Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   12 - சிங்கமுகாசுரன் வதைப் படலம்   next padalamSingamugAsuran vadhaip padalam

Ms Revathi Sankaran (7.07mb)
(1 - 79)



Ms Revathi Sankaran (7.87mb)
(80 - 160)



Ms Revathi Sankaran (8.95mb)
(161 - 240)



Ms Revathi Sankaran (8.78mb)
(241 - 320)



Ms Revathi Sankaran (8.31mb)
(321 - 400)



Ms Revathi Sankaran (7.40mb)
(401 - 475)




(ஆறாநாள் சிங்கமுகாசுரன் வதை நிகழ்ந்ததாகும்)

(என்னலும் ஒற்றர்)

என்னலும் ஒற்றர் கேளா இறைவனை இறைஞ்சி ஏகி
     உன்னுறு நினைப்பின் முந்தி உத்தரத் தளக்கர் நண்ணி
          மன்னகர் புகுந்து ஞெள்ளல் கடந்துமந் திரத்துட் புக்குச்
               சென்னியா யிரங்கொண் டுள்ள சிங்கமா முகவற் கண்டார். ......    1

(களித்தனர் மகிழ்ந்து)

களித்தனர் மகிழ்ந்து தூதர் கான்முறை வணங்கி நிற்ப
     அளித்திடும் அரசின் வைகும் அரிமுகன் வந்த தென்னை
          கிளத்திடு வீர்கள் என்னக் கேடிலா அவுணர் மேலோன்
               விளித்தனன் ஐய நின்னை விரைந்தனை வருக வென்றார். ......    2

வேறு

(சரத்தினுங் கடியவர்)

சரத்தினுங் கடியவர் இனைய சாற்றலும்
     அரித்திறல் முகத்தவன் வினவி ஆயிடை
          விருத்தமுண் டேலது விளம்பு வீரெனா
               உரைத்தனன் நன்றென ஒற்றர் கூறுவார். ......    3

(நும்பியை வரையொடு)

நும்பியை வரையொடு நுதிகொள் வேலினால்
     அம்புவி வரைப்பில்வந் தட்ட கந்தவேள்
          நம்பதி முன்னவன் நகர்வந் தெய்தினான்
               செம்பது மன்முதல் தேவர் சூழவே. ......    4

(வந்திடும் எல்லை)

வந்திடும் எல்லைபோய் மலைந்து பைப்பயப்
     புந்திகொள் அமைச்சருஞ் சிறாரும் பொன்றினார்
          உய்ந்தனன் இரணியன் உததி ஓடினான்
               எந்தையங் கிருந்தனன் புதுமை ஈதென்றார். ......    5

(தொழுந்துணைக் கையுடை)

தொழுந்துணைக் கையுடைத் தூதர் இன்னணம்
     மொழிந்தது வினவலும் முனிவும் மானமும்
          அழுந்திடு துயரமும் ஆகம் போழ்ந்திட
               எழுந்தனன் அவுணரோ டேகல் மேயினான். ......    6

(முன்புறு கடையுறா)

முன்புறு கடையுறா மொய்த்த தூதரை
     என்பெருஞ் சேனையைக் கொணர்திர் ஈண்டெனத்
          தென்புலக் கோமகன் ஒற்றிற் செப்பலும்
               மன்பெருந் தானைகள் வல்லை வந்தவே. ......    7

(தூசிகொள் நாற்படை)

தூசிகொள் நாற்படை துவன்றிச் சேர்தலும்
     ஆசுறும் அரிமுகத் தண்ணல் கண்ணுறீஇப்
          பாசன மன்னவர் பாங்கர் சுற்றிடத்
               தேசுடை மணிநெடுந் தேரொன் றேறினான். ......    8

(தாரொலி செய்தன)

தாரொலி செய்தன தாள்வ யப்பரி
     பேரொலி செய்தன பிறங்கு பூட்கைசேர்
          காரொலி செய்தன கண்டை ஆர்த்தன
               தேரொலி செய்தன தெழித்த சில்லியே. ......    9

(முரட்டுடி சல்லிகை)

முரட்டுடி சல்லிகை முரசங் காகளம்
     உருட்டுறு சுரிமுகம் உடுக்கை துந்துபி
          திரட்டுறு தண்ணுமை திமிலை யாதிகள்
               இரட்டிய கேதனம் எங்கும் ஈண்டிற்றே. ......    10

(தழங்குரன் மால்கரி)

தழங்குரன் மால்கரி புரவி தானவர்
     அழுங்குறு தேர்நிரை அனிகம் வானமே
          வழங்குறு நெறியதா வலிதிற் சென்றன
               முழங்கில பெயர்கில முகில்கள் அஞ்சியே. ......    11

(ஏயிது தன்மையின்)

ஏயிது தன்மையின் ஈண்டு தானைகள்
     பாயின சென்றிடப் பரிதி போலொளிர்
          ஆயிர மவுலியன் அவுணர் நாயகன்
               சேயுயர் விசும்பினில் எழுந்து சென்றனன். ......    12

(கன்னலொன் றளவையில்)

கன்னலொன் றளவையில் ககனத் தாற்றினால்
     சென்னிகள் பலவுடைச் சீய மாமுகன்
          மன்னவன் உறைதரு மகேந்தி ரப்புரந்
               துன்னினன் வெருவியே சுரர்கள் ஓடவே. ......    13

(அடைத்தலை நீங்கிய)

அடைத்தலை நீங்கிய அம்பொற் கோநகர்க்
     கடைத்தலை வந்தனன் கனகத் தேரொரீஇப்
          படைத்தலை மன்னவர் பரவ உள்புகாக்
               கிடைத்தலை மேயினன் கெழுமு சூரவை. ......    14

(அரசியல் புரிந்திடும்)

அரசியல் புரிந்திடும் அவையை நண்ணிய
     முரணுறு சிங்கமா முகத்தன் முன்னவன்
          திருவடி மலர்களில் சென்னி தீண்டுறப்
               பரிவொடு வணங்கினன் தொழுத பாணியான். ......    15

(வணங்கிய தம்பியை)

வணங்கிய தம்பியை மலர்க்கை தொட்டெடா
     இணங்கிய மார்புறுத் திறுகப் புல்லலும்
          நிணங்கவர் வேலினாய் நினது செம்முகம்
               உணங்கிய துற்றதென் உரைத்தியால் என்றான். ......    16

(என்னலும் அவுணர்)

என்னலும் அவுணர்கோன் இளைய வன்றனை
     முன்னுற இருத்தியே முரணின் மேலையோய்
          என்னிடை யுற்றன இசைப்பன் கேளெனா
               அன்னவன் உணர்வகை அறைதல் மேயினான். ......    17

(அன்றுநீ போந்தபின்)

அன்றுநீ போந்தபின் அயில்கொள் வேலினாற்
     குன்றினை எறிந்திடு குமரன் என்பவன்
          தன்றுணைச் சேனையுந் தானும் இந்நகர்
               சென்றனன் பாசறை சேர்ந்து வைகினான். ......    18

(மற்றவன் சேனைகள்)

மற்றவன் சேனைகள் மலைய மைந்தர்கள்
     இற்றனர் அமைச்சனும் இறந்து போயினான்
          அற்றன தானையும் ஆட கப்பெயர்
               உற்றவன் இரிந்தனன் உததி ஓடினான். ......    19

(பொங்குளை அரிமுக)

பொங்குளை அரிமுக புகுதி இன்னதால்
     சங்கையில் படையொடு சமரின் ஏகியே
          அங்கவன் வலியினை யடர்த்து மீளுதி
               இங்குனை விளித்தனன் இதனுக்கா வென்றான். ......    20

(எஞ்சலில் சூரன்மற்)

எஞ்சலில் சூரன்மற் றிதனைச் செப்பலும்
     வெஞ்சின அரிமுக வீரன் தேர்வுறா
          நெஞ்சினில் ஆகுலம் நிகழ முன்னவன்
               செஞ்சரண் வீழ்ந்துநின் றிதனைச் செப்புவான். ......    21

(மல்லலம் புயமுடை)

மல்லலம் புயமுடை மைந்தர் தங்களைத்
     தொல்லையில் அமைச்சரைச் சுற்றத் தோர்களை
          எல்லவர் தம்மையும் இழந்து வைகினாய்
               புல்லிது புல்லிதுன் புந்தி எண்ணமே. ......    22

(மூலமும் முடிவுமில்)

மூலமும் முடிவுமில் லாத மூர்த்தியைப்
     பாலனென் றெண்ணினை படுவ தோர்ந்திலை
          ஆலம தானதே ஐய என்மொழி
               மேலையின் விதியையார் வெல்லும் நீரினார். ......    23

(சென்றிடு புனலினை)

சென்றிடு புனலினைச் சிறைசெய் தாவதென்
     இன்றினி ஏகியே எண்ண லாரெனத்
          துன்றிய குழுவெலாந் துடைத்து நுங்கியே
               நின்றிடு கின்றனன் நீயுங் காண்டியால். ......    24

(கந்தனாம் ஒருவனை)

கந்தனாம் ஒருவனைக் கடக்கப் பெற்றிடின்
     வந்துனைக் காண்பனால் மற்ற தில்லையேல்
          அந்தம தடைவரால் ஆரும் ஐயநீ
               புந்தியின் நினைந்தன புரிதியா லென்றான். ......    25

(என்றுகை தொழுது)

என்றுகை தொழுதுபின் இறையும் அவ்விடை
     நின்றிலன் விடைகொடு நிருதன் ஏகியே
          துன்றிய தானைகள் சூழ மற்றவண்
               ஒன்றுதன் மந்திரத் துறையுள் எய்தினான். ......    26

(போனக மேருவும்)

போனக மேருவும் புடையிற் சூழ்வரும்
     ஊனெனும் வரைகளும் உலப்பில் சோரிநீர்
          தேனொடு பால்தயிர் தேற லாதிகள்
               ஆனபல் கடல்களும் அயிறல் மேயினான். ......    27

(வாசநீர் தோய்ந்திடு)

வாசநீர் தோய்ந்திடு நரந்த மான்மதம்
     பூசினன் பாளித மிசைபு னைந்தனன்
          வீசுபன் மதுமலர் மிலைச்சு கின்றனன்
               காசினி வரைப்பெலாங் கந்தஞ் சூழ்தர. ......    28

(களைந்தனன் பழை)

களைந்தனன் பழையன கவினப் பூண்டனன்
     வளந்தரு கின்றதோர் யாணர் மாண்கலன்
          மிளிர்ந்திடு தினகரர் புணரி வீழ்ந்துழி
               ஒளிர்ந்துடன் பலகதிர் உதிக்கு மாறுபோல். ......    29

(படிதவிர் பருப்பதம்)

படிதவிர் பருப்பதம் பத்து நூற்றினின்
     முடிதொறும் இளம்பிறை முளைத்த வாறுபோல்
          நெடுமைகொள் அரிமுகன் நெற்றி தோறும்வெண்
               பொடிதனை அணிந்தனன் புனித மாயினான். ......    30

(தண்டமும் நேமி)

தண்டமும் நேமியுஞ் சங்க ரன்தரக்
     கொண்டதோர் சூலமுங் குலிச மேமுதல்
          அண்டர்தம் படைகளும் அன்னை ஈந்திடு
               திண்டிறற் பாசமுஞ் செங்கை பற்றினான். ......    31

(கைத்தலம் யாவை)

கைத்தலம் யாவையுங் கதிர்கள் கான்றிட
     எத்திறப் படைகளும் பின்னர் ஏந்துறாப்
          பத்துநூ றாயிரம் பரிகள் பூண்டதோர்
               சித்திர மணிநெடுந் தேரில் ஏறினான். ......    32

(தந்திரத் தலைவரு)

தந்திரத் தலைவருந் தனயர் யாவருஞ்
     சிந்துரத் தொகுதியுந் தேரும் மாக்களும்
          இந்திரப் பெருவளம் யாவுஞ் சூழ்தர
               மந்திரத் திருநகர் வாயில் எய்தினான். ......    33

வேறு

(மேற்படு கேசரி)

மேற்படு கேசரி வெம்முக வீரன்
     மாற்படு கோநகர் வாய்தலின் மேவ
          நாற்படை யானவும் நண்ணின வெம்போர்
               ஏற்புடை வெள்ளமி லக்கம தன்றே. ......    34

(வானவர் ஏற்றமும்)

வானவர் ஏற்றமும் மண்ணவர்*1 வாழ்வும்
     தானவர் இன்னலும் நீக்கிய தக்கோர்
          ஊனமில் செய்கையர் ஒள்ளெரி உண்ணுங்
               கானமெ னப்பொலி காட்சியின் மிக்கோர். ......    35

(கார்பயில் கின்ற)

கார்பயில் கின்ற கருத்தினர் காமன்
     கூர்பயில் கின்ற கொடுங்கணை யுண்ணுந்
          தார்பயில் தோளர் சமர்த்தொழில் செய்தே
               மார்பக மன்றி வடுப்புனை யாதோர். ......    36

(எண்ணமில் தொல்லு)

எண்ணமில் தொல்லுயிர் யாவும் அலைக்கும்
     அண்ணலை அன்னவர் ஆரழல் காலுங்
          கண்ணினர் வார்கழல் கட்டிய தாளார்
               விண்ணினை யேனும் விழுங்கவும் வல்லோர். ......    37

(நேருதிர் என்றெதிர்)

நேருதிர் என்றெதிர் நேர்ந்தவ ராகங்
     கூர்நுதி வேல்கொடு கூறுப டுத்துப்
          பேருதி ரந்தசை பெய்துநி ரம்பா
               வாரிதி யென்ன வகுத்திடும் வாயார். ......    38

(தண்ட மழுப்படை)

தண்ட மழுப்படை தட்டை முசுண்டி
     விண்டுயர் கொல்சிலை வேலெழு நாஞ்சில்
          எண்டகு பல்படை யாவையும் ஏந்தி
               அண்டமு டைந்த திரும்படி ஆர்த்தார். ......    39

(அந்தர மாமுகி)

அந்தர மாமுகி லாமென ஆர்க்குந்
     தந்திகள் வீழ்த்துறு தானம தோடி
          உந்திக ளாயுல வைக்கதி கொண்டு
               முந்திய தூசியின் முன்னுறு கின்ற. ......    40

(வேலைய தன்னவி)

வேலைய தன்னவி லாழிய வன்னிக்
     கோலம தான குரங்கொள் பதத்த
          கால்விசை கொண்டன கந்துக ராசி
               மாலுறு பூழியின் வான்புவி செய்வ. ......    41

(சூழ்வரு தேரிடை)

சூழ்வரு தேரிடை துன்றுப தாகைக்
     காழ்வரு கோனுதி கார்முகி லுந்தி
          போழ்வன வாடுறு பூந்துகில் அங்கண்
               ஆழ்வரு பூழைய டைத்தன அன்றே. ......    42

(வரங்கெழு சூர்துணை)

வரங்கெழு சூர்துணை மாய்ந்திடும் என்றே
     உரங்கொடு முன்னம் உணர்ந்தன கொல்லோ
          துரங்கம ழுங்கின தோல்புலம் புற்ற
               இரங்கின பல்லியம் ஏங்கின தேர்கள். ......    43

(கட்புலன் நாசிக)

கட்புலன் நாசிக வின்செவி துன்னப்
     பட்டன பூழிப தாகையும் அற்றே
          ஒட்டலர் விண்செல ஒட்டல ரென்னா
               விட்டனர் தூக்கம் விரைந்தனர் வெய்யோர். ......    44

(தேரினர் ஓர்பலர்)

தேரினர் ஓர்பலர் திண்டிறல் வாசி
     ஊருநர் ஓர்பலர் ஓங்கிய வேழம்
          பேருநர் ஓர்பலர் பேரடல் கொண்டு
               பாரினர் ஓர்பல ராற்படை மள்ளர். ......    45

(துங்கமில் சூர்துணை)

துங்கமில் சூர்துணை தொல்படை மன்னன்
     அங்கவன் என்ன அரித்தலை கொண்டான்
          மங்கல மாயவள் மாமகன் ஆடற்
               சிங்கன் எனப்படு சீர்ப்பெய ருள்ளான். ......    46

(போர்ப்படை கொண்டு)

போர்ப்படை கொண்டு புறம்படர் கின்ற
     தேர்ப்படை காற்படை சிந்துரம் வாசித்
          தார்ப்படை கொண்டு தடங்கட லென்ன
               ஆர்ப்படை நெற்றிய னாகி அகன்றான். ......    47

(நீள்வயிர் பேரி)

நீள்வயிர் பேரி நிசாளம் உடுக்கை
     தாளம் வழிப்படு தண்ணுமை தக்கை
          காளம் வலம்புரி கைத்துடி யாதி
               யாளி முகன்முன் அளப்பில ஆர்ப்ப. ......    48

(ஆகிய தால்அமர்)

ஆகிய தால்அமர் ஐதென யாமும்
     ஏகுதும் உண்டி எமக்குள தென்னா
          மாக நெருங்கின வன்கழு கீட்டங்
               காகம் வருந்திய காளிகள் கூளி. ......    49

வேறு

(ஆழியை யொத்து)

ஆழியை யொத்துய ரம்பொற் றேர்களில்
     ஆழியை உண்டெழு புயல்வந் தார்த்தன
          ஆழிய நிலத்துருண் டழுதி யோவெனா
               ஆழியை வினவியே அமர்தல் போலுமால். ......    50

(இவ்வகை சேனைகள்)

இவ்வகை சேனைகள் யாவும் ஏழ்பெரும்
     பவ்வமும் ஒருவழி படர்ந்த தேயென
          அவ்வயிற் போந்திட அமரை முன்னியே
               தெவ்வடும் அரிமுகன் சேறல் மேயினான். ......    51

வேறு

(சேரலர் ஆவிகொள்)

சேரலர் ஆவிகொள் சீயமு கத்தோன்
     பேரனி கத்தொடு பேர்ந்திடல் காணூஉ
          வாரிச மேலவன் வாசவன் வானோர்
               ஆரும்வெ ரீஇயினர் அச்சம் அடைந்தார். ......    52

(செய்ய கரத்தினர்)

செய்ய கரத்தினர் சிந்தை வியர்த்தே
     மெய்யல சுற்றிட மேற்றுகில் சோர
          ஐயுறும் எல்லையில் ஆகம் இரைப்ப
               ஒய்யென யாவரும் ஓடினர் போனார். ......    53

(ஆவதொர் பாசறை)

ஆவதொர் பாசறை ஆலய வைப்பில்
     தேவர்கள் ஈண்டுறு சிற்சபை தன்னில்
          மேவரு வேற்படை விண்ணவன் முன்போய்ப்
               பூவடி தாழ்ந்து புகன்றிடு கின்றார். ......    54

(ஆயிர மான அகன்)

ஆயிர மான அகன்றலை கொண்டான்
     ஆயிரம் ஆயிரம் அங்கை படைத்தான்
          ஆயிர மேற்படும் அண்டமும் வென்றான்
               ஆயிரம் யோசனை யாவுயர் மெய்யான். ......    55

(நெஞ்சில் எவர்க்கும்)

நெஞ்சில் எவர்க்கும் நினைப்பரி தாகும்
     வஞ்சமும் மாயையின் வன்மையும் வல்லோன்
          எஞ்சலில் வன்மையன் இவ்வுல கெல்லாந்
               துஞ்சினும் ஆருயிர் துஞ்சுத லில்லோன். ......    56

(ஓங்கல் இனங்கள்)

ஓங்கல் இனங்கள் உவாத்தொகை நாகம்
     பாங்கம ராமை பரித்திடல் மாற்றி
          ஈங்குல கங்கள் எவற்றையும் ஓர்நாள்
               ஆங்கொரு செங்கையில் ஆற்றிய தொல்லோன். ......    57

(பாந்தள் புனைந்த)

பாந்தள் புனைந்த பராபர மூர்த்தி
     ஈந்தது மாற்றலர் எல்லையி லோரைக்
          காய்ந்துயி ருண்டு கறைப்பெரு நீத்தந்
               தோய்ந்திடு கின்றதொர் சூலம் எடுத்தான். ......    58

(எண்டிசை மேதினி)

எண்டிசை மேதினி ஏழ்பில மேனை
     விண்டல மன்னதன் மேற்படும் எல்லை
          அண்டம னைத்தும் ஒரங்கையில் வாரி
               உண்டுமிழ் கின்றதொர் வன்மையும் உள்ளோன். ......    59

(தூக்கொரு பால்வலி)

தூக்கொரு பால்வலி தூங்குற ஓர்பால்
     மேக்குயர் கோலென மேதினிப் பாங்கர்
          தேக்கெறி வேலைகள் சிந்தி விசும்பில்
               தாக்குற வேநடை தந்திடு தாளான். ......    60

(தண்ட மிதென்று)

தண்ட மிதென்று தருக்கின் எடுத்தே
     அண்ட கடாகம் அதன்புடை மோத
          நுண்டுகள் ஆதலும் நொய்திது வென்றே
               விண்டொடு மேருவை மீளவும் வைத்தோன். ......    61

(மாசறு நேமி வடாது)

மாசறு நேமி வடாது புலத்தின்
     ஆசுரம் என்னும் அகன்பதி வாழ்வோன்
          வீசிடின் எவ்வுல கத்தையும் வீக்கும்
               பாசம் இரண்டு பரித்திடு கையான். ......    62

(துங்கம தாகிய சூர்)

துங்கம தாகிய சூர்துணை யானோன்
     அங்கவ னிற்பெரி தாற்றல் படைத்தோன்
          நங்களின் நங்களை நாளும் நலித்தோன்
               சிங்கமு காசுர னாகிய தீயோன். ......    63

(அந்தமி லாவனி)

அந்தமி லாவனி கக்கடல் சூழ
     வெந்திற லோடு வியன்சமர் ஆற்ற
          வந்தனன் மற்றவன் மன்னுயிர் மாற்றி
               எந்தை அளித்தருள் எங்களை யென்றார். ......    64

(அன்னதை ஓர்தலும்)

அன்னதை ஓர்தலும் ஆறு முகேசன்
     தன்னயல் நின்றிடு தாவறும் ஓதை
          மன்னனை நோக்கிநம் வாலிய தேரை
               முன்னிவண் உய்க்குதி யென்று மொழிந்தான். ......    65

(தீட்டிய வேற்படை)

தீட்டிய வேற்படை செங்கை படைத்தோன்
     மாட்டுற நின்ற வயம்புனை மொய்ம்பன்
          கேட்டனன் எந்தை கெழீஇயின முன்போய்த்
               தாட்டுணை வீழ்ந்திது சாற்றுதல் உற்றான். ......    66

(தந்நிகர் அற்ற சயம்)

தந்நிகர் அற்ற சயம்புனை வீரர்
     முன்னுறு தானைகள் மொய்த்திட யான்போய்
          ஒன்னலன் ஆவியை உண்டிவண் மீள்வன்
               என்னை விடுக்குதி எந்தையை யென்றான். ......    67

(ஆண்டகை மூர)

ஆண்டகை மூரலொ டம்மொழி கேளா
     மாண்டிட வந்திடு மாற்றலன் வெம்போர்
          வேண்டினை நன்று விடுத்தனம் முன்நீ
               ஈண்டுள தானையொ டேகுதி யென்றான். ......    68

(என்றலும் வீரன்)

என்றலும் வீரன் எழுந்துகை கூப்பி
     வென்றிகொள் சாரதர் மெய்க்கிளை சூழ
          மன்றம கன்று மணிக்கடை நண்ணி
               ஒன்றுதன் மாளிகை யூடு புகுந்தான். ......    69

(நேர்முக மான)

நேர்முக மான நிசாசரர் தம்மேல்
     கூர்முக வாளி குணிப்பில கோடி
          ஓர்முக மாயுல வாதுமிழ் நீரால்
               கார்முக மாயதொர் கார்முகங் கொண்டான். ......    70

(போதுறழ் அங்குலி)

போதுறழ் அங்குலி புட்டில்செ றித்தான்
     கோதைய தொன்று கொடுங்கை பிணித்தான்
          ஏதமில் சாலிகை யாக்கையின் இட்டான்
               மேதகு தூணி வெரிந்புடை யாத்தான். ......    71

(மிக்குறு தெய்வ)

மிக்குறு தெய்வ வியன்படை முற்றும்
     தொக்குற வேகொடு தும்பை தரித்துச்
          செக்கரின் விஞ்சிய செய்யதொர் வையம்
               புக்கனன் வல்லை புறங்கடை வந்தான். ......    72

(எண்மர் இலக்கர்)

எண்மர் இலக்கர்கள் இச்செயல் காணா
     வண்மை தரும்படை மாட்சிமை எய்தித்
          திண்மை யுறுந்தம தேர்களி லேறி
               அண்மினர் வீரனை ஆர்ப்பொடு சூழ்ந்தார். ......    73

(மேனிக ழாயிர)

மேனிக ழாயிர வெள்ளம தாகுஞ்
     சேனை யெழுந்து செறிந்து பிறங்கல்
          வானுயர் தாரு வயப்படை பற்றித்
               தானவர் கேசரி தன்புடை வந்த. ......    74

(எறிந்தன பல்லி)

எறிந்தன பல்லியம் ஈண்டிய தானை
     செறிந்தன மாண்கொடி செற்றின பூழி
          அறந்தலை நின்றவன் அன்னது நோக்கிப்
               பறந்தலை ஒல்லை படர்ந்திட லுற்றான். ......    75

(ஆரும்வி யப்புறும்)

ஆரும்வி யப்புறும் ஆயிர வெள்ளம்
     பாரிடர் தானை படைக்கிறை யானோர்
          சாருறு கேளிர்கள் தன்னொடு செல்ல
               வீரன டைந்தனன் வெஞ்சமர் எல்லை. ......    76

(ஆனதொர் காலையில் ஆள)

ஆனதொர் காலையில் ஆளரி வெய்யோன்
     சேனையும் வந்து செறிந்தது பூதர்
          தானையும் அங்கெதிர் சார்ந்தது கங்கை
               வானதி சேர்தரும் வாரிதி யேபோல். ......    77

(கோடு புலம்பின)

கோடு புலம்பின கொக்கரை ஆர்த்த
     மோடுகொள் பேரி முழங்கின பீலிக்
          காடு தழங்கின கண்டை கலித்த
               ஆடுப தாகைகள் ஆர்த்தன அன்றே. ......    78

(தேரொலி செய்தன)

தேரொலி செய்தன திண்டிறல் மாவின்
     தாரொலி செய்தன தந்தியின் ஈட்டம்
          பேரொலி செய்த பெருங்கட லோடும்
               காரொலி செய்திடு காட்சிய தென்ன. ......    79

வேறு

(அந்த வேலையின் முரு)

அந்த வேலையின் முருகவேள் தானையோர் அணுகி
     முந்து வெஞ்சமர் முயன்றனர் அதுகண்டு முனிந்து
          சுந்த ரந்திகழ் சிங்கமா முகன்படைத் தொல்லோர்
               தந்தி தேர்பரி யணியொடும் போர்செயச் சார்ந்தார். ......    80

(தண்டம் ஓச்சினர்)

தண்டம் ஓச்சினர் கணிச்சிகள் ஓச்சினர் தடக்கைப்
     பிண்டி பாலங்கள் வீசினர் தோமரம் பெய்தார்
          கொண்ட லாமெனத் தனித்தனி வார்சிலை குனித்துத்
               துண்ட வெங்கணை துரந்தனர் தானவத் தொகையோர். ......    81

(விரைகள் வீசிய)

விரைகள் வீசிய மலர்த்தரு வீசிய விண்டோய்
     வரைகள் வீசிய தண்டெழு வீசிய மழுவின்
          நிரைகள் வீசிய நேமியின் நிரந்தபல் வளனும்
               திரைகள் வீசிய தாமெனப் பூதர்தஞ் சேனை. ......    82

(வரங்கள் சிந்தினர்)

வரங்கள் சிந்தினர் வன்மைகள் சிந்தினர் வயத்தாள்
     கரங்கள் சிந்தினர் புயமலை சிந்தினர் கலன்சேர்
          உரங்கள் சிந்தினர் மணிமுடி சிந்தினர் உருளுஞ்
               சிரங்கள் சிந்தினர் அவுணரும் பூதரிற் சிலரும். ......    83

(வருதி நீயென)

வருதி நீயெனத் தனித்தனி இகல்செயும் மறவோர்
     கருதி யேயடுங் களத்தினில் அவருடல் காலும்
          குருதி யோடியே எங்கணும் பரத்தலில் கொடுந்தேர்ப்
               பரிதி யோடிய குடதிசை நிகர்த்தது படியே. ......    84

(கொலைசெ றிந்திடும்)

கொலைசெ றிந்திடும் பூதரும் அவுணரும் கொடும்போர்
     நிலைசெ றிந்திடு களத்திடை நீடுசெந் நீரின்
          அலைசெ றிந்தவூன் செறிந்தன அடுகளே வரத்து
               மலைசெ றிந்தன செறிந்தன கழுகுடன் மண்ணை. ......    85

வேறு

(வெற்புறழ் தகுவர்)

வெற்புறழ் தகுவர் சேனை வெள்ளமுங் கணத்து ளாருந்
     தற்பமொ டெதிர்ந்திவ் வாறு சமர்புரிந் திட்ட எல்லை
          வற்புடன் அவுணன் தானை மள்ளர்வந் தடர்ப்ப மாய்ந்து
               முற்படு கின்ற தூசிப் பூதர்கள் முரிய லுற்றார். ......    86

(செல்லுறழ் பகுவாய்)

செல்லுறழ் பகுவாய் வீரர் சிதைந்துழிப் பூதர் தம்முட்
     கல்லுறழ் மொய்ம்பிற் சிங்கன் கனன்றொரு தண்ட மேந்திப்
          பல்லுறு தலைகள் சிந்தப் படிமிசை வீட்டிப் பானாள்
               அல்லுறு மதிபோல் நேரும் அவுணரை யடர்த்துச் சென்றான். ......    87

(அங்கவன் செல்லும்)

அங்கவன் செல்லும் வேலை அவுணரில் ஒருவன் நேமி
     சங்கொடு தரித்தோன் அன்னான் தசமுக னென்னும் பேரோன்
          எங்குநீ போதி நில்லென் றெதிருறச் சென்று வாகைச்
               செங்கைவார் சிலையைக் கோட்டித் திருந்துநாண் ஒலிசெய் திட்டான். ......    88

வேறு

(விட்டனன் மழையென)

விட்டனன் மழையென விசிகம் ஆங்கவை
     பட்டிடத் தண்டினாற் படியில் வீட்டியே
          அட்டுபூந் தாரினான் அடியொன் றாலவன்
               இட்டதோர் கவசமும் இறுத்து நீக்கவே. ......    89

(கூற்றுறழ் தசமுகன்)

கூற்றுறழ் தசமுகன் கொடியன் ஆவியை
     மாற்றுவன் இவணென வலிதின் ஓர்கதை
          ஆற்றலின் விடுத்தலும் அரியின் பேரினான்
               ஏற்றனன் மார்புதண் டிற்று வீழ்ந்ததே. ......    90

(வீண்டது நோக்கி)

வீண்டது நோக்கியே வீர வீரனும்
     ஈண்டிவ னேகொலென் றெண்ணி யாமினிக்
          காண்டகும் வல்லையேற் காத்தி யீதெனா
               ஆண்டொரு கணிச்சியை அவுணன் ஓச்சினான். ......    91

(மாலொடு கடவுளர்)

மாலொடு கடவுளர் மறுகத் தீயழற்
     காலொடு போந்திடுங் கடுவின் வெம்மைபோல்
          மேலுறு கணிச்சியை வீரன் செங்கையின்
               பாலுறு தண்டினாற் படியில் வீட்டினான். ......    92

(நீக்கினன் கணிச்சி)

நீக்கினன் கணிச்சியை நெடிய தோர்கதை
     போக்கினன் தன்னொடு போர்செய் கின்றவன்
          தாக்கணங் கமர்சிலை தன்னைச் சின்னமே
               ஆக்கினன் அவுணர்கள் அலக்கண் எய்தினார். ......    93

(சீலமில் தசமுகன்)

சீலமில் தசமுகன் செயிர்த்துக் காய்கனற்
     கோலம தாகிய குந்தம் ஒன்றினை
          ஆலம தெனவிட அரியின் பேரினான்
               மேலுற வருவதை விரைந்து நோக்கினான். ......    94

(பூங்கழல் புனைகழற்)

பூங்கழல் புனைகழற் பூத நாயகன்
     ஆங்கது காலைஓர் ஆழி மாப்படை
          ஓங்கிய பரிதிபோல் உருட்டி னானரோ
               பாங்குறு சாரதர் பலரும் போற்றவே. ......    95

(விடுத்திடு கின்ற)

விடுத்திடு கின்றதோர் வேலை யாழிபோய்ப்
     படுத்தது தசமுகப் பதகன் தண்டமொன்
          றெடுத்தது வீசலும் இமைப்பில் எய்தியே
               அடற்புனை கழலினான் ஆகத் துற்றதே. ......    96

(ஆகமேல் அடைதலும்)

ஆகமேல் அடைதலும் அரியின் பேரினான்
     சோகமேல் கொண்டுசெஞ் சோரி சோர்தர
          மாகமேற் செம்புனல் மாரி கான்றிடு
               மேகமே யாமென விளங்கி னானரோ. ......    97

(பரந்திழி குருதிநீர்)

பரந்திழி குருதிநீர் பருப்ப தத்திடைப்
     பிரிந்திடு நதியெனப் பெருக ஓடியே
          அருந்திறல் தசமுக னாகத் தோர்கையால்
               விரைந்தனன் புடைத்தலும் வீழ்ந்து பொன்றினான். ......    98

(ஐந்திரு தலையுடை)

ஐந்திரு தலையுடை அவுணன் மாய்தலுந்
     தந்திர அவுணர்தந் தானை யாவையுங்
          கந்தடு தோளுடைக் கணங்கள் மேற்செலா
               முந்துறு பேரமர் முயல்வ தாயினார். ......    99

(அவ்வழி இலக்கரில்)

அவ்வழி இலக்கரில் அநகன் என்பவன்
     மைவழி சிந்தையன் மடித்த வாயினன்
          கைவழி வில்லினன் கடியன் சேனையை
               எவ்வழி போதிரென் றெதிர்ந்து தாக்கினான். ......    100

(வெலற்கரும் வில்லு)

வெலற்கரும் வில்லுமிழ் வெங்கண் வாளியால்
     அலைக்குந ராகியே அடல்செய் மள்ளர்தந்
          தலைக்குவை சிந்தியே தரையில் வீட்டியே
               கலக்கினன் திரைக்கடல் கடைந்த மாலென. ......    101

(ஆடியல் தானையான்)

ஆடியல் தானையான் அநகன் என்பவன்
     சாடினன் திரிதலுந் தகுவர் யாவரும்
          ஓடினர் அன்னதை உருத்து நோக்கினான்
               பீடுறு துன்முகன் என்னும் பேரினான். ......    102

வேறு

(தன்முன் ஓடிய)

தன்முன் ஓடிய அவுணரை நோக்கிநீர் தளரேல்
     மின்மி னிக்குலங் கதிரினை வெல்லுமோ வெகுளின்
          என்முன் நிற்பரோ பூதர்கள் செருத்தொழில் இழந்தார்
               நின்மின் நின்மினென் றுரைக்கவும் இறையுநின் றிலரால். ......    103

(தானை பட்டன)

தானை பட்டன நோக்கினன் துன்முகன் தழல்மேல்
     ஆனெய் பட்டென முனிந்தனன் பூதர்கள் அந்தோ
          சேனை பட்டதென் றலமரக் குனித்தனன் சிலையைச்
               சோனை பட்டன வாமென வடிக்கணை சொரிந்தான். ......    104

(சொரிந்த காலையிற்)

சொரிந்த காலையிற் பூதரும் பேரமர் தொடங்கி
     விரிந்த வெற்பொடு தருக்களும் படைகளும் விடுப்ப
          எரிந்து போயின சிற்சில இற்றவுஞ் சிலவால்
               நெரிந்து போயின சிற்சில எதிரெதிர் நெருக்க. ......    105

(ஈறு செய்தில கணை)

ஈறு செய்தில கணைமழை இவரொடும் யானே
     மாறு கொள்வதுந் தனிமையில் அரிதென வலியோன்
          ஊறு சேர்தரு மாயையால் ஒவ்வொர்பூ தர்க்கும்
               நூறு நூறுருக் கொண்டுதாக் குற்றனன் நொடிப்பில். ......    106

(ஆய காலையில் துன்முக)

ஆய காலையில் துன்முகன் வடிவமும் அடருந்
     தீயெ னக்கிளர் சாரத ரொடுசெருச் செய்யும்
          ஏய கொற்றமும் நோக்கினன் விம்மினன் வெகுண்டான்
               மாயை கொல்லென உன்னினன் வாகையங் கதிரோன். ......    107

(மாற்று கின்றதெப் படை)

மாற்று கின்றதெப் படைக்கல மோவென மதியாத்
     தேற்று கின்றதோர் போதகப் பெரும்படை செலுத்தக்
          காற்றின் முன்னுறு பூளையின் உருவெலாங் கரப்பக்
               கூற்ற மன்னதோர் துன்முகன் ஒருவனாய்க் கொதித்தான். ......    108

(கொதித்த துன்முகன்)

கொதித்த துன்முகன் தன்பெருஞ் சிலையினைக் கோட்டி
     நுதித்த னிக்கணை ஆயிரம் ஒருதொடை நூக்க
          மதித்து வீரன்றன் ஒருபெருஞ் சிலையினை வாங்கிக்
               கதித்த நோன்கணை ஆயிரஞ் சிதறினன் கடிதில். ......    109

(ஆயி ரஞ்சரத் தாலவன்)

ஆயி ரஞ்சரத் தாலவன் விட்டகோல் அறுத்துத்
     தீய வன்தனிச் சிலையை யேழ் வாளியாற் சிந்தி
          மேய சாலிகை தன்னையோர் பகழியால் வீட்டிக்
               காயம் எங்கணும் அழுத்தினன் அளவைதீர் கணைகள். ......    110

வேறு

(அழுந்திடு வடிக்கணை)

அழுந்திடு வடிக்கணை யாகம் போழ்தலும்
     எழுந்திடு குருதிநீர் இரைத்துச் சென்றிடக்
          கொழுந்தழல் புரைவதோர் கொடிய துன்முகன்
               விழுந்தனன் மயங்கினன் விளிந்து ளானென. ......    111

(ஊறிய குருதியன்)

ஊறிய குருதியன் உறுகண் எய்துவான்
     தேறினன் ஒல்லையிற் செருவில் நேர்துமேல்
          ஈறினி வந்திடும் இரிந்திட் டுய்வதே
               ஆறென உன்னினன் அமருக் கஞ்சுவான். ......    112

(சிந்தையின் வழிபடல்)

சிந்தையின் வழிபடல் செய்து மாயையின்
     மந்திரம் ஒன்றினை மரபின் உன்னுறா
          எந்திரத் தேரினும் எழுந்து துன்முகன்
               அந்தரத் தாற்றினால் அருவில் போயினான். ......    113

(ஆயின காலையில்)

ஆயின காலையில் அடல்வெம் பூதரில்
     தீயினை முருக்குறுஞ் சீற்றத் தோர்சிலர்
          மாயையின் வலியினன் வஞ்சன் வல்லையிற்
               போயினன் பற்றுதும் போதுவீர் என்றார். ......    114

(ஆங்கது கேட்டிடும்)

ஆங்கது கேட்டிடும் ஆடல் வெய்யவன்
     ஈங்கிது தவிருதிர் இகலுக் கஞ்சியே
          நீங்கினன் ஒருவனை நெருக்கி ஆருயிர்
               வாங்குதல் புகழதோ வலியின் பாலதோ. ......    115

(ஓடினர் தம்மையும்)

ஓடினர் தம்மையும் உற்றுத் தாள்மலர்
     சூடினர் தம்மையும் தொழுத கையராய்
          வாடினர் தம்மையும் வலியி லோரையுஞ்
               சாடினர் அல்லரோ நவைக்கட் டங்குவார். ......    116

(வீரரை அல்லரை)

வீரரை அல்லரை வெகுள லீரெனப்
     பேரடல் வெய்யவன் பேச அன்னது
          காரிய மேயெனக் கருத்தில் உன்னியே
               சாரதர் தொடர்ந்திடுந் தன்மை நீங்கினார். ......    117

வேறு

(அந்நேர் காணா)

அந்நேர் காணா ஆளரி மாமுக அடல்வெய்யோன்
     இன்னே நந்தந் தானைகள் எல்லாம் இரிவாகும்
          பின்னே நிற்ற லாவதெ னென்னாப் பெயர்குற்றே
               முன்னே சென்றான் பூதரை நோக்கி முனிகின்றான். ......    118

(நந்தா ஆற்றற் சிங்க)

நந்தா ஆற்றற் சிங்கமு கத்தோன் அவன்நம்முன்
     வந்தான் யாமே மாற்றுதும் அன்னான் வலியென்னாக்
          கொந்தார் தாருச் சூழலும் வெற்புங் கொண்டேகி
               முந்தா நின்ற பூதர்கள் வெம்போர் முயல்கின்றார். ......    119

(மட்டார் தொங்கற்)

மட்டார் தொங்கற் சிங்கமு கன்மேல் மதிதோய்வான்
     எட்டா நின்ற வெற்புள யாவும் எறிகின்றார்
          விட்டார் தாருச் சூழல் கணிச்சி வீசுற்றார்
               தொட்டார் சூலந் தண்டெழு நாஞ்சில் சொரிகின்றார். ......    120

(சொரியுங் காலைத்)

சொரியுங் காலைத் தீயெழ நோக்கிச் சுடர்வேலோன்
     எரியுங் காலுங் கால வுயிர்ப்ப எதிர்செல்லாக்
          கரியுந் தீயும் பூழிய தாகுங் ககனத்தே
               திரியும் மீளும் மப்படை செய்யுஞ் செயலீதால். ......    121

(அன்னோ அன்னோ)

அன்னோ அன்னோ நம்படை எல்லாம் அடல்வீரன்
     முன்னோ செல்லா தீய வுயிர்ப்பின் முடிவாமால்
          பின்னே செய்வ தொன்றிலை யாம்பே ரமர்செய்வ
               தென்னோ என்னோ யாரினு மேலான் இவனென்றார். ......    122

(என்றார் பூதர் சீற்றம்)

என்றார் பூதர் சீற்றம் விளைத்தார் யாரும்போய்க்
     குன்றாய் அங்க ணுற்றன யாவுங் குழுவுற்ற
          வன்றா ருக்க ளானவும் மாண்கைக் கொடுதொட்டுச்
               சென்றார் ஆர்த்தார் சீயமு கன்மேற் செலவுய்த்தார். ......    123

வேறு

(கைக்கொடு சாரத)

கைக்கொடு சாரத கணங்கள் ஆர்த்துடன்
     உய்க்குறு வரையெலாம் ஒருங்கு சென்றிடாத்
          திக்குள வரைப்பெலாஞ் செறிந்து ஞாயிறு
               மெய்க்கதிர் வழங்குறும் விசும்பு தூர்த்தவே. ......    124

(கல்லகத் தொகுதிகள்)

கல்லகத் தொகுதிகள் ககனந் தூர்த்துழி
     எல்லுடைச் செங்கதிர் இரவி மாய்ந்திட
          ஒல்லெனத் திமிரம்வந் துறலும் நோக்கியே
               அல்லெனக் குடம்பையுள் அடைவ புள்ளெலாம். ......    125

(வெற்பின நிரத்தலு)

வெற்பின நிரத்தலு மறைய வெய்யவன்
     எற்படு முன்னரே இரவி ஓடினான்
          அற்புதம் அற்புதம் அடைந்த தம்புயன்
               கற்பமென் றறிஞருங் கலக்கம் எய்தினார். ......    126

(போற்றலன் தன்)

போற்றலன் தன்மிசைப் பூதர் தூண்டிய
     மாற்றரும் பதலைகள் மலிந்து வான்படர்
          ஆற்றினை அடைத்தலும் அஞ்சி நின்றனன்
               காற்றினும் விரைந்துசெல் கதிரின் பண்ணவன். ......    127

(இன்றுகா றவுணரால்)

இன்றுகா றவுணரால் இடரு ழந்தனம்
     அன்றியும் பூதரீண் டடுக்கல் வீசினார்
          நின்றிடின் வருந்துதும் நிகழ்ச்சி தேரலாஞ்
               சென்றிடல் துணிவெனத் தேவர் ஓடினார். ......    128

(செருவலி வீரர்கள்)

செருவலி வீரர்கள் செலுத்தச் சேண்படர்
     பருவரை யிடையிடை பயின்று சுற்றிய
          கருமுகில் உண்டநீர் கான்று தம்வயின்
               உருமிடி எங்கணும் உகுத்து வீழ்ந்தவே. ......    129

(வெதிர்படு சிலம்பி)

வெதிர்படு சிலம்பினும் வழுக்கி வீழ்ந்திடும்
     அதிர்குரல் அரியினம் அண்டச் செற்றின
          எதிருறு தகுவனை இனமென் றுன்னியே
               முதிர்தரு காதலான் முன்னுற் றாலென. ......    130

(மைம்மலை யிடை)

மைம்மலை யிடைவிராய் வதிந்த மோட்டுடைக்
     கைம்மலை அரற்றியே கவிழ்வ காசிபன்
          செம்மலை அரியென நோக்கித் தேம்பியே
               விம்மலை யெய்தியே வீழ்வ தென்னவே. ......    131

(பொற்றையின் மரங்களி)

பொற்றையின் மரங்களிற் பொதிந்த கேசரம்
     வெற்றிகொள் அரிமுகன் தொடையின் மேவின
          விற்றவர் தம்மை விட்டேதி லார்தமைப்
               பற்றொடு கலந்திடு பரத்தை மாதர்போல். ......    132

(எறிந்திடு வரைகள்)

எறிந்திடு வரைகள்தந் தம்மில் எற்றிடச்
     செறிந்திடு தீங்கனல் சென்ற திக்கெலாம்
          பொறிந்தன புகைந்தன பொரித லுற்றன
               மறிந்தன உலந்தன மன்னு யிர்த்தொகை. ......    133

(ஆயின பல்லியல்)

ஆயின பல்லியல் அடையப் பூதர்கள்
     ஏயின குன்றமுந் தருவும் ஏகியே
          சீயமா முகமுடைச் செல்வற் சேர்ந்தனன்
               தூயவன் கயிலையைச் சூழ்ந்த கொண்டல்போல். ......    134

(செடித்தலை எயினரில்)

செடித்தலை எயினரில் திகழும் ஆயிரம்
     முடித்தலை யான்மிசைப் பட்ட மொய்வரை
          பொடித்தில இற்றில பூழி யாய்த்தில
               படித்தலம் வீழ்ந்தன நொய்ய பான்மையால். ......    135

வேறு

(துன்னற் பட்ட குன்றெ)

துன்னற் பட்ட குன்றெவை யுஞ்சூர் துணையானோன்
     மின்னற் பட்ட மெய்யிடை பட்டே வெற்பின்கட்
          பன்னற் பட்ட தாமென வீழ்கின் றதுபாரா
               இன்னற் பட்டார் பூதர்கள் வானோர் ஏங்குற்றார். ......    136

(சீலம் புக்க பாரிடர்)

சீலம் புக்க பாரிடர் வெம்போர் செயல்கா ணூஉக்
     கோலம் புக்க தேரிடை நின்றான் குப்புற்று
          ஞாலம் புக்கான் பூதர்கள் தம்மை நலிதற்கோர்
               ஆலம் புக்கா லென்ன நடந்தான் அடல்செய்வான். ......    137

(பார்மேல் எற்றுஞ்)

பார்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மைப் பகைவிண்ணோர்
     ஊர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மை உயர்பானுத்
          தேர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மைத் திரைசேர்முந்
               நீர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மை நெடிதோச்சும். ......    138

(பற்றா நிற்குஞ் சில)

பற்றா நிற்குஞ் சிலவரை மூரற் பகுவாயிற்
     குற்றா நிற்குஞ் சிலவரை வாரிக் குழுவோடுஞ்
          சுற்றா நிற்குஞ் சிலவரை அண்டச் சுவரின்கண்
               எற்றா நிற்குஞ் சிலவரை அள்ளி எறிகிற்கும். ......    139

(புண்டரி கன்கட்)

புண்டரி கன்கட் சிலவரை வீசும் பொருசெங்கைத்
     தண்டத ரன்கட் சிலவரை வீசுஞ் சதவேள்வி
          அண்டம தன்கட் சிலவரை வீசும் அகிலஞ்சூழ்
               எண்டிசை யின்கட் சிலவரை வீசும் இகல்பேசும். ......    140

(மாலெரி வைப்பிற்)

மாலெரி வைப்பிற் பலர்தமை வீசும் வானத்தில்
     காலெறி வைப்பிற் பலர்தமை வீசும் கரைதீர்ந்த
          வேலைகள் முற்றும் பலர்தமை வீசும் வியன்மிக்க
               ஞாலம் அனைத்தும் பலர்தமை வீசும் நனிதூர்க்கும். ......    141

(சிங்கங் கொண்ட)

சிங்கங் கொண்ட மாமுகன் வீசுஞ் செறிவாலே
     துங்கங் கொண்ட பார்முதல் விண்ணின் துணையுந்தான்
          எங்கும் பூத மாயின அம்மா இதுகொண்டோ
               அங்கங் கெல்லாம் பூதம தென்றார் அறிவுள்ளார். ......    142

(மிதித்துக் கொல்லு)

மிதித்துக் கொல்லுஞ் சிற்சிலர் தம்மை மிசையுந்திப்
     பதத்திற் கொல்லுஞ் சிற்சிலர் தம்மைப் படிவத்தைச்
          சிதைத்துக் கொல்லுஞ் சிற்சிலர் தம்மைச் செல்லென்ன
               உதைத்துக் கொல்லுஞ் சிற்சிலர் தம்மை உலவுற்றே. ......    143

(விள்ளா நிற்குஞ்)

விள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி விரல்மேலால்
     தள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி தாமுற்றக்
          கிள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி கிளையோடு
               மள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி அடுகிற்கும். ......    144

(தாக்கிற் கொல்லும்)

தாக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மைத் தடிகின்ற
     ஊக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை யுருமொத்த
          வாக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை மருளுற்ற
               நோக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை நொடிதன்னில். ......    145

(வாரா நிற்கும் பாரி)

வாரா நிற்கும் பாரிட ராசியை வாரிப்பின்
     சேரா நிற்கும் வாய்தொறும் ஈண்டச் சேர்த்திட்டே
          ஆரா நிற்கும் ஆர்ந்தபி னாக அகல்மோட்டைத்
               தூரா நிற்குந் தூர்த்தபின் ஆடல் தொழில்செய்யும். ......    146

(எழுவிற் கொல்லும்)

எழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை எரிகூர்வாய்
     மழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை வயநாஞ்சில்
          கொழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மைக் கூர்சூலக்
               கழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மைக் கடிதோடி. ......    147

(கரத்திற் கொல்லு)

கரத்திற் கொல்லுஞ் சிலவரை நோன்கார் முகமுய்க்குஞ்
     சரத்திற் கொல்லுஞ் சிலவரை அம்பொற் றண்டத்தின்
          உரத்திற் கொல்லுஞ் சிலவரை அங்கண் ஒசிக்கின்ற
               மரத்திற் கொல்லுஞ் சிலவரை மண்மீ தினில்வீட்டும். ......    148

(தேர்மே லானோ)

தேர்மே லானோ விண்ணுல கானோ திசையானோ
     பார்மே லானோ வார்கட லானோ பதுமத்தோன்
          ஊர்மே லானோ மேருவி னானோ உயர்பூதர்
               போர்மே லானோ தீயவன் என்றார் புலவோர்கள். ......    149

(அற்றார் தாள்கள்)

அற்றார் தாள்கள் கைகள் இழந்தார் அடுதிண்டோள்
     இற்றார் சென்னி சிந்தினர் துண்ட மிலரானார்
          பெற்றார் மார்பம் விண்டனர் வீழ்ந்து புரள்கின்றார்
               செற்றார் தம்மை அட்டிடு பூதத் திறல்வீரர். ......    150

(சொரியா நின்ற)

சொரியா நின்ற சோரியர் ஆற்றத் துயர்மேலார்
     மரியா நின்றார் எண்ணில ரால்மற் றவர்தம்முட்
          பிரியா நின்ற சென்னியர் பல்லோர் பெயர்வெய்தித்
               திரியா நின்றார் ஆடுறு கின்ற செயல்கொண்டார். ......    151

(கருவந் தெய்தும்)

கருவந் தெய்தும் ஆருயிர் முற்றுங் கவிழ்கின்ற
     பருவந் தன்னில் தீயவன் உண்ணும் படியேபோற்
          செருவந் துற்ற சீயமு கத்துத் திறல்மேலோன்
               ஒருவன் தானே நின்றடு கின்றான் உலவாதான். ......    152

(அந்நீ ராகிப் பூத)

அந்நீ ராகிப் பூதரை வெய்யோன் அடுகாலைச்
     செந்நீர் நீத்தம் ஆயிடை தோறுஞ் சென்றீண்டித்
          தொன்னீர் வேலை புக்குவர் நீக்கித் துவராக்கி
               முந்நீ ரென்னுந் தொன்மையை வேறாய் முடிவித்த. ......    153

(ஆடா நின்றான் இத்தி)

ஆடா நின்றான் இத்திறம் வெய்யோன் அளவில்லார்
     வீடா நின்றார் கண்டனர் வெம்பூ தர்க்கெல்லாங்
          கேடா நின்றான் இங்கிவ னென்னாக் கிளையோடும்
               ஓடா நின்றார் வானவ ரெல்லாம் உலைவுற்றார். ......    154

(துன்னா நின்ற)

துன்னா நின்ற தொன்மரம் வெற்பின் தொகைவீசி
     முன்னா குற்ற பூதர்கள் யாரும் முடிவாகக்
          கொன்னார் சிங்க மாமுகன் அட்டே குலவுற்று
               மின்னார் செம்பொன் மேருவெ னுந்தேர் மிசைபுக்கான். ......    155

வேறு

(அவ்வேலை யன்னான்)

அவ்வேலை யன்னான் அமர்செய்விளை யாடல் பாரா
     மைவேலை போல்வான் அழற்கண்ணன் மனங்க னன்று
          செவ்வே யெதிர்புக் கரிமாமுகற் சீறி வெய்யோய்
               இவ்வேலை உன்னை முடிப்பன்இகல் முற்றி என்றான். ......    156

(என்றங்குரை செய்திடு)

என்றங்குரை செய்திடு பூதனை ஏந்தல் நோக்கி
     ஒன்றுஞ்சிறி துன்னலை அச்சமும் முற்றி லாதாய்
          நின்றிங்கிது கூறினை என்னின் நினக்கு நேரார்
               நன்றுன்வலி என்றுந கைத்தனன் நாகர் அஞ்ச. ......    157

(அன்னான்நகை செய்த)

அன்னான்நகை செய்தது காண்டலும் ஆழி நாப்பட்
     கொன்னார்தழ லென்னவெ குண்டனன் கூளி வேந்தன்
          நின்னாடலை நீக்குவன் காணுதி நீயு மென்றோர்
               மின்னார்கழு முட்படை ஆங்கவன் மீது விட்டான். ......    158

(கூற்றானவன் ஏவவ)

கூற்றானவன் ஏவவ ரும்படைக் கொள்கை நோக்கி
     மாற்றானவ னோர்படை யும்வழங் காது நின்றான்
          தோற்றானென வானவர் ஆர்த்தனர் சூல மார்பின்
               ஏற்றான்வரை மேற்படு கண்டகத் திற்ற தன்றே. ......    159

(உறுகின்றசூ லப்படை)

உறுகின்றசூ லப்படை ஊற்றமும் ஓங்கல் மார்பத்
     திறுகின்றதும் அங்கவன் நின்றதும் யாவும் நோக்கிப்
          பெறுகின் றவரில் இவன்பெற்றது பேற தென்னா
               மறுகின்ற நெஞ்சன் ஒருதண்டினை வல்லை உய்த்தான். ......    160

வேறு

(உய்த்தலும் அனைய)

உய்த்தலும் அனையதண் டுருமுற் றாலென
     அத்தலை அரிமுகத் தவுணன் சாரதி
          மெய்த்தலை கோடலும் வெகுண்டு நோக்கியே
               கைத்தல மிருந்ததோர் கதையை ஏவினான். ......    161

(மாவலி சேர்தரு)

மாவலி சேர்தரு மடங்கல் மாமுகன்
     ஏவிய வெங்கதை இமைப்பிற் பூதர்கள்
          காவலன் அகலமேற் கலந்து தாக்கிற்றால்
               ஓவென அனையனும் உளம்வ ருந்தவே. ......    162

(செயிரறத் திருத்திய)

செயிரறத் திருத்திய செம்பொற் குன்றின்மேல்
     வயிரமெய்ப் படையது வந்தற் றாதலும்
          அயிருறப் புனைகலன் ஆகங் கீண்டிட
               உயிரினுக் கவ்வழி யுலைவு மிக்கதே. ......    163

(தாக்கிய வேலையில்)

தாக்கிய வேலையில் தழலின் நாட்டத்தான்
     மூக்கினின் மார்பினின் முழங்கு வாயினிற்
          தேக்கிய குருதிநீர் சிந்து கின்றது
               மேக்குயர் கனல்மழை விரித்த தாரைபோல். ......    164

(மறந்தனன் தொல்லு)

மறந்தனன் தொல்லுணர் வெனினும் வன்றிறல்
     துறந்திலன் வெவ்வழல் சொரியுங் கண்ணினான்
          சிறந்திடும் ஊசலில் திரிந்த தன்னுயிர்
               இறந்திலன் அவற்கொரு கூற்றம் இன்மையால். ......    165

(ஆரழன் முகத்தவன்)

ஆரழன் முகத்தவன் அயர்வுற் றவ்வழிச்
     சோர்வொடு நிற்றலுஞ் சூரன் பின்வரும்
          வீரம துடையவன் வேறொர் பாகனைத்
               தேரிடை நிறுவினன் சேறல் மேயினான். ......    166

வேறு

(மூண்டமர் இயற்ற)

மூண்டமர் இயற்றச் சீய முகத்தவன் வரலும் நோக்கித்
     தூண்டிய வெகுளி மேலோன் சுமாலியென் றுரைக்குந் தொல்லோன்
          நீண்டிடு மேரு வென்ன நிவந்ததோர் அடுக்கல் தன்னைக்
               கீண்டரி முகன்மேற் செல்லக் கிளர்ந்தனன் வீசி ஆர்த்தான். ......    167

(மற்றவன் விடுத்த)

மற்றவன் விடுத்த குன்றை வாளரி முகத்து வீரன்
     பற்றினன் ஒருதன் கையால் பந்தென மீட்டும் உந்தப்
          பொற்றட மார்பில் தாக்கப் புலம்பியே சுமாலி என்பான்
               செற்றமும் தானு மாகச் செயலற்று நிலத்தன் ஆனான். ......    168

(நிலந்தனில் சுமாலி)

நிலந்தனில் சுமாலி வீழ நெடுஞ்சினம் திருகி அங்கைத்
     தலந்தனில் கதையொன் றேந்தித் தண்டிபோய் அவுணன் தேரில்
          கலந்தவன் உரத்தில் செல்லப் புடைத்தலும் காமந் தன்னில்
               புலந்தவன் தனக்குக் காட்டும் உணர்வெனப் பொடித்த தன்றே. ......    169

(பொடித்தலும் வயிர)

பொடித்தலும் வயிரத் தண்டம் பூதரின் முதல்வன் பொங்கிக்
     கொடித்தடந் தேர்மேல் நின்ற கோளரி முகத்தன் தன்மேல்
          இடித்தெனக் கையால் எற்ற எரியெழ நகைத்துத் தன்னோர்
               அடித்தலங் கொண்டு தள்ளி அமரர்கள் வெருவ ஆர்த்தான். ......    170

(தாளினால் உந்தி)

தாளினால் உந்தி விட்ட தண்டிசேண் எழுந்து மெல்ல
     மீளுவான் அடுவ னென்னும் வெகுளியான் உயிர்ப்பு வீங்கி
          யாளிசேர் வதனத் தண்ணல் ஆடக வயிரக் குன்றத்
               தோளின்மேல் குப்புற் றேதன் னடிகொடு துகைக்கல் உற்றான். ......    171

(ஆடியல் தானை மன்ன)

ஆடியல் தானை மன்னன் ஆயிரத் திரட்டி தோளும்
     ஓடினன் துகைத்துத் தாளும் ஓய்ந்தனன் அவற்றை நோக்கி
          நாடினன் திரியா நின்றான் நாகநீள் குடுமிக் குன்றில்
               கோடுயர் பொதும்பர் தன்னிற் பாய்ந்திடும் குரங்கு போல்வான். ......    172

(குரங்குளைக் குடு)

குரங்குளைக் குடுமிச் சூட்டுக் கோளரி முகத்து வெய்யோன்
     கரங்களிற் பாயும் அங்கட் கலந்திடு படையிற் பாயுஞ்
          சிரங்களிற் பாயும் மீளச் செவிதொறும் பாயும் பூந்தண்
               மரங்களிற் பாய்ந்து செல்லும் மணிச்சிறை வண்டும் போன்றான். ......    173

(செறிந்திடு கரமு)

செறிந்திடு கரமுந் தோளுஞ் சென்னியும் பூதன் செல்வ
     தறிந்திலன் சிறியன் போலும் அரிமுகத் தவுணன் நம்மேல்
          எறிந்துல வுற்றுச் சூழும் ஈகொலென் றொருதன் கையால்
               சொறிந்தனன் சிறிது பின்னர்த் தண்டியைத் துடைத்து விட்டான். ......    174

(ஒருதனிக் கரத்தால்)

ஒருதனிக் கரத்தால் தீயோன் உருட்டினன் துடைப்பத் தண்டி
     பெரிதுநொந் தாற்றல் போகிப் பின்றினன் பெயர்ந்து போனான்
          தெரிதரு பூதர் அஞ்சிச் சிந்தினர் செயலொன் றில்லார்
               அரிதுசெய் தவமே அல்லால் ஆற்றல்பெற் றிடுவ துண்டோ. ......    175

(பூதர்கள் இரிவு)

பூதர்கள் இரிவு நோக்கிப் பொருதிறல் இலக்கத் தெட்டு
     மேதகு வீரர் யாரும் வெய்யதேர் கடாவிச் சென்று
          தீதறு சிலைகள் வாங்கிச் சீயமா முகவற் சுற்றித்
               தாதவிழ் மலர்பெய் தென்னச் சரமழை பொழிதல் உற்றார். ......    176

(பொழிந்திடு பகழி)

பொழிந்திடு பகழி யெல்லாம் புகுந்திடு சுவடின் றாகி
     அழிந்ததும் இன்றி முன்போல் அவன்புடை வீழ நோக்கி
          ஒழிந்ததெம் மாற்ற லென்னா உட்கினர் ஒருதன் தேரின்
               இழிந்தனன் அவுணர் கோமான் இடிபடத் தெழித்துச் சென்றான். ......    177

(எடுத்தனன் சிலவர்)

எடுத்தனன் சிலவர் தேரை எறிந்தனன் ஒன்றொ டொன்றின்
     அடித்தனன் சிலவர் தேரை அள்ளினன் அங்கை தன்னால்
          ஒடித்தனன் சிலவர் தேரை உதைத்தனன் சிலவர் தேரைப்
               பொடித்தனன் சிலவர் தேரைப் புதைத்தனன் சிலவர் தேரை. ......    178

(இத்திற மடங்கல்)

இத்திற மடங்கல் வீரன் அடுதலும் இலக்கத் தெண்மர்
     தத்தம துயிரே தாங்கித் தனுவொடு படைகள் மானம்
          மெய்த்திறல் சிந்திச் சாய்ந்தார் மேவலன் தேர்மேற் புக்கான்
               அத்தலை நின்ற வீர வாகுமற் றதனைக் கண்டான். ......    179

(ஆளரி அனைய)

ஆளரி அனைய வீரன் அதுகண்டு பூதர் தம்முட்
     கோளரி முகத்து வெய்யோன் கொன்றதோர் பாதி உண்டால்
          தாளுடை வில்லி னாருஞ் சமரிடத் தழிந்தார் இந்த
               நாளினின் முடியும் போலும் நம்பெரும் படையு மென்றான். ......    180

(அடல்பெறு புயத்து)

அடல்பெறு புயத்து வள்ளல் ஆடக வரைபோ லுள்ள
     கொடுமர மான தொன்றைக் கோட்டினன் சினமேற் கொண்டான்
          விடமுறு தறுகட் கேது விரைந்தொரு பாங்கர் புக்கு
               நடுவெலாங் கவரத் தோன்று நாகிளங் கதிரே போல. ......    181

(வாங்கிய சிலையிற்)

வாங்கிய சிலையிற் பூட்டி வடிக்கணை அநந்த கோடி
     தூங்கலின் மழைகான் றென்ன உலப்புறான் சொரிந்து நிற்ப
          ஆங்கெதிர் அடர்த்துப் போர்செய் அவுணர்தந் தலைகள் பாறத்
               தாங்கிய படைகள் சிந்தித் தரைமிசைத் துணிந்து வீழ்ந்தார். ......    182

(பரித்தொகை முழுது)

பரித்தொகை முழுதும் பட்ட பாழியந் தேர்கள் பட்ட
     ஒருத்தலும் பிடியும் பட்ட உலப்பிலா அவுணர் பட்டார்
          பெருத்தன பிணத்தின் குன்றம் பிறங்கின பேய்கள் மொய்த்த
               திரைத்தெழு சோரி நீத்தந் தெண்டிரை மடுத்த தம்மா. ......    183

(தேரெனப் பட்ட வீரர்)

தேரெனப் பட்ட வீரர் திறமெனப் பட்ட மாவின்
     பேரெனப் பட்ட யானைப் பெருக்கெனப் பட்ட தம்முட்
          பேரிடைப் படாத எல்லாம் பொருதிரைக் குருதி வாரி
               வீரனுக் குதவி யாக வேலையுள் உய்த்த தன்றே. ......    184

(பேரியின் ஒலியும்)

பேரியின் ஒலியும் தீய அவுணர்கள் பிடித்த வில்லின்
     நாரியின் ஒலியும் சூழும் நாற்படை ஒலியும் மாண்ட
          காரியின் ஒலியும் மோட்டுக் கணங்களின் ஒலியுஞ் செந்நீர்
               வாரியின் ஒலியு மாகி அடுகளம் மலிந்த அன்றே. ......    185

(மலைகளை அறுக்கும்)

மலைகளை அறுக்கும் வேலை வாள்களை அறுக்குஞ் செங்கைச்
     சிலைகளை அறுக்கும் வெய்யோர் திண்டிறல் கொண்ட தோளின்
          நிலைகளை அறுக்கும் மார்பின் நிரைகளை அறுக்குங் கோடி
               தலைகளை அறுக்கும் அம்மா இளையவன் சரம தொன்றே. ......    186

(காழுறும் அவுணர் சென்னி)

காழுறும் அவுணர் சென்னி கரதல நெடுந்தோள் மார்பம்
     வாழிய முருகன் தூதன் வாளிகள் வௌவி ஏகி
          ஏழுள கடலும் நீங்கி எண்டிசைக் கிரிகள் தாவி
               ஆழியங் கிரிபோழ்ந் தப்பால் அண்டமும் பிளந்து செல்லும். ......    187

(கரண்டம தான)

கரண்டம தான செந்நீர் ஆற்றிடைக் கவிழ்ந்து மூழ்கித்
     திரண்டவூன் வௌவி மீண்டு சிறகரை உதறு கின்ற
          முரண்டகு வீரர் சென்னி மூளைபுக் களைந்து வாரிக்
               குரண்டமீ தென்ன லான கருநிறக் கொடிக ளெல்லாம். ......    188

(இவ்வகை அவுணர்)

இவ்வகை அவுணர் தானை இறந்திட வீர வாகு
     அவ்வயின் நின்று சென்றாங் கடுதலும் அதனைக் கண்டார்
          தெவ்வரை முருக்கும் வைவேற் சீயமா முகத்தன் மைந்தர்
               ஐவரை வெல்லும் ஆற்றல் ஐம்பதிற் றிருவர் என்பார். ......    189

(சினத்தனர் இதழை)

சினத்தனர் இதழைப் பல்லால் தின்றனர் நம்முன் வெம்போர்
     வினைத்தொழில் இயற்று வானை வெய்தென அடுது மென்னா
          இனத்தொடு தேர்க டாவி ஏகியே வீரன் தன்மேல்
               தனித்தனி வார்விற் கோட்டிச் சரமழை சிதற லுற்றார். ......    190

(நூற்றுவர் ஒருங்கு)

நூற்றுவர் ஒருங்கு நேர்ந்து நோன்றலைச் சிலைகள் வாங்கி
     மேற்றிகழ் முகில்கான் றென்ன வீசிய விசிகந் தன்னை
          ஆற்றல்சேர் வீரன் காணா அயிற்கணை அநந்த கோடி
               காற்றெனத் துரந்து மாற்றிக் கடவுளர் புகழ ஆர்த்தான். ......    191

(தொலைவுறும் அவுண)

தொலைவுறும் அவுணன் மைந்தர் துண்ணெனக் கனன்று பின்னுங்
     கொலையுடை நெடுங்கூர் வாளி கோடிகோ டிகள்நின் றுய்ப்ப
          வலியுடை வீர வாகு மற்றவை மாற்றி அன்னோர்
               சிலையொடு தேர்கள் தம்மைச் செஞ்சரந் தூண்டி வீழ்த்தான். ......    192

(தேரொடு சிலைகள்)

தேரொடு சிலைகள் மாயச் சீயமா முகத்தன் மைந்தர்
     வீரனை எதிர்ந்து வில்லால் வென்றிடல் அரிது போலுங்
          கூருடை நுதிவாட் போரிற் கொல்லுதும் இவனை என்னாப்
               பாரிடை வந்தோர் சூழ்ச்சி வகையினாற் பகர்த லுற்றார். ......    193

(காட்புடைச் சிலை)

காட்புடைச் சிலையின் விஞ்சை கற்றதே அன்றி எம்போல்
     வாட்படை பயின்றி லாய்கொல் வல்லையேல் அப்போர் செய்யச்
          சேட்படை யன்றி எம்முன் சேர்தியால் வீர என்னாத்
               தோட்புடை கொட்டி ஆர்த்தார் கூற்றனுந் துளக்கம் எய்த. ......    194

(வன்றிறல் அவுணன்)

வன்றிறல் அவுணன் மைந்தர் உரையினை வள்ளல் கேளா
     நன்றிது புகன்றீர் என்னா நகைசெய்து நாதன் தந்த
          மின்றிகழ் சுடர்வாள் கொண்டு விரைந்துகீழ்த் தலத்திற் பாய்ந்து
               சென்றனன் அதனை நோக்கித் தேவரும் இடுக்கண் செய்தார். ......    195

(வார்ந்திடு கழற்கால்)

வார்ந்திடு கழற்கால் வீரன் வாள்கொடு வரலும் நோக்கித்
     தீர்ந்தனன் ஆவி இன்னே செகுக்கலாம் இவனை யென்னாக்
          கூர்ந்திடு நாந்த கங்கள் தனித்தனி கொண்டு சென்று
               நேர்ந்தனர் வளைந்து கொண்டார் மதியைச்சூழ் நிசியை ஒப்பார். ......    196

(வளைந்தனர் வீரன்)

வளைந்தனர் வீரன் தோளின் மார்பினிற் கரத்தின் மொய்ம்பிற்
     களந்தனிற் சென்னி தன்னிற் கருதினர் இலக்கம் நாடிக்
          கிளர்ந்திடு நாந்த கத்தாற் கிட்டினர் எறித லோடும்
               உளந்தளர் வில்லோன் மேனிக் குற்றில சிறிதும் ஊறு. ......    197

(ஊறிலாத் தன்மை)

ஊறிலாத் தன்மை நோக்கி உவனையாம் பற்றி மெல்லக்
     கோறலே கரும மென்னாக் குழுவொடும் அவனைப் புல்லச்
          சீறினான் தன்வா ளோச்சிச் சிறிதுமெய் தெரியா வண்ணம்
               நூறினான் கொல்லோ என்ன நூற்றுவர் தமையும் அட்டான். ......    198

(அட்டிடு கின்ற வீரன்)

அட்டிடு கின்ற வீரன் அமரர்கள் வழுத்த மீண்டு
     தட்டுடை நெடுந்தேர் புக்கான் தன்மனக் கினிய மைந்தர்
          பட்டிடு தன்மை நோக்கிப் பாடுறும் அவுணர் கோமான்
               மட்டறு துயரின் மூழ்கி மானத்தால் இரக்க முற்றான். ......    199

(கோளுண்ட அரி)

கோளுண்ட அரிமான் துப்பில் குமரரை ஒருவன் கொண்ட
     வாளுண்ட தென்று நெஞ்சம் வசையுண்டு வருந்தல் மன்னோ
          தாளுண்டு பரித்து நிற்கத் தலைகளுண் டெண்ணி லாத
               தோளுண்டு கரங்க ளுண்டு சுமக்கலாம் போலு மன்றே. ......    200

(என்னுடை மைந்தர்)

என்னுடை மைந்தர் தம்மை யாவருங் காண ஈண்டென்
     முன்னுற ஒருவ னோதான் முடித்துயிர் கொண்டு நிற்பான்
          பின்னினி இதற்கு மேலும் பெற்றிடும் வசையொன் றுண்டோ
               ஒன்னலர் தங்கட் கெல்லாம் ஒருநகை விளைத்தேன் அன்றோ. ......    201

(பொன்றினர் தம்மை)

பொன்றினர் தம்மை உன்னிப் பொருமியே புன்கண் எய்தி
     நின்றிடின் ஆவ துண்டோ நேரலர் தொகுதி எல்லாங்
          கொன்றொரு கணத்தின் முன்னர்க் குழுவொடும் வாரி வாரித்
               தின்றுதேக் கிட்டால் அன்றித் தீருமோ எனது சீற்றம். ......    202

(மேவல ராகும் இன்)

மேவல ராகும் இன்னோர் குழுவினை விரைவின் அட்டுத்
     தாவறு சுடர்வேல் கொண்ட பாலகன் தனையும் வென்று
          தேவர்கள் எனப்பேர் பெற்றோர் யாரையும் இன்றே செற்று
               மூவுல கினையும் யானே முடிக்குவன் விரைவின் என்றான். ......    203

(என்னஇத் திறங்கள்)

என்னஇத் திறங்கள் பன்னி எரியுமெய் விதிர்ப்பச் சீறித்
     தன்னுறு தடந்தேர் உய்க்குஞ் சாரதி தன்னை நோக்கிக்
          கொன்னுனை அயில்வாட் செங்கைக் குமரர்தங் குழுவைக் கொன்றான்
               முன்னுறக் கடவு கென்ன நன்றிது முதல்வ என்றான். ......    204

(பாகுநூல் உணர்ந்து)

பாகுநூல் உணர்ந்து வல்லோன் பரியினை எழுப்பிப் பண்ணி
     மாகநீ டடந்தேர் தூண்ட அரிமுகன் வருத லோடும்
          ஏகநா யகனாம் மூர்த்தி ஏவலான் அதனை நோக்கி
               ஓகையால் தனது மான்தேர் அதனொடும் ஒல்லை நேர்ந்தான். ......    205

(நேர்ந்திடு கின்ற)

நேர்ந்திடு கின்ற காலை நிரைபடு விழிக டோறுஞ்
     சார்ந்தழல் சிதற நோக்கித் தளைபடு தறுகட் சீயம்
          ஆர்ந்திடு பகைகண் டென்ன ஆற்றவுஞ் சினமீக் கொண்டு
               சேர்ந்திடு வானை நோக்கிச் சிங்கமா முகத்தன் சொல்வான். ......    206

(ஆதிதந் தருளும்)

ஆதிதந் தருளும் மைந்தன் அறுமுகன் அவன்நீ அல்லை
     ஏதிலா இலக்க ரென்றே இசைத்திடு வோர்கள் தம்முள்
          நாதனோ எண்மர் தம்முள் ஒருவனோ நம்மூர் வந்த
               தூதனோ இனையர் தம்முள் யாரைநீ சொல்லு கென்றான். ......    207

(அல்லுறழ் கண்டன்)

அல்லுறழ் கண்டன் தந்த அறுமுகற் கடிய னானேன்
     தொல்லைநும் மூதூர் அட்டுத் தூதனு மாகி மீண்டேன்
          எல்லையின் நுமரை யெல்லாம் ஈண்டொரு கணத்தின் அட்டு
               வெல்லுவ தமைந்து நின்றேன் வீரவா கென்பேர் என்றான். ......    208

வேறு

(திண்டிறற் சேவகன்)

திண்டிறற் சேவகன் செப்பும் இம்மொழி
     விண்டிடு செவிதொறும் விடம்பெய் தாலெனக்
          கொண்டனன் வெகுண்டொரு கூற்றங் கூறினான்
               உண்டிடும் அசனிகள் உமிழ்ந்திட் டாலென. ......    209

(உறுபடை உழப்பினை)

உறுபடை உழப்பினை உணர்கு றாததோர்
     சிறுவரை வெல்வதுந் திருந்து மாநகர்
          உறைதரும் எளியரை உடன்று கொல்வதும்
               அறிகுதி ஈதுமோர் ஆண்மைப் பாலதோ. ......    210

(நூற்றியற் குமரரை)

நூற்றியற் குமரரை நொய்திற் கொன்றநின்
     ஆற்றலைக் கெடுக்குவன் ஆவி வாங்கியே
          கூற்றுவற் குண்டியாக் கொடுப்பன் மெய்யினைப்
               பாற்றினுக் குதவுவன் பாலன் காணவே. ......    211

(உன்னுடை வன்மையும் - 1)

உன்னுடை வன்மையும் உனது நாயகன்
     தன்னுடை வன்மையுந் தானை வன்மையும்
          பின்னுடை அமரர்கள் பெற்ற வன்மையும்
               என்னுடை வன்மையால் இறையின் நீக்குவேன். ......    212

(வானவர் சிறையினை)

வானவர் சிறையினை மாற்ற உன்னியே
     தானையொ டேகியென் றன்முன் எய்தின்நீர்
          ஊனுயிர் வாழ்க்கையும் ஒல்லை தீர்திரால்
               ஆனதொ ரூதியம் அழகி தாற்றவே. ......    213

(மூண்டதொல் விதி)

மூண்டதொல் விதியினான் முடிந்த மன்னுயிர்
     மீண்டுதம் மியாக்கையுள் மேவும் என்னினும்
          ஈண்டெனை மாறுகொண் டிகல்செய் கின்றவர்
               மாண்டிடும் ஆறலால் மற்றும் உய்வரோ. ......    214

(என்பதை அரிமுகன்)

என்பதை அரிமுகன் இயம்ப எம்பிரான்
     நன்பெருந் தூதுவன் நகைசெய் தங்கையின்
          மன்பெருஞ் சிலையினை வணக்கி வாளியோர்
               ஒன்பதொ டொன்பதை உரத்தில் தூண்டினான். ......    215

(விரைந்திடு செலவி)

விரைந்திடு செலவினால் விசிகம் ஏவலான்
     உரந்தனிற் படுதலும் ஒசிந்து வீழ்ந்தன
          இரந்திடு தொழிலவர் இன்மை யாளர்போல்
               கரந்தவர் இயற்கையைக் கருதி மீள்வபோல். ......    216

(முருகன தேவலால்)

முருகன தேவலால் முன்னம் விட்டிடு
     பொருகணை அகலமேற் புகாது வீழ்தலும்
          அரிகெழு முகமுடை அவுணர் நாயகன்
               கரமிசை இருந்ததோர் கதையொன் றேவினான். ......    217

(ஏவிய தண்டினை)

ஏவிய தண்டினை ஏந்தல் ஈரிரு
     தூவயில் வாளியால் துண்டஞ் செய்திடா
          ஓவரும் பான்மையால் ஒராயி ரங்கணை
               தேவரை அலைத்தவன் சிரத்தில் ஓச்சினான். ......    218

(சிரம்படு கின்றதோர்)

சிரம்படு கின்றதோர் செய்ய வாளிகள்
     பரம்படு பலதுணி பட்டு வீழ்ந்தன
          உரம்படும் அவுணர்கள் உறைதற் கொத்தமுப்
               புரம்படு கின்றதோர் பூழி யாமென. ......    219

(பொன்றிகழ் வடிக்கணை)

பொன்றிகழ் வடிக்கணை பொடிப்ப இன்னுமுன்
     நின்றமர் புரியுமோ நென்னல் தூதுவன்
          நன்றென அரிமுகன் நகைத்துத் தன்கையின்
               மின்றிகழ் சூலவேல் திரித்து வீசினான். ......    220

(காசினி எரிகிளர்)

காசினி எரிகிளர் காட்சித் தாலென
     ஆசினி தனில்வரு சூலத் தாற்றலுந்
          தேசுடை நிலைமையுந் திறலும் நோக்கியே
               வீசினன் எதிருற விசிகம் ஆயிரம். ......    221

(நெட்டிலைச் சூலவேல்)

நெட்டிலைச் சூலவேல் நிமலற் கன்பினோன்
     விட்டிடு பகழியை வீட்டி மேற்செலப்
          பட்டது நோக்கினன் பரிந்து பின்னருந்
               தொட்டனன் ஆயிரஞ் சுடர்கொள் வான்கணை. ......    222

(ஏவிய எல்லையில் எதி)

ஏவிய எல்லையில் எதிரும் வாளியைத்
     தூவுறு கொன்னுனைச் சூலஞ் சிந்தியே
          மேவலர் பரவுறும் வீர வாகுமேல்
               தேவரும் மருளுறக் கடிது சென்றதே. ......    223

(இலக்கரும் நடுங்கினர்)

இலக்கரும் நடுங்கினர் எண்மர் ஏங்கியே
     கலக்கம தடைந்தனர் கணங்கள் யாவரும்
          அலக்கணுற் றிரங்கினர் அமரர் இப்படை
               விலக்கரி தேகொலென் றுயிர்த்து விம்மினார். ......    224

வேறு

(கோள்கொண்ட பகழி)

கோள்கொண்ட பகழிகளின் கொலைகொண்டு நிலைகொண்ட
     தோள்கொண்டு செல்லவருஞ் சூலத்தின் திறல்நோக்கி
          நீள்கொண்டல் அன்னதொரு நீலமிடற் றவன்தந்த
               வாள்கொண்டு குறைத்திட்டான் வலிகொண்ட தகலாதான். ......    225

(சூலம்போய் இற்றிட)

சூலம்போய் இற்றிடலுந் துணைவர்களாய் உள்ளோரும்
     ஞாலஞ்சேர் பூதர்களும் நனிமகிழ்வு சிறந்தனரால்
          ஆலம்போந் தடர்த்திடலும் அமலனுண்டு தமைக்காத்த
               காலம்போல் அமரரெலாந் துயரம்போய்க் களிசிறந்தார். ......    226

(அக்காலை வெள்ளி)

அக்காலை வெள்ளிமலை அளிக்குநந்தி கணத்திறைவன்
     மெய்க்கால வடவையினும் வெகுளியுறு பெற்றியனாய்
          இக்காலை இவனுயிரை யானேஉண் குவனென்னா
               மைக்காலன் றனைமுடித்த வள்ளல்தனிப் படைகொண்டான். ......    227

(எந்திரித்த இருக்கை)

எந்திரித்த இருக்கைதனில் இருத்தியே கருவிகளான்
     மந்திரத்தின் விதிமுறையின் மனப்படுபூ சனைஇயற்றி
          அந்தரத்தில் இமையவர்க்கும் அரியயற்கும் வெலற்கரிய
               சுந்தரத்தோள் அரிமுகனை அடுதியெனத் தொழுதுய்த்தான். ......    228

(உய்ப்பதொரு படை)

உய்ப்பதொரு படையழல்கான் றுலகம்வெருக் கொளவரலும்
     எப்படையோ இஃதென்றான் இமையவர்தம் படைவென்றான்
          துப்படையுஞ் செஞ்சடிலத் தோன்றல்படை எனத்தெரியா
               அப்படையோ அடுவதென அண்டம்வெடி படநகைத்தான். ......    229

(அற்பட்ட புலனுடை)

அற்பட்ட புலனுடைய அரிமுகத்தன் தான்நோற்று
     முற்பட்ட பகற்கொண்ட முக்கணான் தனதுபடை
          எற்பட்ட மணிக்கடகத் தொருகரத்தில் இருந்ததனைச்
               சொற்பட்ட மந்திரத்தால் வழிபட்டுத் தூண்டினனால். ......    230

(தூண்டலுறு பரன்)

தூண்டலுறு பரன்படையுந் தொல்லைவரும் அப்படையும்
     ஈண்டியெதி ரெதிர்துன்னி இணைகொண்டோர் இருதலைவர்
          காண்டகைய கேண்மையினாற் கடிதுவந்து கலந்தேபின்
               மீண்டிடுவ தேபோல விடுத்தவர்பால் மேவினவால். ......    231

வேறு

(தன்படை மீடலுஞ்)

தன்படை மீடலுஞ் சயங்கொள் மொய்ம்பினான்
     துன்புடை மனத்தனாய்ச் சூரன் என்பவன்
          பின்புடை யானொடு பேசப் பின்னொரு
               முன்புடை யாரிலை என்று முன்னினான். ......    232

(ஆற்றலிற் குறைவிலன்)

ஆற்றலிற் குறைவிலன் அழிவு றாதமர்
     பேற்றினிற் குறைவிலன் பிறரை அட்டிடு
          கூற்றினிற் குறைவிலன் கோடி கூற்றுவர்
               ஏற்றெதிர் மலையினும் இமைப்பிற் கொல்வனால். ......    233

(அவன்பெரு முயற்சி)

அவன்பெரு முயற்சியே ஆற்ற லாம்என்கோ
     தவங்களின் வன்மையே வன்மை தான்என்கோ
          சிவன்புரி வரமதே சீரி தால்என்கோ
               எவன்பெரி தென்றியான் இசைக்க வல்லனே. ......    234

(விடலுறு பகழியான்)

விடலுறு பகழியான் மெய்யில் ஊறிலான்
     அடலுறு படையினும் அழிவு பெற்றிலான்
          கொடியதோர் அரிமுகன் குமரன் செங்கையிற்
               படைகளின் அன்றியே படுகி லானரோ. ......    235

(தீயவன் ஆவியை)

தீயவன் ஆவியைச் சிந்தல் கூடுறா
     தாயினும் வெஞ்சமர் ஆற்றி இங்கிவன்
          சேயுயர் தேரினைப் படையைச் சேனையை
               மாய்வுறு விப்பனால் வல்லையா னென்றான். ......    236

(இத்திறம் இளையவன்)

இத்திறம் இளையவன் இயம்பி ஏழிரு
     பொத்திரம் தூண்டியே பொருவில் கேசரி
          வத்திர முடையவன் வையம் உந்துவான்
               சித்திர நெடுந்தலை சிந்தி நீக்கினான். ......    237

(சாரதி தலையது தரை)

சாரதி தலையது தரையில் வீழுமுன்
     சூரொடு தோன்றினான் சுளிந்தொர் தண்டினை
          ஓரிமை ஒடுங்குமுன் உருமின் உய்த்தலும்
               வார்கழல் இளையவன் மருமம் பாய்ந்ததே. ......    238

(விடலரும் திறலுடை)

விடலரும் திறலுடை வீர வாகுவின்
     தடமிகும் உரம்புகு தண்டஞ் சாளரத்
          திடையிடை கதிர்வரும் எல்லை காணுறும்
               பொடியென லாகியே புகையில் போயதே. ......    239

(தோட்டுணை வாகை)

தோட்டுணை வாகையான் சுளிந்து துண்ணென
     ஓட்டுறு நெடுங்கணை உய்த்தொ ராயிரம்
          மோட்டுடை விறலரி முகத்தன் ஏறிய
               சேட்டுடை மணிநெடும் தேரை வீட்டினான். ......    240

(தேரழிந் திடுதலும்)

தேரழிந் திடுதலும் ஆர்த்துச் சிங்கனை
     ஆருயிர் கொள்ளுதும் அற்ற மீதெனாப்
          பாரிடர் வரைகளும் படையும் வீசியே
               சாருற வளைந்தனர் சமரின் முந்தினார். ......    241

(வெய்யவன் அங்கது)

வெய்யவன் அங்கது வெகுண்டு நோக்கியே
     செய்யதோர் மணிநெடுஞ் சேமத் தேர்புகா
          ஐயிரு நூறுவில் லதனை ஆயிரம்
               கையினில் எடுத்தனன் கடிதின் வாங்கினான். ......    242

(கருமணி வரைபுரை)

கருமணி வரைபுரை காமர் வில்லெலாம்
     அரவுறழ் குணங்கள்கொண் டவுணன் கையுற
          திருமுடி பலவுடைக் கிரியிற் செல்லினம்
               உருகெழு மின்னொடும் உறுவ போன்றவே. ......    243

(பிடித்திடும் விற்களில்)

பிடித்திடும் விற்களில் பிறங்கு நாணொலி
     எடுத்தனன் எடுத்தலும் உயிர்கள் யாவையும்
          துடித்தன அண்டமும் துளக்க முற்றன
               முடித்தலை பனித்தனன் முளரித் தேவனும். ......    244

(வணக்கிய விற்களின்)

வணக்கிய விற்களின் மடங்கல் மாமுகன்
     கணக்கில வாகிய கடல்கள் வானெழீஇத்
          தணக்கில பொழிந்தெனச் சரங்கள் சிந்தலும்
               பிணக்குவை ஆயினர் பெயர்ந்த பூதர்கள். ......    245

(தாள்களும் கரங்களும்)

தாள்களும் கரங்களும் தலையும் சிந்தினர்
     கோளுறு தசையொடு குருதி சிந்தினர்
          மூளைகள் சிந்தினர் முடியும் கால்பொரப்
               பூளைகள் சிந்தின போலப் பூதர்கள். ......    246

(தருப்பயில் பாற்கடல்)

தருப்பயில் பாற்கடல் தனது சீகரம்
     திரைப்பெருங் கரங்களால் சிந்தல் போன்றதால்
          அரிப்பெரு முகத்தவன் ஆயி ரங்கையால்
               துரப்புறு கணைகளைத் தூண்டு கின்றதே. ......    247

(மண்டல நிரந்தன)

மண்டல நிரந்தன வானம் தூர்த்தன
     எண்டிசை மறைத்தன கிரிகள் ஈண்டுவ
          தெண்டிரை எங்கணும் செறிவ அப்புறத்
               தண்டமும் போவன அவுணன் வாளிகள். ......    248

(மருப்புயர் திசைக்கரி)

மருப்புயர் திசைக்கரி மருமம் பாய்வன
     பருப்பதம் ஏழையும் பகிர்வ மேருவாம்
          பொருப்பையும் போழ்வன புணரி தோறமர்
               நெருப்பையும் தணிப்பன நீசன் வாளியே. ......    249

(மாறுபட் டவன்விடும்)

மாறுபட் டவன்விடும் வாளி மாரியால்
     ஈறுபட் டிடாததோ ருயிரும் யாக்கைகள்
          கூறுபட் டிடாததோ ருயிரும் கொம்மென
               ஊறுபட் டிடாததோ ருயிரும் இல்லையே. ......    250

(எண்படும் அரிமுகன்)

எண்படும் அரிமுகன் எடுத்த வில்லுமிழ்
     புண்படு கணைமழை பொதிந்து போகுறா
          விண்டுபடு நெறியெலாம் விலக்கி மாற்றியே
               ஒண்புவி ஆக்கிய துலகம் யாவையும். ......    251

(தாக்குறும் அரிமுகன்)

தாக்குறும் அரிமுகன் சரங்கள் பாரிடர்
     யாக்கைகள் உருவியே எடுத்து நொய்தெனப்
          போக்குறு கின்றன புலாலின் சூட்டினைக்
               கோக்குறு சலாகையின் குழுவு போலவே. ......    252

(மெய்ந்நெறி யுணர்கி)

மெய்ந்நெறி யுணர்கிலார் வெறுக்கை பெற்றது
     துன்னிய கிளைக்கொரு துன்ப மாதல்போல்
          ஒன்னலன் விடுங்கணை உலப்பின் றோடலால்
               தன்னுறு படைகளைத் தானுங் கொன்றவே. ......    253

(தீந்தொழில் அரிமுகன்)

தீந்தொழில் அரிமுகன் செறித்த வாளிகள்
     வாய்ந்திடுஞ் சேணெறி மாற்றும் பான்மையால்
          காய்ந்திடுஞ் செங்கதிர்க் கடவுள் மேற்றிசைப்
               போந்திலன் மீண்டிலன் புலம்பி நின்றுளான். ......    254

(கொம்பொடு பேரியு)

கொம்பொடு பேரியுங் குணிலும் ஏனைய
     வெம்படை யாவையும் விரவி மேற்செலக்
          கம்புளும் கரண்டமும் கனைந்து சுற்றிடச்
               செம்புனல் கரும்புனல் அளக்கர் சென்றதே. ......    255

(இத்திறம் அரிமுகன்)

இத்திறம் அரிமுகன் இயற்றும் போரினை
     மெய்த்திறன் மொய்ம்புடை வீரன் காணுறாச்
          சித்திரத் தவனெதிர் சென்று வாங்கினான்
               கைத்தலத் திருந்ததன் கடவுள் வில்லினை. ......    256

(வாக்கிய சிலைதனில்)

வாக்கிய சிலைதனில் வறிது நாணொலி
     ஆக்கினன் ஆக்கலும் மலைந்த தண்டமும்
          தீக்கிளர் குஞ்சியர் செருச்செய் தானவர்
               ஏக்கம தடைந்தனர் இரிந்து போயினார். ......    257

(மாக்களின் இருந்தவர்)

மாக்களின் இருந்தவர் மதங்கொள் வெங்கரி
     மேக்குற வைகினோர் தேரின் மேவினோர்
          தாக்குறு படைகளுஞ் சயமுஞ் சிந்தியே
               யாக்கைகள் நடுக்குற யாரும் வீழ்ந்தனர். ......    258

வேறு

(அவ்வ ழிப்பட நாணொ)

அவ்வ ழிப்பட நாணொலி உறுத்தியே அடலோன்
     கைவ ழிப்படு சிலையினில் கணைமழை சிதறித்
          தெவ்வ ழிப்படு சீயமா முகத்தவன் செலுத்தும்
               எவ்வ ழிப்படு பகழியும் அறுத்தனன் இமைப்பில். ......    259

(பிரமர் எண்ணிலர்)

பிரமர் எண்ணிலர் பயந்திடும் உயிர்களைப் பின்னாள்
     ஒருவ னாகிய கண்ணுதல் தொலைக்குமா றொப்பச்
          செருவ லாளனாம் இளையவன் பகழிகள் சிதறி
               அரியின் மாமுகன் விடுகணைத் தொகையெலாம் அறுத்தான். ......    260

(மிக்க நேமியிற் புவனி)

மிக்க நேமியிற் புவனியின் அகலிரு விசும்பில்
     திக்கின் மேருவின் வரைகளில் தீயவன் பகழி
          புக்க புக்கதோர் இடங்களில் தன்கணை பூட்டி
               அக்க ணந்தனில் அவன்விடு வாளிகள் அறுத்தான். ......    261

(புறத்த ராமென மன்னு)

புறத்த ராமென மன்னுயிர்க் கின்னலே புரியும்
     திறத்தன் வாளியை மைந்தனின் றட்டது தேவர்
          குறித்து நோக்கியே சூர்முதற் கிளையெலாம் குமரன்
               அறுத்த நாள்வரு மகிழ்ச்சியைக் கிடைத்துநின் றார்த்தார். ......    262

(அகழி யார்கலி நொச்சி)

அகழி யார்கலி நொச்சிசூழ் முதுநகர் அடர்ந்தோன்
     திகழி யானைகள் வெருவரும் அரிமுகத் திறலோன்
          பகழி யாவையும் அட்டதோ அங்கவன் படைத்த
               புகழி யாவையும் அட்டதன் றோவெனப் புகன்றார். ......    263

(அள்ளல் செற்றிய அள)

அள்ளல் செற்றிய அளக்கர்சூழ் ஆசுரத் தரசன்
     தள்ளல் உற்றிடு பகழியைத் தனதுகைச் சரத்தால்
          வள்ளல் அத்துணை அறுத்தனன் அகற்றமற் றதனைக்
               கள்ள லைத்ததார் அரிமுக மேலையோன் கண்டான். ......    264

(வில்லெ டுத்தது நின்)

வில்லெ டுத்தது நின்பொருட் டாகுமால் விரைவின்
     மல்லெ டுத்தநின் மொய்ம்பினைக் கரங்களை மார்பைப்
          பல்லெ டுத்திடு தலையினை நாசியைப் பதத்தைச்
               சொல்லெ டுத்திடு நாவினைச் சரங்களால் துணிக்கேன். ......    265

(திரண்ட கையுளேன்)

திரண்ட கையுளேன் சிலைத்தொழில் காட்டுறு செருவில்
     இரண்டு கையுடை நீகொலாம் என்முனம் ஏற்பாய்
          முரண்ட னிச்சிலை தொட்டநின் கையினை முடித்துக்
               கரண்டம் உண்ணிய புரிகுவன் முந்துநீ காண. ......    266

(எமரி ருக்குறு மகேந்தி)

எமரி ருக்குறு மகேந்திர நகர்தனில் ஈண்டுஞ்
     சமர கத்தினில் என்பெருந் தானைகள் தம்மில்
          குமரர் தங்களிற் கொற்றமாக் கொண்டன முற்றும்
               உமிழு விக்குவன் உன்னுயிர் தன்னையான் உண்பேன். ......    267

(என்னும் மாற்றங்கள்)

என்னும் மாற்றங்கள் அரிமுகன் இசைத்தலும் ஏந்தல்
     பன்னு கின்றதென் பற்பல நினக்குள படையைத்
          துன்னு தானைகள் யாவையுஞ் செற்றுனைத் துரப்பேன்
               என்னு டைச்சிலை வன்மையைப் பார்த்தியா லென்றான். ......    268

(சொற்ற மாத்திரத்)

சொற்ற மாத்திரத் தவுணனார் அழல்விழி தூண்டக்
     கொற்ற வெஞ்சிலை பத்துநூ றொருதலை குனித்துப்
          பொற்றை ஈர்ங்கணை ஆயிரத் தாயிரம் பூட்டி
               வெற்றி மொய்ம்புடை ஒருவன்மேற் சென்றிட விடுத்தான். ......    269

(சீற்றம் மிக்கநம் இளை)

சீற்றம் மிக்கநம் இளையவன் சிலையெனக் கொண்ட
     கூற்றை வாங்கியே பத்துநூ றாயிரங் கொடுங்கோல்
          ஆற்றல் மிக்கன தூண்டியே மேலவை அறுத்து
               வீற்றும் ஆயிரம் ஆயிரம் பகழிகள் விட்டான். ......    270

(நம்பி தொட்டிடு கணை)

நம்பி தொட்டிடு கணையினை மகேந்திர நகரோன்
     தம்பி பத்துநூ றாயிரங் கணைகளாற் சாய்த்து
          வெம்பி ஆயிர கோடிவெவ் வாளிகள் விடுப்ப
               எம்பி ராற்கிளை யோனும்அக் கணையினை எய்தான். ......    271

(குராவ ணிந்திடு குமர)

குராவ ணிந்திடு குமரனுக் கிளையவன் கொடுங்கோல்
     பராவ லன்விடு பகழியைப் பாரிடைப் படுத்தக்
          கராச லங்களை யடுமுகன் அதற்குமுன் கணைகள்
               இராயி ரந்தொடுத் தண்ணறன் சிலையினை இறுத்தான். ......    272

(மாறில் வெஞ்சிலை)

மாறில் வெஞ்சிலை இற்றுழி இளையதோர் வள்ளல்
     வேறொர் கார்முகம் வாங்குமுன் அகலத்தில் வெய்யோன்
          நூறு கோடி புங்கவங்களை அழுத்தலும் நொய்தின்
               ஆறு கோடியொத் திழிந்தன அகலிருங் குருதி. ......    273

(குருதி யாகத்தின்)

குருதி யாகத்தின் இழிந்திடத் தன்சிலை குனித்துப்
     பரிதி ஒண்கதிர் என்னநூ றாயிரம் பகழி
          கருதி விட்டிடக் கருதலன் அங்கது காணா
               இருது நாண்முகி லாமென அவைதொடுத் திறுத்தான். ......    274

(அல்லி னோர்மதி)

அல்லி னோர்மதி எழுந்தென அவுணருள் உதித்த
     மல்லல் வாலிய அரிமுகன் தொடுகணை மாரி
          ஒல்லென் வாளியான் மாற்றியா யிரங்கணை உந்திச்
               சில்லி ஆழிகள் அறுத்தவன் தேரினைச் சிதைத்தான். ......    275

(ஏறு தேரழிந் திடுத)

ஏறு தேரழிந் திடுதலும் அரிமுகன் இமைப்பின்
     மாறொர் வையமேற் பாய்ந்தனன் வார்சிலை வளைப்ப
          ஆறு மாமுகற் கிளையவன் கணைகளால் அவுணன்
               நூறு பத்தெனுஞ் சிலையையும் அறுத்தனன் நொடிப்பில். ......    276

(வில்லி ழந்தனன் மான)

வில்லி ழந்தனன் மானமும் இழந்தனன் வீரச்
     சொல்லி ழந்தனன் பெருமிதம் இழந்தனன் தொல்சீர்
          எல்லி ழந்தனன் பெருமையும் இழந்தனன் இலங்கும்
               பல்லி ழந்திடு விடவரா ஒத்தனன் பதகன். ......    277

(ஏதி லானொருங் காயி)

ஏதி லானொருங் காயிரஞ் சிலைகளும் இழந்து
     மாது யர்ப்படு நிலைமையை நோக்கியே மறங்கொள்
          பூதர் ஆர்த்தனர் அமரர்கள் ஆர்த்தனர் புரைதீர்
               வேதர் ஆர்த்தனர் முகுந்தரும் ஆர்த்தனர் விண்மேல். ......    278

(ஆயி ரஞ்சிலை ஒரு)

ஆயி ரஞ்சிலை ஒருதலை துணிந்ததும் அமரர்
     நாய கன்தனக் கடியவன் விற்றொழில் நலனும்
          மாய னாதியர் இகழ்ச்சியும் பூதர்தம் வலியுங்
               காயு நெஞ்சுடை மடங்கல்மா முகத்தவன் கண்டான். ......    279

(தேவர் ஆர்ப்பையும்)

தேவர் ஆர்ப்பையும் இந்திரர் ஆர்ப்பையுந் திசையின்
     காவ லாளர்தம் ஆர்ப்பையும் எமையடக் கருதும்
          மூவர் ஆர்ப்பையுஞ் சாரதர் ஆர்ப்பையும் முனிவோர்
               ஏவர் ஆர்ப்பையுந் துன்பினுக் குதவுவன் என்றான். ......    280

வேறு

(தீயா ருக்கோ ரெல்)

தீயா ருக்கோ ரெல்லைய தானான் திறல்மேலான்
     தூயா ருக்கே இன்னல்பு ரிந்தான் தொலைகில்லான்
          தாயாய் முந்தே தம்மை அளித்தாள் தருகின்ற
               மாயா பாசந் தன்னையெ டுத்தான் மறமிக்கான். ......    281

(ஒட்டிப் போர்செய்)

ஒட்டிப் போர்செய் மாற்றலர் தம்மை யொருபாலாற்
     கட்டிக் கொள்ளா ஆருயிர் உண்டு கடிதேகிக்
          கிட்டித் தொல்லை ஞாயிறு தோன்றுங் கிரியுய்த்து
               விட்டுப் பேரா தாண்டுறை கென்னா வீசுற்றான். ......    282

(மறியா நிற்குந் தெண்)

மறியா நிற்குந் தெண்டிரை ஏழும் வந்தொன்றாய்ச்
     செறியா நிற்குங் கொல்லிது என்னத் திசைசூழ்போய்
          எறியா நிற்கும் பாசமி ருட்கோ ரிடமாகிப்
               பொறியா நிற்குந் தீயழல் சிந்திப் புகுந்தன்றே. ......    283

(சேணா டுற்றோர்)

சேணா டுற்றோர் யாரும் இரிந்தார் செருவாற்றல்
     பூணா நிற்கும் பூதரும் யாரும் பொருமுற்றார்
          ஆணா யுற்றோர் யாரினும் மேலோன் அதுதன்னைக்
               காணா ஈதோர் மாயைகொல் என்றே கருதுற்றான். ......    284

(ஆர்ப்பாய் உற்ற தெண்)

ஆர்ப்பாய் உற்ற தெண்டிரை கொல்லோ அஃதன்றேல்
     போர்ப்பான் வந்த பாயிருள் கொல்லோ புயம்வீக்கி
          ஈர்ப்பான் உற்ற நாணது கொல்லோ யாதேனுந்
               தீர்ப்பேன் வல்லே என்று நினைந்தான் திறல்வாகு. ......    285

(ஆற்றான் மற்றிவ் வாறு)

ஆற்றான் மற்றிவ் வாறுதெ ரிந்தே அதுதீர்ப்பான்
     மாற்றா கின்ற தொல்படை தன்னை வாங்காமுன்
          கூற்றாய் நின்றோன் வீசிய பாசங் குழுவோடுங்
               காற்றாய் வந்திங் கியாவரை யுங்கட் டியதன்றே. ......    286

(பல்லோ ராகிப் போர்)

பல்லோ ராகிப் போர்புரி பூதப் படையோரும்
     வில்லோ ராகும் எண்மரும் ஏனை விறலோருந்
          தொல்லோர் கூறும் ஆடல்கொள் மொய்ம்பின் துணையோனும்
               எல்லோர் தாமும் வீக்குறு பாசத் திடையுற்றார். ......    287

(மேற்றான் எய்தி வீக்)

மேற்றான் எய்தி வீக்கிய பாசம் மிடல்வீரர்
     மாற்றா நிற்பர் தொல்லுணர் வோடு மலிவாரேல்
          ஆற்றா ரென்னச் செய்குவன் யானென் றவர்புந்தி
               தேற்றா வண்ணஞ் செய்துள தம்மா சிறுபோழ்தின். ......    288

வேறு

(தொன்னிலை உணர்வு)

தொன்னிலை உணர்வு மாழ்கித் தொல்வலி சிந்திச் சோரும்
     அன்னவர் தொகையை எல்லாம் அந்தர நெறிக்கொண் டேகி
          மின்னென அளக்கர் வாவி மேருமால் வரைபோல் நின்ற
               பொன்னவிர் உதய மென்னும் பொருப்பிடைப் புகுந்த தன்றே. ......    289

(கதிபடர் கின்ற காலி)

கதிபடர் கின்ற காலிற் கருத்தினிற் கடிதின் ஏகித்
     துதியுறு திருவின் கேள்வன் துயில்புரி கடலில் துஞ்சும்
          உதயமால் வரையின் எய்தி உயிர்ப்பிலா துறங்கு கின்ற
               மதவலி வீரர் தம்மை வைத்துடன் இருந்த தன்றே. ......    290

(விழுமிய பூதர் யாரும்)

விழுமிய பூதர் யாரும் வீரரும் விளிந்து வெய்யோன்
     எழுதரும் உதயம் புக்கா ரென்பது தெரிந்து நோக்கிக்
          குழுவொடு பொருது ளாரைக் கொன்றுயிர் குடித்தேன் வல்லே
               அழகிதென் னாற்றல் என்றான் அமரரை அலக்கண் கண்டான். ......    291

(ஓடினான் கொல்லோ)

ஓடினான் கொல்லோ போர்க்கென் றுற்றதும் இலையோ எங்குந்
     தேடினேன் காண்கி லேனால் யாண்டையான் சிறுவன் அம்மா
          சாடினான் சாடி னானென் றுரைப்பது சழக்கோ தம்பி
               வீடினான் அல்ல னோவென் றண்டங்கள் வெடிக்க ஆர்த்தான். ......    292

(கேசரி முகன்இவ்)

கேசரி முகன்இவ் வாறு கிளத்தினன் ஆர்க்கும் எல்லைத்
     தூசியின் முந்து போன தூதுவன் ஒருவன் நண்ணி
          ஆசறு பூத வெள்ளம் ஆயிரத் தோடு செவ்வேள்
               பாசறை இருந்தான் யானும் பார்த்தனன் வந்தேன் என்றான். ......    293

(ஒற்றன துரையைக்)

ஒற்றன துரையைக் கேளா ஒள்ளெயி றிலங்க நக்குப்
     புற்றுறை அரவ மென்னப் புதல்வன்எற் பொருவான் அஞ்சி
          மற்றவண் உறைந்தான் கொல்லோ வல்லையில் யானே ஏகி
               இற்றையோர் கணத்தில் அன்னான் இருஞ்சமர் முடிப்ப னென்றான். ......    294

(என்றனன் படரும்)

என்றனன் படரும் எல்லை இன்னதோர் நிகழ்ச்சி யாவும்
     ஒன்றற நோக்கி வானோர் உயங்கினர் ஓட லுற்றார்
          சென்றனன் அதனை நாடிக் காலெனுந் திறலின் வெய்யோன்
               குன்றெறி நுதிவேல் அண்ணல் குரைகழல் பணிந்து சொல்வான். ......    295

(அத்தகேள் பூத ரோடு)

அத்தகேள் பூத ரோடும் அடுபடைத் தலைவர் ஏகி
     மெய்த்திறற் பெரும்போ ராற்ற வெகுண்டரி முகத்து வெய்யோன்
          கைத்தலத் திருந்த சூழ்ச்சிக் கயிற்றினால் நமரை யெல்லாம்
               எய்த்திட வீக்கி வெய்யோன் உதயத்தில் இட்டா னென்றான். ......    296

(ஆண்டகை வரம்பு)

ஆண்டகை வரம்பு சான்ற அறுமுக னவன்சொற் கேளா
     யாண்டுளான் யாண்டு ளான்அவ் வரிமுகத் தவுணன் என்னத்
          தூண்டிடு கொடித்தேர் மேலோன் சூழ்தரு படையின் சீரான்
               மாண்டிடு பொறியால் இங்ஙன் வருகுவான் போலு மென்றான். ......    297

(என்னலும் நகைத்து)

என்னலும் நகைத்துச் செவ்வேள் அரியணை இருக்கை நீங்கிப்
     பன்மணி குயின்ற செம்பொற் பாதுகை சரணஞ் சேர்த்திப்
          பொன்னவிர் கழல்க ளார்ப்பப் புறங்கடை காறும் போந்து
               தன்னயல் வந்த காலைத் தருதிநந் தேரை யென்றான். ......    298

(ஆறுமா முகத்து)

ஆறுமா முகத்து வள்ளல் அருள்பணி தலைக்கொண் டேகி
     மாறிலா முதல்வன் தந்த வையம் தழைத்து வெங்கால்
          தாறுசேர் கோலும் நாணுந் தாங்கினன் கடாவி உய்ப்ப
               ஏறினான் அதன்மேல் ஐயன் இமையவர் யாரும் ஆர்த்தார். ......    299

(இந்திரன் கவரி சாய்)

இந்திரன் கவரி சாய்ப்ப இமையவர் வட்டம் வீசச்
     சந்திரன் தபனன் என்போர் தண்ணிழற் கவிப்புத் தாங்க
          அந்தகன் உடைவாள் பற்ற இயக்கர்கோன் அடைப்பை கொள்ளச்
               சிந்துநீர் அரசன் செம்பொற் படியகம் ஏந்தச் சென்றான். ......    300

(நாயகன் குமரன் போர்)

நாயகன் குமரன் போர்மேல் நடப்பது தெரிந்து பூதர்
     ஆயிர வெள்ளத் தோரும் ஆர்கலி நாண ஆர்த்துக்
          காயெரி உமிழுஞ் சூலங் கணிச்சிதண் டெழுவு நாஞ்சில்
               மீயுயர் பழுவங் குன்றங் கொண்டனர் விரைந்து சூழ்ந்தார். ......    301

(அடித்தனர் பறைகள்)

அடித்தனர் பறைகள் சங்கம் ஆர்த்தனர் ஐயன் சீர்த்தி
     படித்தனர் பாங்கர் எங்கும் பனமணிக் கவிகை வட்டம்
          பிடித்தனர் தமது வீரம் பேசினர் மூரி யேற்றுக்
               கொடித்தொகை அநந்த கோடி கொண்டனர் குணிப்பில் பூதர். ......    302

(மூவர்கள் முதல்வன்)

மூவர்கள் முதல்வன் வந்தான் முக்கணான் குமரன் வந்தான்
     மேவலர் மடங்கல் வந்தான் வேற்படை வீரன் வந்தான்
          ஏவருந் தெரிதல் தேற்றா திருந்திடும் ஒருவன் வந்தான்
               தேவர்கள் தேவன் வந்தான் என்றன சின்ன மெல்லாம். ......    303

(ஆசறு பூதர் சூழ)

ஆசறு பூதர் சூழ அமரர்வாழ்த் தெடுப்ப ஐயன்
     பாசறைக் களத்தை நீங்கிப் பறந்தலை நிலத்தின் எல்லை
          வீசுறு மருத்து மின்னும் வெள்குற நொடிப்பிற் செல்லக்
               கேசரி முகத்தி னானுங் கிளர்படை யோடு நேர்ந்தான். ......    304

(பருப்புறும் எழுவும்)

பருப்புறும் எழுவும் வான்றோய் பழுவமும் பரசுந் தண்டு
     நெருப்புமிழ் சூல வேலும் நேமியுங் கொழுவுங் குன்றும்
          பொருப்புறழ் பூதர் வீசிப் பொருக்கென அவுணர் தம்மை
               மருப்புயர் களிற்றை மாவை வையத்தை அடுத லுற்றார். ......    305

(குந்தமும் மழுவுந்)

குந்தமும் மழுவுந் தண்டுங் குலிசமும் எழுவுங் கோலும்
     முந்திய கழுமுள் வேலும் முசலமுங் கொழுவுஞ் சங்கும்
          எந்திரக் கவண்வீழ் கல்லும் எஃகமும் பிறவு மெல்லாஞ்
               சிந்திநின் றவுணர் பூதப் படையினைச் செறுத்த லுற்றார். ......    306

(இருதிறப் படைகள்)

இருதிறப் படைகள் தம்மில் இத்திறம் பொருத வெல்லைக்
     குருதிவந் தலைப்ப மார்பு சென்னிதோள் குறைந்து வேறாய்த்
          தரையிடை மறிந்தார் பல்லோர் சங்கரன் விடுத்த மூரல்
               விரிகனல் சிதறிப் பற்ற வெந்துவீழ் புரம தேபோல். ......    307

(கண்டனன் அனை)

கண்டனன் அனைய செய்கை கனல்பொழி பரிதிக் கண்ணான்
     மண்டமர் புரியா நிற்கும் மாற்றலர் தம்மை வாரி
          உண்டனன் எனது சீற்றம் ஒழிக்குவன் ஒல்லை யென்னா
               அண்டமும் திசையும் தானே ஆகவோர் வடிவம் கொண்டான். ......    308

(ஆயிர முடியின்)

ஆயிர முடியின் மௌலி அண்டத்தின் முகட்டை நக்கப்
     பாயிருங் கரங்கள் அண்டப் பாங்கரை அலைப்பப் பாருட்
          போயின பதங்கள் அண்டத் தடியினைப் பூழை செய்ய
               மாயையால் இனைய வாறோர் வடிவுகொண் டார்த்து வந்தான். ......    309

(வந்திடு சீற்றத்)

வந்திடு சீற்றத் துப்பின் மடங்கலின் தோற்றம் நோக்கித்
     அந்தகன் அசைந்து நின்றான் ஆதவன் இரிய லானான்
          இந்திரன் துளக்க முற்றான் எரிபதை பதைத்துச் சோர்ந்தான்
               சிந்தையின் மருட்கை உற்றார் திசைமுகன் முதலாம் தேவர். ......    310

வேறு

(அன்னதொர் எல்லை)

அன்னதொர் எல்லையில் ஆளி முகத்தோன்
     முன்னுறு பூதம் முழங்கொலி நீத்தம்
          என்னதும் அங்கை இராயிரம் ஓச்சி
               உன்னுமுன் வாரினன் உண்டல் பயின்றான். ......    311

(ஈட்டுறு பூதரி ருங்)

ஈட்டுறு பூதரி ருங்குழு வத்தை
     மோட்டுறு சிங்கமு கன்கர முற்றும்
          நீட்டினன் அள்ளுதல் நேமிகள் மாறாய்
               மாட்டுறு கொண்டல்கள் வாருவ போலும். ......    312

(ஆயிர கோடியொ ரங்)

ஆயிர கோடியொ ரங்கையி னாகப்
     போயின பாணிகள் பூதரை அள்ளச்
          சீய முகங்கெழு செம்மல் அகன்பேழ்
               வாய்களில் இட்டு விழுங்கினன் மன்னோ. ......    313

(மீனம தாக வியன்)

மீனம தாக வியன்படை அங்கைக்
     கானுறு குன்று கறித்திற னாக
          வானபல் பூதரை யட்டிடு சாலைப்
               போனக மாமிசைந் தான்புகை வாயான். ......    314

(அண்டமொ ராயிர)

அண்டமொ ராயிர மாங்கொரு பாங்கர்
     விண்டுவெவ் வேறு விளங்குவ போலுங்
          கண்டகன் வெய்யக ணங்களை எல்லாம்
               உண்டிடு கின்ற உலப்பில பேழ்வாய். ......    315

(செப்பரும் வென்றி)

செப்பரும் வென்றிகொள் சீயமு கத்தோன்
     கைப்புகு பூதக ணத்தினர் யாரும்
          அப்பெரு வாய்களின் ஆற்றுறு மாக்கள்
               உப்பிடை சென்றென உற்றனர் அன்றே. ......    316

(தானவன் அங்கை)

தானவன் அங்கை தனிற்படு பூதர்
     மேனிகழ் வாய்தொறு மேவரு பான்மை
          ஊனமில் விண்ணவர் ஊர்தொறும் இம்பர்
               மானவ ரியாரும் வழிக்கொளல் போலும். ......    317

(மண்ணிது அன்றெனி)

மண்ணிது அன்றெனின் வானவர் வைகும்
     விண்ணிது அன்றெனின் வெவ்வசு ரேசர்
          நண்ணுல கீதென நாடினர் தீயோன்
               கண்ணகல் வாயது கண்டிடு பூதர். ......    318

(வாய்க்கொளும் எல்லை)

வாய்க்கொளும் எல்லை மடங்கல் முகத்தோன்
     மூக்குடன் அஞ்செவி மூலமும் வல்லே
          நோக்கினர் இங்கிது நூழைகொல் என்னா
               ஊக்கொடு சிற்சில ரோடினர் போனார். ......    319

(அந்தமில் சீயன்)

அந்தமில் சீயன் அகன்பெரு வாய்போய்க்
     கந்தரம் நீங்கினர் நெஞ்சு கடந்தார்
          உந்திபு குந்தனர் ஒண்புவி யுள்ளோர்
               சிந்துறு கீழ்நிலை சென்றுறு மாபோல். ......    320

(சீயமு கங்கெழு)

சீயமு கங்கெழு செம்மலு யிர்ப்பிற்
     போயினர் உந்தி புகுந்தவர் சில்லோர்
          ஆயிரம் யோசனை யந்தரம் மீண்டு
               மேயினர் அங்கவன் மீண்டவு யிர்ப்பால். ......    321

(வெவ்விட மென்ன)

வெவ்விட மென்ன விளங்கசு ரேசன்
     துவ்விட வேயக டுற்றிடு தொல்லோர்
          அவ்விடம் யாவினும் ஆதியை உன்னற்
               கிவ்விட மேயினி தென்றனர் சில்லோர். ......    322

வேறு

(களித்தவன் மடியுறு)

களித்தவன் மடியுறு கணவ ராயிடைக்
     கிளைத்தனர் கைகளிற் படையிற் கீறினர்
          துளைத்தனர் கெடாமையில் தொல்லை வன்மைபோய்
               இளைத்தனர் ஒருசிலர் யாது செய்வரால். ......    323

(ஆயிரம் வெள்ளமாம்)

ஆயிரம் வெள்ளமாம் ஆடற் பூதரை
     வாயிடைப் பெய்துதன் அகட்டில் வைத்துள
          சீயமா முகத்தவன் செயலைப் பற்கல்
               ஓய்வற மொழியினும் ஒழிதற் பாலதோ. ......    324

(இத்திறம் நிகழ்ந்திட)

இத்திறம் நிகழ்ந்திட ஈண்டு பாரிடர்
     பத்துநூ றெனப்படும் பரவை நீத்தமுங்
          கைத்தலம் வாரினன் கயவன் மோட்டினுள்
               வைத்தலுங் கண்டனர் வானு ளோரெலாம். ......    325

(எண்கெழு பூதரை)

எண்கெழு பூதரை நுங்கி னான்இனி
     மண்கெழு பொருளெலாம் வாரி நுங்குமால்
          விண்கெழு நம்மையும் விரைவிற் பற்றியே
               உண்குவன் எனமருண் டும்ப ரோடினார். ......    326

(நேடிய ஒற்றுவர்)

நேடிய ஒற்றுவர் நின்றி லார்விரைந்
     தோடினர் அவுணர்கோன் உபயத் தாள்மலர்
          சூடினர் சென்னியில் தொழுத கையினர்
               மாடுறு பலசன மகிழக் கூறுவார். ......    327

(ஏதமில் அரிமுக)

ஏதமில் அரிமுகத் திளவல் கந்தவேள்
     தூதனைப் பிறர்தமைத் தொலைவில் பூதரில்
          பாதியை நாண்வலைப் படுத்து வீட்டியே
               ஆதவன் எழுகிரி யகத்தர் ஆக்கினான். ......    328

(ஈங்கிது வினவியே)

ஈங்கிது வினவியே ஈசன் தன்மகன்
     தாங்கிய வேலொடு சமரின் ஏற்றிட
          ஓங்குமோர் வடிவுகொண் டுனது பின்னவன்
               ஆங்கெதிர் பூதரை அள்ளி நுங்கினான். ......    329

(இவ்வரை நிகழ்ந்தன)

இவ்வரை நிகழ்ந்தன இனைய இத்துணை
     மைவரு மிடற்றினன் மதலை யோடுபோர்க்
          கவ்வையை இயற்றிடுங் கன்னல் ஒன்றினில்
               தெவ்வர்கள் இலரெனச் செய்து மீளுமால். ......    330

(என்னலும் அரியணை)

என்னலும் அரியணை இகந்து போய்த்தழீஇ
     நன்னய மொழிபல நவின்று தூதுவர்
          உன்னினர் விழைந்தசீர் உதவி மன்னவன்
               தன்னுழை ஒருவனை நோக்கிச் சாற்றுவான். ......    331

(கந்தனொ டரிமுகன்)

கந்தனொ டரிமுகன் கனன்று போர்செய்வான்
     முந்துள தானையின் முடியும் பற்பல
          இந்தநன் னகருறை படைகள் யாவையும்
               உந்துதி ஆயிடை ஒல்லைநீ யென்றான். ......    332

(சாற்றிய வுரைகொடு)

சாற்றிய வுரைகொடு தாழ்ந்து கம்மியன்
     காற்றென ஏகியே கறங்கு தானையுட்
          போற்றலன் அமரிடைப் போமின் போமினென்
               றேற்றுரி முரசினை எறிவித் தானரோ. ......    333

(பணையொலி கேட்ட)

பணையொலி கேட்டலும் பதியுள் வைகிய
     இணையறு தானைகள் வெள்ளம் யாவையும்
          மணிகெழு வகுப்புடன் ஆர்த்துச் சென்றுசூர்த்
               துணையவன் அமர்புரி சூழல் புக்கவே. ......    334

(அம்புதி யாமென)

அம்புதி யாமென அனிகஞ் சென்றுழித்
     தும்பையஞ் சிகழிகைச் சூரன் என்பவன்
          எம்பிதன் போர்வலி காண்பன் யானெனாச்
               செம்பொனந் தவிசினுந் தீர்ந்து போயினான். ......    335

(தன்பெரு மந்திர)

தன்பெரு மந்திர நடுவண் தங்கிய
     கொன்பெருஞ் சிகரியாம் மேருக் குன்றின்மேல்
          இன்புறு திருவொடும் ஏறி னானரோ
               பொன்புனை இதயமேல் இரவி புக்கென. ......    336

(தாதவிழ் தார்முடித்)

தாதவிழ் தார்முடித் தம்பி கொண்டதோர்
     மேதகு வடிவமுந் தமியன் வேளுறப்
          பூதர்கள் உண்டியாய்ப் போன தன்மையுங்
               காதலின் அவுணர்கோன் கண்ணின் நோக்கினான். ......    337

(வருமித மென்றுமன்)

வருமித மென்றுமன் னுயிர்கட் கல்லல்செய்
     கருமித வழிக்கொரு கனலில் தோன்றினான்
          பெருமிதம் விம்மிதம் பெரிதும் எய்தினான்
               உருமித மாமென நகைக்கும் ஓதையான். ......    338

(இங்கிவன் நின்றிட)

இங்கிவன் நின்றிட இதற்கு முன்னரே
     சங்கையில் பாரிடத் தானை முற்றவுஞ்
          சிங்கமா முகத்தவன் நுகருஞ் செவ்வியின்
               அங்குறும் அறுமுகன் அதனை நோக்கினான். ......    339

(ஒருத்தனை யாகியே)

ஒருத்தனை யாகியே உலகெ லாமடும்
     நிருத்தன தருள்மகன் நேர லாரொடுஞ்
          செருத்தொழில் புரிவதோர் சிறிய ஆடலைக்
               கருத்திடை உன்னினன் கணிப்பில் ஆற்றலான். ......    340

வேறு

(செய்ய தாமரை வனங்க)

செய்ய தாமரை வனங்களுஞ் செங்கதிர்த் தொகையும்
     ஐய சேயொளி ஈன்றிருந் தென்னஆ றிரண்டு
          கையும் மூவிரு முகங்களும் உடையவன் காலோன்
               வையம் உந்திட அடுதொழில் இயற்றுவான் வந்தான். ......    341

வேறு

(வந்திடு கின்ற காலை)

வந்திடு கின்ற காலை வயப்பெரும் பூதர் யாரும்
     அந்தமுற் றதனை யோரா அடுகரி பரிதோர் செற்ற
          வெந்திறல் அவுணர் கோன்றன் மேதகு படைஞர் முற்றுங்
               கந்தவேள் தன்னைச் சூழ்ந்தார் கனலிசூழ் கடலே யென்ன. ......    342

(சூழ்தரும் அவுண வீரர்)

சூழ்தரும் அவுண வீரர் தொலைவில்தம் படைகள் முற்றும்
     ஊழ்தரும் உருமிற் பெய்ய உலகுடை முதல்வன் காணாக்
          காழ்தரு மேரு அன்ன கார்முகம் ஒன்று வாங்கி
               வீழ்தரும்அருவி போலும் வியன்குணத் தோதை கொண்டான். ......    343

(ஆயிர கோடி ஞால)

ஆயிர கோடி ஞாலத் தண்டங்கள் வெடித்த மற்றைப்
     பாயிரும் புனலின் அண்டப் பத்திகள் பகிர்ந்த பாங்கர்
          தீயழல் அண்டங் கீண்ட செறிமருத் தண்டம் விண்ட
               மீயுயர் வெளிமூ தண்டம் வெய்தென உடைந்த அன்றே. ......    344

(அப்பெரு நாணின்)

அப்பெரு நாணின் ஓதை அரிமுகன் தானை மள்ளர்
     செப்புறு கேள்வி யாற்றுஞ் செவிப்புலம் புகுத லோடுங்
          கைப்படை சிந்தி வீழ்ந்தார் கவிழ்ந்தன களிறு மாவும்
               ஒப்பில்சீர் அருளித் தேர்கள் ஒல்லென உடைந்த அன்றே. ......    345

(மூரிவிற் கொண்ட)

மூரிவிற் கொண்ட நாணின் முழக்கினை வினவி யற்றால்
     பாரிடைக் கவிழ்ந்த தானைப் பரப்பையும் நோக்கி நின்றான்
          ஆரிதைப் புரியும் நீரார் அரன்மகன் இவனாம் முன்னம்
               தாரகற் கடந்தான் என்கை சரதமே போலு மென்றான். ......    346

(வாலுளை அலங்கு)

வாலுளை அலங்கு நெற்றி மடங்கலோன் இனைய கூறிப்
     பாலகன் வன்மை யானே படுத்தனன் மீள்வ னென்னாக்
          காலுடை நெடுந்தே ரோடுங் கையனோர் கணத்தின் நேர்ந்து
               வேலுடை அண்ணல் தன்னை நோக்கினன் விளம்ப லுற்றான். ......    347

(கண்ணுதல் முதல்)

கண்ணுதல் முதல்வன் மைந்த கழறுவன் ஒன்று கேண்மோ
     எண்ணலர் வலியை மாற்றல் இறையவர் கடனே அற்றால்
          விண்ணவர் தமைத்தண் டித்தோம் அவர்க்குளும் அல்லை வேறோர்
               நண்ணலன் எமருக் கில்லை நடந்ததென் னமருக் கென்றான். ......    348

(உறைதரும் அளியன்)

உறைதரும் அளியன் தன்னை வலியவன் ஒறுக்கின் நாடி
     முறைகெழு தண்ட மாற்றி அண்டங்கள் முழுவ துக்கும்
          இறையினைப் புரிதும் அற்றால் நீவிர்கள் இமையோர்க் கிட்ட
               சிறையினை அகற்ற வந்தேஞ் செருவுமத் திறத்துக் கென்றான். ......    349

(எங்கள்நா யகமா யுள்ள)

எங்கள்நா யகமா யுள்ள இறையவன் இனைய கூறச்
     சிங்கமா முகத்து வீரன் உருமிடி திளைத்த தொப்ப
          அங்கையோ டங்கை தாக்கி அண்டமுங் குலுங்க நக்குப்
               பொங்குவெஞ் சீற்ற மேலான் இங்கிவை புகலல் உற்றான். ......    350

(ஈங்கெமர் தமையும்)

ஈங்கெமர் தமையும் வென்றாய் இமையவர் சிறையும் இன்றே
     நீங்கினர் ஆவர் நீயும் நீக்குதி போலும் போலும்
          நாங்களும் அளியர் தாமே நன்றுநின் சூழ்வே ஆற்றல்
               ஓங்கிய துனது மாட்டே உண்மையி தன்றி யுண்டோ. ......    351

(இந்திர குமரன் தன்)

இந்திர குமரன் தன்னை இமையவர் குழுவை வாரி
     வெந்தளை மூழ்கு வித்து வீட்டிய சிறையை நீக்கல்
          சந்திர மௌலி அண்ணல் தன்னினும் முடியா தென்றால்
               மைந்தன்நீ ஒருவன் கொல்லோ முடித்திட வல்லை மன்னோ. ......    352

(கண்ணுதல் உனக்கு)

கண்ணுதல் உனக்குத் தந்த காமரு சுடர்வேல் ஆற்றல்
     எண்ணலன் மறலி யாகி இகழ்ந்துபோர் இயற்றி னானை
          உண்ணிகழ் ஆவி கொண்டாய் ஓடினால் உய்தி ஈண்டு
               நண்ணிய தன்மை எங்கண் நல்வினை தந்த தன்றே. ......    353

(கடம்பமர் கண்ணி)

கடம்பமர் கண்ணி யாய்கேள் கடவுள்வேல் கொண்ட ஆற்றல்
     திடம்படு நினது வன்மை யாவையுந் தெரிதந் துள்ளேன்
          தடம்படு குவவுத் திண்டோள் தாரகன் போல ஞாட்பின்
               மடம்படு கின்ற தில்லை வல்லைபோர் புரிதி மாதோ. ......    354

(பொருதிறல் வயவர்)

பொருதிறல் வயவர் யாரும் பூதரிற் பலரும் மாய்ந்தே
     எரிகதிர் உதயம் புக்கார் ஏனையோர் நீயுங் காண
          விரைவில்என் அகடு சேர்ந்து விளிந்தனர் தமியன் நின்றாய்
               செருவினை இழைத்தும் என்னும் ஊக்கமே சீரி தம்மா. ......    355

(தாதவிழ் தருவின்)

தாதவிழ் தருவின் நீழற் சயந்தனை அமரர் தம்மைத்
     தீதுறு சிறையின் நீக்கச் சென்றநீ துணைவ ரோடு
          பூதர்தந் தொகையை வாளா போக்கினை தமியன் நின்றாய்
               ஊதியம் இதன்மேல் உண்டோ உனக்கிது கிடைத்த தன்றே. ......    356

(முனைகெழு சமரின்)

முனைகெழு சமரின் வந்து முடிந்தனர் முடிவி லாதார்
     இனைவொடு புறந்தந் தேகி இரிந்துளார் தொகையும் அஃதே
          அனையதை உணராய் கொல்லோ அமர்குறித் தீண்டு வந்தாய்
               கனவினும் விடுவ துண்டோ கடவுளர் சிறையை என்றான். ......    357

(என்றசொல் இறுக்கு)

என்றசொல் இறுக்கு முன்னம் இராறுதோ ளுடைய வள்ளல்
     நன்றிவன் கொண்ட தென்னா நகைசெய்து சிலையிற் பூட்டி
          ஒன்றொரு வயிர வாளி ஒல்லெனத் துரப்பத் தீயோன்
               பொன்றிகழ் மருமம் புக்குப் புறத்துரீஇப் போய தன்றே. ......    358

(அருவிய னாக முள்)

அருவிய னாக முள்ளான் அகன்பெரு விழிகட் கூறாய்
     அருவிய னாக மன்ன அரிமுகன் ஐயன் செங்கோல்
          அருவிய னாக மூழ்க அலக்கணுற் றிழியுஞ் செந்நீர்
               அருவிய னாக நின்றான் அமரர்மற் றதுகண் டார்த்தார். ......    359

(கற்றையங் கதிர்வேல்)

கற்றையங் கதிர்வேல் அண்ணல் காமரு பகழி பாய
     மற்றவன் புறனும் மார்பும் வாயில்க ளாத லோடு
          மற்றது நோக்கித் தீயோன் அகட்டுறை கணங்கள் முற்றும்
               புற்றெழு சிதலை யென்ன அந்நெறி துருவிப் போந்த. ......    360

(உய்குறு கணத்தின்)

உய்குறு கணத்தின் தானை உந்தியை ஒருவி வாளி
     செய்குறு வாயில் நீங்கித் தெழிப்பொடு புறத்திற் போக
          மைகிளர் புந்தி வெய்யோன் மற்றது கண்டு சீறிக்
               கைகொடு நெறியை மாற்றிக் கந்தன்மேல் ஒருதண் டுய்த்தான். ......    361

(அண்டம்விண் டது)

அண்டம்விண் டதுகொல் என்ன அணிமணித் தொகுதி ஆர்ப்பத்
     தண்டம்வந் திடுத லோடுந் தன்னிகர் இல்லா அண்ணல்
          கண்டனன் இமைப்பில் நான்கு கணைதொடக் கதையைச் சிந்தி
               ஒண்டிறற் சூரன் பின்னோன் நெற்றிபுக் கொளித்த அன்றே. ......    362

(ஒளித்திடு கின்ற)

ஒளித்திடு கின்ற காலை உருகெழு மடங்கற் பேரோன்
     களித்திடல் ஒருவி மேலைக் கடுஞ்சினக் கோட்புச் சிந்தித்
          தெளித்திடும் உணர்வும் இன்றிச் செய்யகோல் செலுத்து மன்ன
               அளித்திட லொழிந்த காலத் துலகம்போல் அழுங்கி நின்றான். ......    363

வேறு

(பேர்ந்திடும் உணர்)

பேர்ந்திடும் உணர்வொடும் பிரிவில் துன்பொடும்
     சேர்ந்திடும் அரிமுகத் தீயன் நின்றுழி
          வார்ந்திடு குருதிதோய் வாயில் மூடுகை
               சோர்ந்தன அருள்வரத் தொலைந்த மாயைபோல். ......    364

(அறந்தவிர்ந் தொழு)

அறந்தவிர்ந் தொழுகினோன் ஆகந் தன்னிடைத்
     திறந்திடு நெறிகளால் சிறையின் வைப்பொரீஇப்
          பறந்திடு புள்ளெனப் படர்ந்து கந்தவேள்
               புறந்தனில் வந்தன பூதம் யாவுமே. ......    365

(அன்றரி முகத்தவன்)

அன்றரி முகத்தவன் அலைத்து நுங்கின
     கொன்றன எறிந்தன கூளி யாவையும்
          வென்றிகொள் வேற்படை விமலன் ஆணையால்
               துன்றிவந் தடைந்தன தொன்மை கூடியே. ......    366

வேறு

(அன்னதொரு காலை)

அன்னதொரு காலை அறுமா முகக்கடவுள்
     தன்னிகரி லாத தனக்கிளையோர் தங்களையும்
          துன்னலுறு பூதத் தொகையோர்கள் யாவரையும்
               உன்னியவர் தம்பால் ஒருகோல் தொடுத்தனனே. ......    367

(உந்தும் பகழி உததி)

உந்தும் பகழி உததி பலகடந்து
     முந்துங் கதிருதயம் முன்னுற்று மொய்ம்பர்தமைப்
          பந்தம் கொடுசூழ்ந்த பாசவலை சிந்திடலுங்
               கந்தன் தனதருளாற் கண்டுயில்வார் போலெழுந்தார். ......    368

(பாசத் தளையிற் படு)

பாசத் தளையிற் படுவார் அதுநீங்கி
     மாசற்ற நல்லுணர்வு வந்தெய்த உய்ந்தனராய்ப்
          பேசற் கரியஇன்பம் பெற்றோர்கள் தாமாகி
               ஈசற் கினியான் இணையடிகள் வாழ்த்தெடுத்தார். ......    369

(ஆங்கதுகா லத்தில்)

ஆங்கதுகா லத்தில் அறுமுகவேள் உய்த்தகணை
     பூங்கமலத் தோனுதவு புட்பகத்தின் மாட்சியதாய்த்
          தீங்கிலிள மைந்தர்தமைச் சேனை யொடுமுகந்து
               தாங்கி விசும்பின் தலைக்கொண்டு சென்றதுவே. ......    370

(என்று திகழ்வெற்பை)

என்று திகழ்வெற்பை இகந்தேழ் கடல்நீங்கிச்
     சென்று கடிது செருநிலத்திற் சேனையொடு
          நின்ற குமரன் நெடுந்தாள் முனமுய்த்துத்
               துன்று கணைபொதிந்த தூணியிடைப் புக்கதுவே. ......    371

(அந்த அமையத்தில்)

அந்த அமையத்தில் அடல்வீர மொய்ம்பினனும்
     இந்திரனும் போற்றும் இலக்கருடன் எண்மர்களும்
          அந்தமி லாப்பூத அனிகங் களும்அளியால்
               கந்தன் இணையடிகள் கைதொழுது தாழ்ந்தனரே. ......    372

(நீக்கம் பெறாதுயிர்)

நீக்கம் பெறாதுயிர்க்குள் நின்றானைத் தொல்வறிஞன்
     ஆக்கம் பெற்றென்ன அடிவணங்கிப் போற்றுதலும்
          வீக்குங் கனைகழற்கால் வீரர் தமைநோக்கித்
               தேக்குங் கருணையினால் ஈதொன்று செப்பினனால். ......    373

(தொக்கீர் அவுணன்)

தொக்கீர் அவுணன் தொடுமாயைச் சூழ்வலையில்
     புக்கீர் புலர்ந்தீர் புலன் அழிந்தீர் யாப்புறவும்
          தக்கீர் உதயந் தனிற்புகுந்தீர் இவ்வாறு
               மிக்கீரும் நொந்தீர்கள் போலும் மிகவென்றான். ......    374

(முந்தை உணர்வு)

முந்தை உணர்வு முடிந்தாலென் னாருயிர்போய்
     அந்த நிரயத் தழுந்தி அயர்ந்தாலென்
          வெந்துயரம் மூழ்கி வினைப்பிறவி புக்காலென்
               எந்தை அருளுண்டேல் எமக்கென் குறையென்றார். ......    375

(ஆங்காகும் எல்லை)

ஆங்காகும் எல்லை அருமறையுந் தேறரிய
     ஓங்கார மூலத் துணர்வாய் உறைபகவன்
          நீங்கா நெறியான் நிறைபே ரருள்புரியப்
               பாங்காக நின்ற பரிசனர்கள் போற்றினரே. ......    376

வேறு

(அன்னதொ ரமைதி)

அன்னதொ ரமைதியில் அண்ணல் வார்சிலை
     துன்னுறு நாணொலி கேட்டுச் சோர்வுறா
          முன்னுற வீழ்படை முதல்வன் ஆடலை
               உன்னுறு செய்கையால் எழுந்த ஒல்லையில். ......    377

(ஈங்கிவன் ஒருமகன்)

ஈங்கிவன் ஒருமகன் எமையெ லாஞ்சிலை
     தூங்கிய நாணினால் தொலைக்குங் கொல்லெனாத்
          தாங்கிய படையுடைத் தகுவர் தானைகள்
               தீங்கனல் பரந்தெனச் சினங்கொண் டார்த்தவே. ......    378

(ஆழிமால் கடல்புரை)

ஆழிமால் கடல்புரை அவுண மாப்படை
     காழுலாம் பலபடைக் கலமுஞ் சிந்தியே
          ஊழிநாள் எல்லையின் உலகெ லாமடுங்
               கேழிலான் மதலையைக் கிளர்ந்து சூழ்ந்தவே. ......    379

(சுற்றிய வேலையின்)

சுற்றிய வேலையின் முறுவல் தோன்றிட
     நெற்றியங் கண்ணுடை நிமலன் மாமகன்
          கொற்றவெஞ் சிலையினைக் குனித்துப் பூட்டியே
               செற்றிய கணைமழை சிதறி னானரோ. ......    380

(அங்கியின் வடிவின)

அங்கியின் வடிவின ஆலம் போல்வன
     கங்குலை நிகர்ப்பன காலற் கொப்பன
          பொங்கிய வெஞ்சினப் புயங்கம் நேர்வன
               செங்கதிர் மலைவன செம்மல் வாளியே. ......    381

(மின்னினுஞ் சுடரின)

மின்னினுஞ் சுடரின உருமின் வெய்யன
     பொன்னுறழ் நிறத்தன மணியின் பொற்பின
          மன்னிய வானவில் மாறு கொள்வன
               பன்னிறம் படைத்தன பகவன் வாளியே. ......    382

வேறு

(சூலம் போல்வன)

சூலம் போல்வன தோமரம் போல்வன சுடர்வாய்
     ஆலம் போல்வன நாந்தகம் போல்வன அடல்வேற்
          கோலம் போல்வன கழுமுளும் போல்வன குலிச
               சாலம் போல்வன ஆறுமா முகன்விடு சரங்கள். ......    383

(அறத்தை நல்கலின்)

அறத்தை நல்கலின் அந்தணன் போல்வன அகிலத்
     திறத்தை அன்பொடு போற்றலிற் செங்கண்மால் போல்வ
          ஒறுத்து மன்னுயிர் உண்குறும் அவுணரை ஒருங்கே
               இறுத்தல் செய்திடுந் தன்மையால் ஈசனே போல்வ. ......    384

(காற்றிற் செவ்விதிற்)

காற்றிற் செவ்விதிற் செல்வன கறங்குவ கடுங்கட்
     கூற்றிற் கொப்பன மனத்தினுங் கடியன கொடுந்தீ
          நூற்றுக் கோடிகள் அணுகினும் விசையினால் நொய்தின்
               மாற்றத் தக்கன குமரவேள் விடுத்திடும் வாளி. ......    385

(ஒன்று தொட்டிடிற்)

ஒன்று தொட்டிடிற் கோடியாம் ஒல்லையில் அவையுந்
     துன்று கோடிமேற் கோடியாம் மேலுமத் தொகையே
          அன்றி யாரதற் கெண்கொடுத் துரைப்பவர் அநந்தம்
               என்று சொல்வதே முருகவேள் தொடுங்கணைக் கிலக்கம். ......    386

(கார்பி ளந்திடும்)

கார்பி ளந்திடும் அளக்கரை உண்டிடுங் கதிரோன்
     தேர்பி ளந்திடும் வடவையை விழுங்குறுந் தேவர்
          ஊர்பி ளந்திடும் மேருவைப் பிளந்திடும் உலவாப்
               பார்பி ளந்திடும் ஞானநா யகன்விடும் பகழி. ......    387

(வரைகி ழிப்பதும்)

வரைகி ழிப்பதும் புவியினைப் பிளப்பதும் வரம்பில்
     திரைக டற்குடித் திடுவதும் பிறவுமோர் சிறப்போ
          அரிய வாயிர கோடியண் டங்களாம் அனைத்தும்
               உருவி நிற்கில பின்னரும் ஓடுமென் றுரைக்கின். ......    388

(தொடுநெ டுங்க)

தொடுநெ டுங்கணை இவ்வகை செறிதலுஞ் சூழ்வார்
     அடிது ணிந்தன கைத்தலந் துணிந்தன அணிதோள்
          முடிது ணிந்தன உரந்துணி வுற்றன முகில்தோய்
               கொடிது ணிந்தன இரதமுந் துணிந்தன குலைந்தே. ......    389

(கரைகள் பட்டென)

கரைகள் பட்டென அவுணர்கள் பட்டனர் கடலின்
     நிரைகள் பட்டெனக் களிறுகள் பட்டன நிரந்த
          திரைகள் பட்டெனப் புரவிகள் பட்டன செறிந்த
               வரைகள் பட்டெனப் பட்டன அளவைதீர் மான்தேர். ......    390

(ஒப்புக் கொண்டிடா)

ஒப்புக் கொண்டிடா மேலையோன் ஒன்றை ஒன்றாக்குந்
     துப்புக் கொண்டிடும் அற்புதம் உணர்ந்தவன் தொன்னாள்
          வைப்புக் கொண்டபா ரண்டங்கள் முழுவதும் வரம்பில்
               அப்புக் கொண்டதோ ரண்டமே ஆக்கிய அதனால். ......    391

(செப்பு றத்தகும்)

செப்பு றத்தகும் விம்மிதம் அன்றிது தேவர்
     எப்பு றத்தருங் காண்கிலார் எம்பிரான் கணைகள்
          ஒப்பு றத்தரும் அண்டத்தின் தொகையெலாம் உரீஇப்போய்
               அப்பு றத்தினில் இடுவன அவுணர்தந் தலைகள். ......    392

(மூரி யண்டலர் யாக்)

மூரி யண்டலர் யாக்கைகள் எடுத்துடன் முடுகிப்
     பாரி யண்டங்கள் ஆயிர கோடியும் பகிர்ந்து
          வாரி யண்டங்கள் இடையிடை சிந்திமற் றவற்றைச்
               சோரி யண்டங்கள் ஆக்குவ அண்ணல்தொல் கணைகள். ......    393

(ஒண்டு ளிப்படு குருதி)

ஒண்டு ளிப்படு குருதியும் அவுணர்கள் உரமுங்
     கண்ட துண்டமுஞ் சென்னியுந் தோள்களுங் கரமும்
          முண்ட மாங்கரி பரிகளும் விளிந்ததேர் முற்றும்
               அண்டம் எங்கணுஞ் செறிந்தன அட்டிய திறம்போல். ......    394

(புள்ளு லாவுவேல்)

புள்ளு லாவுவேல் அறுமுகன் பகழிபோர் புரிந்த
     மள்ளர் மாப்படை அலைப்பதோ அரிதுவல் விரைவால்
          அள்ளல் வாரிசூழ் ஆயிர கோடியண் டத்தின்
               உள்ள தானவர் தம்மையும் முடிவுசெய் துலவும். ......    395

(குமர நாயகன் தொடு)

குமர நாயகன் தொடுசரம் நிரத்தலுங் குளிர்ந்த
     கமல மாமலர் முகைபொரு முகத்தினர் கரத்தர்
          தமர நேமிகொள் புகழ்ச்சியர் வணங்குறு தலையர்
               அமரர் யாவரும் வானிடைப் பிழைத்துநின் றார்த்தார். ......    396

(கங்க முற்றன கொடி)

கங்க முற்றன கொடிபிற வுற்றன கவந்த
     சங்க முற்றன குணங்கரும் உற்றன தகுவர்
          அங்கம் இற்றன கரிபரி இரதமிற் றனவால்
               சிங்க மாமுகன் ஒருவனும் நின்றனன் செருவில். ......    397

(மீயு யர்ந்துசூழ் அண்ட)

மீயு யர்ந்துசூழ் அண்டத்தின் அளவெலாம் விரவ
     மாய வன்மையிற் கொண்டிடு பெருந்தகை வடிவந்
          தூயன் வாளிகள் பட்டுணர் வழிதலால் தொலைந்து
               சீய மாமுகன் தொன்மைபோல் நின்றனன் தேர்மேல். ......    398

(நின்ற தீயவன் தானு)

நின்ற தீயவன் தானுறும் அயர்ச்சியை நீங்கிச்
     சென்ற தன்படை யாவையுங் கண்டிலன் சிறுவன்
          கொன்று வீட்டின னென்பது தெரிந்துளங் கொதியா
               ஒன்று போலவோ ராயிரஞ் சிலைகள்கொண் டுற்றான். ......    399

(அலைவ ளைந்தபாற்)

அலைவ ளைந்தபாற் கடல்மிசைப் பத்துநூ றம்பொன்
     மலைவ ளைந்தமர் தன்மைபோன் மன்னன்மாட் டன்றித்
          தலைவ ளைந்திடா அரிமுகன் தனதுகைத் தலத்தால்
               சிலைவ ளைந்திடக் குனித்தனன் சுடுசரந் தெரிந்தான். ......    400

வேறு

(சீய மாமுகன் செஞ்சி)

சீய மாமுகன் செஞ்சிலை பூட்டிநூ
     றாயி ரப்பத் தடுசரம் ஏவலும்
          நாய கன்னது கண்டு நகைப்புறா
               ஓய்வில் வாளியொ ராயிரந் தூண்டினான். ......    401

(ஆற்றல் மேதகும்)

ஆற்றல் மேதகும் ஆயிரம் வாளியால்
     மாற்ற லன்கணை மாரி விலக்கியே
          சாற்று தற்கரி தாகிய தன்மையான்
               வீற்றும் ஆயிரம் வெங்கணை யுந்தினான். ......    402

(உந்து கோலையொ)

உந்து கோலையொ ராயிரம் வாளியாற்
     சிந்தி யேதிறற் சிங்கமு காசுரன்
          ஐந்து நூறிரண் டாயிரம் வெங்கணை
               எந்தை மேல்வர ஏவினன் என்பவே. ......    403

(பதகன் வாளிகள்)

பதகன் வாளிகள் பத்திலக் கத்தையும்
     நுதிகொள் வெங்கணை நூறுபத் தாயிரங்
          கதுமெ னத்தொடுத் தேமறை காண்கிலா
               அதிர்க ருங்கழல் அண்ணல் அகற்றினான். ......    404

(திருத்த குந்திறற் சீய)

திருத்த குந்திறற் சீய முகத்தினான்
     உருத்து வாளியொ ராயிரந் தூண்டுறாப்
          பரத்தின் மேற்படு பண்ணவன் தேர்விடு
               மருத்தின் மார்புற வல்லை அழுத்தினான். ......    405

(ஆர ழற்சினத் தாள)

ஆர ழற்சினத் தாளரி மாமுகன்
     கூரு டைக்கணை நெஞ்சு குளித்திட
          மாரு தப்பெய ரோன்வலி சிந்திடாச்
               சோரி மிக்கெழத் துன்புற எய்தினான். ......    406

(பாகு பட்ட பருவர)

பாகு பட்ட பருவரல் நோக்கியே
     வாகை அண்ணல் வரிசிலை கால்வளைஇ
          ஏக நூறு பகழிதொட் டெண்ணலன்
               சேகை மாண்கொடித் தேரினை வீட்டினான். ......    407

(தேர ழிந்திடத் தீய)

தேர ழிந்திடத் தீயரின் தீயவன்
     ஊர ழிந்த உடுபதி போன்றுளான்
          கார ழிந்திடக் கல்லென ஆர்ப்புறாப்
               பாரி ழிந்தனன் பல்கணை வீசினான். ......    408

(வீசு கின்ற வியன்கணை)

வீசு கின்ற வியன்கணை யாவையும்
     மாசில் காட்சியன் வாளியின் மாற்றிடா
          ஆசில் வெஞ்சரம் ஆயிரந் தூண்டியே
               நீசன் விற்களை நீள்நிலஞ் சேர்த்தினான். ......    409

(அண்டலன் கொண்ட)

அண்டலன் கொண்ட ஆயிரஞ் சாபமுந்
     துண்ட மாகித் தொலைந்து நிலம்புக
          விண்டு நான்முகத் தோனும் விண்ணோர்களுங்
               கண்டு நின்று கரமெடுத் தார்த்தனர். ......    410

(கோலு மிழ்ந்த குனி)

கோலு மிழ்ந்த குனிசிலைக் கூட்டறக்
     கால வெவ்வழல் என்னக் கனன்றுளான்
          சூல மொன்று துளக்கினன் வீசினான்
               ஆல காலம் அளக்கர்உய்த் தாலென. ......    411

(துன்ன லன்விடு சூல)

துன்ன லன்விடு சூலத்தை ஏழிரு
     கொன்னு னைக்கணை தூண்டிக் குறைத்திடாப்
          பின்னும் ஆயிரம் பேரழற் புங்கவ
               மின்னெ னத்துரந் தான்அடல் வேலினான். ......    412

(கொண்ட வேற்கைக்)

கொண்ட வேற்கைக் குமரன் சரங்களைக்
     கண்டு தீயன் கனன்று கரந்தனில்
          தண்டம் ஒன்றில் தரைபடச் சிந்தியே
               அண்டம் விண்டிட ஆர்த்தனன் ஏகினான். ......    413

(விடுத்த வாளி பொடி)

விடுத்த வாளி பொடித்ததும் வெவ்வியோன்
     பிடித்த தண்டொடு பேர்வதுங் காண்குறா
          வடித்த ஏழ்கணை தூண்டினன் வன்கதை
               எடுத்த கையை இருநிலஞ் சேர்த்தினான். ......    414

(சேர்த்து முன்னுறத்)

சேர்த்து முன்னுறத் தீயவன் தோளினும்
     பேர்த்தும் ஆங்கொர் பெருங்கை புறப்படப்
          பார்த்த லம்புகு தண்டினைப் பற்றியே
               ஆர்த்து வீசினன் ஆதியந் தேவன்மேல். ......    415

(ஒட்ட லன்தொட)

ஒட்ட லன்தொட உற்றதண் டத்தின்மேல்
     நெட்ட ழற்கு நிகர்கணை ஆயிரம்
          விட்ட றுத்தனன் மேல்வரு பாந்தளை
               அட்டி டுங்கதிர் ஆதவன் என்னவே. ......    416

(அண்டர் நாயகன் ஆயிர)

அண்டர் நாயகன் ஆயிரம் வாளியால்
     தண்டம் வீழத் தடிதலும் மாற்றலன்
          கண்டு சீறிக் கடுந்திறல் கூற்றிடைப்
               பண்டை நாட்கொண்ட பாசத்தை வீசினான். ......    417

(சுற்று பாசத் தொடர்)

சுற்று பாசத் தொடர்ச்சியை நோக்கிவேள்
     செற்றொ ராயிரந் தீக்கணை தூண்டலும்
          வற்றல் மாண்கொடி வன்னியின் தீச்சுடர்
               உற்ற தாமென ஒண்பொடி யாயதே. ......    418

வேறு

(நாணற் றதுகண் டன)

நாணற் றதுகண் டனன்நா ணுறுவான்
     ஏணுற் றிடுசே யையிரா யிரமாம்
          பாணித் தொகையைக் கொடுபற் றிடுவான்
               பேணிச் சினமோ டுபெயர்ந் தனனே. ......    419

(சிங்கத் திறலோன்)

சிங்கத் திறலோன் வருசெய் கைதனை
     எங்கட் கிறைநோக் கியிரா யிரமாம்
          வெங்கட் கணையா யினவிட் டவுணன்
               அங்கைத் தொகையா வுமறுத் தனனே. ......    420

(கொற்றங் கெழுவுற்)

கொற்றங் கெழுவுற் றகுகன் கணையால்
     செற்றந் திகழ்ஆ ளரிசெய் யகரம்
          அற்றம் புவிவீ ழுமுன்அங் கைநிரை
               முற்றும் புதிதா கமுளைத் தனவே. ......    421

(அற்றுப் புவிவீழ் தரு)

அற்றுப் புவிவீழ் தருமங் கைகளை
     மற்றத் துணைவந் தெழுமாண் கைகளால்
          பற்றிச் செலஅன் னதுபார்த் தனனால்
               நெற்றிக் கண்அளித் திடுநீள் சுடரோன். ......    422

(ஓரா யிரம்வா ளிக)

ஓரா யிரம்வா ளிகளுய்த் தவுணன்
     ஓரா யிரநீண் முடியொல் லையறா
          ஈரா யிரம்வெஞ் சரமே வியவன்
               ஈரா யிரமொய்ம் பும்இறுத் தனனால். ......    423

(அன்பற் றவன்மொய்)

அன்பற் றவன்மொய்ம் புகளற் றனகண்
     டின்புற் றனர்வா னவர்ஈண் டியவை
          முன்புற் றதுபோ லமுளைத் தெழலுந்
               துன்புற் றனர்யாக் கைதுளங் குறுவார். ......    424

(கண்டான் இதுவிண்)

கண்டான் இதுவிண் ணவர்காண் பரியோன்
     பண்டா லவனத் திடைபா ணிசிரந்
          தண்டா தழல்கொய் திடுதன் மையினால்
               உண்டா கியவா றெனவுன் னினனே. ......    425

(உன்னும் பொழுத)

உன்னும் பொழுதத் தினில்உம் பரெலாம்
     என்னிங் கிவன்மாய் வதெனத் தளர
          முன்னம் பெயர்சிங் கமுகன் முனியாச்
               செந்நின் றிஃதோர் மொழிசெப் பினனால். ......    426

(உளைக்குங் கணை)

உளைக்குங் கணைதள் ளியுகம் பலநீ
     கிளைக்குந் தலைமொய்ம் புகெடுத் திடினும்
          முளைக்கின் றதலான் முடிவுற் றிடுமோ
               இளைக்கின் றனைநீ கொல்எனைப் பொருவாய். ......    427

(மொய்யுந் துதவத் )

மொய்யுந் துதவத் தியல்முன் னலைநின்
     ஐயன் தருமாற் றல்அறிந் திலைபோர்
          செய்யும் படிவந் தனைசேய் ஒருநீ
               உய்யும் படியன் றுனதூக் கமுமே. ......    428

(மாண்டே வர்தமை)

மாண்டே வர்தமைப் புரிவன் சிறைபோய்
     ஆண்டே வருகின் றதுமாற் றலுளேன்
          ஈண்டே அழிகின் றதுமில் லையிவண்
               மீண்டே குதிநின் னுயிர்விட் டனனால். ......    429

வேறு

(என்னலும் அதனை)

என்னலும் அதனை ஓரா எம்பிரான் குமரன் சொல்வான்
     உன்னுயிர் இழைத்த எல்லை யொழிந்தது கூற்றும் வந்து
          பின்னுற நின்றான் என்நீ பிதற்றுதி உணர்வி லாதாய்
               முன்னொரு கணத்தில் நின்னை முடிக்குவன் காண்டி யென்றான். ......    430

(படைப்பவன் குரவன்)

படைப்பவன் குரவன் ஈது பகர்தலும் அவுணர் கோமான்
     இடிப்பென ஆர்த்துக் குன்றம் இராயிரம் பறித்து வீச
          நொடிப்பினில் அவற்றை வாளி நூற்றின்நுண் துகள தாக்கித்
               தடப்பெரு மருமம் மூழ்கச் சரங்களா யிரத்தை உய்த்தான். ......    431

(மாயிரு நெடுங்கண்)

மாயிரு நெடுங்கண் வாளி மார்பத்தை அகழ்ந்து துன்னக்
     காயெரி கலுழுங் கண்ணான் கைகளால் அளவை தீர்ந்த
          பாயிருங் குன்ற நாடிப் பறித்தலுங் கண்டு செவ்வேள்
               ஆயிரங் கணைதொட் டன்னான் அணிமுடித் தொகையை வீழ்த்தான். ......    432

(அறுத்திடு தலைகள்)

அறுத்திடு தலைகள் வீழ ஆயிரஞ் சென்னி வல்லே
     மறித்தும்வந் தெழுத லோடும் மடங்கல்மா முகத்தன் முன்னம்
          பறித்திடு குன்றம் வீசிப் பருவலித் தடந்தோள் கொட்டி
               எறித்தரு கதிரும் விண்ணோர் யாவரும் உட்க ஆர்த்தான். ......    433

(ஆர்த்திடு காலைச்)

ஆர்த்திடு காலைச் செவ்வேள் ஆயிரத் திரட்டி கொண்ட
     கூர்த்திடு பகழி தூண்டிக் குன்றங்கள் செற்று வெய்யோன்
          தார்த்தட மொய்ம்பு முற்றுந் தள்ளினன் தள்ளு முன்னர்ப்
               பேர்த்தும்வந் தெழுந்த அம்மா தவத்தினும் பெரிதொன் றுண்டோ. ......    434

(அத்திரங் காணா)

அத்திரங் காணா ஈதோ ராடலா உன்னி நூற்றுப்
     பத்துடன் எட்டின் காறும் பரஞ்சுடர் உருவாய் நின்றான்
          மொய்த்திடு பகழி மாரி முறைமுறை துரந்து மொய்ம்பன்
               கைத்தலஞ் சென்னி முற்றுங் கண்டதுண் டங்கள் செய்தான். ......    435

(திசைகளிற் போகும்)

திசைகளிற் போகும் நேமித் திறங்களிற் போகும் வெற்பின்
     மிசைகளிற் போகும் பாரின் மீதினிற் போகும் மாந்தர்
          நசைகளிற் போகும் விண்ணோர் நட்டிடைப் போகுஞ் சிங்கன்
               இசைகளிற் போகும் எங்கும் இற்றிடு சிரமுங் கையும். ......    436

(அகரம தாதி யான)

அகரம தாதி யான எழுத்தெலா மாகிப் பின்னர்
     மகரமு மான மேலோன்*3 வடிக்கணை துணித்து வீசுஞ்
          சிகரமுந் துகர முற்றுஞ் சேணிடைச் சென்று மாயோன்
               நகரமுந் தாவி அண்ட கோளகை நண்ணு கின்ற. ......    437

(தூவுடை நெடுவேல்)

தூவுடை நெடுவேல் அண்ணல் சுடர்க்கணை துணித்து வீச
     மேலவன் தனது சென்னி மெல்லிதழ் அதுக்கி விண்மேல்
          ஆவலங் கொட்டிச் செல்ல அச்சமுற் றங்கண் நின்ற
               தேவர்கள் மயக்கம் எய்தித் திருநில வரைப்பின் வீழ்ந்தார். ......    438

(வஞ்சரை வஞ்சஞ்)

வஞ்சரை வஞ்சஞ் செய்யும் வள்ளலார் குமரன் தொட்ட
     செஞ்சரம் அநந்த கோடி சென்றுசென் றறுத்து வீட்ட
          எஞ்சலில் அவுணன் மொய்ம்புந் தலைகளும் யாண்டுஞ் சிந்தி
               விஞ்சையர் அமர்தற் கொத்த வரைகளின் மேவ லுற்ற. ......    439

(தூயவன் விடுத்த)

தூயவன் விடுத்த வாளி துணித்திடும் ஒவ்வோர் சென்னி
     வாயினை அடுபோர் தன்னில் வந்தசில் கணங்கள் நோக்கி
          ஆயிர கோடி கொண்ட களேவரம் அதற்குள் இட்டு
               மாயிருஞ் சிகர மாட மற்றிதென் றுற்ற வன்றே. ......    440

(பாடுறு சிரத்தில்)

பாடுறு சிரத்தில் ஒன்று பதைத்துவாய் பகிர அங்கண்
     ஆடுறும் அலகை கோடி அகன்பிணக் குவைகள் உய்த்து
          மாடமீ தென்று புக்கு மற்றது கடிதின் மூட
               ஓடியுள் ளலைந்த தக்கன் வேள்வியில் உற்று ளார்போல். ......    441

(மன்புரி அவுணர்)

மன்புரி அவுணர் தோன்றல் வாய்பொதி சென்னி புக்குத்
     துன்புறும் அலகை துண்டஞ் செவிநெறி துருவிப் போன
          முன்பொரு முனிவன்*4 இல்லை முயங்குவான் உறையுள் புக்கோன்
               இன்பொடு வன்மை சிந்தி நூழையால் இரிந்த வாபோல். ......    442

(ஒன்னலன் தனது)

ஒன்னலன் தனது மொய்ம்பும் உருகெழு சிரமும் வீழ்ந்து
     பன்னெடுங் கிரிக ளாக அவற்றிடைப் பலசூர்ப் பேயுந்
          துன்னுறு கொடியுஞ் சூழ்வ தொல்லையிற் பொறிகள் நீங்க
               முன்னவள் பதாகை யோடு முறையில்வந் துற்ற வாபோல். ......    443

(அரண்டருங் கழலான்)

அரண்டருங் கழலான் இவ்வா றறுத்தலும் அவுணர் கோமான்
     முரண்டகு சிரமுந் தோளும் பின்னரும் முளைப்ப நோக்கித்
          திரண்டபல் கணைக ளோச்சிச் சென்னியில் ஒன்றுங் கையில்
               இரண்டுமே நிறுவிப் பின்னர் யாவையுந் தடிந்தான் அன்றே. ......    444

(நீளுறு பதலை சிந்தி)

நீளுறு பதலை சிந்தி நின்றமர் இயற்று கின்ற
     கோளரி முகத்து வீரன் குறைந்திடு முடியு இற்ற
          தோள்களும் முன்ன ரேபோல் தோன்றிடப் புகுதும் எல்லை
               ஆளுடை முதல்வ னாகும் அறுமுகன் அதனைக் கண்டான். ......    445

(நாற்றிசை முகத்தி)

நாற்றிசை முகத்தி னானும் நாகரும் பிறரும் உட்கச்
     சீற்றம துளன்போல் ஐயன் சிறிதவண் உரப்ப லோடும்
          மாற்றல னாகி நின்ற மடங்கல்மா முகத்தன் தன்பால்
               தோற்றிடு சிரமுந் தோளுந் துளங்கிமீண் டொளித்த அன்றே. ......    446

(ஐயன துங்கா ரத்தால்)

ஐயன துங்கா ரத்தால் அரிமுகன் சிரமும் மொய்ம்பும்
     மெய்யிடை யொடுங்கிற் றம்மா மேவினார் தம்மை நோக்கி
          மையுறு கருந்தா தன்ன வன்புறக் கமடஞ் சென்னி
               ஒய்யென யாக்கை தன்னில் ஒளித்திடுந் தன்மை யேபோல். ......    447

(குன்றினை எறிந்த வை)

குன்றினை எறிந்த வைவேற் குமரவேள் கணையால் இற்ற
     தன்றலை பாணி தோன்றாத் தன்மையை அவுணன் பாரா
          ஒன்றற முந்து பன்னாள் உணர்ந்திடு விஞ்சை முற்றும்
               மன்றிடை அயர்த்தோ னென்ன மானமுற் றழுங்கி நின்றான். ......    448

(அங்கது கண்டு செவ்)

அங்கது கண்டு செவ்வேள் அருள்புரி கின்றான் நந்தம்
     வெங்கணை பலவுஞ் சென்று வீட்டிய தலையும் உன்றன்
          செங்கையுந் தோன்றிற் றில்லை எழுகெனச் செப்பு கைய
               இங்குநீ பட்ட பின்கொல் முளைத்திட இருந்த தென்றான். ......    449

(இருதலை அயில்வேல்)

இருதலை அயில்வேல் அண்ணல் இற்றன சிரந்தோள் என்றே
     கருதலை என்பே ராற்றல் கடவுளர் யாருந் தேர்வர்
          ஒருதலை இருகை கொண்டே உலகெலாந் தொலைப்பன் என்னாப்
               பொருதலை உன்னி யாங்கோர் பொருப்பினைப் பறித்து விட்டான். ......    450

(விட்டிடு பிறங்கல்)

விட்டிடு பிறங்கல் தன்னை விரிஞ்சனுக் காசான் காணூஉ
     நெட்டிலை வாளி ஒன்றால் நீறுசெய் திடுத லோடும்
          பட்டது தெரிந்து மாய்வோன் அமரிடைப் பாணி யோடும்
               இட்டிடு தண்டம் ஒன்றை எடுத்துநின் றிதனைச் சொற்றான். ......    451

(வேலினால் எறியு மாறு)

வேலினால் எறியு மாறும் வெஞ்சிலை வளைய வாங்கிக்
     கோலினால் விடுத்த தொன்றைக் குறைத்திடு மாறும் அல்லால்
          பாலநீ படைகள் வேறு பயின்றதொன் றிலைகொல் என்னா
               மூலகா ரணமாய் நின்ற முதல்வன்மேற் கதையைத் தொட்டான். ......    452

(வெஞ்சின அவுணன்)

வெஞ்சின அவுணன் சொற்ற தன்மையும் விடுத்த தண்டுஞ்
     செஞ்சுடர் மேனி வள்ளல் சிந்தையின் மதித்து நோக்கிக்
          கஞ்சம தனைய வோர்கைக் காமரு குலிசந் தன்னை
               வஞ்சகன் உயிருண் டொல்லை வருகென விடுத்தான் மன்னோ. ......    453

(விடுத்திடு குலிச மேகி)

விடுத்திடு குலிச மேகி விரைந்தெதிர் தண்டந் தன்னைப்
     பொடித்தது போலும் மென்னப் பூழிசெய் தடுக்கல் செல்லும்
          இடித்தொகை யென்ன மார்பத் தெய்தியே அவுணன் ஆவி
               குடித்தது புறத்துச் செந்நீர் கொப்பளித் தேகிற் றன்றே. ......    454

வேறு

(தூண்டா விடுகுலிசந்)

தூண்டா விடுகுலிசந் துண்ணென்ற கல்மார்பங்
     கீண்டாவி கொண்டு கிழித்துவெரிந் சென்றிடலும்
          வீண்டான் பதைபதைத்தான் வீழ்குருதி நீரலைப்ப
               மாண்டான் கிடந்தான் மடங்கல்முக வெய்யோனே. ......    455

(அங்கப் பொழுதில்)

அங்கப் பொழுதில் அடற்குலிசம் வான்போகிக்
     கங்கைப் புனல்ஆழ்ந்து காமருபூந் தாதாடிச்
          சங்கத் தவர்க்குள் தலையாந் தமிழ்ப்புலவன்
               செங்கைக் குள்வந்து சிறப்புற் றிருந்துளதால். ......    456

(பார்த்தார்இந் நீர்மை)

பார்த்தார்இந் நீர்மைதனைப் பங்கயத்த னாதிவிண்ணோர்
     ஆர்த்தார் முறுவலித்தார் ஆடினார் பாடிமலர்
          தூர்த்தார் மகிழ்ந்தார் தொழுதார்எங் கோன்புடையில்
               போர்த்தார் வணக்கம் புரிந்தார் புகழ்ந்திட்டார். ......    457

(என்னா யகன்அவ்)

என்னா யகன்அவ் விமையோர்கள் எல்லோர்க்குந்
     தன்னா ரருள்செய்து சாரதவெள் ளத்தினொடும்
          மின்னார் புகர்அயில்வேல் வீரரொடு மீண்டனனால்
               பொன்னா டெனவே புனைந்தபொலன் பாசறையில். ......    458

(பாசறையின் கண்ணே)

பாசறையின் கண்ணேகிப் பாரிடத்தோர் சூழ்போத
     வாசவனும் நான்முகனும் மற்றோரும் பாங்காகக்
          கேசரிகள் தாங்குங் கிளர்செம்பொற் பீடிகைமேல்
               ஈச னெனவே இனிதருள்செய் துற்றனனே. ......    459

(வெற்றிநெடு வேலோன்)

வெற்றிநெடு வேலோன் வியன்பா சறையிருப்ப
     மற்றவனொ டாடி மடங்கல் முகத்தவுணன்
          செற்றுகொடி யுண்ணச் செருநிலத்தின் மாய்ந்ததனை
               ஒற்றர்தெரி குற்றே மகேந்திரத்தில் ஓடினரால். ......    460

(ஆடல் இளையோன்)

ஆடல் இளையோன் அவண்வீழ்ந் ததுநோக்கி
     வீடினனோ மான்றனனோ என்றைய மேல்கொண்டு
          நீடு சிகரியிடை நின்றோன் பதங்கள்முடி
               சூடி அவலித்துத் தொழுதிதனைச் சொல்லினரால். ......    461

(குன்றம் பிளந்த குமரே)

குன்றம் பிளந்த குமரேசன் வச்சிரத்தால்
     உன்றம்பி ஆவி ஒழிந்தான் அவன்மிசையப்
          பொன்றுங் கணத்தோர் பொருப்புற்றார் எல்லோருஞ்
               சென்றுய்ந் தனரீது திண்ணமெனச் செப்பினரே. ......    462

(வேயுற் றவர்சொல் வின)

வேயுற் றவர்சொல் வினவியுரோ மங்களெலாந்
     தீயப் பொறிதுரப்பச் செங்கட் புனல்பெருக
          வாயிற் புகைசெல்ல வாடிப் பதைபதைத்து
               நோயுற்று வெங்கனலை நுங்கினர்போல் வீழ்ந்தனனே. ......    463

(வண்ணச் சிகரம் வழுவு)

வண்ணச் சிகரம் வழுவுற்றுக் கீழ்த்தலத்திற்
     கண்ணிற் பொழிந்த கடலினிடை வீழ்ந்தனனால்
          ஒண்ணுற்ற காஞ்சி உமையவள்கோட் டத்தினின்றுந்
               தண்ணுற்ற நேமித் தடத்திடையே வீழ்பவர்போல்*5. ......    464

(மங்கு லெனவீழ்ந்து)

மங்கு லெனவீழ்ந்து மறிந்து நிலமிசையே
     அங்கை புடைத்திட் டலமந்து தொல்வலியுந்
          துங்க விறலும் நலனுந் தொலைவெய்தப்
               பொங்கு துயர்க்கடலின் மூழ்கிப் புலம்புறுவான். ......    465

(என்னையோ என்றன்)

என்னையோ என்றன் இளவலோ தாரகற்கு
     முன்னையோ சிங்க முகத்தவோ தானவர்கள்
          அன்னையோ என்ன அருள்புரியும் ஆண்டகையோ
               உன்னையோ தூதர் விளிந்தனையென் றோதியதே. ......    466

(அன்று மகவான் முத)

அன்று மகவான் முதலாம் அமரர்தமை
     வென்று தமியேற்கு விசயந் தனையளித்தாய்
          இன்று சமரில் இளம்பா லகன்ஒருவன்
               கொன்றனனோ உன்னுயிரைக் கூற்றுவனுங் கொண்டானோ. ......    467

(உண்டுபோர் என்)

உண்டுபோர் என்னின் உளங்களிக்கும் உன்னுயிரைக்
     கொண்டுபோ னான்இன்று கூற்றனென வேகேட்கில்
          தண்டுழாய் மாலுஞ் சதுர்முகனும் இந்திரனும்
               பண்டுபோல் தத்தம் பதியாளப் போகாரோ. ......    468

(பொன்னை நிலந்த)

பொன்னை நிலந்தன்னைப் புதல்வர்களை மங்கையரைப்
     பின்னை யுளபொருளை யெல்லாம் பெறலாகும்
          என்னை யுடைய இளையோனே இப்பிறப்பில்
               உன்னை இனிப்பெறுவ துண்டோ உரையாயே. ......    469

(அண்டார் தமக்கோர்)

அண்டார் தமக்கோர் அரியே அரிமுகனே
     விண்டான் அடைந்தாய் எனவே விளம்புகின்றார்
          தண்டார் அகலத்துத் தாரகனை மக்களுடன்
               கண்டாயோ யானிங் குறுதுயரங் காணாதாய். ......    470

(உண்டிக் கடனும்)

உண்டிக் கடனும்*6 ஒருவயிற்றோர் செய்கடனும்
     எண்டிக்கும் போற்றியிட இன்றுகழித் தேகினைநீ
          அண்டத் தவரை அலைத்துவரும் உன்திறலைக்
               கண்டுற் றிடவே கடனற்றேன் தீயேனே. ......    471

(உற்ற துணைநீ)

உற்ற துணைநீ யென்னுயிர்நீ உணர்ச்சியும்நீ
     சுற்றமும்நீ தாதையும்நீ என்னிளைய தோன்றலும்நீ
          நற்றவமும் நீயென்று நான்நினைந்தேன் நீயதனைச்
               சற்றும் நினையாமல் தனித்திருக்கக் கற்றாயோ. ......    472

(பொற்றைக் கயலி)

பொற்றைக் கயலிருந்த பூட்கைமுகன் துஞ்சியபின்
     ஒற்றைப் புயம்போய் உளந்தளர்ந்து வைகினன்யான்
          இற்றைப் பகல்நீ இறந்தாய் அரிமுகனே
               மற்றைப் புயமும் இழந்தேன் வறியேனே. ......    473

(என்னத் தனதண்டம்)

என்னத் தனதண்டம் எங்குஞ் செவிடுபடத்
     தன்னத் தனியோன் அரற்றுமொலி தாங்கேளா
          நன்னத் தவனும் நளினத் தினிலுதித்த
               அன்னத் தவனும் மகத்தவனும் ஆர்த்தனரே. ......    474

(இத்தன்மை மன்னன்)

இத்தன்மை மன்னன் இரங்கித் தெளிந்தெழுந்தே
     உத்துங்க மிக்க ஒருதன் தவிசேறி
          நித்தன் குமரனுடன் நேர்போய்ச் சமர்இயற்றச்
               சித்தந் தனிலே நினைந்துசினஞ் செய்தனனே. ......    475

ஆகத் திருவிருத்தம் - 7287




பா-ம் *1. அன்னவர்.

பா-ம் *2. ??மின்னுக் (37 - 46)

*3. மகரமுமான மேலோன் - மகரமீன் உருக்கொண்ட குமாரக் கடவுள். இவ்வரலாறு திருவுத்தரகோச மங்கைப் புராணத்துள் கூறப் பெற்றுள்ளது.

*4. ஒரு முனிவன் - கௌதமன். இல் - அகலிகை. முயங்குவான் உறையுள் புக்கோன் - இந்திரன். நூழை - சலதாரை அல்லது தூம்பு.

*5. இங்குக் காஞ்சி காமாட்சி ஆலயத்தில் மேல் மாடியிலிருந்து சக்கர தீர்த்தம் என்னும் உலகாணித் தீர்த்தத்தில் தலை கீழாகவும் கால் மேலாகவும் ஆமாறு விழுவதை உவமையாகக் குறிப்பதாகும். இச்செயலைக் "கருமாறிப் பாய்தல்" என்பர். இஃது இந்நூலாசிரியர் காலத்து நடந்து வந்தமையால், இதனை உவமை காட்டினார். ஆயினும் தற்போது இந்நிகழ்ச்சி நிகழும் வழக்கம் இல்லை; இக்காலத்தில், காஞ்சி காமாட்சி ஆலயத்தின் அடிமைகளான பெண்களைக் "கருமாறிப் பாய்பவர்" என்பர்.

*6. உண்டிக்கடன் - செஞ்சோற்றுக்கடன்.



previous padalam   12 - சிங்கமுகாசுரன் வதைப் படலம்   next padalamSingamugAsuran vadhaip padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]