம்பியே)

என்றிவை விளம்பியே யாளி மாமுகன்
     குன்றென எழுந்தொரு கொற்ற வாள்கொளீஇ
          நின்றசில் படையொடு நேர்ந்து வீரன்முன்
               சென்றனன் இனையன செப்பல் மேயினான். ......    28

(நங்கடன் முறை)

நங்கடன் முறையினை நடாத்து மைந்தனை
     இங்கடல் செய்தனை இனைய காப்பொரீஇ
          அங்கடற் போந்தனை அழிவு செய்தனை
               வெங்கடல் கடந்தனை மீடி யேகொலாம். ......    29

(ஒல்லொலி அளக்க)

ஒல்லொலி அளக்கரை உகண்டு நிற்கினிச்
     செல்லுதல் அரிதியான் செருவின் நேர்ந்தனன்
          கொல்லுவன் பெருவயங் கொள்வன் நீயிவண்
               வல்லது புரிமதி மதியிலாய் என்றான். ......    30

(சொற்றது கேட்ட)

சொற்றது கேட்டலுந் துழனிப் பேரொலி
     உற்றெரி கனலென உயிர்ப்பு மூரலுஞ்
          செற்றமும் எய்தியே துளக்கிச் சென்னியைக்
               கொற்றமொய்ம் புடையதோர் குரிசில் கூறுவான். ......    31

(ஒருதலை யுடைய)

ஒருதலை யுடையவென் னுயர்வும் ஆயிரந்
     தருதலை யுடையநின் தாழ்வும் யாமிவட்
          பொருதலை இழைத்திடும் போது காண்புறுங்
               கருதலை பெருவடி வமைந்த காட்சியே. ......    32

(தீயவ இம்மொழி)

தீயவ இம்மொழி திண்ணந் திண்ணமுன்
     மாயிரும் புழைக்கையின் மாமு கங்களோர்
          ஆயிரந் தன்னையும் அறுத்து வீட்டியே
               நாயினங் கவரிய நல்கு வேனென்றான். ......    33

(கருணைகொள் நந்தி)

கருணைகொள் நந்தியங் கணத்தன் இவ்வகை
     உரைதரும் எல்லையின் உததி மேருமால்
          வரையினை விழுங்கிய வளைந்த தேயென
               விரைவொடு படைஞர்கள் வீரற் சுற்றினார். ......    34

(சுற்றிய தானையர்)

சுற்றிய தானையர் தோன்றல் மீதுதாம்
     பற்றிய படைக்கலம் பலவுந் தூண்டியே
          செற்றமொ டமர்வினை செய்யச் சூறைபோல்
               மற்றவர் சூழலுள் வாள்கொண் டெய்தினான். ......    35

(துண்டமும் அகல)

துண்டமும் அகலமுந் தோளுந் தாளுமொண்
     கண்டமுஞ் சென்னியுங் கரமு மானவை
          விண்டுவிண் டழிவுற வெய்ய தானவர்
               தண்டம தனைத்தையுந் தடிந்திட் டானரோ. ......    36

வேறு

(அறுகு மாமுகத் தண்)

அறுகு மாமுகத் தண்ணல் ஆற்றவுங்
     கறுவு பெற்றிடுங் கருத்தின் வீரனைக்
          குறுகி ஆயிரங் கொண்ட கைகளால்
               இறுதி யூழிநாள் இடியின் எற்றினான். ......    37

(அடித்த கைகளை)

அடித்த கைகளை அங்கை ஒன்றினால்
     பிடித்து மேலவன் பெருங்கை வாளினால்
          உடைத்த சோரிநீர் உகுத்து வீழ்ந்திறை
               துடித்தி டும்படி துண்டம் ஆக்கினான். ......    38

(ஆயி ரங்கரம் அறலும்)

ஆயி ரங்கரம் அறலும் மற்றுள
     ஆயி ரங்கரம் அவைகள் நீட்டியே
          ஆயி ரங்கிரி அவைப றித்தனன்
               ஆயி ரங்கணான் ஆடல் கொண்டுளான். ......    39

(பறித்த ஆயிரம்)

பறித்த ஆயிரம் பருப்ப தத்தையுங்
     கறுத்து வீரன்மேற் கடிது வீசலும்
          இறத்தல் கொண்டுமெய் எங்கும் எய்தியே
               புறத்து வீழ்ந்தன உடைந்து பூழியாய். ......    40

(பொற்றை யாவையும்)

பொற்றை யாவையும் பூழி ஆகியே
     அற்ற காலையில் ஐயன் தூதுவன்
          மற்றை ஆயிரம் வான்க ரத்தையுங்
               கொற்ற வாள்கொடே குறைத்து வீட்டினான். ......    41

(இழைக்கும் எல்லை)

இழைக்கும் எல்லையின் எய்துங் கூற்றினை
     அழைக்கு மாறென ஆர்த்துத் தானவன்
          தழைக்கு மொய்ம்பினான் தன்னைப் பற்றுவான்
               புழைக்கை முற்றவும் பொள்ளென் றுய்த்தனன். ......    42

(உய்த்த காலையின்)

உய்த்த காலையின் ஒருதன் வாளினால்
     எய்த்த வன்மைசேர் யாளி மாமுகன்
          பத்து நூறெனப் பட்ட சென்னியுங்
               கொத்தொ டேவிழக் குறைத்திட் டானரோ. ......    43

ஆகத் திருவிருத்தம் - 4659



previous padalam   18 - யாளிமுகன் வதைப் படலம்   next padalamyALimugan vadhaip padalam

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]