![]() | ![]() சென்னிமலை Chennimalai | ![]() |
|---|
| "கந்த சஷ்டி கவசம்" அரங்கேறிய ஆலயம் (திரு. ராமசுப்பு, சென்னை) தேடும் இடமெல்லாம் தெய்வம் இருக்கிறது என்றால் காணும் இடமெல்லாம் கண்ணுக்குத் தெரிபவன் முருகன் ஒருவனே. அன்பின் திரு உருவாய், அமைதியின் பொருள் காண்பவராய், பேதமற்ற ஒருவடிவாய், எங்கும் எதிலும் கலந்திருப்பவராய், தனது பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்கும் வள்ளலாய் இருப்பவன் முருகன் ஒருவனே! வழி தெரியாமல் தடுமாறுகிறேன், வழிகாட்டு முருகா என்று நம்பிக்கையோடு, நெஞ்சுருக வேண்டினால் ஞானக் கண்திறந்து, ஒளிகாட்டி, நல்வழிகாட்டி நம்மைக் காப்பவன் முருகன் ஒருவனே! நதிகளிலும், மலர்களிலும், நடந்துவரும் தென்றலிலும் முருகா உன் முகம் காண்கின்றேன். நாளைப்பொழுது நல்ல பொழுதாக இருக்க முருகா இன்றே உன் பாதம் பணிந்தேன். பால் மணமும், பூமணமும் ஆறு திரு உருவும் கூடிய கந்தனே! வேலவனே, என் ஆறுமுகனே! அடியேன் உன் திருப்பாதம் பிடித்துக் கதறுகிறேன்; இப்பிறவியிலும், எப்பிறவியிலும் சரவணனே சண்முகனே, உன்னையன்றி வேறு தெய்வம் வேண்டேன். 'சிரகிரி பதிவேளே, சரவணப் பெருமாளே' என்று அருணகிரிநாதர் அருளிய சென்னிமலை முருகனே! வடிவேலவனே! சக்தி மிக்க கந்த சஷ்டி கவசம் தன்னை, உன் சென்னிமலை திருவாலயத்தில் அரங்கேற்றம் செய்ய அருள்புரிந்த வேலவனே! வெற்றி வடிவேலவனே!! இருகரம் கூப்பி உன்னை வணங்குகின்றேன். சென்னிமலையின் சிறப்புகளை நான் இங்கே அள்ளித் தருகிறேன். தமிழ்நாட்டின் கொங்கு மலைப்பகுதியிலே, ஈரோடு மாவட்டத்திலே, ஈரோடு பெருநகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலே, சென்னிமலை என்ற அருள்மிகு சென்னிமலை ஆண்டவர் திருத்தலம் அமைந்துள்ளது. பச்சைப்பசேலென்ற மரங்கள் நிறைந்த நீண்ட திருமலையின் அடிவாரத்திலிருந்து 1749 அடி உயரத்தில் சென்னிமலை ஞான தண்டாயுதபாணி எழுந்தருளியுள்ள திருக்கோயில் அமைந்துள்ளது. தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்து, பேரொளியும், பேரழகும், பெருங் கருணையும் பொங்க வடிவெடுத்து, அங்கே அற்புதக் காட்சி தந்து அருள்பாலிக்கிறான். மலையாண்டவர் கோயிலுக்கு மேற்கே மாமுருகனை அடைய தவமிருந்து மாலையிட்ட வள்ளி தெய்வானையின் ஆலயம் அமைந்துள்ளது. ஒருகல்லில் வடிவமைக்கப்பட்ட இவ்விருவரின் கற்சிலைக்கு நடுவில் கீழே ஒரு அற்புத லிங்கமும் இச்சிலையிலே இருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிகளில் ஏறிச்சென்று முருகனை தரிசிக்கலாம். அல்லது மலைப் பாதையில் வாகனத்தில் சென்று தரிசிக்கலாம். தேவஸ்தானம் இரண்டு பேருந்து மற்றும் சிறுபேருந்து போன்றவற்றை இயக்கிவருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நொய்யல் ஆற்றின் கரையில் 'கொடுமணல்' என்ற கிராமம் சீரும், சிறப்புடனும் இருந்து வந்தது. ஒரு பெரிய பண்ணையாரின் காரம் பசு ஒன்று அனுதினமும் ஓரிடத்தில் சென்று தனது மடிப்பால் முழுவதையும் அந்த இடத்தில் சொரிந்து வந்தது. பண்ணையார் அந்த இடத்தை தோண்டிப்பார்த்த பொழுது, ஒரு கற்சிலை விக்ரஹம் தென்பட்டது. அதை எடுத்து ஆனந்தப்பட்ட பண்ணையார் அதன் முகப்பொலிவில் ஈடுபட்டு