Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   5 - தேவ காண்டம்   next kandam5 - dhEva kANdam

previous padalam   2 - தெய்வயானையம்மை திருமணப் படலம்   next padalamDheivayAnaiyammai thirumaNap padalam

Ms Revathi Sankaran (8.81mb)
(1 - 79)



Ms Revathi Sankaran (8.13mb)
(80 - 140)



Ms Revathi Sankaran (8.48mb)
(141 - 209)



Ms Revathi Sankaran (6.39mb)
(210 - 268)




(காய்ந்திடு தம்பகை)

காய்ந்திடு தம்பகை கடந்து பொன்னகர்
     வேந்தியல் முறையருள் வேற்கை வீரற்குக்
          கூந்தலஞ் சிறுபுறக் குஞ்ச ரந்தனை
               ஈந்திட மகபதி இதயத் தெண்ணினான். ......    1

(விருத்த மதாகும்)

விருத்த மதாகும்இவ் விழைவை இந்திரன்
     திருத்தகு மாலயன் தேவர் தேர்வுற
          உரைத்தனன் வினவலும் உவகை பெற்றுநின்
               கருத்துநன் றாலெனக் கழறல் மேயினார். ......    2

(பன்னிரு மொய்ம்)

பன்னிரு மொய்ம்புடைப் பகவன் பாற்படப்
     பின்னலஞ் சுரிகுழற் பிடியும் பொய்கைவாய்
          முன்னுற அருந்தவம் முயன்று வைத்தனள்
               இன்னுழி அதன்பயன் எய்திற் றேகொலாம். ......    3

(கயலுறழ் விழியுடை)

கயலுறழ் விழியுடைக் கடவுள் யானையை
     வியல்வரை எறிந்திடு வேற்கை அண்ணலுக்
          கியல்புளி வதுவையால் ஈதற் கிவ்விடை
               முயலுதி கடிதென மொழிந்து வைகினார். ......    4

(மற்றது போழ்தினின்)

மற்றது போழ்தினின் மகத்தின் செம்மலோர்
     ஒற்றனை நோக்கியே ஒல்லை மேருவாம்
          பொற்றையின் மனைவியைப் புதல்வி தன்னுடன்
               இற்றையில் விளித்தனை ஏகுநீ என்றான். ......    5

(என்றலுந் தூதுவன்)

என்றலுந் தூதுவன் இசைந்து மேருவிற்
     சென்றனன் புலோமசைத் தெரிவை முன்புபோய்
          நின்றனன் வணங்கினன் நினது சிந்தைபோல்
               ஒன்றிய கேளென உரைத்தல் மேயினான். ......    6

(மாண்டனன் வெய்ய)

மாண்டனன் வெய்யசூர் மதலை தன்னொடு
     சேண்டொடர் அமரருஞ் சிறையின் நீங்கினார்
          ஆண்டலை உயர்த்தவன் அனிகந் தன்னொடு
               மீண்டனன் திருப்பரங் குன்ற மேயினான். ......    7

(நின்றிட அனையது)

நின்றிட அனையது நினது நாயகன்
     உன்றனை மகளொடும் ஒல்லை யிற்பரங்
          குன்றிடை இருக்கையிற் கொண்டு செல்கெனா
               இன்றெனை விடுத்தனன் ஏகுநீ யென்றான். ......    8

(அம்மொழி வினவலும்)

அம்மொழி வினவலும் அணங்கின் நல்லவள்
     விம்மித முற்றனள் விழுமம் நீங்கினாள்
          எம்மையும் இல்லதோர் இன்பம் எய்தினாள்
               கொம்மென எழுந்தனள் குமரி தன்னொடும். ......    9

(புடையுற வணங்கி)

புடையுற வணங்கினர் போற்றி மேருவின்
     இடையுறு புலோமசை ஏம மாகியே
          அடலயி ராவத வானை மேற்கொடு
               மடமகள் தன்னொடும் வானத் தேகினாள். ......    10

(பொருப்பினுள் மேல)

பொருப்பினுள் மேலதாய்ப் புவியிற் பேர்பெறுந்
     திருப்பரங் குன்றிடைச் சென்று தேவர்கோன்
          இருப்பதோர் மந்திரத் தெய்தி வைகினாள்
               மருப்பிரண் டுடையதோர் வார ணத்துடன். ......    11

(உறையுமவ் வெல்லை)

உறையுமவ் வெல்லையின் உயர்ம கேந்திரச்
     சிறையினும் அகன்றிடு தெய்வத் தையலார்
          இறைவியைப் பெற்றன மியாமுய்ந் தோமெனா
               முறைமுறை வணங்கினார் முகிழ்த்த கையினார். ......    12

(சேணுறும் எழிலிவாய்)

சேணுறும் எழிலிவாய் திறந்த மின்னுவைக்
     காணுறு கின்றதோர் கலாப மஞ்ஞைபோல்
          மாணுறு புலோமசை வரலும் மாதரார்
               ஏணுறு கின்றனர் ஏமம் பெற்றுளார். ......    13

(கண்டனள் மதலை)

கண்டனள் மதலையைக் கருணை யால்தழீஇக்
     கொண்டனள் மகிழ்ந்தனள் கொங்கை பாலுக
          விண்டனள் கவற்சியை வெறுமை யுற்றுளோர்
               பண்டுள பெருநிதி படைத்த பான்மைபோல். ......    14

(ஆடுறு பசியினோர்)

ஆடுறு பசியினோர் ஆக்கங் கண்டுழி
     நீடுறும் உவகையான் நிறைவு பெற்றென
          மாடுறு புலோமசை வடிவங் காண்டலுங்
               கூடினர் தன்மையுங் குரிசில் எய்தினான். ......    15

வேறு

(அப்போது வானோர்)

அப்போது வானோர் குழுவோ டயிராணி கேள்வன்
     செப்*1 போது கொங்கை மகடூஉ மணஞ்செப்பல் முன்னி
          ஒப்போதும் நீர்மை யிலதாம் ஒருவன் கழற்கே
               கைப்போது தூவிப் பணிந்தேத்திக் கழறல் உற்றான். ......    16

(கன்னின்ற மொய்ம்பின்)

கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை கட்டல் செய்தாய்
     இந்நின்ற தேவர் சிறைமீட்டனை என்ற னக்கு
          முன்னின்ற தொல்சீர் புரிந்தாயது முற்றும் நாடிச்
               செய்ந்நன்றி யாகச் சிறியேன்செயத் தக்க துண்டோ. ......    17

(முந்தேதமி யேன்பெறு)

முந்தேதமி யேன்பெறு மங்கையிம் மொய்வ ரைக்கண்
     வந்தே யமர்வாள் அவள்தன்னை வதுவை செய்து
          கந்தே புரைநின் பெருந்தோளிற் கலத்தி யாங்கள்
               உய்ந்தே பிறவிப் பயன்பெற்றனம் ஓங்க வென்றான். ......    18

(என்னுந் துணையில் அம)

என்னுந் துணையில் அமரேசனை எந்தை நோக்கி
     அந்நங்கை தானும் மிகநோற்றனள் ஆத லால்நீ
          முன்னும் படியே மணநாளை முடித்தும் என்னத்
               தன்னுங் கடந்த மகிழ்வெய்தித் தருக்கி நின்றான். ......    19

(வடிக்கொண்ட ஒள்)

வடிக்கொண்ட ஒள்வேற் படைநம்பிதன் வார்க ழற்கால்
     முடிக்கொண் டடியேஞ் சிறந்தேங்கள் முதல்வ என்னாக்
          கடிக்கொண்ட வாய்தற் புடைவந்து கணிப்பில் காதம்
               நொடிக்கொண்ட போழ்திற் படர்தூதரை நோக்கி னானால். ......    20

(முன்னாகி யுள்ள)

முன்னாகி யுள்ள பலதூதர் முகத்தை நோக்க
     அன்னார் எவரும் தொழுதேபொன் னடிவ ணங்கி
          எந்நாயக னேதமி யேஞ்செய்வ தென்கொ லென்னப்
               பொன்னா டுடையான் இஃதொன்று புகல லுற்றான். ......    21

(மூவர்க்குள் மேலோன்)

மூவர்க்குள் மேலோன் கிரிசேர் முசுகுந் தனாதிக்
     காவற் கடவுள் தலைவர்க்கும் ககன மேவும்
          தேவர்க்கும் ஏனைத் திசையோர்க்கும் முனிவ ராயோர்
               ஏவர்க்கும் எந்தை மணநாளை எனச்சொல் வீரால். ......    22

(கந்தக் கடவுள்)

கந்தக் கடவுள் மணத்தன்மை கழறி வல்லே
     இந்தப் பொருப்பி னிடையாவரும் ஈண்டும் வண்ணம்
          தந்திட் டிடுங்கள் எனவாசவன் சாற்ற லோடும்
               அந்தக் கணத்தில் தொழுதொற்றர் அகன்று போனார். ......    23

வேறு

(போனபொழு திற்)

போனபொழு திற்புலவர் செம்மல் புலன்மிக்க
     வானவர்கள் கம்மியனை வல்லையில் விளித்துக்
          கானமர் கடம்புபுனை காளைதன் மணத்துக்
               கானசெயல் முற்றுற அமைத்தியிவண் என்றான். ......    24

(புலவன துளங்கொடு)

புலவன துளங்கொடு பொருப்பின் ஒருசாரின்
     நிலமிசை வரைப்பகல் நிதிக்கொடு விதித்துக்
          குலமணி குயிற்றிநனி கோலம தியற்றி
               வலனுயர் சிறப்பினொரு மண்டபம் அமைத்தான். ......    25

(மேலைநில முற்றுற)

மேலைநில முற்றுற விதானவகை போக்கி
     மாலையொடு பல்கவரி வான்றுகில்கள் தூக்கி
          ஆலய நனந்தலையில் ஆறுமுகன் வைக
               நூலின்முறை நாடியொரு நோன்தவி சமைத்தான். ......    26

(வேதநெறி தந்திடு)

வேதநெறி தந்திடு விசாகன் அயல்வந்த
     மாதவன் விரிஞ்சன்முதல் வானவர்கள் யாரும்
          ஏதிலரும் வைகஇயல் கின்ற இடைதோறும்
               ஆதனம் வரம்பில அமைத்தனன் இமைப்பில். ......    27

(மன்றல்பயில் கின்ற)

மன்றல்பயில் கின்றவது வைக்களன் மருங்கில்
     குன்றுபுரை பல்சிகர கோபுரம் வகுத்தான்
          அன்றிமணி மண்டபம் அளப்பில் அமைத்தான்
               இன்றியமை யாப்பொதுவும் எண்ணில இழைத்தான். ......    28

(காலம்வரை யாதுகரு)

காலம்வரை யாதுகரு துற்ற பொழுதெல்லாஞ்
     சாலவெவர் கண்ணுநனி தம்பயன் வழங்குஞ்
          சோலைமலர் வாவிகள் சுனைத்தொகை தொகுத்தான்
               ஏலும்வது வைக்குரிய ஏனவும் அளித்தான். ......    29

(அவ்வகை யெலாம்)

அவ்வகை யெலாம்புலவன் அங்ஙனம் வகுப்பச்
     செவ்விது தெரிந்துவகை செய்தமரர் செம்மல்
          மெய்வதுவை யாற்றும் வழிவேண்டு கரணங்கள்
               எவ்வெவையும் அங்கணொர் இமைப்பில் வருவித்தான். ......    30

(தேவர்முதல் வன்தன)

தேவர்முதல் வன்தனது செய்கை இதுநிற்க
     ஏவலர் இசைத்திடலும் இவ்வதுவை காணக்
          கோவியல் புரிந்தமுசு குந்தனெனும் நேமிக்
               காவலன் வரும்பரிசு கட்டுரைசெய் கிற்பாம். ......    31

(கல்லருவி தூங்கு)

கல்லருவி தூங்கு கயிலைப்பொழி லின்மேனாள்
     அல்லுறழ் மிடற்றவனும் அம்பிகையு மாக
          எல்லையின் மகிழ்ச்சியொ டிருப்பமுசு ஈட்டம்
               வில்லுவ மரந்தொறும் வியன்சினையில் உற்ற. ......    32

(முற்றுணர் கருத்தின்)

முற்றுணர் கருத்தின்முனி வோர்கள்என முள்காந்
     துற்றிடு முசுக்கலையுள் ஒன்றிருவர் மீது
          மற்றொரு வில்வத்திலை வரம்பில பறித்துத்
               துற்றிடுவ தென்னநனி தூர்த்துளதை யன்றே. ......    33

(தூர்த்ததொரு காலை)

தூர்த்ததொரு காலைதனிற் சுந்தரிபொ றாளாய்ச்
     சீர்த்திடலும் ஆங்கவள் செயற்கைதனை அண்ணல்
          பார்த்துநமை ஈண்டுவழி பட்டுளது தன்னை
               வேர்த்திடுவ தென்னிது விடுத்தியினி என்றான். ......    34

(என்றிடலும் அம்பிகை)

என்றிடலும் அம்பிகை இகற்சின மிலாளாய்
     நன்றருள் புரிந்திடலும் ஞானவடி வானோன்
          வன்றிறல் முசுக்கலை மனத்திருள் அகற்றி
               ஒன்றியமர் வாலுணர் வொருங்குதவி னானால். ......    35

(மெய்யுணர்வு சேர்)

மெய்யுணர்வு சேர்தலும் வியன்சினை யின்நின்றும்
     ஒய்யென இழிந்துமுசு உட்குவர லெய்தி
          ஐயனையும் ஆய்தனையும் ஆர்வமொடு தாழ்ந்து
               பொய்யடிய னேன்பிழை பொறுத்திர்என லோடும். ......    36

(பிழையிதென அச்ச)

பிழையிதென அச்சமொடு பேசல்எமை ஈண்டே
     விழுமியதொர் கூவிளையின் மெல்லிலைகள் இட்டு
          வழிபடல் புரிந்தனை மனுக்குலம் உதித்து
               முழுதுலகை யாளுகென முன்னவன் மொழிந்தான். ......    37

வேறு

(அம்மொழி தேர்தலும்)

அம்மொழி தேர்தலும் ஆயதொர் கள்வன்
     கைம்மிக லுற்ற கலங்கஞர் எய்தி
          விம்மி இரங்கி விதிர்ப்பொ டெழுந்தே
               எம்மிறை வற்றொழு திவ்விவை செப்பும். ......    38

(நுங்களை வைகலும்)

நுங்களை வைகலும் நோக்கி உவப்பாய்
     இங்குறை கின்ற திகந்து நிலம்போய்
          மங்குறு செல்வ வலைப்படு வேனேல்
               எங்கள் பிரான்பினை எங்ஙனம் உய்கேன். ......    39

(என்னலும் அன்னதை)

என்னலும் அன்னதை எம்மிறை கேளா
     நின்னுளம் நன்று நிலத்திடை வைகிப்
          பின்னிவண் மீள்குதி பேதுறல் எய்தி
               முன்னலை யாதும் முசுக்கலை என்றான். ......    40

(பொய்ம்மறை யான)

பொய்ம்மறை யான புலாலுடல் போற்றி
     அம்மையில் வாழ்விடை அற்ற முறாமே
          இம்முக னோடுற எற்கருள் என்னா
               மெய்ம்முசு வின்கலை வேண்டிய தன்றே. ......    41

(அற்றமில் அவ்வரம்)

அற்றமில் அவ்வரம் ஐயன் அளிக்கப்
     பெற்றருள் கொண்டு பெருங்கயி லாயப்
          பொற்றை யகன்று பொருக்கென இம்பர்
               மற்றொர் கணத்தினில் வந்தது மன்னோ. ......    42

(ஆரஞர் மூழ்கியும்)

ஆரஞர் மூழ்கியும் ஆக்கம் இழந்தும்
     வாரி சுருங்கியும் வாய்மை நிறுத்தித்
          தாரணி யாள்அரிச் சந்திரன் என்போன்
               ஓர்மரு மான்என வேயுதித் தன்றே. ......    43

(மாமுக மேமுசு)

மாமுக மேமுசு மற்றுள வெல்லாங்
     காமரில் ஏர்தரு காட்சிய தாகிக்
          கோமுறை சேர்முசு குந்தன் எனாவோர்
               நாம இயற்பெயர் நண்ணிய தன்றே. ......    44

(ஆய வழிப்படும்)

ஆய வழிப்படும் அம்முசு குந்தன்
     தூய பொலன்முடி தொன்முறை சூடி
          மாயிரு ஞால வளாகம துள்ள
               தேய மெலாமொர் செகிற்*2 கொடு காத்தான். ......    45

(ஓவறு சீர்க்கரு)

ஓவறு சீர்க்கரு வூரிடை மேவிக்
     கோவியல் ஓம்புறு கொள்கை யனாகித்
          தேவரை ஏவல்கொள் சீர்கெழு சூரன்
               காவலின் ஆணை கடக்கலன் உற்றான். ......    46

(சொற்றிறல் மேதகு)

சொற்றிறல் மேதகு சூரெனும் வெய்யோன்
     உற்றிடும் வைப்பினில் ஓரிடை தன்னில்
          மற்றொர் இளம்பிறை வைகிய வாபோல்
               கொற்றவ னாம்முசு குந்தன் இருந்தான். ......    47

(சூரனை எந்தை)

சூரனை எந்தை தொலைத்தது கேளா
     ஆரஞர் நீங்கி அருஞ்சிறை பெற்ற
          மேருவ தென்ன வியன்மிடல் பெற்றுச்
               சீரிறை மாட்சி செலுத்தி அமர்ந்தான். ......    48

வேறு

(அமரும் எல்லையின்)

அமரும் எல்லையின் அரசன் முன்னரே
     இமைய வர்க்கிறை ஏவு தூதர்போய்க்
          கமல மன்னபொற் கழல்கள் வாழ்த்தியே
               தமது வன்மையாற் சாற்றல் மேயினார். ......    49

(உனது நண்பனாய்)

உனது நண்பனாய் உறுபு ரந்தரன்
     தனது தூதர்யாம் தாவில் சீர்பெறீஇ
          நினது சுற்றமும் நீயும் வாழிகேள்
               இனிது மங்கலம் இசைப்ப எய்தினேம். ......    50

(அடாத தீமைசெய்)

அடாத தீமைசெய் தமரர் தஞ்சிறை
     விடாத சூரனை வீட்டி வேலவன்
          வடாது பூமிவாய் வந்து கூடலின்
               குடாது சேர்பரங் குன்றில் வைகினான். ......    51

(கொற்ற வேற்படைக் குமர)

கொற்ற வேற்படைக் குமரற் கிந்திரன்
     தெற்றெ னத்தருந் தெய்வ யானையை
          இற்றை சென்றபின் ஈகின் றானிது
               சொற்றி டும்படி தூண்டி னானெமை. ......    52

(மாறி லாதஅவ் வது)

மாறி லாதஅவ் வதுவை காணநீ
     ஈறில் சேனையோ டெழுந்து தென்றமிழ்க்
          கூறு சீர்ப்பரங் குன்றந் தன்னிடைச்
               சேறி யாலெனாச் சிலதர் ஓதினார். ......    53

(ஓத அன்னவன்)

ஓத அன்னவன் உவகை சிந்தையின்
     மீது பொங்குற மெய்ப னித்தெழீஇத்
          தூத ரைத்தழீஇச் சோப னம்மிதற்
               கேது மில்லையால் ஈயு மாறென்றான். ......    54

(ஈண்டை மாநிதி)

ஈண்டை மாநிதி யாவும் நல்குகோ
     காண்ட குங்குடை கவரி நல்குகோ
          ஆண்டி ருந்தஎன் அரசு நல்குகோ
               வேண்டு கின்றதென் விளம்பு வீர்என்றான். ......    55

(கோதில் சீர்முசு)

கோதில் சீர்முசு குந்தன் இந்தவா
     றோதும் எல்லையில் உவகை யுற்றவன்
          ஆத ரத்தின தளவை நோக்கியே
               தூத ராயினோர் வியந்து சொல்லுவார். ......    56

(சொல்வி னைப்படு)

சொல்வி னைப்படுந் தூதர்க் கிவ்வெலாம்
     ஒல்வ தன்றிவை உதவிற் றொக்குமால்
          வல்வி ரைந்துநீ வாச வன்முனஞ்
               செல்வ தேயெனச் செப்பிப் போயினார். ......    57

(போய தூதுவர்)

போய தூதுவர் புவியின் மன்னவர்
     ஆயி னோர்க்கெலாம் ஆறு மாமுகச்
          சேய வன்மணஞ் செப்பி மாதிரம்
               ஏயி னோர்க்கும்இங் கிதுவி ளம்பினார். ......    58

(அகல்வி சும்பிடை)

அகல்வி சும்பிடை அல்க லும்படர்
     பகல வன்முதற் பகவர் யாவர்க்கும்
          இகலின் மாதவர் எவர்க்கும் இச்செயல்
               விகல மின்றியே விளம்பி யேகினார். ......    59

வேறு

(ஆய காலையின் முசு)

ஆய காலையின் முசுகுந்தன் அப்பதி தன்னில்
     மேயி னார்களுந் தன்பெருஞ் சேனையும் வேற்கை
          நாய கன்மணங் காணிய முன்னரே நடப்பான்
               பாய்ம தக்கரி மிசைமுர சறைந்திடப் பணித்தான். ......    60

(அந்த நீர்மையை)

அந்த நீர்மையை வள்ளுவன் அகன்கரு வூரில்
     தந்தி யின்மிசை ஏறியே தனிமுர சறைந்து
          முந்து சீர்க் கமலாலயத் தரன்விழா மொழிந்தே
               இந்தி ரன்திரிந் திடுதல்போல் திரிந்தனன் இசைத்தான். ......    61

வேறு

(ஆனதோர் பொழுதில் அந்)

ஆனதோர் பொழுதில் அந்நகரின் மாக்களுஞ்
     சேனையின் வெள்ளமுந் திசைக ளின்புறம்
          போனதோர் பெரும்புறப் புணரிக் கேகுறும்
               ஏனைய கடலென எழுத லுற்றவே. ......    62

(எண்டிசை யாற்று)

எண்டிசை யாற்றுவ இபங்கள் ஆதலின்
     அண்டமுந் தாங்குவான் அயன்ப டைத்தென
          விண்டொட நின்றிடும் வேழம் எண்ணில
               கொண்டல்கள் சூழிபோற் குலவச் சென்றவே. ......    63

(வால்கிளர் கற்றை)

வால்கிளர் கற்றையும் மதர்வை நோக்கமும்
     பால்கிளர் செவிகளும் பழிப்பில் சென்னியுங்
          கால்கிளர் செலவுமாய்க் கால்கள் சென்றென
               மேல்கிளர் புரவியின் வெள்ளஞ் சென்றவே. ......    64

(ஐயிரு திசையினும்)

ஐயிரு திசையினும் அணிந்து செல்வன
     கொய்யுளை வயப்பரிக் குழாங்கள் பூண்டன
          வெய்யவர் உதித்தென விளங்கு காட்சிய
               வையமெண் ணில்லன வையம் போந்தவே. ......    65

(வலிபுணர் யாக்கை)

வலிபுணர் யாக்கையர் வயங்கொள் வாகையர்
     கொலைகெழு பல்படைக் கூட்டுண் வாட்கையர்
          புலியுறழ் மானவப் பொருந ராயினார்
               தலைவர்கள் தம்மொடு தழுவிப் போயினார். ......    66

(அடல்வலி மானவர்)

அடல்வலி மானவர் அங்கை ஏந்திய
     படைவகை மின்னுவ பல்லி யங்களும்
          இடியொலி காட்டுவ ஈண்டு தானையுட்
               கொடிநிரை விசும்புதோய் கொண்டல் ஆயவே. ......    67

(தாளுறு கழலினர்)

தாளுறு கழலினர் சரம்பெய் தூணியர்
     தோளுறு வில்லினர் தொடையற் குஞ்சியர்
          வாளுறு தடங்கணார் மருங்கு மன்மத
               வேளென ஒருசில வீரர் ஏகினார். ......    68

(கறுத்திடுபல கைவாட்)

கறுத்திடுபல கைவாட் கையர் சாலிகை
     பொறுத்திடு மெய்யின ராகிப் போகுவார்
          மறுத்தவிர் மதிமுக மாதர் நாட்டவேல்
               ஒறுத்திடு நம்மையென் றுன்னி னார்கொலோ. ......    69

(அடைந்திடு துன்)

அடைந்திடு துன்பெலாம் ஆற்றி யம்புவி
     மடந்தைமுன் செய்திடு மாத வத்தினால்
          தொடர்ந்திடு பிடியினந் தொலையப் பூமிசை
               நடந்தனர் வரம்பிலா நகைமென் கொம்பனார். ......    70

(ஏரகல் மணந்தன)

ஏரகல் மணந்தனக் கெய்தும் ஆசையால்
     வாரக முலையுடை மடந்தை மார்பலர்
          பாரக மலிதரப் பரவிப் போயினார்
               தாரகை விண்ணெறி படருந் தன்மைபோல். ......    71

(இடையிடை கால்)

இடையிடை கால்களும் யாறுஞ் சேர்தலில்
     படிமிசை நடந்திடு பாவை மார்களை
          விடலைகள் ஏந்தியே மெல்ல ஏகினார்
               கடலினும் பெரியதாங் காம மூழ்குவார். ......    72

(தந்தி களின்மிசை)

தந்தி களின்மிசைத் தைய லாருடன்
     மைந்தர்க ளேகினார் மாநி லந்தனில்
          அந்தமில் சீரயி ராணி தன்னொடும்
               இந்திரர் போவதோர் இயற்கை போலவே. ......    73

(அதிர்குரல் தேர்களில்)

அதிர்குரல் தேர்களில் அரிவை மாருடன்
     கதுமெனப் போயினர் கணிப்பில் காளையர்
          மதிமுகத் தாருடன் வரம்பில் வெய்யவர்
               முதுவரைச் சிகரமேல் முடுகிச் சென்றென. ......    74

(கூற்றினை வென்றிடு)

கூற்றினை வென்றிடுங் கொலைக்க ணார்சிலர்
     ஏற்றமில் பிடிமிசை ஏறிப் போந்தனர்
          ஆற்றல தின்மையால் அவர்ந டைக்குமுன்
               தோற்றன நாணியே சுமத்தல் போன்றவே. ......    75

(காமரு கொங்கையாற்)

காமரு கொங்கையாற் கரிம ருப்பினை
     ஏமுற வென்றுளார் யானைக் கோடுகள்
          மாமருங் கடைதலும் மருண்டங் கோடினார்
               தாமுதற் செய்வினை தம்மைச் சூழ்ந்தென. ......    76

(விரிதரு சேனையில்)

விரிதரு சேனையில் விண்ணிற் பாய்தரு
     பரிகளின் மடந்தையர் பலரங் கேகினார்
          கரையறும் அமரர்கள் கடைந்த பாற்கடல்
               திரைதனில் வருபல திருவைப் போலவே. ......    77

(மேகம துற்றிடு மின்)

மேகம துற்றிடு மின்னின் மீமிசைப்
     போகிய சிலையொடும் போந்த தன்மைபோல்
          பாகினை யன்னசொற் பாவை மார்நர
               வாகனம் அவைகளின் மருவி யேகினார். ......    78

(அவிகையில் முழுமதி)

அவிகையில் முழுமதி அளிப்பப் பல்பொறி
     குவிகையி லம்புயங் குலவிச் சென்றெனக்
          கவிகையி லாதபங் கரப்ப மூடுபொற்
               சிவிகையி லேகினார் தெரிவை மார்சிலர். ......    79

வேறு

(பரதனங் கவரும் அல்)

பரதனங் கவரும் அல்குற் பரத்தையர் தம்மைப் பாரா
     விரதநன் முனிவர் தாமும் வேதியர் பலரும் ஈண்டிச்
          சுரதநண் புடைய ராகுங் கணிகையர் தோளால் தாளால்
               உரதனந் தன்னால் தாக்க உளைந்துளைந் தொதுங்கிப் போனார். ......    80

(வேண்டிய மாற்றங்)

வேண்டிய மாற்றங் கொள்ளாள் வெகுண்டுசென் றிடுவாள் முன்னம்
     ஆண்டொரு மதமால் யானை அடர்த்துவந் திடலும் அஞ்சிப்
          பூண்டிடு புலவி நீங்கிக் கணவனைப் புல்லிக் கொண்டாள்
               தூண்டரு தோளி னானும் இபத்தினைத் தொழுது நின்றான். ......    81

(ஏமருங் கலாப)

ஏமருங் கலாப மஞ்ஞை இனமெனச் செல்லு மாதர்
     மாமருங் கிறுங்கொல் இற்றால் மதன்அர சிறக்கும் என்றே
          காமருங் கவற்சி கொள்ளக் கரத்தினால் அவரைப் புல்லித்
               தாமருங் காகப் போனார் தார்முடி இளைய ரானோர். ......    82

(கணவன்தன் பிழை)

கணவன்தன் பிழையை உன்னிக் கனன்றிடுங் கணவன் தோளை
     அணைவுறா நீர்மை உன்னி அழுங்குறும் அமல மூர்த்தி
          மணவினை தன்னை உன்னி மகிழ்ந்திடும் இவ்வா றாகிப்
               புணர்கயிற் றூசல் போலும் புந்திகொண் டொருத்தி போனாள். ......    83

(கையிலார் கைகள்)

கையிலார் கைகள் பெற்றும் காலிலார் கால்கள் பெற்றும்
     மொய்யிலார் மொய்கள் பெற்றும் மூங்கைகள் மொழியைப் பெற்றும்
          மையல்சேர் குருட ரானோர் வாள்விழி பெற்றுஞ் சென்றார்
               ஐயன்மேல் உள்ளம் வைத்தார்க் கனையதோ அரிது மாதோ. ......    84

(விடந்தரு வேற்கண்)

விடந்தரு வேற்கண் நல்லாள் வெளிப்படு கொங்கை தன்னைப்
     படந்தனில் மறைத்த லோடும் பாங்கிலோர் காளை பாராத்
          தொடர்ந்தனன் அவள்பின் போனான் துணைமுலைப் படத்திற் சிக்கிக்
               கிடந்ததன் மதியை மீட்கக் கிலேசமோ டேகு வான்போல். ......    85

(நெய்தலுங் கமல)

நெய்தலுங் கமலப் போதும் நீலமும் நெடுநீர்ப் பொய்கை
     கொய்தனர் குமர ரானோர் கொடுங்குழை மடந்தை மார்தங்
          கைதனிற் கொடுத்துச் செல்வார் கன்னிமீர் இவையோ நுங்கண்
               மைதிகழ் விழிக்குத் தோற்ற மலரெனக் காட்டு வார்போல். ......    86

(அரிசன மேனி நல்)

அரிசன மேனி நல்லாள் அணிதுகில் அசைவின் சீரால்
     கரிசனம்*3 அன்ன கொங்கை காண்டலுந் தளர்ந்தோர் காளை
          தெரிசனந் தன்னில் ஈதென் சிந்தையைப் பிணித்த தென்றால்
               பரிசனந் தனில்என் னாமோ என்றுயிர் பதைத்து நின்றான். ......    87

(கற்பக வல்லி அன்)

கற்பக வல்லி அன்னாள் ஒருத்திதன் காதல் மூழ்கி
     அற்பகல் ஏவல் செய்வான் ஆங்கவள் செல்லும் போதில்
          பொற்புறு படாத்தின் நீங்கிப் பூண்முலை சிறிது தோன்றப்
               பற்பகல் நோற்று வேண்டும் பரிசில்பெற் றாரை ஒத்தான். ......    88

(ஒப்பிலா ஒருவேற்)

ஒப்பிலா ஒருவேற் காளை ஒள்ளெயிற் றூறு தாங்கித்
     துப்புறு பவளச் செவ்வாய் திறக்கலள் சொல்லும் ஆடாள்
          அப்படி ஒருத்தி செல்ல அநங்கவேள் அமுதம் வைத்த
               செப்பினிற் குறியுண் டாங்கொல் திறக்கலீர் சிறிது மென்றான். ......    89

(புடைதனில் ஒருத்தல்)

புடைதனில் ஒருத்தல் புல்லப் போவதோர் பிடியின் மேவும்
     மடவரல் வெருவ லோடும் மற்றது கண்டோர் வள்ளல்
          இடையகல் தேரும் மாவும் யானையும் படையுங் கொண்டீர்
               கடகரி ஒன்றற் கஞ்சுங் காரணம் யாதோ என்றான். ......    90

(ஆழியில் அமுதம்)

ஆழியில் அமுதம் பொங்கி அலையெறிந் தொழுகிற் றென்ன
     ஏழிசை நரம்பு கொண்ட மகரயாழ் இசையப் பண்ணி
          வேழமுந் தேரும் ஊர்ந்து விறலிய ரோடு பாணர்
               நீழலும் பருந்து மென்ன நெறிப்பட இசைத்துப் போனார். ......    91

(வெங்கரி நுதலில்)

வெங்கரி நுதலில் அப்பும் வீரசிந் துரம்வில் வீச
     மங்கையர் மைந்தர் பூணும் படைகளும் வயங்க மாடே
          தொங்கலுங் கவிகைக் காடுந் துவசமும் இருளைச் செய்யக்
               கங்குலும் பகலும் மாலைக் காலமும் போலு மாதோ. ......    92

(கொக்கரை படகம்)

கொக்கரை படகம் பேரி குடமுழாக் கொம்பு காளந்
     தக்கைதண் ணுமைத டாரி சல்லரி நிசாளந் தாளம்
          மெய்க்குழல் துடியே பம்பை வேறுபல் லியமுந் தாங்கி
               மைக்கடல் வாய்விட் டென்ன வரம்பிலோர் இயம்பிப் போனார். ......    93

(ஆரண முனிவர் தாமும்)

ஆரண முனிவர் தாமும் அமரரும் அகல்வான் செல்வார்
     சீரணி முசுகுந் தன்மேல் திருமலர் சிதற லுற்றார்
          காரண மில்லா வள்ளல் கடிமணந் தாமுங் காண்பான்
               தாரணி தன்னிற் செல்லுந் தாரகா கணங்கொ லென்ன. ......    94

(இன்னன சனங்கள்)

இன்னன சனங்கள் ஈண்டி எங்குமாய் ஏகும் எல்லைத்
     தன்னுறு கிளைஞர் தாமுந் தந்திரக் கிழவர் யாரும்
          முன்னொடும் பின்னும் பாங்கு மொய்த்துடன் செல்லத் தானோர்
               பொன்னெடுந் தேர்மேல் கொண்டு முசுகுந்தன் போத லுற்றான். ......    95

வேறு

(அடவியும் இகந்தன)

அடவியும் இகந்தனன் அகணி நாட்டுடன்
     இடையிடை அடுக்கலும் யாறும் நீங்கினான்
          படர்தலும் அவன்வழிப் பரிதி நாயகன்
               நடுவுறும் உச்சிமேல் நண்ணி னானரோ. ......    96

(அண்ணலம் படைகளும்)

அண்ணலம் படைகளும் அளப்பின் மாக்களும்
     உண்ணெகிழ் உவகையோ டொல்லை வந்திடத்
          தண்ணிழல் வெண்குடைத் தரணி காவலன்
               பண்ணவன் மேவுறு பரங்குன் றெய்தினான். ......    97

(முசுமுக முடையவன்)

முசுமுக முடையவன் முன்னர் வந்துழி
     வசுமதி இறைபுரி மன்னர் ஏவரும்
          அசைவறு திருவொடும் அனிகந் தன்னொடுந்
               திசைதொறுந் திசைதொறுஞ் சென்றங் கெய்தினார். ......    98

(முறைநெறி யாற்றிடு)

முறைநெறி யாற்றிடும் முசுகுந் தன்முதல்
     இறையவர் யாவரும் ஈண்டு தானையுங்
          குறைதவிர் சனங்களுங் குன்றஞ் சூழ்ந்துற
               நிறுவினர் ஒன்றிய நெஞ்சங் கொண்டுளார். ......    99

(புழையுறு கரங்களா)

புழையுறு கரங்களாற் போத கஞ்சில
     உழைவரு பிடிதனக் கும்பர் தாருவின்
          குழைகளை முறித்தன கொடுத்துக் கோட்டினான்
               மழைமுகில் கீறியே வாரி நல்குவ. ......    100

(படர்சிறை நீங்கிய)

படர்சிறை நீங்கிய பராரை வெற்பெலாம்
     அடிகளின் ஒற்றியே அசைந்து போந்தெனக்
          கடிகமழ் மும்மதக் கரிகள் ஓர்சில
               விடலருந் தளையொடு மெல்லச் சென்றவே. ......    101

(மூடுறு கணமுகில்)

மூடுறு கணமுகில் முழக்க றாததோர்
     கோடுயர் குன்றினைக் குறித்து நோக்கியே
          ஈடுறு திசைக்கரி ஈதென் றுன்னியே
               ஓடுவ ததன்மிசை ஒன்றொர் யானையே. ......    102

வேறு

(கலையகல் அல்கு)

கலையகல் அல்கு லார்பாற் காதலான் முயங்கி வல்லே
     உலைவுறு சேக்கைப் போரில் உடைந்திடு குமர ரேபோல்
          மலைபொரு பிடிக ளோடு மலைந்துதம் மதநீர் சிந்தி
               நிலையழி வெய்தி வெள்கி நின்றதோர் நெடுநல் வேழம். ......    103

(உடம்பிடி புரையும்)

உடம்பிடி புரையும் ஒண்கண் மோகினி யொருத்திக் காகத்
     திடம்படும் அவுணர் யாருந் திரண்டுடன் சென்ற வாபோல்
          மடம்படு பிடியொன் றேக மையல்மேல் கொண்டு மாடே
               கடம்படும் ஒருத்தல் வேழங் கணிப்பில படர்ந்த அன்றே. ......    104

(காழுற்ற தந்தம்)

காழுற்ற தந்தம் மின்னக் கபோலத் துமதநீர் வீழ
     ஊழிப்பேர் உருமுத் தன்னை உமிழ்ந்தென ஒலிமீக் கொள்ளக்
          கேழுற்ற மணிவில் லென்னக் கிளர்நுதல் ஓடை பொங்க
               வேழத்தின் நிரைக ளெல்லாம் மேகம்போ லுலாவு கின்ற. ......    105

(இருநெடு விசும்பிற்)

இருநெடு விசும்பிற் செல்லும் எழிலியை எயிற்றாற் பாய்ந்து
     சொரிதரு புனலை வாரித் துதிக்கையால் வீசு கின்ற
          பருமணி யோடை யானை பாய்திரைப் பரவை ஏழுங்
               கரதலம் எடுத்துச் சிந்துங் கண்ணுதற் களிறு போலும். ......    106

(கன்றொடு பிடிகள்)

கன்றொடு பிடிகள் சூழக் கடாம்படு கைம்மா ஒன்று
     நின்றிடு கந்திற் சேர்ந்து நிகளத்தோ டமர்ந்த நீர்மை
          குன்றுகள் புடையிற் சுற்றக் குருமணி நீலப் பொற்றை
               ஒன்றொரு தமிய தாகி உற்றவா றொத்த தம்மா. ......    107

(எருத்தமேல் இடிக்கும்)

எருத்தமேல் இடிக்கும் பாகர் இசைக்குறி கொள்ளா தாகி
     மருத்தினும் விசைமேற் கொண்டு வன்கரித் தண்ட நோக்கி
          உருத்திடு கொடுஞ்சொல் தாயர் ஒறுக்கவும் ஒருவன் மாட்டே
               கருத்துறு கணிகை நெஞ்சிற் போவதோர் கடுங்கண் வேழம். ......    108

(தூவகங் கொண்ட)

தூவகங் கொண்ட செங்கேழ் அங்குசந் தூண்டு பாகர்
     நாவகங் கொண்ட சொல்லான் நவிற்றுமந் திரத்தால் வாக்கால்
          பாவகங் கொண்ட பைங்கட் பாரிடம் வழிப்பட் டாங்குச்
               சேவகங் கொண்ட பொங்கர் சேர்ந்தன சிலகைம் மாக்கள். ......    109

(அந்தமி லாத செல்வ)

அந்தமி லாத செல்வத் தவுணருக் கரசன் முன்னம்
     வெந்திறற் கால்கள் தம்மை வியன்சிறைப் படுத்தி யென்னக்
          கந்திடைப் பிணிக்கப் பட்ட கடுநடைப் புரவி யெல்லாம்
               பந்தியில் ஒழுங்கு கொண்டு நின்றன பாங்க ரெங்கும். ......    110

(வீரவேல் தடக்கை)

வீரவேல் தடக்கை வள்ளல் விழாவினைக் காண விண்ணோர்
     ஊரொடு திசையும் ஏனை உலகமும் ஒருங்குற் றென்னக்
          காரினும் ஒலிமேல் கொண்ட கலினவாம் புரவி பூண்ட
               தேர்நிரை அநந்த கோடி செறிந்தன திசைகள் எங்கும். ......    111

(விடங்கெழு வேற்க)

விடங்கெழு வேற்க ணாரும் வெலற்கரும் வீரர் தாமுந்
     தடங்கெழு தானை வெள்ளத் தலைவரும் ஏனை யோரும்
          இடங்கெழு துளைத்துன் னூசி இழைதொடுத் திசைக்கப் பட்ட
               படங்கெழு மாட கூடத் தாவணம் பரவிப் புக்கார். ......    112

(கன்னெடுந் தாரை)

கன்னெடுந் தாரை கான்ற கார்முகில் வளைப்பச் செங்கண்
     முன்னவன் நிரையைக் காத்த முதுவரை நிலைய தென்னப்
          பன்னிறப் பசுங்காய் சிந்தும் பழுமரக் காமர் காவுட்
               பொன்னிவர் புனைமாண் கோயில் புரவலற் கமைந்த தன்றே. ......    113

(முத்தமுந் துகிரும்)

முத்தமுந் துகிரும் பொன்னும் முழுமணிக் கலனுஞ் சந்துஞ்
     சித்திரப் படமும் மற்றுந் தெற்றிமேல் நிரைத்துச் சீர்சால்
          உத்தம வணிகர் உற்றார் உணர்ச்சியுங் கற்புந் தூக்கி
               அத்தகு பொருளை யார்க்கும் அளித்திடுங் கொடையி னார்போல். ......    114

(மடப்பிடி மான்தேர்)

மடப்பிடி மான்தேர் நீங்கி வானிடைத் தவறி மின்னின்
     கொடித்திரள் செல்லு மாபோல் குவலயம் படர்ந்து பொங்கர்
          இடத்தினில் ஒதுங்கி வெற்பின் எதிரெதிர் கூவி மஞ்ஞை
               நடித்திடும் ஆடல் நோக்கித் திரிந்தனர் நங்கை மார்கள். ......    115

(கோலொடு வில்லும்)

கோலொடு வில்லும் வாளுங் குந்தமும் வயங்கப் பாத
     சாலமுங் கழலும் ஆர்ப்பத் தபனிய மணித்தார் தாழச்
          சோலையின் உலவிச் சாரல் அருவியுஞ் சுனையுங் கண்டு
               மால்கரி மலைவும் நோக்கி மடங்கலில் திரிந்தார் மைந்தர். ......    116

(தாரிடைப் படிந்த)

தாரிடைப் படிந்த வண்டு தடமலர்க் குவளை சேர
     வாரிடைப் படிந்த கொங்கை மாதரும் மைந்தர் தாமும்
          ஊரிடைப் படிந்த செங்கேழ் ஆதவன் உருப்பந் தீர
               நீரிடைப் படிதல் வேட்டு நெடும்புனல் துறையில் வந்தார். ......    117

(வெண்ணிற முகிலின்)

வெண்ணிற முகிலின் உம்பர் விஞ்சையர் வேந்தர் தாமும்
     ஒண்ணுதல் அணங்கி னோரும் ஒருங்குடன் திரண்ட தென்னக்
          கண்ணகல் தடாகம் புக்க கனங்குழை மகளிர் மைந்தர்
               தண்ணுறு புனல்பாய்ந் தாடித் தலைத்தலை திரிதல் உற்றார். ......    118

(கழியுண்ட உவரி)

கழியுண்ட உவரிக் கானற் கடைசியர் நாட்டம் அஞ்சிப்
     பழியுண்டு மறைந்த வாபோல் ஒருசிறை பயிலு நெய்தற்
          குழியுண்ட போதை நோக்கிக் குரைபுனல் தடத்துக் கம்மா
               விழியுண்டு கொல்லோ என்றே கொழுநரை வினவு கின்றார். ......    119

(பங்கயம் வதனம்)

பங்கயம் வதனம் என்பார் பாசியைக் கூந்தல் என்பார்
     செங்கிடை அதரம் என்பார் புள்ளொலி செப்பல் என்பார்
          சங்கினைக் களமே என்பார் தடாகமும் ஒருத்தி யல்ல
               மங்கையர் பலரே என்பார் திரைகளை மணித்தூ சென்பார். ......    120

(தத்தையை யனை)

தத்தையை யனைய சொல்லாள் ஒருத்திதன் நீழல் தன்னை
     அத்தடந் தன்னில் நோக்கி அளியனை அறியா தீண்டோர்
          மைத்தடங் கண்ணி னாளை மருவினை என்று கேள்வன்
               கைத்தலந் தன்னை விட்டு வெகுண்டனள் கரையிற் போனாள். ......    121

(குளத்திடைப் புனல்)

குளத்திடைப் புனல்வாய்ப் பெய்து கொப்பளித் திடுவான் தன்மேல்
     உளத்திடை வெகுளி யெய்தி ஊடினள் ஒருத்தி ஏகி
          முளைத்திடு கமலக் கானின் முகமலா வுறுப்பு முற்றும்
               ஒளித்தனள் நிற்ப நாடிக் காண்கலன் உலைதல் உற்றான். ......    122

(தாம்பெறு கொழுநர்)

தாம்பெறு கொழுநர் தம்மைத் தத்தமக் குரிய புத்தேள்
     ஆம்பரி சுன்னுந் தன்மை ஐயம தில்லை யென்னக்
          காம்புறழ் தடந்தோள் நல்லார் கணவர்மேற் கரத்தால் அள்ளிப்
               பூம்புனல் வீசு கின்றார் பூசனை புரிகு வார்போல். ......    123

(ஞெண்டொடு வராலு)

ஞெண்டொடு வராலுஞ் சேலும் யாமையும் நிலாவெண் சங்கும்
     புண்டரீ கத்த டாகங் குடைந்திடும் பூசல் அஞ்சித்
          தெண்டிரை அமுதச் சொல்லார் சிற்சில உறுப்புத் தன்னைக்
               கண்டுகண் டிரிவ தென்னத் திரிவன கலக்க மெய்தி. ......    124

(ஏந்திழை மகளிர்)

ஏந்திழை மகளிர் தாமும் மைந்தரும் இருநீர் தன்னுட்
     பாய்ந்தன ராடும் எல்லைப் பங்கய விலைக டோறுஞ்
          சேர்ந்திடு திவலை ஈட்டஞ் சிறந்தவர் சேர்த லாலே
               பூந்தடம் பொய்கை யாக்கை பொடித்தன போலும் அன்றே. ......    125

(நோக்கினும் நுழைகு றாத)

நோக்கினும் நுழைகு றாத நுண்துகில் மறைத்த அல்குல்
     தேக்குதண் பொய்கை யாடுஞ் செவ்வியில் தெரியத் தோன்ற
          நீக்கரும் பெருநாண் கொண்டு நின்றிடா தொருத்தி யோடித்
               தாக்கணங் கென்னப் போய்த்தன் கொழுநனைத் தழுவி கொண்டாள். ......    126

(உட்டெளி வில்லா)

உட்டெளி வில்லா நங்கை ஒலிபுனல் தடத்தின் ஆடுங்
     கட்டழ குளதோர் காளை கவிரிதழ் வெளுப்பு நோக்கிக்
          கிட்டியான் நிற்க உன்றன் கேழ்கிளர் அதரத் தெச்சில்
               இட்டனள் யாரிங் கென்னா வெகுளிகொண் டிகலிப் போனாள். ......    127

வேறு

(வெளுத்தன சேயிதழ்)

வெளுத்தன சேயிதழ் விழிசி வந்தன
     அளித்தொகை எழுந்தன அளகஞ் சோர்ந்தன
          குளித்திடு மலர்த்தடங் கொடிய னார்க்கெலாங்
               களித்திடு கணவருங் கள்ளும் ஒத்ததே. ......    128

(பையர வல்குலார்)

பையர வல்குலார் படியும் பான்மையால்
     துய்யதோர் குமிழிகள் செறிந்து தோன்றுவ
          வையபூந் தடமெலாம் அவரை நோக்குவான்
               மெய்யெலாம் விழிகளாய் விழித்தல் போன்றவே. ......    129

(மன்னரும் மகளிரும்)

மன்னரும் மகளிரும் படிந்த வாசநீர்
     செந்நிறக் குங்கும நானஞ் சேர்தலான்
          மின்னொடு கூடிய முகிலு மெல்லியல்
               பொன்னொடு கூடிய மாலும் போலுமால். ......    130

வேறு

(பூசு சாந்தமும் நான)

பூசு சாந்தமும் நானமும் பொய்கையில்
     வாச நீரெங்கு மாகி மணங்கமழ்ந்
          தாசை யெங்கும் உலாவி அவ்வானவர்
               நாசி யூடு மடுத்து நடந்தவே. ......    131

(இன்ன தன்மையில் ஏர்கெ)

இன்ன தன்மையில் ஏர்கெழு மைந்தரும்
     அன்ன மென்னடை யார்களும் அத்தடந்
          தன்னின் ஆடித் தடங்கரை ஏறியே
               பொன்னின் மாண்கலை பூணொடு தாங்கினார். ......    132

(வெளிறு மென்னகை)

வெளிறு மென்னகை மெல்லியல் மாதரும்
     ஒளிறு மேனி உவாக்களும் ஒன்றியே
          பிளிறு மையற் பிடியும் பெருமதக்
               களிறு மென்னக் கடிபொழில் ஏகினார். ......    133

(ஏகி னார்க்கவ் விரும்)

ஏகி னார்க்கவ் விரும்பொழில் மீச்செறி
     மேக சாலமும் மீன்தொகை ஈண்டிய
          மாக நாடும்அவ் வானவர் வந்துசேர்
               போக பூமிப் பொதும்பரும் போன்றதே. ......    134

(பளிங்க டுத்திடு பாங்)

பளிங்க டுத்திடு பாங்கரின் வேங்கைவீ
     விளங்கு சாயையை மெய்யென நோக்கியிக்
          குளங்கொள் பூமலர் கொய்துநல் கீரெனாத்
               தளர்ந்தொ ருத்தி தலைவனை வேண்டினாள். ......    135

(அங்கொ ருத்தியை)

அங்கொ ருத்தியை நோக்கியொ ரண்ணலுன்
     கொங்கை யொத்திடாக் கோங்கலர் கொள்கென
          வெங்கை தன்முலைக் கொப்பதென் றெண்ணியோ
               செங்கை யாற்பறித் தீரென்று சீறினாள். ......    136

வேறு

(மலர்ந்த வாள்முக)

மலர்ந்த வாள்முக மங்கையர் நோக்கலும் வறிதாய்ப்
     புலர்ந்து நின்றிடு தருக்களும் பொலிவினை யெய்தி
          அலர்ந்த வேயெனின் ஆடவர் தங்களை அன்னார்
               கலந்த போதுறு மின்பமார் கட்டுரைத் திடுவார். ......    137

(மேற்ற லத்தெழு)

மேற்ற லத்தெழு தாரகை மேதினி வரைப்பில்
     தோற்று காட்சியோ இங்கிவை என்னவோர் தோன்றல்
          கூற்ற மன்னவேற் கண்ணிநின் கூரெயிற் றிற்குத்
               தோற்ற முல்லையின் அரும்புகாண் இவையெனச் சொன்னான். ......    138

(மலையும் வேற்க)

மலையும் வேற்கணாள் ஒருத்திசொல் வினவிமற் றொருத்தி
     முலையின் மேல்விழி வைத்தவன் முறிகளும் முகையும்
          இலையு மாப்பறித் துதவலும் உமக்குமால் ஈந்தாள்
               தலையின் மேலிவை சூட்டுமென் றெறிந்தனள் தரியாள். ......    139

(காதல் மங்கைபால்)

காதல் மங்கைபால் வைத்தசிந் தையன் கரவீரப்
     போது கொய்யலன் இலைகொய்து பொற்கரத் தளிப்ப
          ஏதி லாளநிற் சேர்தலின் இங்கிவை நுகர்ந்து
               சாத லேதலை எனச்சினத் தாளொரு தையல். ......    140

வேறு

(இங்குன் முலைநேர்)

இங்குன் முலைநேர் குரும்பை இவையாய் குயம்போல்
     தங்கும் மிளநீர் உவையன்னவள் தன்னை ஈன்றாள்
          கொங்கை நிகரும் அடற்பாளைக் குழுவி தென்றோர்
               மங்கை நகைப்ப அவைகாட்டியொர் வள்ளல் நின்றான். ......    141

(ஓவாத தெங்கின்)

ஓவாத தெங்கின் இளம்பாளையின் ஒன்று தன்னைத்
     தாவா ஒருவன் கொடுவந்தொரு தையல் முன்போய்ப்
          பாவாய் தமியேன் உயிரேநின் பணைமு லைக்காங்
               கோவாத முத்தத் தொடையிங்கிது கொள்க வென்றான். ......    142

(மின்னார் தமக்கோ)

மின்னார் தமக்கோ ரரசேவெறி வேங்கை வீயும்
     புன்னாக வீயுங் கொணர்ந்தேன் புனைகிற்றி என்ன
          மன்னா வுனக்குப் பலருண்டுகொல் மாதர் என்னாத்
               தன்னாவி அன்னான் தனைச்சீறியொர் தையல் போனாள். ......    143

(பொன்பெற்ற மார்பன்)

பொன்பெற்ற மார்பன் ஒருவன்சில போது கொய்து
     கொன்பெற்ற வேற்கண் மடவார்கைக் கொடுத்த லோடும்
          பின்பெற்ற நங்கை வெகுண்டாள் பழுதென்று பேசி
               முன்பெற் றவளும் அவைசிந்தி முனிந்து போனாள். ......    144

(அப்பூர் விழியாள்)

அப்பூர் விழியாள் ஒருமூவகைத் தாய பூவும்
     மைப்பூங் குழலிற் புனைந்தாளதொர் வள்ளல் நோக்கி
          மெய்ப்பூவை யன்னாய் மருங்குல்முடி வெய்த மென்கார்
               முப்பூ விளைந்த படியென்கொல் மொழிக வென்றான். ......    145

(இத்தன்மை மைந்தர்)

இத்தன்மை மைந்தர் பலரும்மிகல் வேற்க ணாரும்
     மெய்த்தண் மலர்க்கா வுலவாவிளை யாடி மீண்டு
          தத்தம் படமா ளிகைபுக்கனர் தானும் ஆங்கே
               அத்தம் மயவெற் படைந்தான்கதிர் ஆயி ரத்தோன். ......    146

வேறு

(ஏலக் காவின் மாக்)

ஏலக் காவின் மாக்கள் புகுந்தே இனிதாடும்
     கோலச் செவ்வி நோக்கின னாங்கொல் குடபாலின்
          மாலைச் செக்கர் வானம தாகும் மலிதண்பூஞ்
               சோலைக் குள்ளே தானும் அடைந்தான் சுடர்வெய்யோன். ......    147

(முந்தைச் செக்க)

முந்தைச் செக்க ராகிய புத்தேள் மொய்ம்பிற்சூழ்
     தந்திப் போர்வை போலிருள் ஈட்டஞ் சார்வெய்த
          அந்தத் தேவன் மீமிசை அண்டத் தவர்வீசும்
               கந்தத் தண்போ தொப்பன தாரா கணமெல்லாம். ......    148

(படையா நேமிப்)

படையா நேமிப் பண்ணவ னார்பாற் கடலுக்கோர்
     தடையா யுற்றார் என்றிமை யோர்தண் தயிர்வேலை
          கடையா நிற்ப வேதிரள் வெண்ணெய் கடிதேவந்
               தடையா நிற்றல் போல உதித்திட் டதுதிங்கள். ......    149

(காணப் பட்டான்)

காணப் பட்டான் விண்மதி என்னக் காமத்தில்
     பூணப் பட்ட மாமதி தோன்றப் புலர்வெய்தி
          யாணர்க் கிண்ணத் துள்நிறை தேறல் இனிதட்டிப்
               பாணிக் கொண்டே மேவுதல் உற்றார் பலமாதர். ......    150

வேறு

(தூயதன் றாகிய)

தூயதன் றாகிய புனலெலாம் நல்கியே சூழ்ந்த தெங்கின்
     காயின்வந் திடுபயன் கொள்ளுவார் போற்சில காளை மார்கள்
          ஆயதண் தேறலை அரிவைமார் நுகருவான் அருளி யன்னார்
               வாயின்வந் தூறு மெல்லமிர் தினைக்கொள் வதற்குள்ளம் வைத்தார். ......    151

(தெள்ளுபேர் அமிர்)

தெள்ளுபேர் அமிர்தநேர் சொல்லினார் தேறல்பெய் கின்ற வெள்ளி
     வள்ளமா னவையெலாம் பொலிவன வானகத் திடையு தித்த
          வெள்ளிதா கியமதி ஒன்றினை நோக்கிஒண் புவியி னூடே
               கொள்ளையாய் மதிபல மாறுமா றாய்எழுங் கொள்கை போலும். ......    152

(அளியினுக் குண)

அளியினுக் குணவதாந் தேறல்வாய்க் கொண்டதோர் அரிவை யாற்றக்
     களிமயக் கெய்துவாள் இந்துவை நோக்கியிக் கடிய தேறல்
          துளியினைக் கோடியேல் உனதுமா சுள்ளதுந் தொலையும் இன்னும்
               ஒளியினைப் பெறுதிநின் ஊனமுந் தவிர்தியென் றுரைசெய் கின்றாள். ......    153

(கருதியான் உண்டி)

கருதியான் உண்டிடு நறவினைக் கண்டுகா மித்து நாளுந்
     திரிதியால் மதியமே நாணமுற் றாய்கொலோ செப்பு கில்லாய்
          பரிதியார் தம்மின் வீறெய்துவாய் அன்னதைப் பகிர்வன் இங்ஙன்
               வருதியால் என்றனள் தேறலால் தெளிவிலா மையல் பெற்றாள். ......    154

(என்னொடே தோன்றி)

என்னொடே தோன்றினாய் யானெனும் தன்மையா யாதும் வேண்டாய்
     பின்னரு முன்னுமாய் வைகலுந் திரிகுவாய் பிரிகி லாதாய்
          இன்னறா உண்கெனா உதவினுங் கொள்கிலாய் என்றொ ருத்தி
               தன்னதாம் நீழலோ டூடினாள் வாடினாள் தளர்தல் உற்றாள். ......    155

(அங்கைவள் ளந்தனி)

அங்கைவள் ளந்தனில் மதுவையுண் டயருவாள் அன்ன தற்குள்
     செங்கயல் விழியையும் வாலிதழ்ப் பொலிவையுந் தெரிய நோக்கி
          இங்கெனைக் கூடியே கணவர்போ யினர்கொலாம் என்றொ ருத்தி
               பொங்குசீற் றத்தளாய் ஓடினாள் நாடினாள் புலர்தல் உற்றாள். ......    156

வேறு

(திருந்திழை மார்சிலர்)

திருந்திழை மார்சிலர் செவ்வித் தேறலை
     அருந்தினர் வெறுத்தனர் அமுதந் தன்னையும்
          பொருந்திடு கணவரைப் புணரும் ஆசையால்
               வருந்தினர் தழலென மதியை உன்னுவார். ......    157

(வாடுகின் றார்சிலர் மகி)

வாடுகின் றார்சிலர் மகிழ்நர் வந்திட
     ஊடுகின் றார்சிலர் உவக்கின் றார்சிலர்
          பாடுகின் றார்சிலர் பணிகின் றார்சிலர்
               ஆடுகின் றார்சிலர் நறவம் ஆர்ந்துளார். ......    158

(அந்தரப் புள்ளொடும் அளி)

அந்தரப் புள்ளொடும் அளிகள் தம்மொடும்
     வந்தடுத் தவரொடும் மடந்தை மார்சிலர்
          சுந்தரத் தேறலைத் துய்த்து வாமமாந்
               தந்திரக் கிளைஞர்போல் தம்மில் ஈண்டினார். ......    159

(விள்ளுறு நாணினர் வீழு)

விள்ளுறு நாணினர் வீழுந் தூசினர்
     உள்ளுறு களிப்பினர் உரைம யங்கினர்
          தள்ளுறு தம்முணர் வின்றிச் சாம்பினார்
               கள்ளினும் உளதுகொல் கருத்த ழிப்பதே. ......    160

(இத்திற மதுவினை)

இத்திற மதுவினை இனிதின் மாந்தினோர்
     மத்தரின் மயங்கினர் மனந்தெ ளிந்துழித்
          தத்தம திறைவருந் தாமுங் கூடியே
               அத்தலை முயங்கினர் ஆர்வ மிக்குளார். ......    161

(ஏயுறு பரிசனம்)

ஏயுறு பரிசனம் இனைய தன்மையான்
     மேயின இங்கிது விளம்பி னாம்இனி
          ஆயிடை வந்திடும் அரசர் செய்கையும்
               நாயகன் வதுவையும் நவிலு வாமரோ. ......    162

(கொன்னுனை வேல்)

கொன்னுனை வேல்முசு குந்த னாதியாம்
     மன்னவர் யாவரும் வையம் நீங்கியே
          தன்னிகர் இலாததோர் தலைவன் மேவிய
               பொன்னிவர் குடுமியம் பொருப்பில் ஏறினார். ......    163

(ஏறினர் வெற்பின்)

ஏறினர் வெற்பின் மேலெவருந் தெய்வத
     நூறெரி கம்மியன் நுனித்துச் செய்திடு
          மாறகல் திருநகர் வளங்கண் டிந்திரன்
               சாறயர் வதுவையஞ் சாலை நண்ணினார். ......    164

(அம்முசு குந்தனை)

அம்முசு குந்தனை யாதி யாகிய
     வெம்முடி மன்னரும் இமைய வர்க்கிறை
          செம்மலர் அடிகளைச் சென்னி சேர்த்தினார்
               கைம்முறை தொழுதனர் களிப்பின் மேலுளார். ......    165

(கயமலர் குவளையில்)

கயமலர் குவளையில் கண்கள் மிக்குளான்
     அயலுறும் அரசருக் கருளி ஆங்கவர்
          செயல்முறை வினவியே சிறப்பி னாகிய
               நயமொழி பலவுடன் நவின்று மேவினான். ......    166

(மேதகு கதியராய்)

மேதகு கதியராய் விசும்பிற் சென்றிடும்
     மாதவன் மதிமுதல் அமரர் யாவரும்
          மாதிர இறைவரும் மாத வத்தரும்
               பாதல வாணரும் பரங்குன் றெய்தினார். ......    167

(விண்டொடர் பிற)

விண்டொடர் பிறங்கலின் மிசையி வர்ந்துபோய்
     அண்டரும் பிறருமாய் அமரர் கோன்தனைக்
          கண்டனர் தொழுதனர் களிப்பின் மாதவர்
               எண்டகும் ஆசிகள் இயம்பி எய்தினார். ......    168

(விறல்வரை மாதரு)

விறல்வரை மாதரும் விண்ணின் மாதருஞ்
     செறிபுனல் மாதருந் திசையின் மாதரும்
          உறுதவ மாதரும் உரக மாதரும்
               மறுவகல் புலோமசை வயின்வந் தீண்டினார். ......    169

(சூரர மங்கையர்)

சூரர மங்கையர் தொல்லை விண்ணவர்
     பேரர சியற்றிய பிரான்றன் காதலி
          சீரடி வந்தனை செய்து தெய்வத
               வாரண மென்பவள் மருங்கில் எய்தினார். ......    170

(தெய்வத யானைகேள்)

தெய்வத யானைகேள் தீய சூருயிர்
     வவ்விய வேலினான் மனைவி யாதியால்
          எவ்வுல கிற்குநீ இறைவி யாமென
               அவ்வவர் அடிபணிந் தன்பொ டேத்தினார். ......    171

(கயற்புரை நோக்கு)

கயற்புரை நோக்குடைக் கடவுள் யானைபால்
     இயற்படு திருநலன் இருக்கப் பின்னருஞ்
          செயற்படு கோலமுஞ் சிறிது செய்திட
               மயற்பட உன்னினர் மடநல் லாரெலாம். ......    172

(பொன்னகம் அதனி)

பொன்னகம் அதனிடைப் புராரி சேயினைத்
     தன்னக மிசைகொடு தவத்தை ஆற்றினாள்
          பின்னக மயிர்முடிப் பிணையற் சூழலை
               மென்னக விரல்களால் மெல்ல நீக்கினார். ......    173

(காசறை விரவிய)

காசறை விரவிய கடிமென் கூந்தலில்
     பூசினர் நாவிநெய் புதிய சாந்தமும்
          மாசறு பளிதமும் மற்று நீவியே
               நேசமொ டொண்பனி நீர்கொண் டாட்டினார். ......    174

(சேந்ததோர் வெம்பணி)

சேந்ததோர் வெம்பணி சீற்றத் தாற்கரும்
     பாந்தளை வாய்க்கொடு பற்று மாறெனப்
          பூந்துகில் கிழிகொடு புனல்வ றந்திடக்
               கூந்தலை ஒற்றினர் குழைமென் கொம்பனார். ......    175

(மாந்தளி ரேயென)

மாந்தளி ரேயென வனப்பும் மென்மையுங்
     காந்தியும் எய்தியே கடவுட் டன்மையால்
          தோய்ந்திட லின்றியுந் துப்பின் வண்ணமாம்
               பூந்துகில் ஒன்றினைப் புனைந்து டீஇயினார். ......    176

(ஈரறு கதிர்களும்)

ஈரறு கதிர்களும் இம்பர் சேர்தலின்
     ஆரிருள் யாவையும் அஞ்சி அவ்வைதன்
          வாரொலி கூந்தலின் மறைபுக் காலெனக்
               காரகில் நறும்புகை கமழ வூட்டினார். ......    177

(பொலம்புரி உத்தியும்)

பொலம்புரி உத்தியும் பொருத மஞ்ஞையும்
     வலம்புரி மகரமும் மரபில் வானவர்
          குலம்புரி தவம்புரை கொம்பின் கூழையின்
               நலம்புரி மங்கலம் நவின்று சாத்தினார். ......    178

(விரியிணர்க் கோங்க)

விரியிணர்க் கோங்கமும் வெட்சி யுஞ்செரீஇ
     மருமலர் இதழிடை*4 வைத்து வாசமார்
          தெரியலுந் தொடையலுஞ் செறியச் சூட்டியே
               சுரிகுழல் முடித்தனர் சுழியத் தன்மையால். ......    179

(ஒருமுயல் முழுமதி)

ஒருமுயல் முழுமதி யுள்புக் காலென
     இருவிழி புருவமாம் இனைய வற்றொடு
          கருநிறங் கண்டிடக் காமர் சாந்தினால்
               திருநுதல் அதனிடைத் திலகந் தீட்டினார். ......    180

(ஊட்டிய நறும்புகை)

ஊட்டிய நறும்புகை ஓதி நின்றொரீஇத்
     தீட்டிய திருநுதல் திலகந் சேர்தரப்
          பூட்டினர் சுட்டியைப் புயங்கம் ஒன்றுநா
               நீட்டிநஞ் சுமிழ்தரு நிலைமை ஈதென. ......    181

(கோல்வளை யந்நலார்)

கோல்வளை யந்நலார் குழையில் வல்லியஞ்
     சூல்வளை மிடற்றினில் தொடையல் முத்தணி
          கால்வளை கஞ்சநேர் கரத்துந் தோளினும்
               வால்வளை தொடியிவை வயங்கச் சேர்த்தினார். ......    182

(கொட்டினர் கலவை)

கொட்டினர் கலவைகள் கொங்கை யின்மிசை
     மட்டிமிர் பிணையலும் மணியின் கோவையும்
          அட்டினர் படாமும்ஒன் றதன்கட் சேர்த்தினார்
               இட்டிடை யிடைதனக் கிரக்கம் வைக்கிலார். ......    183

(மாடக யாழ்புரை)

மாடக யாழ்புரை மழலைப் பெண்பிளை
     ஆடக விரைமலர் அனைய தாள்களில்
          பாடகம் பரிபுரம் பாத சாலங்கள்
               சூடக முன்கையார் தொழுது சூழ்வித்தார். ......    184

(தெய்வத மடந்தையர்)

தெய்வத மடந்தையர் திருவின் செல்விபால்
     இவ்வகை ஒப்பனை இயற்றி ஏத்தலும்
          மைவிரி குவளைநேர் வடிவக் கண்ணினான்
               அவ்விடை செய்திடும் அமைதி கூறுவாம். ......    185

வேறு

(மேலை வானவர்க் கிறை)

மேலை வானவர்க் கிறையவன் விரிஞ்சனை நோக்கிச்
     சாலை யாகிய தெவ்வெலாத் தேவருஞ் சார்ந்தார்
          மாலை தாழ்முடி எம்பெரு முதல்வற்கு மணஞ்செய்
               காலை நாடியே இஃதெனக் கழறுதி யென்றான். ......    186

(அப்பு ரந்தரன் மொழி)

அப்பு ரந்தரன் மொழிதனை அம்புயன் வினவிச்
     செப்பு கின்றதென் அறுமுகப் பரன்மணஞ் செய்தற்
          கெப்பெ ரும்பக லாயினும் இனியதே எனினும்
               ஒப்ப கன்றிடு முகூர்த்தம்இவ் வெல்லைஎன் றுரைத்தான். ......    187

(ஈவ தேமுறை யாயு)

ஈவ தேமுறை யாயுளாய் இப்பகல் சிறந்த
     தாவ தேயெனின் யான்பெறும் அணங்கைஈண் டளிப்பான்
          தேவ தேவனாம் அறுமுகச் செம்மலைக் கொணரப்
               போவ தேகடன் எமக்கெனப் புரந்தரன் புகன்றான். ......    188

(அனைய காலையில் அச்சுத)

அனைய காலையில் அச்சுதக் கடவுளும் அயனும்
     இனிது போதும்என் றிந்திரன் தன்னொடும் எழுந்து
          முனிவர் யாவருந் தேவருஞ் சூழ்ந்துமுன் படரப்
               புனித நாயகன் ஆலயம் நோக்கியே போனார். ......    189

(போந்து மற்றவர் பொல)

போந்து மற்றவர் பொலன்மணிக் கோயிலுட் புக்குச்
     சேந்தன் மாமலர் அடிகளை முடிகளிற் சேர்த்திக்
          காந்தள் மெல்விரல் மடந்தைபாற் கடிமணம் புரிய
               ஏந்தல் நீயவண் வந்திட வேண்டுமென் றிசைத்தார். ......    190

(இன்ன வாசகம் வின)

இன்ன வாசகம் வினவலும் இராறுதோ ளுடையோன்
     அன்ன தாகவென் றருள்செய்து மடங்கலே றாற்றும்
          பொன்னின் மாமணி அணையினும் பொருக்கென எழுந்தான்
               துன்னு வீரரும் பாரிட முதல்வருந் துதிப்ப. ......    191

(எழுந்து முன்னுறு)

எழுந்து முன்னுறு மஞ்ஞையஞ் சேவல்மேல் ஏறிச்
     செழுந்த னிக்கம லத்தய னாதியாந் தேவர்
          விழுந்து முன்பணிந் தேத்தியே விரைமலர் மாரி
               பொழிந்து பாங்கராய் வந்திட வீதிவாய்ப் போந்தான். ......    192

(கொற்ற வெண்குடை)

கொற்ற வெண்குடை எடுத்தனர் குளிர்பனிக் கவரிக்
     கற்றை வீசினர் ஆலவட் டங்கள்கா லசைத்தார்
          ஒற்றை வாட்படை ஏந்தினர் உடுபதிக் கடவுள்
               மற்றை ஆதவன் மருத்துவன் சலபதி மறலி. ......    193

(ஆழி மாலயன் உவண)

ஆழி மாலயன் உவணமும் அன்னமும் அழியா
     ஊழி நாயகன் ஊர்தியின் ஒலிகொலென் றுட்கக்
          கேழி லாமலர்க் கிஞ்சுகச் சூட்டொடுங் கிளர்ந்து
               கோழி நீள்கொடி ஆர்த்ததெவ் வண்டமுங் குலுங்க. ......    194

(வேதர் ஆர்த்தனர் வேத)

வேதர் ஆர்த்தனர் வேதமும் ஆர்த்தன விண்ணோர்
     மாதர் ஆர்த்தனர் மாதவர் ஆர்த்தனர் வயவெம்
          பூதர் ஆர்த்தனர் பூதமைந் தார்த்தன புடவி
               நாதர் ஆர்த்தனர் நாதமிக் கார்த்தன நகமே. ......    195

(திண்டி பேரிகை தண்)

திண்டி பேரிகை தண்ணுமை சல்லரி திமிலை
     பண்டி யிற்பெயர் குடமுழாக் காகளம் படகந்
          தொண்ட கந்துடி துந்துபி வலம்புரித் தொகுதி
               அண்டம் விண்டிட இயம்பினர் பூதரில் அநேகர். ......    196

(அஞ்சி லோதியின்)

அஞ்சி லோதியின் மேனகை உருப்பசி அரம்பை
     கிஞ்சு கச்செவ்வாய்த் திலோத்தமை முதலினோர் கெழுமி
          மஞ்ச மீதினும் மானத்தும் நின்றுவாள் விழிகள்
               நஞ்சு மிழ்ந்திட அமுதெனப் பாடியே நடித்தார். ......    197

(யாணர் வண்டினஞ்)

யாணர் வண்டினஞ் சுரும்புடன் அலமரும் யாழும்
     வீணை யுங்கரம் பற்றியே விஞ்சையர் முதலோர்
          சேண ரம்பையர் களிநடத் தோடுசீர் தூக்கும்
               பாணி யும்மிசை வுற்றிட இசைத்தனர் பாடல். ......    198

(பொருவில் வீரரும்)

பொருவில் வீரரும் பூதரும் புரந்தரன் முதலாஞ்
     சுரரும் மாதவர் யாவரும் பிறருமாய்த் துன்னி
          ஒருவர் மெய்யினை ஒருவர்மெய் நெருக்கவுற் றிடலால்
               தெருவும் முற்றமும் இடம்பெறா வாயின சிறிதும். ......    199

வேறு

(இன்ன தன்மைகள் இய)

இன்ன தன்மைகள் இயல எல்லைதீர்
     பொன்னின் வீதிவாய்ப் போந்து புங்கவர்
          மன்னன் ஆற்றிய மணத்தின் சாலையின்
               முன்னர் வந்தனன் முடிவில் முன்னையோன். ......    200

(ஆவ தாகிய அண்ணல்)

ஆவ தாகிய அண்ணல் தன்மிசைத்
     தாவில் கும்பமேல் தருப்பை தோய்த்தநீர்
          தூவி ஆசிகள் சொற்று மாதவர்
               ஏவ ருந்திரண் டெதிர்கொண் டேத்தினார். ......    201

(செங்கை தன்னிடை)

செங்கை தன்னிடைத் தேவர் மாதவர்
     நங்கை மாரெலாம் நாலி ரண்டெனும்
          மங்க லங்களும் மரபின் ஏந்தியே
               எங்கள் நாயகற் கெதிர்ந்து போற்றினார். ......    202

(பஞ்சி தூயநெய்)

பஞ்சி தூயநெய் பளித நாவியாய்
     விஞ்சு தீஞ்சுடர் மிளிர்பொற் றட்டைகள்
          அஞ்சில் ஓதியர் அங்கை ஏந்தியே
               செஞ்செவ் வேள்முனஞ் சிறப்பித் தாரரோ. ......    203

(காலை யங்கதிற்)

காலை யங்கதிற் காலை யங்கதிர்
     மேலை விண்முகில் விட்ட கன்றெனக்
          கோலஞ் செய்யநங் குமர நாயகன்
               நீல மஞ்ஞைமேல் நின்று நீங்கினான். ......    204

(ஏய மஞ்ஞைநின்)

ஏய மஞ்ஞைநின் றிழிந்து வேள்விசெய்
     கோயில் முன்கடைக் குமரன் சேர்தலும்
          ஆய போழ்தினில் அரம்பை மாரொடுந்
               தூய தோர்சசி தொழுதங் கெய்தினாள். ......    205

(எதிர்பு குந்திடும்)

எதிர்பு குந்திடும் இந்தி ராணிதன்
     புதிய தோர்பசுப் பொழிந்த தீயபால்
          நிதியின் கொள்கலம் நிரப்பி வந்துவேள்
               பதயு கங்களிற் பரிவொ டாட்டினாள். ......    206

(ஆட்டித் தீம்பயன்)

ஆட்டித் தீம்பயன் அலருங் கண்ணியுஞ்
     சூட்டி மெல்லடி தொழுது பல்சுடர்
          கூட்டி வைத்ததோர் கொள்க லந்தனைக்
               காட்டி மும்முறை கடவுட் சுற்றினாள். ......    207

(இனைய தன்மைகள்)

இனைய தன்மைகள் இயற்றி இந்திரன்
     மனைவி வெள்கியே மடமின் னாரொடுந்
          தனது மந்திரந் தன்னிற் போதலும்
               அனகன் கண்டதற் கருள்செய் தேகினான். ......    208

(கோல மாமணி)

கோல மாமணி குயிற்றிப் பொன்னரி
     மாலை நாற்றியே வனப்புச் செய்திடுஞ்
          சாலை புக்கனன் தனக்கு வேறொரு
               மூல மில்லதோர் முதலின் வந்துளான். ......    209

வேறு

(பக்க மாய்அரி)

பக்க மாய்அரி பங்கயன் ஆதியோர்
     தொக்கு வந்திடத் தொன்மணி மண்டபம்
          புக்கு நம்பி புரந்தரன் உய்த்திடு
               மிக்க பீடத்தில் வீற்றிருந் தானரோ. ......    210

(வீற்றி ருந்தபின்)

வீற்றி ருந்தபின் வேதனும் மாயனுந்
     தேற்ற மிக்க முனிவருந் தேவரும்
          ஆற்றல் வீரரும் அண்ணல்தன் ஏவலால்
               ஏற்ற ஏற்ற இடந்தொறும் வைகினார். ......    211

(அந்த வெல்லை அவனி)

அந்த வெல்லை அவனியில் வாழ்முசு
     குந்த னேமுதற் கொற்றவர் யாவரும்
          வந்து வந்து வணங்கி வழுத்திடக்
               கந்தன் எந்தை கருணைசெய் தானரோ. ......    212

(ஆன காலை அரியயன்)

ஆன காலை அரியயன் நாடொணா
     ஞான நாயகன் நங்கையுந் தானுமோர்
          மான மேல்கொண்டு மாயிருஞ் சாரதர்
               சேனை சூழ்தரச் சேணிடைத் தோன்றினான். ......    213

(அம்மை யுந்தன தத்)

அம்மை யுந்தன தத்தனும் வந்தது
     செம்மல் கண்டு சிறப்புடை ஓகையாய்
          விம்மி தங்கொண்டு மேதகும் அன்பினால்
               இம்மெ னக்கடி தேயெழுந் தானரோ. ......    214

(கண்ண னாதிக் கட)

கண்ண னாதிக் கடவுளர் யாவரும்
     எண்ணி லாமுனி வோர்களும் எம்பிரான்
          நண்ணி னான்இங்கு நாமுய்ந் தனமெனாத்
               துண்ணெ னாவெழுந் தார்கை தொழுதுளார். ......    215

(அனைய காலையில் ஆதிய)

அனைய காலையில் ஆதியம் பண்ணவன்
     இனிது மானத் திழிந்து கணத்துடன்
          புனித நீடு பொலன்மணிச் சாலையுள்
               வனிதை யாளொடும் வந்துபுக் கானரோ. ......    216

வேறு

(அதுகண் டுநடந்)

அதுகண் டுநடந் தறுமா முகவன்
     எதிர்கொண் டுவிரைந் திருவோர் பதமும்
          முதிரன் பொடுதன் முடிசூ டினனால்
               கதிருங் கமலங் களுமே வியபோல். ......    217

(வந்தஞ் சலிசெய்)

வந்தஞ் சலிசெய் துவணங் கியதோர்
     கந்தன் தனையங் கவர்கை கொடெடாத்
          தந்தம் முரனூடு தழீஇ முறையே
               முந்தன் பொடுயிர்த் தனர்முச் சியையே. ......    218

(முதுவா னவரும் முனி)

முதுவா னவரும் முனிவோர் எவரும்
     மதுசூ தனனும் மலர்மேல் அயனுஞ்
          சதவேள் வியனுஞ் சகமீன் றவர்தம்
               பதமீ மிசைவந் துபணிந் தனரால். ......    219

(தாழ்வுற் றிடுவோர்)

தாழ்வுற் றிடுவோர் உமைசங் கரனைச்
     சூழ்வுற் றுவலஞ் செய்துசூழ் வினையூ
          டாழ்வுற் றிடுபுன் மையகன் றடியேம்
               வாழ்வுற் றனமென் றுவழுத் தினரால். ......    220

(உன்னற் கரிதா)

உன்னற் கரிதா கியுயிர்க் குயிராய்
     மன்னுற் றவனை மலைமங் கையுடன்
          பொன்னிற் புனையும் புதுமன் றல்மனை
               தன்னிற் குமரன் கொடுசார்ந் தனனால். ......    221

வேறு

(ஆகியதொர் போழ்து)

ஆகியதொர் போழ்துதனில் ஆணைமுறை தன்னால்
     மாகநெறி வந்தொரு மணித்தவிசு நண்ணத்
          தோகையுடை மஞ்ஞையுறழ் தோற்றமுடை மாதோர்
               பாகமுற வாயிடை பராபரன் இருந்தான். ......    222

(மங்கையுமை யுஞ்சிவ)

மங்கையுமை யுஞ்சிவனும் வள்ளறனை நோக்கி
     இங்குவரு கென்றுபின் எடுத்தினிது புல்லித்
          தங்கள்வயின் வைத்துநனி தண்ணளி புரிந்தார்
               அங்கது தெரிந்துதொழு தம்புயன் இசைப்பான். ......    223

(முன்னமொரு வைகல்)

முன்னமொரு வைகல்தனில் மூவிரு முகத்தோன்
     தன்னைஅசு ரப்படை தடிந்திட விடுத்தாய்
          அன்னபரி சேயவுண ராயுளரை வீட்டி
               நென்னல்இமை யோர்சிறையும் நீக்கிஅருள் செய்தான். ......    224

(நன்றியித னைக்கருதி)

நன்றியித னைக்கருதி நாங்கள்புரி கைம்மா
     றொன்றுமிலை என்னினும் உளத்தெழும் விருப்பால்
          வென்றியசு ரேசர்கிளை வீட்டுகும ரேசற்
               கின்றுமக வான்மகளை ஈந்திட நினைந்தான். ......    225

(அற்றமில் இரக்கமுடன்)

அற்றமில் இரக்கமுடன் ஆருயிர்கள் முற்றும்
     நிற்றலும் அளித்தருளும் நேரிழையும் நீயும்
          மற்றிதுப கற்பொழுதில் வந்தனிர்கள் என்றால்
               சிற்றடிய ரேங்கள்செயல் சீருளதை யன்றோ. ......    226

(என்றினைய நான்)

என்றினைய நான்முகன் இசைத்திடலும் ஈசன்
     நன்றென மகிழ்ச்சிகொடு நாமுமிது காண்பான்
          மன்றல்மலர் கூந்தல்மலை மங்கையுடன் இங்ஙன்
               சென்றனம் இதற்குரிய செய்கவினி யென்றான். ......    227

(நாதனிவை கூறுதலும்)

நாதனிவை கூறுதலும் நன்குமகிழ் வெய்தி
     மாதவனும் நான்முகனும் வாசவனை நோக்கி
          வேதமுறை யால்முருகன் வேட்டருள உன்றன்
               கோதைதனை அன்பொடு கொணர்ந்திடுதி யென்றார். ......    228

(அந்தவமை யந்தனில்)

அந்தவமை யந்தனில் அதற்கிசைவு கொண்டே
     பைந்தொடிநல் லார்களமர் பாங்கர்தனில் ஏகி
          நந்தமைய ளித்தருளும் நங்கைவரு கென்னா
               இந்திரன்வி ளித்திடலும் ஏந்திழையெ ழுந்தாள். ......    229

(கல்லுயர் பொருப்)

கல்லுயர் பொருப்பினிடை காமரடி செல்ல
     அல்லனகொல் என்றுமணி நூபுரம் அரற்ற
          மெல்லிடை வருந்துமென மேகலை இரங்க
               எல்லவரும் உள்மகிழ எம்மனை நடந்தாள். ......    230

(பஞ்சிதனின் மெல்லடி)

பஞ்சிதனின் மெல்லடி பனிப்பவரை யின்பால்
     குஞ்சரி நடந்தசெயல் கூறுபுது மைத்தோ
          செஞ்சுடர்வை வேலுடைய செம்மலடி தீயேன்
               நெஞ்சக அடுக்கலினும் நின்றுலவும் என்றால். ......    231

(தந்திமுன் வளர்ப்ப)

தந்திமுன் வளர்ப்பவரு தையல்மிக நொய்ய
     செந்தளிர் ஒதுங்கமிளிர் சீறடி ஒதுங்கி
          இந்திரையும் நாமகளும் ஏனையரும் ஏத்தப்
               புந்திகளி கூர்தரு புரந்தரன்முன் வந்தாள். ......    232

வேறு

(இன்ன வெல்லையில்)

இன்ன வெல்லையில் இந்திரன் தெய்வதக்
     கன்னி தன்னைக் கடிமணச் சாலையின்
          முன்னர் உய்ப்ப முனிவருந் தேவரும்
               அன்னை வாழியென் றேயடி போற்றினார். ......    233

(கணங்கொள் பேரவை)

கணங்கொள் பேரவை கைதொழ ஆண்டுறும்
     அணங்கு தன்னுடன் ஆதியந் தேவனை
          வணங்கி வேலுடை வள்ளலை நோக்கியே
               சுணங்கு சேர்முலை துண்ணென வெள்கினாள். ......    234

(மங்கை தாழ்தலும்)

மங்கை தாழ்தலும் வாலிதின் நோக்கியே
     அங்கண் நாதன் அருள்செய அண்ணலைக்
          கொங்கை யாற்குழை வித்தவள் கோல்வளைச்
               செங்கை யோச்சிச் சிறுபுறம் நீவினாள். ......    235

(திருத்த குந்திறற் சேவை)

திருத்த குந்திறற் சேவையுஞ் சேண்மிசை
     அருத்தி பெற்ற அணங்கையும் முற்படும்
          பெருத்த பொன்மணிப் பீடிகை மீமிசை
               இருத்தி வைத்தனள் யாவையும் ஈன்றுளாள். ......    236

வேறு

(அதிர்கழல் ஈசனொ)

அதிர்கழல் ஈசனொ டம்மை இருந்தாங்
     கெதிரெதிர் விம்பம் இலங்கிய வாபோல்
          வதுவை யணிந்திடு மைந்தனும் மாதுங்
               கதிர்மணி தோய்கன கத்தவி சுற்றார். ......    237

(தெய்வத மாதொடு)

தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்
     வெவ்வரி ஏற்றணை மேவுதல் காணா
          வெவ்வெவ ருந்தொழு தேத்தினர் ஈன்ற
               அவ்வையும் அத்தனும் ஆரருள் செய்தார். ......    238

(அண்டர் தமக்கிறை)

அண்டர் தமக்கிறை யாங்கவர் கோலங்
     கண்டு புகழ்ந்து கரந்தொழு துச்சி
          கொண்டு மிளிர்ந்து குளிர்ந்திடு தேறல்
               உண்ட சுரும்பினும் உள்மகிழ் வுற்றான். ......    239

(நெஞ்ச மகிழ்ந்த நெடு)

நெஞ்ச மகிழ்ந்த நெடுந்தகை சொல்லால்
     மஞ்சன மாமலர் மற்றுள முற்றும்
          எஞ்சலி லாவகை ஏந்தி அவைக்கண்
               அஞ்சமும் அஞ்ச வருஞ்சசி வந்தாள். ......    240

(அன்னதொர் காலை)

அன்னதொர் காலையில் அந்தர நாதன்
     பன்னிரு மொய்ம்பு படைத்திடு புத்தேள்
          முன்னர் இருந்து முறைப்பட அன்னான்
               பொன்னடி பூசை புரிந்திட லுற்றான். ......    241

(சொல்லரு நாணொடு)

சொல்லரு நாணொடு தோகை மடந்தை
     நல்லதொர் கன்னல் நறும்புனல் உய்ப்ப
          எல்லவ ரும்புகழ் இந்திரன் ஐயன்
               மெல்லடி பற்றி விளக்கினன் அம்மா. ......    242

(செம்மல் பதங்கள்)

செம்மல் பதங்கள் செழும்புனல் ஆட்டிக்
     கைம்மலி யுங்கள பந்தனை யூட்டி
          அம்மலர் சூட்டி அகிற்புகை காட்டி
               நெய்ம்மலி பூஞ்சுடர் நீட்டினன் அன்றே. ......    243

(இவ்வகை பூசை)

இவ்வகை பூசை இயற்று தலோடும்
     அவ்வயி ராணி அயிற்படை யோன்றாள்
          செவ்விதின் ஆட்டிய தீர்த்திகை தன்னைக்
               கைவகை யேந்தியொர் காப்பிடை உய்த்தாள். ......    244

(அன்னுழி இந்திரன்)

அன்னுழி இந்திரன் ஆறுமு கேசன்
     தன்னொரு கையிடை தந்தியை நல்கி
          நின்னடி யேன்இவண் நேர்ந்தனன் என்னாக்
               கன்னல் உமிழ்ந்த கடிப்புனல் உய்த்தான். ......    245

(மருத்துவன் மாமறை)

மருத்துவன் மாமறை மந்திர நீரால்
     ஒருத்தி பொருட்டினில் ஒண்புனல் உய்ப்பக்
          கரத்திடை ஏற்றன னால்கழல் சேர்ந்தார்க்
               கருத்திகொள் முத்தியும் ஆக்கமும் ஈவோன். ......    246

(செங்கம லத்திறை)

செங்கம லத்திறை சிந்தையின் ஆற்றி
     அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட
          மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து
               நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான். ......    247

(மாவொடு வாழை)

மாவொடு வாழை வருக்கைகொள் பைங்காய்
     தீவிய கன்னல் செறிந்திடு செந்தேன்
          ஆவருள் பாலிவை அண்டர்கள் செம்மல்
               மூவிரு மாமுக னைநுகர் வித்தான். ......    248

(வார்த்தொகை சூழ்)

வார்த்தொகை சூழ்தரு மத்தளி தக்கை
     பேர்த்த வலம்புரி பேரி கலித்த
          ஆர்த்தனர் வீரர் அருங்கண நாதர்
               தீர்த்தனை வந்தனை செய்து களித்தார். ......    249

(தண்டுள வண்ணல்)

தண்டுள வண்ணல் சரோருக மேலோன்
     எண்டிசை பாலகர் இந்திரன் என்போன்
          அண்டர்கள் ஏனையர் ஆங்கவர் கோலங்
               கண்டு சிறந்தது கட்புல மென்றார். ......    250

(ஆயது போழ்தினில்)

ஆயது போழ்தினில் அம்புய முற்றோன்
     காயெரி தந்து கலப்பைகள் கூவித்
          தூயம ணம்புரி தொன்முறை வேள்வி
               நாயக னைக்கொடு நன்றுசெய் வித்தான். ......    251

(உலகருள் காரணன்)

உலகருள் காரணன் ஒண்ணுத லோடும்
     வலமுறை யாக வயங்கனல் சூழ்ந்து
          சிலையிடை யன்னவள் சீறடி தந்தான்
               மலரயன் உச்சியின் மேலடி வைத்தான். ......    252

(மாலினி காளிகள்)

மாலினி காளிகள் மாமல ராட்டி
     பாலின் நிறத்தி பராயினர் சூழச்
          சாலினி மங்கலை தன்னொடு கண்டான்
               வேலினின் மாவினை வீழ எறிந்தோன். ......    253

(இவ்வகை மன்றல்)

இவ்வகை மன்றல் இயற்றிய பின்னைத்
     தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்
          அவ்வை யொடத்தனை அன்பொடு சூழ்ந்து
               வெவ்விதின் மும்முறை சேவடி தாழ்ந்தான். ......    254

வேறு

(அடித்த லத்தில்வீழ்)

அடித்த லத்தில்வீழ் மக்களை இருவரும் ஆர்வத்
     தெடுத்த ணைத்தருள் செய்துதம் பாங்கரில் இருத்தி
          முடித்த லத்தினில் உயிர்த்துமக் கெம்முறு முதன்மை
               கொடுத்தும் என்றனர் உவகையால் மிக்ககொள் கையினார். ......    255

(மலைம டந்தையும்)

மலைம டந்தையும் இறைவனும் மைந்தற்கு மகட்குந்
     தலைமை செய்தருள் புரிதலுஞ் சாலையுள் இருந்த
          அலர வன்முதல் அமரரும் முனிவரும் அணங்கின்
               குலம டங்கலும் அவரடி முடிமிசைக் கொண்டார். ......    256

(அறுமு கன்றனை)

அறுமு கன்றனை அணங்கினை அவையுளோர் எவரும்
     முறையில் வந்தனை செய்தலும் முழுதருள் புரிந்து
          கறைவி ளங்கிய கண்டனுங் கவுரியுங் கடிதின்
               மறைத லுற்றனர் பரிசனந் தன்னொடு மன்னோ. ......    257

(மறைந்த காலையில்)

மறைந்த காலையில் விம்மித ராய்மணச் சாலை
     உறைந்த தேவரும் முனிவரும் உயிர்களுக் குயிராய்
          நிறைந்த மேலையோர் நிலைமையை நினைந்துதம் வாயால்
               அறைந்து கைதொழு தவர்பெயர் எடுத்தெடுத் தார்த்தார். ......    258

(வரைப டைத்தவர்)

வரைப டைத்தவர் மறைந்துழி வானவர் பலரும்
     நிரைப டைத்துள முனிவருங் கவன்றது நீத்தார்
          திரைப டைத்துள ஆழ்கடற் பட்டுளோர் சிறந்த
               கரைப டைத்தென அணங்கொடு குமரனைக் கண்டு. ......    259

(உமையும் ஈசனும்)

உமையும் ஈசனும் இருந்திடு பீடிகை உம்பர்க்
     குமர நாயகன் தெய்வதக் களிற்றொடுங் கூடி
          அமர அன்னது காண்டலும் மகிழ்சிறந் தன்னார்
               கமல மெல்லடி தொழுதனர் வழுத்தினர் களிப்பால். ......    260

(இனைய காலையில்)

இனைய காலையில் அரியணைப் பீடநின் றிழியா
     அனைவ ருந்தொழு துடன்வர ஆறுமா முகத்துப்
          புனித நாயகன் மங்கல இசையொடும் போந்து
               தனது கோயிலுட் புக்கனன் இறைவியுந் தானும். ......    261

(வேலை யன்னதில்)

வேலை யன்னதில் குமரவேள் வேள்விநா யகற்கு
     மால யன்முதல் அமரர்க்கும் மற்றுளார் தமக்கும்
          ஏல வேவிடை தந்துதன் பரிசனம் எவையும்
               ஆல யந்தனிற் கடைமுறை போற்றுமா றளித்தான். ......    262

(இன்ன தன்மைய தாக)

இன்ன தன்மைய தாகவே எம்மையீன் றெடுத்த
     அன்னை தன்னுடன் அறுமுகன் உறையுளின் அடைந்து
          பொன்னின் மஞ்சமேற் படுத்துமெல் லமளியிற்*5 புவனம்
               மன்னு யிர்த்தொகை யுய்ந்திட முயங்கிவை கினனால். ......    263

(சேணு தித்திடு)

சேணு தித்திடு தெய்வதக் களிற்றினைச் செவ்வேள்
     நாணி னிற்கட்டி நகரிடைத் தந்துநற் கலன்கள்
          பூணு தற்றுறும் அங்குசங் கைக்கொடு புயமாந்
               தூணு றப்பிணித் தணைத்தனன் அருளெனுந் தொடரால். ......    264

(மருந்து போல்மொழி)

மருந்து போல்மொழிக் குமரியுங் குமரனும் மணந்தாங்
     கிருந்த வெல்லையில் விரிஞ்சனும் மாலும் ஏனையரும்
          விரைந்து தத்தமக் கியன்றதொல் லிருக்கையின் மேவப்
               புரந்த ரன்பரி சனரொடுந் தன்மனை புக்கான். ......    265

(முகிலு யர்த்தவன்)

முகிலு யர்த்தவன் முசுகுந்த னேமுதல் உள்ள
     அகில மன்னர்க்குந் தேனுவின் பலபயன் அருத்தித்
          துகிலும் ஆரமும் அணிகளும் இருநிதித் தொகையும்
               விகல மின்றியே கொடுத்தனன் யாரையும் விடுத்தான். ......    266

(எல்லை யன்னதின்)

எல்லை யன்னதின் முசுகுந்த னாதியாம் இறைவர்
     கல்ல கந்தனில் இழிந்துதஞ் சேனையின் கடலை
          ஒல்லை கூடியே வேறுபல் புலந்தொறும் ஒருவித்
               தொல்லை யூர்புகுந் திருந்தனர் வீடுறுந் தொடர்பால். ......    267

(மன்னர் யாவரும்)

மன்னர் யாவரும் விடைகொடு போதலும் மகவான்
     தன்ன தாகிய கடிமனைக் கிழத்தியுந் தானும்
          இன்னல் தீர்தரு போகம தாற்றினன் இருந்தான்
               அன்ன பான்மையிற் சில்பகல் அகன்றன அன்றே. ......    268

ஆகத் திருவிருத்தம் - 8160




*1. ஓது - உவமவுருபு.

*2. செகில் - தோள்மேல்.

*3. கரிசனம் - யானைக்கோடு.

*4. (பா-ம்) இடையிடை.

*5. "அவனன்றி ஓரணுவும் அசையாது" என்னும் பழமொழி இங்கு உன்னற்பாலது.



previous padalam   2 - தெய்வயானையம்மை திருமணப் படலம்   next padalamDheivayAnaiyammai thirumaNap padalam

previous kandam   5 - தேவ காண்டம்   next kandam5 - dhEva kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]