மெய் மறந்தார். பின் விக்ரஹத்தை ஆராய்ந்தபொழுது இடுப்புவரை அந்த விக்ரஹம் நல்ல வேலைப்பாடுடனும், முகம் அதி அற்புதமாகவும் இருந்ததாகவும், இடுப்புக்குக்கீழ், கரடு முரடாக ஒரு வடிவமின்றி இருந்ததால் அதை வடிவமைக்க அந்த விக்ரஹத்தின் மீது சிற்பி உளியால் அடித்தபொழுது ரத்தம் பீரிட்டு வந்தது கண்டு, பயந்து வேலை அப்படியே நிறுத்தப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது. அவ்வாறு பாதி நல் உருவமாகவும், மீதி உருவமற்ற நிலையிலும் சென்னிமலை மீது சுப்ரமண்ய ஸ்வாமி என்ற பெயரிலே அருள்மிகு முருகப்பெருமான் அங்கு நின்றிருக்கிறார். உடற்பிணி நீங்க வேண்டி சென்னிமலை வந்து, அங்குள்ள மாமாங்க தீர்த்தத்தில் நீராடி பிணி நீங்கப்பெற்றான் சோழ அரசனான சிவலிங்கச்சோழன். பங்குனி உத்திர காலத்தில் இத்தீர்த்தம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கிவரும். இரும்புச்சத்துள்ள இப்பட்சிதீர்த்தத்தில் நீராடினால் தோல்வியாதி நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இம்மலையையும், இம்மலை மீதுள்ள ஆலயம் அமைந்த இடத்தையும் இதற்கு மேலும் பல நிலங்களையும் அப்போது தன் ஆதிக்கத்தில் இருந்த ஹைதர் அலி நவாப் என்ற குறுநில மன்னன் தானமாகத் தந்துள்ளான் என்று வரலாறு எடுத்துரைக்கிறது. இம்மலைமீது உள்ள ஆலயம் மற்றும் கற்பக்கிரஹம், விஜயாலயச்சோழன் என்பவனால் கட்டப்பட்டது. அதன்பிறகு பல மண்டபங்கள் செங்கத்துரை பூசாரியாலும், வேளாளத் தம்பிரானாலும் கட்டப்பட்டன. மலைப்படி ஆரம்பம் முதல், மலை உச்சிவரை கடம்பனேஸ்வரர், இடும்பன், வள்ளியம்மன் பாதம், முத்துக்குமாரவாசர் என்ற மலைக்காவலர், ஆற்றுமலை விநாயகர் என்று சிறுசிறு இறையாலயங்கள் உள்ளன. நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழைய மரம் ஒன்று இங்கு மலைப்படி வழியில் உள்ளது. பேய், பிசாசு பிடித்தவர்கள் இம்மரத்தைத் தாண்டி மலைமீது படி ஏற முடியாது. இம்மரம் அந்தப் பேய், பிசாசை விரட்டி துரத்திவிடும். மலைமீது புண்ணாக்கு சித்தர் என்ற மகான் ஒருவரின் சமாதி ஒன்று உள்ளது. இவர் இங்குள்ள குகையொன்றில் நீீண்டநாள் தவம் இருந்ததாகவும், சென்னிமலை வரலாறு இவர் இயற்றியது என்றும் கூறப்படுகிறது. தேவராய சுவாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய 'கந்த சஷ்டி கவசம்' என்ற முருகன் மீதான கவசத்தை அரங்கேற்ற முருகனை வேண்டியபோது முருகனே கனவில் தோன்றி சென்னிமலை தலத்திலே வந்து அரங்கேற்றம் செய்ய அருளினார். அதன்படி இந்த சென்னிமலை தலத்திலே 'கந்த சஷ்டி கவசம்' என்ற கவசமாலை அரங்கேற்றம் செய்யப்பட்டது. இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்த அற்புதம். சித்திரை முதல் பங்குனிமுடிய பன்னிரண்டு மாதமும் இங்கு திருவிழாக்கள் அவ்வப்போது நடந்துவரும். தை மாதத்தில் வரும் தைப்பூசத் தேர் திருவிழா இங்கு முக்கிய திருவிழாவாகும். இங்கு ஆறுகால பூஜை அனுதினமும் நடைபெருகிறது. அமாவாசை, சஷ்டி, கிருத்திகையின்போது பக்தர்கள் வந்து போவார்கள். இப்படிப்பட்ட அருள்மிகு சென்னிமலை சுப்ரமண்யஸ்வாமியை நாமும் சென்று வழிபட்டு முருகனின் அருளைப் பெறலாம். ஆலய பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |