Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   4 - இரண்டாநாட் சூரபன்மன் யுத்தப் படலம்   next padalamiraNdAnAt sUrapanman yuththa padalam

Ms Revathi Sankaran (7.94mb)
(1 - 70)



Ms Revathi Sankaran (7.59mb)
(71 - 140)



Ms Revathi Sankaran (7.61mb)
(141 - 210)



Ms Revathi Sankaran (8.16mb)
(211 - 280)



Ms Revathi Sankaran (6.79mb)
(281 - 350)



Ms Revathi Sankaran (6.29mb)
(351 - 420)




(கங்குல்போந் திடு)

கங்குல்போந் திடுதலுங் கணபணப் பன்னகம்
     நுங்குறா தகலவே நோற்றுமால் ஏந்திடுஞ்
          சங்கமாய் மதிசெலச் சக்கரப் படையெனத்
               துங்கமோ டெழுதல்போல் தோன்றினன் பரிதியே. ......    1

வேறு

(இரவி செல்லுமுன்)

இரவி செல்லுமுன் அவுணர்கோன் துயிலொரீஇ எழுந்து
     மரபி னிற்புரி நாட்கடன் முடித்துமன் றெய்தித்
          திரும ணிப்பெருந் தவிசிடை இருந்துதன் சிறுவன்
               நெருநல் உற்றிடும் வசையினை உளத்திடை நினைந்தான். ......    2

(நினைதல் உற்றுழி)

நினைதல் உற்றுழி உளத்திடைப் பெருஞ்சினம் நீட
     இனிய மர்த்தொழிற் கியாரையும் விடுக்கிலன் யானே
          அனிக மோடுபோய் மாற்றலர் வன்மையை அழித்துப்
               புனைவன் வாகையென் றுன்னினான் அழிவிலாப் புகழோன். ......    3

(செங்கண் வாளெயிற்)

செங்கண் வாளெயிற் றவுணன்இத் தன்மையைத் தேற்றி
     வெங்கண் ஒற்றரில் அளப்பிலர் தங்களை விளியா
          அங்கண் மாநிலம் முறைமுறை சூழ்தரும் அளக்கர்
               எங்க ணுஞ்செறி தானையைத் தம்மின்கள் என்றான். ......    4

(என்ற லுந்தொழு தாயிர)

என்ற லுந்தொழு தாயிர கோடியோர் யாண்டுஞ்
     சென்று சென்றுதம் மன்னவன் பணிமுறை செப்பத்
          துன்று தேர்கரி பரிமிசைப் படர்ந்தனர் தொன்னாள்
               வென்றி கொண்டநூ றாயிர வெள்ளத்தின் மிக்கோர். ......    5

வேறு

(சூலமே கணிச்சி)

சூலமே கணிச்சி தண்டந் தோமரங் குலிசஞ் சாபங்
     கோலவாள் பலகை வட்டங் குந்தம்வேல் நாஞ்சில் பிண்டி
          பாலமே முசுண்டி சங்கம் பரிதியே எழுவே தட்டி
               பீலிவல் முசல மாதி பெரும்படை கொண்டு சென்றார். ......    6

(எண்டகும் இனைய)

எண்டகும் இனைய வாற்றால் இலக்கம்வெள் ளத்தி னோருந்
     திண்டிறல் மகேந்தி ரப்பேர்த் திருநகர் சுற்றி யார்ப்ப
          விண்டொடு சிகரி யென்னும் மேருவின் உச்சி போகிக்
               கண்டனன் அவுணர் மன்னன் கடற்பெருந் தானைச் சூழல். ......    7

(தேக்கினன் கதிருஞ்)

தேக்கினன் கதிருஞ் செல்லாச் செல்லுறழ் தானை ஈட்டம்
     நோக்கினன் சிந்தை கொண்ட நோன்மைசார் துயரம் யாவும்
          நீக்கினன் வன்மை பெற்றான் நேரலர்ப் பொருது வென்றி
               ஆக்கினன் போல நின்றான் அறத்துடன் அருளைக் கொன்றான். ......    8

(அழிந்திடு கின்ற)

அழிந்திடு கின்ற காலத் தளக்கரின் ஆர்த்துச் சூழுங்
     கழிந்திடு தானை கண்டோன் கடிதுபோர்க் கேக முன்னிச்
          செழுங்கதிர் மதியம் ஆக்குந் திருமணிச் சிகரி நின்றும்
               இழிந்தனன் தலைமை நீங்கி இழிதொழில் பயின்ற தீயோன். ......    9

(எடுத்தனன் சிலையும்)

எடுத்தனன் சிலையும் ஏனைப் படைகளும் இமையோர் தொன்னாட்
     கொடுத்திடு படைகள் யாவுங் கொண்டனன் கரத்திற் கோதை
          தொடுத்தனன் வெரிநில் தூணி தூக்கினன் விரல்கள் தோறும்
               அடுத்தபொற் புட்டில் சேர்த்தான் அண்டங்கள் அனைத்தும் வென்றான். ......    10

(குந்தளச் சுழியற்)

குந்தளச் சுழியற் குஞ்சிக் கோலமா மௌலி தன்னில்
     சுந்தரத் துணர்மென் தும்பை தொடுத்திடு பிணையல் சேர்த்தி
          மந்தரப் பொருப்பு மேரு வரையிதென் றையஞ் செய்யும்
               இந்திரப் பெருந்தேர் ஒன்றின் ஏறினன் இரவி யேபோல். ......    11

(பண்ணுலாம் புரவி)

பண்ணுலாம் புரவிப் பந்தி பருமிதக் களிற்றின் ஈட்டம்
     எண்ணிலாப் புரவி மான்தேர் ஏமமாய்ப் பின்னர் ஏக
          அண்ணல்வாள் அவுண வீரர் அமைச்சர்கள் அயலிற் செல்ல
               விண்ணுலாம் புரிசைக் கோயில் வீதிகள் கடந்து சென்றான். ......    12

(கோயிலின் எல்லை)

கோயிலின் எல்லை நீங்கிக் கோபுரங் கெழீஇய கொற்ற
     வாயிலின் மருங்கு செல்ல மன்னவன் வரவு நோக்கிக்
          காய்கதிர்த் தபனற் கண்ட கலிவியன் உலக மென்ன
               ஆயிர நூறு வெள்ளத் தவுணரும் புடைசூழ்ந் தார்த்தார். ......    13

வேறு

(அன்ன காலையில் அரிமுக)

அன்ன காலையில் அரிமுகன் சேய்அதி சூரன்
     துன்னு தாரகன் சுதன்அசு ரேந்திரத் தொல்லோன்
          என்ன நின்றிடும் மைந்தர்கள் இருவரும் ஏகி
               மன்னர் மன்னனை அடைதலும் இனையன வகுப்பான். ......    14

(திரைகொள் வேலை)

திரைகொள் வேலைபோல் நிறைதரு கோட்டகஞ் சிறிதோர்
     கரையி லாவழி யுடைந்திடும் அன்னது கடுப்பப்
          பொருதி றற்படை பலவுள என்னினும் போற்றும்
               அரச ரில்வழி நின்றிடா தன்னவை அழியும். ......    15

(ஆத லால்இனி நீர்)

ஆத லால்இனி நீர்இரு வீர்களும் அமரின்
     மேத கும்பெருஞ் சேனைக்கு முதல்வராய் மேவிப்
          போதிர் முன்னுற என்றலும் நின்றிடு புதல்வர்
               ஈது நன்றென வணங்கியே ஏகினர் இமைப்பில். ......    16

(தந்த மான்தடந்)

தந்த மான்தடந் தேர்மிசை ஏறியே சமரில்
     கொந்து லாமலர் வாகையை மிலைச்சிய குமரர்
          வந்த நாற்பெரும் படையையும் அணிபெற வகுத்து
               முந்து தானையந் தலைவராய் ஏகினர் முறையால். ......    17

(ஆகும் எல்லையில்)

ஆகும் எல்லையில் அங்கது நோக்குறா அடுபோர்
     வாகை கொண்டநூ றாயிர வெள்ளத்து மறவோர்
          ஓகை எய்தியே அமர்புரி பறந்தலை உன்னி
               ஏகல் மேயினர் பணிகளுஞ் சேடனும் இரங்க. ......    18

வேறு

(கடந்திகழ் கரிதேர்)

கடந்திகழ் கரிதேர் பாய்மாக் கலந்திடத் தானை வீரர்
     படர்ந்திடு கின்ற காலைப் பருமணி வயிரத் தேர்மேல்
          அடைந்திடும் அவுணர் மன்னர் அளக்கரில் வடவை சுற்ற
               விடந்தனி நடந்த தென்ன விண்ணவர் மருளச் சென்றான். ......    19

(தொண்டகந் துடியே)

தொண்டகந் துடியே பம்பை தூரியம் முருடு கோடு
     திண்டிறற் படகம் மொந்தை திமிலையே தடாரி தக்கை
          கண்டைஆ குளியே பீலி காகளம் உடுக்கை பேழ்வாய்
               கொண்டதோர் பதலை சங்கம் குடமுழா இயம்பிற் றம்மா. ......    20

(தட்டுடை நெடுந்தேர்)

தட்டுடை நெடுந்தேர் ஆர்ப்பும் தந்தியின் ஆர்ப்புஞ் சேண்போய்
     முட்டுறு கொடிகள் ஆர்ப்பும் முரட்பரி ஆர்ப்பும் வீரர்
          கட்டுறு கழலின் ஆர்ப்பு ம்கணிப்பில்பல் லியத்தின் ஆர்ப்பும்
               எட்டுள திசையும் எல்லா வுலகுமுண் டெழுந்த அன்றே. ......    21

(நீனிற முகில்போல்)

நீனிற முகில்போல் மேனி அவுணர்கள் நீத்தஞ் செல்லக்
     கானிறை பூழி ஈட்டங் ககனமேற் செல்ல முன்னம்
          தானுறு கின்ற காலைச் சசியெனத் தயங்கிப் பின்னர்
               மீனெனக் கரந்தான் மேலாம் விரிகதிர் படைத்த வெய்யோன். ......    22

(நேசமொ டென்பால்)

நேசமொ டென்பால் வைகும் நெறியினார் தமக்கு வீடும்
     ஆசறு பதங்கள் யாவும் வைகலும் புரிவேன் என்னை
          ஏசுவர் போலுங் கீழென் றிகல்புரிந் திடுவன் என்னாத்
               தூசிபார் விடுத்த தேபோல் துறக்கமேற் சென்ற பூழி. ......    23

(கன்னிறை அழித்த)

கன்னிறை அழித்த மொய்ம்பிற் கார்கெழும் அவுண வெள்ளம்
     துன்னுற நடப்பச் செல்லுந் தூளியின் படலைச் செய்கை
          என்னென உரைப்பன் அம்மா இந்திர னென்போன் வைகும்
               பொன்னுல கதனை வல்லே பூவுல காக்கிற் றன்றே. ......    24

(கண்ணகல் தடந்தேர்)

கண்ணகல் தடந்தேர் மீதுங் காய்சினக் களிற்றின் மீதும்
     நண்ணிய கொடிகள் வான்போய் நளிர்புனற் கங்கை நக்கி
          மண்ணுறச் சிதறி ஆடி அலமரல் மகேந்தி ரத்தின்
               அண்ணல்இன் றழிவன் என்றே அழுதிறம் போலும் மாதோ. ......    25

(திங்கள்வெண் குடையும்)

திங்கள்வெண் குடையும் நீலத் திருநிழற் கவிப்புஞ் செங்கேழ்ப்
     பங்கய மலர்ந்த தன்ன பருமணிக் கவிகை முற்றுந்
          தொங்கலின் தொகையும் வெய்யோன் தொல்கதிர் வரவு மாற்றி
               எங்கணுஞ் செறிவுற் றூழி இருளினை விளக்கிற் றம்மா. ......    26

வேறு

(ஆனவியல் பெய்த)

ஆனவியல் பெய்தஅவு ணப்படைக ளோடும்
     வானெறிகொ டேஅவுணன் வையமிசை செல்லத்
          தானதுதெ ரிந்தமரர் தம்மிறைவன் ஓடிக்
               கானமர்க டம்பன்அடி கைதொழுது சொல்வான். ......    27

(அன்றுபுரி வேள்வி)

அன்றுபுரி வேள்வியிடை ஆதியருள் செய்த
     துன்றுபடை ஈட்டமொடு சூரனெனும் வெய்யோன்
          இன்றுபொரு வான்விரைவின் ஏகினன் எதிர்ந்தே
               சென்றவனை வென்றெமது சீர்அருளு கென்றான். ......    28

(ஆம்பரிசு கூறஅவ)

ஆம்பரிசு கூறஅவ னுக்கருள் புரிந்தே
     ஏம்பலுறு கேசரியின் ஏற்றணையின் நீங்கிப்
          பாம்பின்வலி செற்றுலவு பாகுதனை நோக்கி
               வாம்பரிகொள் நம்மிரதம் வல்லைதரு கென்றான். ......    29

(என்றிடலும் நன்றென)

என்றிடலும் நன்றென எழுந்துலவை அண்ணல்
     குன்றனைய தேரது கொணர்ந்துமுனம் உய்ப்ப
          வென்றிஅயில் அண்ணல்அதன் மீமிசை புகுந்தான்
               மன்றல்மலர் சிந்திஅயன் மாலொடு வழுத்த. ......    30

(செழுந்தருண மேதகை)

செழுந்தருண மேதகைய தேரின்மிசை வானோர்
     தொழுந்தலைவ னாகியமர் தொல்முருகன் ஏறக்
          கொழுந்தழல் முடித்தனைய குஞ்சிகெழு பூதர்
               எழுந்தனர் தெழித்தனர் இருங்கடலும் அஞ்ச. ......    31

(நாட்டமொரு மூன்று)

நாட்டமொரு மூன்றுடைய நாதனருள் மைந்தன்
     வாட்டமறு வெவ்வவுணர் மன்னன்வலி தன்னை
          வீட்டும்வகை சென்றிடுதல் விண்ணவர் உரைப்பக்
               கேட்டனிக பூதர்கள் கிளர்ந்துபடர் கின்றார். ......    32

(பாரிடர்க ளாய்அறு)

பாரிடர்க ளாய்அறுமு கற்பரவு கின்ற
     பாரிடர்ந டப்பவெழு பூழிபடர்ந் தின்னோர்
          பாரிடர்பு ரிந்தனர் பரிக்குமெனை யென்னாப்
               பாரிடம்விண் ணோடுபகர் தற்கெழுதல் போலும். ......    33

(தக்கையொ டுடுக்கை)

தக்கையொ டுடுக்கைதுடி சல்லரி தடாரி
     தொக்குடைய தண்ணுமை துவைப்பின்மிகு பேரி
          மெய்க்குடமு ழாப்படகம் வீணைகுழல் ஆம்பல்
               கொக்கரை இயம்பினர்கள் கோடிகண நாதர். ......    34

(நாடுதவ நாரதனும்)

நாடுதவ நாரதனும் நல்லுவணர் தாமும்
     கேடிலிசை வல்லதொரு கின்னரரு மாகிப்
          பாடினர்கு மாரன்அடி பன்முறை பணிந்தே
               ஆடினர்கள் விண்ணவரும் ஆசில்முனி வோரும். ......    35

(சண்முகன தேவல்)

சண்முகன தேவல்கொடு தாவில்இளை யோனும்
     எண்மரும்இ லக்கர்களும் ஈண்டிய கணத்தின்
          வண்மைகெழு மன்னவரும் வையமிசை யாகித்
               திண்மைபடை ஊக்கமொடு சேனையிடை சென்றார். ......    36

(மொய்ம்மலி படைத்த)

மொய்ம்மலி படைத்தலைவர் முந்தியுறு தானை
     இம்முறையி னாலொழுக ஈசனருள் மைந்தன்
          செம்மணிவில் வீசியமர் தேரினிடை ஏகிப்
               பொம்மலுறு தானவர்கள் போர்முனை அடைந்தான். ......    37

(அடைந்தபொழு திற்)

அடைந்தபொழு திற்புவியும் அந்தரமு மாகி
     மிடைந்துவரு சூரனிகம் வெய்தென வளைந்த
          தொடர்ந்துநுகர் தீவலிதொ லைத்துமென முந்நீர்
               படர்ந்துபுடை சுற்றியிடு பான்மையது போல. ......    38

வேறு

(வளைந்திடு காலையில்)

வளைந்திடு காலையில் வயவெம் பூதர்கள்
     கிளர்ந்தனர் தெழித்தனர் கெழுவு தானவர்
          தளந்தனை அடர்த்தனர் அவருந் தாக்கினார்
               விளைந்தது பெருஞ்சமர் விண்ட தண்டமே. ......    39

(மாச்சினை மரங்களும்)

மாச்சினை மரங்களும் வரையுந் தண்டமும்
     தீச்சிகைக் கழுமுளும் திகிரி நேமியும்
          மீச்செலுங் கவண்கலும் வேலும் நாஞ்சிலும்
               ஓச்சினர் பூதர்கள் ஒன்ன லார்கள்மேல். ......    40

(மெய்ப்படும் அவுணர்)

மெய்ப்படும் அவுணர்கள் வெகுண்டு வில்லுமிழ்
     அப்பொடு கணிச்சிதண் டாழி நாஞ்சில்வேல்
          முப்புகர் இலைப்படை முசலம் முற்கரம்
               கப்பணஞ் சிதறினர் கணங்கள் தம்மிசை. ......    41

(பற்றுவர் கரிகளை)

பற்றுவர் கரிகளைப் பரியி னங்களை
     எற்றுவர் பார்தனில் எறிவர் மாதிரஞ்
          சுற்றுவர் விண்ணிடைக் கிழிப்பர் துண்ணென
               முற்றுடல் எருத்தினை முரித்துச் சிந்துவார். ......    42

(இரதமொ ராயிரம்)

இரதமொ ராயிரம் எடுத்துச் செங்கையில்
     பொருகளி றாயிரம் புரள மோதுவர்
          கரிகளொ ராயிரங் கரங்கொண் டெற்றியே
               பரிபதி னாயிரம் பாரின் வீட்டுவார். ......    43

(பாய்பரி யாயிர)

பாய்பரி யாயிரப் பத்துப் பாணிகொண்
     டாயிர கோடியாம் அவுணர் தங்களைச்
          சேயிரு நிலத்திடைச் சிதையச் சிந்துவார்
               காய்கனல் சொரிதருங் கடுங்கட் பூதரே. ......    44

(குரங்குளைப் புரவி)

குரங்குளைப் புரவியர் குஞ்ச ரத்தினர்
     இரங்குறு தேரினர் நிலத்தின் ஏகினோர்
          வரங்கெழும் அவுணர்கள் வளைந்து பூதரைச்
               சரங்களில் பிறவினில் தடிதல் மேயினார். ......    45

(மலைதனைச் சிந்துவர்)

மலைதனைச் சிந்துவர் மறங்கொள் பூதர்தாள்
     நிலைதனைச் சிந்துவர் நெடுங்கை சிந்துவர்
          கொலைதனைச் சிந்துவர் கொய்வர் மொய்ம்பினைத்
               தலைதனைச் சிந்துவர் தறுகட் டானவர். ......    46

(இவ்வகை மாறுகொண்)

இவ்வகை மாறுகொண் டிகல்செய் கின்றுழித்
     தெவ்வடு பூதர்தஞ் சேனை மன்னர்கள்
          அவ்விடை ஏன்றுநின் றமர்இ யற்றுழி
               வெவ்வசு ரப்படை மிகவும் மாய்ந்ததே. ......    47

(பொன்றிகழ் படை)

பொன்றிகழ் படையொடு புவியும் வானுமாய்
     நின்றிடும் அவுணர்கள் நீடு தொல்பிணக்
          குன்றுரு வாகியே குருதி யாற்றிடைச்
               சென்றனர் அளக்கரைத் திடர தாக்குவார். ......    48

(நீடிய வேற்படை நிம)

நீடிய வேற்படை நிமலன் காணுற
     வீடினம் யாமினி வெய்ய தோற்றமேற்
          கூடுவ திலையெனக் குனிக்கு மாறுபோல்
               ஆடிய உடற்குறை அனந்த கோடியே. ......    49

வேறு

(மானப் படைசேர்)

மானப் படைசேர் அவுணப் படையும் வயமான் தேர்ப்படையும்
     ஏனைப் படையும் முடிவுற் றிடவே இவ்வா றிகல்செய்யுங்
          கூனற் சடிலப் பூதப் படையின் கொற்றந் தனைநோக்கித்
               தானைத் தலைவன் அதிசூ ரனெனுந் தனயன் வெகுளுற்றான். ......    50

(தேரா யிரமா யிரம)

தேரா யிரமா யிரமங் கொருபாற் சேமத் தொடுசெல்லக்
     காரா யிரமுற் றனதன் படிவங் கதிர்காள் இமைசார
          ஈரா யிரமாம் இவுளித் தொகைபூண் டீர்க்குந் தேர்மீதே
               ஓரா யிரமாங் கதிர்போல் அழலா உரனோ டுறுகின்றான். ......    51

(வார்வில் லதனை)

வார்வில் லதனை விரைவில் குனியா வடிவா ளிகள்போக்கிச்
     சோர்வில் லவனும் எதிர்கின் றனரைத் துணிசெய் தனன்நிற்ப
          ஓர்வில் லொருவன் தனியே இவண்வந் துறுபோர் புரிகின்றான்
               போர்வில் லறிவன் இவனே எனவே புகல்கின் றனர்பூதர். ......    52

(ஓதக் கடல்போல்)

ஓதக் கடல்போல் அலமந் தலமந் துலையா இகல்செய்யும்
     பூதர்க் கிறைஉக் கிரனென் றொருவன் புகைதீ யுமிழ்கண்ணான்
          மேதக் கசலந் தரனார் உடலம் வீழும் படிகீண்ட
               சோதிக் கடவுட் படையுண் டுமிழுந் தொல்லோன் இகல்வல்லோன். ......    53

(எண்டா னவருக் கிறை)

எண்டா னவருக் கிறைவன் குமரன் இகல்செய் திடுமாறு
     கண்டான் முனியா விரைவில் படர்வான் காலன் திறல்கொள்ளும்
          தண்டா னதுகொண் டவனேர் குறுகித் தடமார் பிடையோச்ச
               விண்டான் இவனென் றவுணப் படையோர் வெருவா அலமந்தார். ......    54

(மாறா கியஉக் கிரன்)

மாறா கியஉக் கிரன்ஏ வுதலும் வருதண் டவன்மார்பில்
     கூறா கியசா லிகைசிந் திடவே கொதியா வருகின்றான்
          பாறா டுகளத் திடையீங் கிவனைப் பலியூட் டுவனென்னா
               நூறா யிரம்ஆ சுகமோர் தொடையின் நொய்திற் செலவெய்தான். ......    55

(வெய்தாம் அயில்வா)

வெய்தாம் அயில்வா ளிகள்உக் கிரன்மேல் விறல்சேர் அதிசூரன்
     எய்தான் அதுமற் றவன்மேற் படவே எருவைப் பெருநீத்தம்
          எய்தான் முழுதும் பெருகுற் றிடலும் விழுமத் தொடுசெற்றஞ்
               செய்தான் ஒருமால் வரைகொண் டவுணன் தேர்மேற் செலவுய்த்தான். ......    56

(அதிர்பொற் கழலான்)

அதிர்பொற் கழலான் விடுதிண் கிரியால் அதிசூ ரன்மான்தேர்
     பிதிர்பட் டிடலும் புவிமேற் படர்தல் பிழையா மெனவுன்னா
          உதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர் மிசைநீலக்
               கதிருற் றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன் மிடல்தீர்ப்பான். ......    57

வேறு

(பாயும் வேலைஅப்)

பாயும் வேலைஅப் பல்மணித் தேரினை
     ஏய ஆற்றல்கொண் டீர்த்திடும் வாசிகள்
          மாயும் வண்ணம றம்புரி உக்கிரன்
               சீய மாமெனச் சென்றுதைத் தானரோ. ......    58

(உதைக்க வெய்யவன்)

உதைக்க வெய்யவன் ஒண்பரி பாரிடைப்
     பதைத்து வீழ்தலும் பையுளின் மாழ்கியே
          சிதைப்பன் இந்தச் சிறியனை என்றுமெய்
               புதைப்ப நூறு பொருசரந் தூண்டினான். ......    59

(தூண்டு கின்ற சுடர்)

தூண்டு கின்ற சுடர்க்கணை யாவையும்
     ஈண்டி யேதன் எதிருறும் பெற்றியைக்
          காண்ட லுங்கதை கைக்கொடவ் வுக்கிரன்
               மீண்டி டும்படி வீசிநின் றார்க்கவே. ......    60

(வேறொர் தேரிடை)

வேறொர் தேரிடை வெய்தென எய்தியே
     ஊறு நீங்கிய உக்கிரற் கண்ணுறீஇ
          மாறி தெய்வத மாப்படை தொட்டுனை
               ஈறு காண்பன் இறந்தனை நீயெனா. ......    61

(முன்னு பூசை முதலி)

முன்னு பூசை முதலிய யாவையும்
     முன்னி யேநின் றொருங்குடன் செய்தபின்
          வன்னி மாப்படை வாங்கி வணங்கியே
               மின்னு தண்சுடர் மீக்கொள வீசினான். ......    62

(ஆசை தோறும் அழல்)

ஆசை தோறும் அழல்சிந்த மாற்றலன்
     வீசு வெம்படை வீரத்தை நோக்கியே
          ஈசன் மைந்தன் இணைமலர்த் தாள்களை
               நேச மோடு நினைந்தனன் போற்றினான். ......    63

(எவ்வெ வர்க்கும்)

எவ்வெ வர்க்கும் இறையவ னாகியோன்
     அவ்வ ழித்தன் அருள்செய உக்கிரன்
          செவ்வி திற்செலுந் தீச்சரம் பற்றியே
               கவ்வி நுங்கினன் கண்கனல் கான்றிட. ......    64

(நுங்கு வான்றனை)

நுங்கு வான்றனை நோக்கி அரிமுகன்
     துங்க மாமகன் தொல்புனல் மாப்படை
          பொங்கு சண்டப் பொருபடை ஏவலும்
               அங்க வற்றையும் பற்றி அருந்தினான். ......    65

(காற்றின் வெம்படை)

காற்றின் வெம்படை ஏவினன் கைதவன்
     ஆற்றல் உக்கிரன் அன்னது நுங்கினான்
          தேற்று கின்றுழிச் செய்தவம் அன்றியே
               ஏற்ற மான இரும்பொருள் யாவதோ. ......    66

(மற்றும் அவ்வதி)

மற்றும் அவ்வதி சூரன் மலரயன்
     ஒற்றை வெம்படை ஓச்சலும் உக்கிரன்
          பற்றி நுங்கவப் பங்கயன் தாதைபால்
               பெற்றி ருந்த பெரும்படை ஏவினான். ......    67

(ஒய்யெ னச்சென்று)

ஒய்யெ னச்சென் றுருகெழு நாரணன்
     பொய்யில் மாப்படை போந்திட ஆங்கதுங்
          கையில் வாங்கிக் கதுமென வாய்க்கொளா
               வெய்ய உக்கிரன் மேயினன் என்பவே. ......    68

(ஆன காலை அரிமுகன்)

ஆன காலை அரிமுகன் காதலன்
     யானி னிச்செய் இயற்கையென் னேயிவன்
          தானவ் வீசன்கொல் கண்ணன்கொல் தாமரை
               மேனி லாவிய வேதன்கொ லோவென்றான். ......    69

(மூவ ராகிய மூர்த்தி)

மூவ ராகிய மூர்த்திகள் அல்லதை
     ஏவ ரேமற் றிதுசெயும் பெற்றியார்
          ஆவ னாவன் அவர்க்குள் இவனெனாத்
               தேவர் மாற்றலன் பின்னருஞ் செப்பினான். ......    70

(சீற்றங் கொண்ட)

சீற்றங் கொண்ட அவுணர் திரைக்கடல்
     தோற்றங் கொண்டவச் சூர்கெழும் உக்கிரன்
          ஏற்றங் கண்டுழி என்செய்தும் என்றனர்
               கூற்றங் கொண்ட உயிரிற் குலைந்துளார். ......    71

(அண்ணல் வாசவ)

அண்ணல் வாசவ னாதிய ராகிய
     எண்ணில் வானவர் யாவரும் இச்செயல்
          கண்ணு றாஇகல் கண்டருள் நான்முகப்
               பண்ண வன்முன் பணிந்திது கூறுவார். ......    72

(எங்க ளால்வரும்)

எங்க ளால்வரும் எண்ணில் பெரும்படை
     செங்க ணான்படை தீயநின் மாப்படை
          அங்கி யாவும் அணுகஇப் பூதர்கோன்
               நுங்கு மாறென் நுவலுதி என்னவே. ......    73

(இந்தி ராதியர்)

இந்தி ராதியர் கேண்மின்கள் ஈங்கிவன்
     அந்தி வான்சடை அண்ணல் வரத்தினான்
          கந்தன் எந்தை கழலிணை போற்றியே
               வந்து ளான்எவ் வலியையும் ஆற்றுவான். ......    74

(எம்மை யாளுடை ஈசன்)

எம்மை யாளுடை ஈசன் அருள்பெறுஞ்
     செம்மை யானவன் செம்பொற் சிலம்படி
          மும்மை யுந்தொழு முத்திபெற் றான்இவன்
               எம்மி னும்பெரி யான்என்றும் ஈறிலான். ......    75

(மைக்க ருங்கடல் வண்ண)

மைக்க ருங்கடல் வண்ணன்முன் ஏவிய
     சக்க ரம்நுக ருந்தவத் தோனினும்
          மிக்க ஆற்றலன் வெற்றியின் மேலையான்
               உக்கி ரன்னென் றுரைத்திடும் பேரினான். ......    76

(பண்டு நாமருள்)

பண்டு நாமருள் பல்படை யாவையும்
     உண்ட தோவியப் பொல்லையில் எல்லையில்
          அண்ட முஞ்சிதைத் தாக்குவன் ஈங்கிவன்
               கொண்ட தொல்புகழ் கூறத் தொலையுமோ. ......    77

(என்ன நான்முகன்)

என்ன நான்முகன் எண்ணி இயம்பலும்
     அன்ன கேட்டலும் அண்டர்கள் யாவருந்
          துன்னு சென்னி துளக்கிப் பெருந்திறல்
               இன்னு மாக இவற்கென் றியம்பினார். ......    78

வேறு

(வான மேலிது)

வான மேலிது நிகழ்ந்துழி மாறிலா அவுணர்
     சேனை காவலன் பூதனை நோக்கிநிற் சிதைப்பல்
          ஊன மாகிய படையென உன்னலை உமைபால்
               ஞான நாயகன் படைதொடு வேனென நவின்றான். ......    79

(மந்தி ரந்தனிற்)

மந்தி ரந்தனிற் பூசனை முதலிய வகுத்துச்
     சிந்தை மேலுறு வெகுளியோ டரன்படை செலுத்த
          அந்த மில்லதோர் உலகெலாம் முறுவலால் அடர்க்கும்
               எந்தை கொண்டதோ ருருவெனத் தோன்றிய திமைப்பில். ......    80

(நஞ்சும் ஆரழல்)

நஞ்சும் ஆரழல் நாகமும் நடுவன துருவும்
     விஞ்சு பூதமுங் கணங்களும் வேறுபல் படையும்
          எஞ்ச லில்லதோர் அங்கியும் போற்ற எவ்வுலகும்
               அஞ்சி டும்படி நடந்ததால் அரன்படை யதுவே. ......    81

(ஈசன் மாப்படை வரு)

ஈசன் மாப்படை வருதலும் உக்கிரன் என்னும்
     ஆசில் வீரன்றன் அங்கையிற் கதையினை அகற்றிப்
          பாச நீக்குமஞ் செழுத்தினை விதிமுறை பன்னி
               நேச மோடுகை தொழுதரன் பொன்னடி நினைந்தான். ......    82

(ஆண்டை உக்கிரன்)

ஆண்டை உக்கிரன் நிற்றலும் அஞ்சலி புரிவான்
     மாண்ட தொல்படை இல்லவன் துதிசெயும் வாயான்
          ஈண்டி வன்றனை அடுகிலன் யானென எண்ணி
               மீண்டு சென்றது சிவனருள் படைக்கலம் விரைவில். ......    83

(அண்ண லம்படை துற)

அண்ண லம்படை துறந்தவர் மேல்விடின் அவர்பால்
     நண்ணு றாதுநம் பக்கல்வந் திடுமென நல்க
          விண்ணு லாம்புகழ் அவுணர்கோன் பெறுதலின் விடையூர்
               பண்ண வன்றனை அடைந்ததாங் கவனருள் படையே. ......    84

(ஆன பெற்றிகண்)

ஆன பெற்றிகண் டிங்கிவன் சிவன்கொலென் றயிர்த்துச்
     சேனை காவலன் துளங்கினன் பூதர்கள் சிறந்தார்
          வானு ளோர்மலர் மாரிகள் தூர்த்தனர் மாறாம்
               ஏனை வீரர்கள் விழிபொழி தாரைகான் றிரிந்தார். ......    85

(நீங்கு கின்றதோர்)

நீங்கு கின்றதோர் தானவர் குழுவினை நீவிர்
     ஏங்கு கின்றதை விடுமின்கள் என்றுதேர் இழிந்து
          பாங்கர் உற்றதோர் தண்டுகொண் டரிமுகன் பாலன்
               வீங்கு தோளிடை எற்றினன் உக்கிரன் வெகுண்டான். ......    86

(எற்று தண்டினை)

எற்று தண்டினை அங்கையால் உக்கிரன் என்போன்
     பற்றி வாங்கியே அவன்றன துரம்பதை பதைப்பத்
          தெற்றெ னப்புடைத் திடுதலும் நிலனிடைச் சேர்ந்தான்
               மற்ற வன்றன துயிர்கொடு போயினன் மறலி. ......    87

(துஞ்சி வீழ்அதி)

துஞ்சி வீழ்அதி சூரனை நோக்கியே துகடீர்
     மஞ்சு போலவே வரும்அசு ரேந்திரன் மனமும்
          நஞ்சு மாமெனக் கொதித்தனன் அழலெழ நகையா
               விஞ்சு பூதர்தங் குழுவின்மேற் சென்றனன் விரைவின். ......    88

(கடிது சென்றசு)

கடிது சென்றசு ரேந்திரன் இந்திரன் கரத்தின்
     நெடிய வில்லினும் ஆயிரத் திரட்டிமேல் நிமிர்ந்த
          கொடிய வார்சிலை வாங்கியே குணத்தொலி கொளுவப்
               படியும் வானமுங் குலைந்தன உயிரெலாம் பதைப்ப. ......    89

(பூதர் அங்கது நோக்கி)

பூதர் அங்கது நோக்கியே தண்டமும் பொருப்பும்
     பாத வங்களுந் தாரகன் தந்திடு பதகன்
          மீது சென்றிட விடுத்தலும் அனையன விலக்கிச்
               சோதி வெங்கணை இறுதிநாள் முகிலெனச் சொரிந்தான். ......    90

(வடிகொள் வார்கணை)

வடிகொள் வார்கணை விடுத்தலும் பூதர்கள் வலிதின்
     விடுபி றங்கலே முதலிய இடையிடை வீட்டி
          முடியுங் கைகளும் ஆகமும் முகத்தொடு மொய்ம்பும்
               அடியுஞ் சோரிநீர் கான்றிட அழுந்திய அவர்பால். ......    91

(மற்றும் வெங்கணை)

மற்றும் வெங்கணை உலப்பில தூண்டலும் மண்மேல்
     அற்ற கைகளுந் துணிந்திடு தோள்களும் அடியும்
          இற்ற கண்டமு மாகிவெம் பூதர்கள் இறப்பக்
               கொற்ற வீரரில் கனகன்என் பவன்எதிர் கொண்டான். ......    92

(எதிர தாய்வரு கன)

எதிர தாய்வரு கனகன்மேல் தாரகன் ஈந்த
     அதிரும் வார்கழல் அண்ணலோர் வடிக்கணை அழுத்த
          உதிர வாரியோ டன்னவன் தேர்மிசை உற்றான்
               கதிரின் மேல்வரு செய்யகோ ளாமெனக் கடிதின். ......    93

(பாகன் தன்னுயிர்)

பாகன் தன்னுயிர் உலந்திட உதைத்துவெம் பனைக்கை
     நாகந் தந்திடு மதலைதன் வரிசிலை நாணைக்
          காகம் போலவெள் ளெயிற்றினாற் கீறிவெங் கறைசேர்
               மேகந் தாரணி மிசைஇழிந் தாலென மீண்டான். ......    94

(இழிந்து மால்வரை)

இழிந்து மால்வரை ஒன்றுகீண் டசுரரிந் திரனாங்
     கழிந்த சீர்த்தியான் மீமிசை ஓச்சலுங் கரத்தின்
          அழிந்த வில்லினை நீத்துவே றொருசிலை அதனைக்
               குழிந்த கண்ணுடைப் பூதர்கள் வெருக்கொளக் குனித்தான். ......    95

(குனித்து நான்கிரு)

குனித்து நான்கிரு சுடுசரந் தொடுத்தறை கூவித்
     தனித்து மேல்வருங் கனகன்ஏ வியகிரி சாய்த்துப்
          புனிற்றி ளம்பிறை செக்கர்வான் நுழைந்தெனப் புயங்கள்
               பனித்தி டும்படி அழுத்தினன் ஆயிரம் பகழி. ......    96

(பகழி ஆயிரம் படுதலும்)

பகழி ஆயிரம் படுதலும் ஆடகன் பையுள்
     நிகழ நிற்றலும் வேறொரு வலவனை நிறுவிப்
          புகழில் தானவன் தேர்கொடு பூதர்மேற் போத
               அகழு மால்வரை ஒன்றெறிந் துன்மத்தன் ஆர்த்தான். ......    97

(அவன்எ றிந்திடும்)

அவன்எ றிந்திடும் பருப்பதம் விரைவில்வந் தடர்க்கக்
     கவன வெம்பரி யாயின உலந்தன காணாப்
          பவன வேகத்தின் வேறொரு தேர்மிசைப் பாய்ந்தான்
               புவனம் உண்ணிய நின்றதோர் கடவுளே போல்வான். ......    98

(முந்து வெங்கணை)

முந்து வெங்கணை உலப்பில தூண்டலும் முந்நீர்
     செந்து கிர்க்கொடி போர்த்தெனக் குருதிநீர் செறிய
          வந்த முற்றிலன் புவிமிசை இருந்தனன் ஆங்கே
               மந்தன் என்பவன் தாரகன் புதல்வன்நேர் வந்தான். ......    99

(வருத லோடும்ஆங்)

வருத லோடும்ஆங் கவன்மிசை ஐயிரு வாளி
     குருதி காலுற வழங்கலும் எரியெனக் கொதியாப்
          பரிதி மேவரத் தகுவதோர் பருப்பதம் பறித்துக்
               கருதி ஏவினன் அவுணர்கோன் அங்கது கண்டான். ......    100

(சென்று மார்பெதிர்)

சென்று மார்பெதிர் ஏற்றலும் வந்துழித் தெறித்துக்
     குன்று மீண்டுமற் றவன்புடை போயது கொடியோன்
          ஒன்று போலிய ஆயிரம் பகழிகள் உய்த்தான்
               நின்று மந்தன் அங்கயர்ந்தனன் சிங்கனும் நேர்ந்தான். ......    101

(எடுத்து மால்வரை)

எடுத்து மால்வரை ஒன்றவன் உரத்தின்நேர் எறியத்
     தடுத்தொர் வாளியின் அகற்றினன் அமரிடைத் தரியார்
          விடுத்த தோர்கதை எறிதலும் அவனது விலக்கித்
               தொடுத்து நூறுகோல் அழுத்தினன் சிங்கனும் தொலைந்தான். ......    102

(ஒழிந்த சாரத)

ஒழிந்த சாரதத் தலைவர்க ளியாவரும் உடன்றே
     அழிந்து நின்றனர் தாரகன் குமரன்ஆ சுகங்கள்
          பொழிந்து மற்றுள பூதரை முடித்திடும் போதில்
               கழிந்த துன்பொடும் இலக்கரில் தண்டகன் கண்டான். ......    103

(தனது கார்முகம்)

தனது கார்முகம் வாங்கியே தண்டகப் பெயரோன்
     முனையி ருங்கணை ஆயிரங் கொடியவன் முகத்தின்
          நனிபு குந்திட விடுத்தலும் நடலையுற் றிரங்கி
               மனம்வெ குண்டுபின் தன்பெருஞ் சிலையினை வளைத்தான். ......    104

(வளைத்து நாலிரண்)

வளைத்து நாலிரண் டம்பினைத் தண்டக மறவோன்
     குளத்தின் மேற்பட விடுத்தலும் எழுந்தன குருதி
          இளைத்து நின்றனன் தேர்மிசை அன்னவற் கிளையோன்
               கிளத்து சோமுகன் தாரகன் மகன்எதிர் கிடைத்தான். ......    105

(எதிர்பு குந்தவன் அகல)

எதிர்பு குந்தவன் அகலமேல் ஐம்பதிற் றிரட்டி
     கதிர்தெ றுங்கணை அவுணர்கோன் அழுத்தலுங் கவலா
          அதிர்த ருந்தன தொண்சிலை வாங்கியா யிரமாம்
               நுதிகொள் வெஞ்சரந் தூண்டினன் சோமுகன் நொடிப்பில். ......    106

(பல்ல வங்களா யிரமும்)

பல்ல வங்களா யிரமும்அத் தாரகன் பாலன்
     சில்லி யந்தனித் தேரினை வலவனைச் சிதைப்ப
          மெல்ல வேறொரு தேர்மிசைப் பாய்ந்துவேல் ஒன்றை
               ஒல்லை இங்கிவன் உயிரினை உண்கென உய்த்தான். ......    107

(உய்த்த வேல்அவன்)

உய்த்த வேல்அவன் அகலமேற் படுதலும் முயங்கி
     எய்த்து மற்றவன் தேர்மிசை மயங்கினன் இருப்ப
          நித்தன் வேர்வுறு சோமுகற் கிளையவன் நெடுமால்
               ஒத்த வன்மையன் விசயன்என் பவன்கடி துற்றான். ......    108

(விசயன் ஆங்கொரு)

விசயன் ஆங்கொரு கொடுமரம் வாங்கியே வெகுண்டு
     நிசித வெங்கணை ஆயிரம் உய்த்துநே ரில்லா
          அசுரர் இந்திரன் வலவனைத் தடிந்துமற் றவன்கை
               இசையும் வில்லொடு நாரியைத் துணிபட இறுத்தான். ......    109

(முற்று நூலுணர்)

முற்று நூலுணர் பாகுயிர் உலத்தலும் முனியா
     இற்ற நாணொடு வார்சிலைத் துணியினை ஏந்திக்
          கொற்ற மார்அசு ரேந்திரன் மத்திகை கொண்டு
               பொற்றை அன்னதன் தேர்விடு வலவனின் பொலிந்தான். ......    110

(தகுவர் கோன்ஒரு)

தகுவர் கோன்ஒரு வலவனை நிறுவியோர் தண்டம்
     இகலும் வன்மையால் எடுத்தனன் அவன்மிசை எறியப்
          புகுது மெல்லையில் கண்டெதிர் விசயனாம் புகழோன்
               மிகவும் எல்லையில் சரங்களைத் தூண்டினன் விடுத்தான். ......    111

(தொட்ட தொட்டன)

தொட்ட தொட்டன கணையெலாந் துகள்படத் தொலைத்து
     மட்டு லாந்தொடை விசயன்மார் பகத்திடை வந்து
          பட்ட காலையில் அவன்றன திரதமேற் பதைத்து
               விட்ட வில்லொடு குருதியுந் தானுமாய் வீழ்ந்தான். ......    112

(விழுந்த காலையில்)

விழுந்த காலையில் இலக்கரில் ஏனையோர் வெகுண்டு
     பொழிந்த வாளியால் தாரகன் மகனொடு பொருதே
          அழிந்தி யாவரும் இரிந்தனர் போதலும் அதுகண்
               டுழந்த துன்பொடு வீரமொய்ம் பினன்விரைந் துற்றான். ......    113

(வீர வாகுவேள் இணை)

வீர வாகுவேள் இணையடி போற்றியே வெகுண்டோர்
     கோர வெஞ்சிலை வாங்கினன் நாணொலி கொளுவி
          யாரும் வானவர் வியப்புற அவுணர்கள் அயரத்
               தார காசுரன் மதலையை மறைத்தனன் சரத்தால். ......    114

(மறைப்ப மெய்யெலா)

மறைப்ப மெய்யெலாங் குருதிகொண் டிடலும்வல் லவுணன்
     விறற்க டுஞ்சிலை ஒன்றினை வளைத்தவன் மிசையே
          பிறைத்த லைக்கணை ஆயிரம் அழுத்தினன் பெரிதும்
               உறைத்த செம்புனல் இருவரும் இளங்கதிர் ஒத்தார். ......    115

(தார கத்திற லான்)

தார கத்திற லான்மகன் தூண்டியேழ் சரத்தால்
     சூரர் இத்திறல் அண்ணல்கைச் சிலைதனைத் துணிப்ப
          வீரன் மற்றொரு கார்முகம் வாங்கியே விடங்கால்
               கூர யிற்கணை ஆயிரம் விடுத்தனன் குறியால். ......    116

(ஏகும் வார்கணை)

ஏகும் வார்கணை தாரகன் மகன்சிலை இறுத்துப்
     பாகன் ஆவியுண் டிரதமோ டயங்களைப் படுப்ப
          வாகை இன்றியே வேறொரு தேர்மிசை வறியன்
               போக லோடுமற் றன்னது கண்டனர் புலவோர். ......    117

(வெருவ ரப்பொரு)

வெருவ ரப்பொருந் தாரகன் மதலையை வீரன்
     பொருது வெற்றிகொள் வான்கொலாம் இனியெனப் புகழ்ந்தார்
          அரிய அற்புத மோவவன் வென்றிடல் அவுணன்
               கரித ருஞ்சுதன் சிம்புளின் சுதனிவன் கழறின். ......    118

(மாறொர் தேரிடை)

மாறொர் தேரிடைப் பாய்ந்தவன் ஒருதனு வளைத்து
     நூறு கோல்விடுத் தவன்இர தத்தினை நூறச்
          சீறி வானெழீஇ வீரவா குப்பெயர்த் திறலோன்
               ஆறு மாமுக முதல்வனைப் பரவிநின் றார்த்தான். ......    119

(உறைக ழித்துவாள்)

உறைக ழித்துவாள் உருவியே உம்பரிற் படர்ந்து
     சிறைக ழித்திடும் வரைபுரை அவுணர்கோன் தேர்மேல்
          குறைக ழித்திடும் பணிகவர் மதியெனக் குப்புற்
               றிறைக ழிக்குமுன் அவன்றனைக் கையிலொன் றெறிந்தான். ......    120

(எறிந்த காலையில் இற்ற)

எறிந்த காலையில் இற்றதோர் கைத்தலம் இறலுங்
     குறைந்த கையிடைச் சலசல இழிவன குருதி
          செறிந்த நீலவொண் கிரிதனக் கொருபுடை சென்றே
               உறைந்த தோர்கரும் பணியழல் மணியுமிழ்ந் தொப்ப. ......    121

(கைய றுத்தலுந் தார)

கைய றுத்தலுந் தாரகன் தன்சுதன் கனன்று
     மொய்யு டைக்கதை ஒன்றெடுத் தவன்மிசை மோத
          ஒய்யெனத் திறல்*1 மொய்ம்பினன் வானெழுந் தொருதன்
               செய்ய பொற்பதத் துதைத்தனன் அங்கவன் சிரத்தில். ......    122

(காமர் தாளினால்)

காமர் தாளினால் உதைத்துவிண் படர்தலுங் கண்டு
     தூம மார்விழி யான்அசு ரேந்திரன் தொடர்ந்தோர்
          சேம வாள்கொடு வானெழ மேலையோன் சீறி
               ஏம நாந்தகத் தால்அவன் தலையற எறிந்தான். ......    123

(எறிந்த சென்னி)

எறிந்த சென்னியு மியாக்கையும் இம்பரின் வீழ்ந்து
     மறிந்து மற்றவன் மன்னுயிர் போயது வான்மேற்
          செறிந்த விண்ணவர் ஆர்த்தனர் இன்னதோர் செய்கை
               அறிந்த தானவக் கடலெலாம் ஓடின அன்றே. ......    124

(மக்க ளாயினர் இரு)

மக்க ளாயினர் இருவரும் இறந்தது மலைந்து
     பக்க மேயின தானைகள் இரிந்ததும் பாராத்
          தொக்க பேரழல் உலகட எழுந்ததோற் றம்போல்
               மிக்க சீற்றமேற் கொண்டனன் அண்டங்கள் வென்றான். ......    125

(சீற்ற மேதகு காசி)

சீற்ற மேதகு காசிபன் மதலைபோர் செய்யும்
     ஆற்ற லார்தமை அடுவனால் விரைந்தென மதித்துக்
          காற்றின் முந்துசெல் தேரிடைக் கடிதுவந் தெய்திக்
               கூற்றின் வெம்பசி தணிப்பதோர் சிலையினைக் குனித்தான். ......    126

(வாணி போற்றிடு)

வாணி போற்றிடு சயமகள் வீரமா மடந்தை
     நீணி லைப்பட வேறுசோ பானத்தின் நெறிபோல்
          பூண ளாவிய பொன்னவாஞ் சிலைதனிற் புணர்த்த
               நாணின் ஓதையைக் காட்டினன் அணிவிரல் நகத்தால். ......    127

(கரங்கொள் வில்லொலி)

கரங்கொள் வில்லொலி கேட்டலும் பாரிடைக் கணங்கள்
     மரங்கள் சிந்தினர் சிகரிகள் சிந்தினர் மலையும்
          உரங்கள் சிந்தினர் வீரமுஞ் சிந்தினர் உடலுஞ்
               சிரங்க ளானவும் பனித்திட ஓடினர் சிதறி. ......    128

(யாண்டு மாகியே)

யாண்டு மாகியே இரிந்தனர் அல்லதிந் நிலத்தில்
     வீண்டு ளார்சிலர் பதைத்துநின் றார்சிலர் வீழ்ந்து
          மாண்டு ளார்சிலர் மயக்கமுற் றார்சிலர் மற்றும்
               ஆண்டு பன்னிரண் டொழிந்தில தவுணன்வில் அரவம். ......    129

(வேதன் அஞ்சினன்)

வேதன் அஞ்சினன் மால்முடி துளக்கினன் விண்ணோர்
     நாதன் அஞ்சினன் மறலியும் அஞ்சினன் நடுங்கிக்
          கோதில் நல்லறம் அஞ்சின ஐவகை கொண்ட
               பூதம் அஞ்சின உயிர்த்தொகை அஞ்சின பொருமி. ......    130

(வஞ்சன் வார்சிலை)

வஞ்சன் வார்சிலை நாணொலி கேட்டலும் மறத்தால்
     விஞ்சு பூதமீ ராயிர வெள்ளமும் வெருவி
          எஞ்சி யேயவண் நின்றிடா திரிந்துள வென்றால்
               அஞ்சு பூதங்கள் அஞ்சுவ தற்புதத் தனவோ. ......    131

(சூரன் விற்பெரு)

சூரன் விற்பெரு முழக்கினைக் கேட்டலுந் துளங்கிப்
     பாரி டத்தொகை அழிதர அன்னது பார்த்துப்
          போரி யற்படைத் தலைவர்நூற் றெண்மரும் புகுந்து
               மாரி யிற்பொழிந் திட்டனர் வரைகளும் மரமும். ......    132

(அன்ன வேலையிற் பத்து)

அன்ன வேலையிற் பத்துநூ றாயிர கோடி
     பொன்னின் வெங்கணை அவுணர்கோன் முறைமுறை போக்கித்
          தன்னு ழைப்புகும் வரையொடு தருக்களைத் தடிந்து
               துன்னு பாரிடத் தலைவர்தம் யாக்கையைத் துளைத்தான். ......    133

(முடிது ளைத்தனன்)

முடிது ளைத்தனன் முகத்தினைத் துளைத்தனன் மொய்ம்பைத்
     தொடையல் மார்பினைத் துளைத்தனன் பாணியைத் துளைத்தான்
          கடிது ளைத்தனன் குறங்கினைத் துளைத்தனன் கழல்சேர்
               அடிது ளைத்தனன் பாரிடத் தலைவரும் அயர்ந்தார். ......    134

(துளைத்து மெய்யினை)

துளைத்து மெய்யினை வெஞ்சரம் போதலுந் துயர்கொண்
     டிளைத்து நின்றனன் அதிபலன் வக்கிரன் என்போன்
          களைத்து வீழ்ந்தனன் வச்சிரன் இரங்கினன் கபாலி
               உளத்தின் வன்மைய தழிந்தனன் உன்மத்தன் உலைந்தான். ......    135

(நீடு குன்றினை)

நீடு குன்றினை யேந்தியே அச்சுதன் நின்றான்
     ஓடு கின்றிலன் எதிர்ந்திலன் மாபலன் உளைந்தான்
          வாடு கின்றனன் மதிசயன் மேகனும் மருண்டான்
               ஆடு றுந்துயர் அறிந்தனன் அண்டவா பரணன். ......    136

(மேக மாலிஉள்)

மேக மாலிஉள் நடுங்கினன் சுப்பிரன் மெலிந்தான்
     காக பாதன்மெய் பதைத்தனன் உதவகன் கவன்றான்
          ஆகம் வீழ்ந்திடு குருதியுள் அழுந்தினன் அசலன்
               மாக வந்தன்நொந் திரங்கினன் அத்திரி மறிந்தான். ......    137

(பத்தி ரன்சிறி திடை)

பத்தி ரன்சிறி திடைந்தனன் உடைந்தனன் பதுமன்
     எய்த்த சைந்தனன் வியாக்கிரன் தனஞ்சயன் இரிந்தான்
          மத்தன் வைதுவெய் துயிர்த்தனன் பினாகிமெய் மறந்தான்
               சித்தி ராங்கனுங் கனகனுந் துயர்க்கடல் திளைத்தார். ......    138

(நெஞ்ச ழிந்தனர்)

நெஞ்ச ழிந்தனர் மாலியும் நீலனும் நெடுங்கண்
     பஞ்ச டைந்தனர் கும்பனும் நிகும்பனும் பதைப்புற்
          றஞ்சி ஏங்கினர் சண்டியுந் தண்டியும் ஆவி
               துஞ்சல் கூடினர் வாமனுஞ் சோமன்என் பவனும். ......    139

(வெங்கண் உக்கிரன்)

வெங்கண் உக்கிரன் எழுவதற் குரனிலன் வெகுண்டான்
     சிங்கன் ஓய்ந்தனன் சுவேதசீ ரிடன்மறந் தீர்ந்தான்
          சங்க பாலன்வீழ்ந் துருண்டனன் நந்தியுஞ் சலித்தான்
               பிங்க லன்உயிர்க் கின்றிலன் உரோமசன் பெயர்ந்தான். ......    140

(இனைய தன்மையால் இவர்)

இனைய தன்மையால் இவர்முத லானநூற் றெண்மர்
     அனிக வேந்தர்கள் போர்வலி இன்றியே அழியத்
          துனைய மற்றது கண்டுநூ றாயிரத் தொகையோர்
               கனையும் வார்சிலை வாங்கியே தூர்த்தனர் கணைகள். ......    141

(தூர்த்து மற்றவர்)

தூர்த்து மற்றவர் மாறுகொண் டிடுவுழிச் சூரன்
     வேர்த்து வெங்கணை மாரிதூய் அனையன விலக்கி
          ஆர்த்து வெஞ்சரம் ஆயிர கோடிதொட் டங்கண்
               மூர்த்தம் ஒன்றினில் அனையவர் சிலைகளை முரித்தான். ......    142

(முரித்து மற்றவர்)

முரித்து மற்றவர் வார்சிலை யெடுப்பதன் முன்னம்
     திரித்தும் ஆயிர கோடிவெங் கணையினைச் செலுத்திப்
          பரித்தி றம்பல பூண்டிடுந் தேர்களைப் படுத்தி
               உரத்தில் அன்னவர்க் கிலக்கமா யிரங்கணை உய்த்தான். ......    143

(உய்த்த வாளிகள்)

உய்த்த வாளிகள் நெஞ்சுபோழ்ந் திடுதலும் உளைந்தே
     எய்த்து வீழ்ந்தனர் இலக்கரும் அனையகண் டிரங்கி
          வித்த கங்கெழு வீரமார்த் தாண்டனாம் விடலை
               கைத்த லங்கெழு சிலையொடு நேர்ந்தனன் கடிதின். ......    144

(வாங்கு வில்லினன்)

வாங்கு வில்லினன் எறிந்தநாண் ஒலியன்வார் கடல்கள்
     ஏங்கும் ஆர்ப்பினன் அவுணன்மேற் கணையெனும் எழிலி
          தூங்கு வித்தலுஞ் சரங்கள்தூய் அன்னவை தொலைத்துத்
               தீங்க டுங்கணை ஆயிரம் நுதலிடைச் செறித்தான். ......    145

(செறித்த காலையில்)

செறித்த காலையில் வீரருள் வெய்யவன் செயிர்த்து
     மறித்தும் வெஞ்சரந் தூண்டவே ஆயிரம் வாளி
          குறித்து வீசியே அவன்விடு கணையொடுங் குனிவில்
               அறுத்து ரம்பிளந் தம்புபெய் தூணியும் அட்டான். ......    146

(அட்ட காலையில்)

அட்ட காலையில் வீரமார்த் தாண்டன்உள் ளழுங்கிப்
     பட்டு ளானென வீழ்ந்தனன் பரிசது நோக்கி
          ஒட்ட லான்வலி அடக்குவன் யானென உருத்து
               விட்ட தேரொடும் வந்தனன் அரக்கனாம் விறலோன். ......    147

(வந்த வீரராக் கத)

வந்த வீரராக் கதனெனும் நாமத்து வலியோன்
     கொந்து லாந்தொடை தூங்குதன் கொடுமரங் குனியா
          ஐந்து நூற்றிரண் டடுசரந் துரந்திட அதுகால்
               உந்தி ஆர்த்தனன் அவுணர்கோன் ஒராயிரங் கணைகள். ......    148

(முட்டு வெங்கணை)

முட்டு வெங்கணை வீரராக் கதனெனும் மொய்ம்பன்
     தொட்ட வாளியை விலக்கிஅங் கவன்சிலை துணிக்க
          நெட்டி ருஞ்சுடர் வாளமொன் றேந்திநீள் விசும்பில்
               எட்டு மாதிரக் கரிகளும் வெருவஆர்த் தெழுந்தான். ......    149

(விண்ணெ ழுந்தவன்)

விண்ணெ ழுந்தவன் அவுணர்கோன் நின்றிடும் வியன்தேர்க்
     கண்ணில் வாவியே ஆங்கவன் கொண்டகார் முகத்தைத்
          துண்ணெ னச்சுடர் நாந்தகத் தெறிதலுஞ் சூரன்
               வண்ண வார்சிலை முடிந்தில தொடிந்தது மணிவாள். ......    150

(நெடிய வாட்படை)

நெடிய வாட்படை இற்றிட விறலுடை நிருதன்
     தொடையல் மார்பகத் தெற்றுவான் முயறலுஞ் சூரன்
          படையி ழந்திடும் வலியிலற் கொல்வது பழியென்
               றடியின் மேற்படுத் தெறிந்தனன் அண்டமேற் செல்ல. ......    151

(அரக்கர் வீரனை)

அரக்கர் வீரனை அவுணர்கோன் எறிந்திட அலமந்
     திரக்கம் எய்தியே வீழ்ந்தனன் புவிமிசை இதுகண்
          டுரக்க டுங்கணை மாரிகள் ஒன்னலன் தேரும்
               கரக்க வீசிவந் தேற்றனன் மகேந்திரன் கடியோன். ......    152

(சூரன் அங்கது)

சூரன் அங்கது விலக்கியே கணைமழை துரப்ப
     வீரன் மற்றது சிந்தினன் பகழிகள் வீசிச்
          சாரி வட்டம தாய்வர அவுணனுந் தக்கோன்
               தேரை வட்டணை வந்தனன் சிலீமுகஞ் சிதறி. ......    153

(திரியும் வட்டணை)

திரியும் வட்டணை முறையினாற் சரமழை சிதறி
     வருதி றத்தினால் ஐயம தாவவர் வடிவை
          ஒருதி றத்தருந் தெளிகிலர் உணர்ந்திட அற்றோ
               இருதி றத்தரும் வீரமா மகேந்திரர் என்றால். ......    154

(ஆள ரிக்குடன்)

ஆள ரிக்குடன் வந்தவன் அத்துணை அழன்று
     கோள ரிக்குடன் வந்தவன் விடுசரங் குறைத்துத்
          தாளின் முப்பது மருமமீ திருபது தடம்பொற்
               றோளின் முப்பது கணைவிடுத் தவன்வலி தொலைத்தான். ......    155

(வலிதொ லைந்த)

வலிதொ லைந்தவன் வீழ்தலும் மாக்களின் தொகைமேல்
     புலிய டைந்தென அவுணர்கோன் உரப்பினன் புகலும்
          மெலிவில் ஆற்றலன் வீரதீ ரன்னெனும் வெய்யோன்
               சிலைகு னிந்திடப் பகழிவான் நிமிர்ந்திடச் சென்றான். ......    156

(சென்ற வீரதீ ரன்)

சென்ற வீரதீ ரன்விடு கணையொடு சிலையை
     ஒன்றொ ராயிரம் வாளியால் வீட்டியே உயர்ந்த
          குன்ற மன்னதோர் தேரையேழ் கணையினால் குறைப்ப
               நன்று நன்றெனாத் தண்டமொன் றெடுத்துமேல் நடந்தான். ......    157

(நடத்த லாகிய)

நடத்த லாகிய எல்லையில் பகழியோர் நான்கு
     தொடுத்து மற்றவன் ஏந்திய தண்டினைத் துணித்துத்
          தடத்த மார்பினும் மொய்ம்பினும் ஏழிரு சரங்கள்
               விடுத்து மண்மிசை வீட்டினன் யாரையும் வென்றான். ......    158

(ஆன காலையில் வீரமா)

ஆன காலையில் வீரமா மகேசனாம் அடலோன்
     கூனல் வில்லினால் அரிதிவன் தன்வலி கோடல்
          மான மார்திறல் மொய்ம்பற்கும் எனமனம் வலியா
               ஊனும் ஆவியும் கவர்வதோர் தெய்வவேல் உய்த்தான். ......    159

(வேல்வி டுத்து)

வேல்வி டுத்துழிக் கண்டவன் வெஞ்சிலைக் குனித்துக்
     கோல்வி டுத்தலும் ஆயிரம் அன்னவை குறைத்துச்
          சூல்வி டுத்திடும் எழிலிபால் மின்வரும் தொடர்பின்
               மால்வி டுத்திடா அவுணன்மார் புற்றதவ் வைவேல். ......    160

(உற்ற தோரெஃகம்)

உற்ற தோரெஃகம் நுண்டுக ளாகிவிண் ணுலவிச்
     சுற்று மாதிரஞ் சென்றது சூரன்மேல் வீரன்
          மற்றொர் தண்டினை விடுத்திட எடுக்குமுன் வல்லோர்
               சொற்ற சாபத்தின் முந்தும்ஏழ் கணையினைத் தொடுத்தான். ......    161

(ஏழெ னப்படு பகழி)

ஏழெ னப்படு பகழியும் மகேசனாம் ஏந்தல்
     பாழி மொய்ம்பினைப் பாழிய தாகவே படுத்த
          வீழல் உற்றதங் கவன்உடல் உணர்ச்சிகள் வீந்த
               சூழு கின்றதோர் மன்னுயிர் அடைந்தது துரியம். ......    162

(மகேசன் என்பவன்)

மகேசன் என்பவன் மயங்கலும் மற்றது நோக்கிக்
     ககேசன் மேல்வரும் இராகுவின் அவுணனைக் கனன்று
          நகேசன் மங்கையோ டிகலிவேங் கடகிரி நண்ணுங்
               குகேசன் ஏவல்செய் வீரகே சரியெதிர் கொண்டான். ......    163

(எதிர்பு குந்தவன் வண)

எதிர்பு குந்தவன் வணக்கியே நாணொலி யெறிந்த
     துதிகொள் வார்சிலை தன்னையேழ் கணையினால் துணியா
          அதிகு ரல்மணித் தேரைநூ றம்பினால் அறுத்து
               நுதிநெ டுங்கணை அழுத்தினன் ஆயிர நுதலின். ......    164

(ஆயி ரங்கணை நுதலிடை - 2)

ஆயி ரங்கணை நுதலிடை அழுத்தஅம் புவியில்
     பாய்த ருங்குரு திப்பெரு நதியொடு பாய்ந்து
          சேயி ருங்குவ டொன்றினைச் செங்கையால் பறித்து
               மாயை தந்திடு மதலைமேல் விடுத்தனன் மன்னோ. ......    165

(எறித்த ருஞ்சுடர்)

எறித்த ருஞ்சுடர்த் தபனனுஞ் சேடனும் இரங்கப்
     பறித்தெ டுத்துமேல் வீசிய பராரையங் குன்றம்
          வெறித்த ருந்தொடை அவுணர்கோன் விசிகமொன் றதனால்
               அறுத்து மார்பினூ றயிற்கணை அழுத்தினன் அம்மா. ......    166

(கரம்பு குந்திடுங்)

கரம்பு குந்திடுங் குனிசிலை உமிழ்ந்திடுங் கணைகள்
     உரம்பு குந்திட வீரகே சரிமனம் உளைந்து
          பரம்பு குந்திடும் அவுணர்கோன் தேர்மிசைப் பாயா
               வரம்பு குந்தகுன் றன்னமார் பத்திடை அடித்தான். ......    167

(வடித்த விற்படை)

வடித்த விற்படை அவுணர்கோன் மருமத்தின் வலிதாய்
     அடித்த காலையில் வீரகே சரிதன தங்கை
          வெடித்த தாமெனக் கீண்டது விண்டது சோரி
               துடித்து யிர்ப்பொடு தேரிடை மறிந்தனன் துயரால். ......    168

(வீர கோளரி பதை)

வீர கோளரி பதைத்துமான் தேரிடை வீழச்
     சூரன் மற்றிவற் கொல்வது பழியெனச் சூழா
          ஓர்கை யால்அவன் தனையெடுத் தச்சுதன் உறங்கும்
               வாரி திக்கிடை எறிந்தனன் விண்ணவர் மருள. ......    169

(பரந்த பாற்கடல்)

பரந்த பாற்கடல் எறிதலும் வீழ்ந்தவன் பதைப்புற்
     றரந்தை எய்தியே எழுந்துவிண் ணெறியின்மீண் டணுகி
          முரிந்த தம்மினங் கூடினன் அங்கதன் முன்னம்
               புரந்த ரப்பெயர் வாகையான் ஏற்றெதிர் புகுந்தான். ......    170

(ஏற்றெ திர்ந்திடு)

ஏற்றெ திர்ந்திடு வீரமா புரந்தரன் என்பான்
     ஆற்றல் வெங்கணை சொரிந்துபோர் செய்வனேல் அவற்றை
          மாற்றி வென்றிடும் என்னையும் இவனென மதித்துக்
               கூற்று வன்படை தொட்டனன் அவுணனைக் குறுக. ......    171

(குறுகும் அப்படை)

குறுகும் அப்படை வரத்தினை நோக்கியே கொடியோன்
     முறுவல் செய்தனன் ஆங்கதற் கெதிருற முரணால்
          உறுவ தோர்படை தொட்டிலன் இகழ்ந்திட உவன்மேல்
               மறலி தன்படை பட்டுமாய்ந் திட்டது வரத்தால். ......    172

(தண்ட கன்படை)

தண்ட கன்படை மாய்தலுஞ் சயங்கெழு மகவான்
     முண்ட கன்படை எடுத்தனன் தொடுப்பதன் முன்னம்
          கண்ட கன்சிலை வாங்கிநூ றாயிரங் கணையை
               விண்ட கன்பெரு மார்பகந் திறந்திட விடுத்தான். ......    173

(நிறந்த ருஞ்சுடர்)

நிறந்த ருஞ்சுடர்க் கணைபுகுந் துரத்தினை நெறியாத்
     திறந்து போயின வீரமா புரந்தரன் செங்கை
          உறைந்த நான்முகப் படையொடுஞ் சோரிநீர் உமிழ்ந்து
               மறிந்து மாய்ந்தனன் வந்தனன் வீரர்தம் மறலி. ......    174

(தீர ராந்திறல் அவுணர்)

தீர ராந்திறல் அவுணர்கள் பூதராஞ் சிதைவார்
     சூர ராஞ்சிலை வல்லவர் நமரெலாந் தொலையும்
          நீர ராஞ்செருச் செயலிது நன்றென நிகழ்த்தி
               வீர ராந்தகன் வந்தனன் அந்தகன் வெருவ. ......    175

(சார்ங்கம் அன்னதோர்)

சார்ங்கம் அன்னதோர் வலியதாய் மாமதன் தனுவாம்
     ஈர்ங்க ரும்பென அரிபடு சிலைகுனித் தேற்றுக்
          கார்ங்க ரும்புய லாமென நாணொலி காட்டிக்
               கூர்ங்கொ டுங்கணை சிதறிநின் றார்ப்பிசை கொண்டான். ......    176

(ஆர்ப்பெ டுத்தலும்)

ஆர்ப்பெ டுத்தலும் அஞ்சினன் கதிரவன் அங்கம்
     வேர்ப்பெ டுத்தனர் அமரர்கள் விஞ்சையர் விண்டார்
          சீர்ப்பெ டைக்குலம் அலமரக் கின்னரஞ் சிந்திப்
               பார்ப்பெ டுத்திரி கின்றன கேசரப் பறவை. ......    177

(ஆன காலையில் வீரரந்)

ஆன காலையில் வீரரந் தகன்விடும் அம்பின்
     சோனை மாரியைக் கணைகளால் விலக்கியே சூரன்
          ஊனும் ஆவியுங் கவருமா யிரங்கணை உய்ப்பத்
               தானும் ஆயிரம் பகழிதொட் டன்னதைத் தடுத்தான். ......    178

(தடுத்த காலையில்)

தடுத்த காலையில் அவுணர்கோன் சினவிமுத் தலைசேர்
     வடித்த வச்சிரச் சிலீமுகம் ஆயிரம் வல்லே
          எடுத்து விட்டிட வீரரந் தகன்றமக் கெதிரா
               விடுத்த பல்லவம் யாவையுஞ் சிந்தியே விரைந்த. ......    179

(விரைந்து போய்விறல்)

விரைந்து போய்விறல் அந்தகன் தேரினை வீட்டிக்
     கரந்த னிற்சிலை ஒடித்துவீ ரத்தினைக் கலக்கி
          உரந்த னிற்புகுந் துணர்வுண்டு சோரிநீர் உகுத்துப்
               புரந்த ரற்குளந் துணுக்குறப் போயது புறத்தில். ......    180

(விறல்ப டைத்திடும்)

விறல்ப டைத்திடும் அந்தகன் கணைபட வீழ்ந்து
     மறல்ப டைத்திட ஆங்கது நோக்கியே மனத்தின்
          உறல்ப டைத்திடு செற்றமும் மானமும் உகைப்பத்
               திறல்ப டைத்திடு மொய்ம்பினான் அவுணன்மேற் சென்றான். ......    181

(அரிகள் அச்சுறும்)

அரிகள் அச்சுறும் வீரவா குப்பெயர் அறிஞன்
     இரதம் ஊர்ந்துவந் தேற்றலும் ஆங்கவன் எழில்சேர்
          உருவ நோக்குறா ஒற்றனாம் இவனென உன்னிப்
               பெரிது வெஞ்சினம் எய்தியே அவுணர்கோன் பேசும். ......    182

(எமது வீரமா மகே)

எமது வீரமா மகேந்திரஞ் சாடிஎண் ணில்லாத்
     தமரை அட்டனை தானைகள் அளப்பில தடிந்தாய்
          குமரர் தங்களைக் கொன்றனை நின்னுயிர் கொண்டே
               அமரின் ஆற்றலை இன்றொடே முடிக்குவன் அம்மா. ......    183

(பற்று பட்டிமை)

பற்று பட்டிமை பயிற்றியே அமைச்சரின் பன்னி
     ஒற்ற னாகியே இன்னும்வந் தாயெனின் உய்தி
          மற்ற தேகடன் வார்சிலை பிடித்தனை மாண்டாய்
               இற்றை வைகலோ நின்னுயிர்க் கிழைத்தநாள் என்றான். ......    184

(தூதும் ஆகுவன்)

தூதும் ஆகுவன் அமைச்சனும் ஆகுவன் துன்னார்
     மீது வெஞ்சமர் ஆற்றுவன் இன்னமும் வேலோன்
          ஓதி டும்பணி யாவையுஞ் செய்குவன் உலகில்
               ஏதும் வல்லன்யான் வேண்டுபோர் புரிதியால் என்றான். ......    185

(என்று வீரனோ)

என்று வீரனோ திடுதலும் எரிந்தன நயனம்
     தின்ற வாளெயி றிதழினை உரோமங்கள் சிலிர்த்த
          துன்று சீற்றமுள் ளெழுந்தது சூரனாம் அவுணன்
               குன்ற மன்னவிற் குனித்தனன் நாணொலி கொண்டான். ......    186

(சிலைப னித்திட)

சிலைப னித்திடக் குனித்திடு காலையிற் செம்பொன்
     மலைப னித்தன பாரகம் பனித்தன வான்தோய்
          அலைப னித்தன அண்டமும் பனித்தன அங்கண்
               தலைப னித்தனன் அரவினுக் கிறையவன் தானும். ......    187

வேறு

(அம்முறை வேலை)

அம்முறை வேலையில் ஆடல்கொள் மொய்ம்பின்
     செம்மல்த னாது செழுங்கர முற்ற
          மைம்மலி வார்சிலை வன்மையின் வாங்கிக்
               கொம்மென நாணொலி கொண்டனன் ஆர்த்தான். ......    188

(ஆர்த்திடு பேரொலி)

ஆர்த்திடு பேரொலி ஆங்கவன் வாங்குஞ்
     சீர்த்தனு ஆர்ப்பொடு சென்றிடு காலை
          மூர்த்தம தொன்றினின் முச்சக வைப்பும்
               பேர்த்தென வேபெயர் குற்றன அன்றே. ......    189

(அங்கது காலையில்)

அங்கது காலையில் ஆயிர கோடி
     துங்கநெ டுங்கணை தூர்த்தனன் ஆர்ப்பப்
          புங்கவ னுக்கிளை யான்புய லென்ன
               வெங்கணை வீசி விலக்கினன் நின்றான். ......    190

(விலக்கிய காலை)

விலக்கிய காலை வெகுண்டிவன் ஆவி
     கலக்குவன் என்று கடுஞ்சரம் வெய்யோன்
          இலக்கம் விடுத்திட ஏந்தல் தடுத்தான்
               கொலைக்கணை ஆயிர கோடி தொடுத்தே. ......    191

(வெற்றிகொள் வான்)

வெற்றிகொள் வான்பினும் வெங்கணை கோடி
     செற்றமொ டேசெறி வித்திடு காலை
          மற்றவை சிந்தினன் வாளிகள் நூறு
               நெற்றியில் விட்டனன் நீள்புய வீரன். ......    192

(அச்சுத னாம்அவு)

அச்சுத னாம்அவு ணன்குளம் எய்தி
     மெய்ச்சரம் நூறும் விளிந்துபின் விண்ட
          வச்சிர மாகிய மால்வரை ஒன்றின்
               உச்சியின் உற்றபொன் ஊசிகள் என்ன. ......    193

(நூறயில் வாளி நுத)

நூறயில் வாளி நுதற்கிடை சென்று
     மூறில னாகி உறுந்திறல் நோக்கி
          ஆறுமு கேசன் அயிற்படை அல்லால்
               ஈறுசெ யாதிவன் யாக்கையை என்றான். ......    194

(என்றிடும் வீரன்)

என்றிடும் வீரன் இதற்பினும் வாளி
     துன்றுபல் கோடி சொரிந்திட வெய்யோன்
          வன்றிறல் வெங்கணை யாலவை மாற்றி
               ஒன்றுடன் ஏழ்கணை ஒண்புயம் உய்த்தான். ......    195

(அம்பிரு நான்கும்)

அம்பிரு நான்கும் அணைந்துடன் ஆடல்
     மொய்ம்பினன் மொய்ம்புற மூழ்கியுள் ளுற்ற
          செம்புனல் உண்டு செழும்பிடர் போழ்ந்தே
               உம்பர் வெருக்கொள ஓடிய மாதோ. ......    196

(ஓடிய வேலை)

ஓடிய வேலை யுளைந்திடு நெஞ்சன்
     ஆடல்கொள் மொய்ம்பினன் அவ்வசு ரேசன்
          பாடுறு தேர்விடு பாகர்தம் மெய்யில்
               கோடிபல் கோடி கொடுங்கணை விட்டான். ......    197

(அலகில் நெடுங்க)

அலகில் நெடுங்கணை ஆகம் அழுந்த
     வலவர்கள் ஆற்ற வருந்தின ராகிப்
          புலவொடு சோரி புறத்தில் விளங்க
               இலவம லர்ந்தென யாரும் இருந்தார். ......    198

(அங்கது நோக்கி அழ)

அங்கது நோக்கி அழன்றசு ரேசன்
     செங்கணை ஐம்பது தீயென ஓச்சி
          வெங்கண் விறற்புயன் மேதகு தேரைப்
               பொங்குளை மாவொடு பொள்ளென அட்டான். ......    199

(அட்டிடு காலை)

அட்டிடு காலை அடற்புயன் ஆங்கோர்
     வட்டணை யாழிகொள் வையம தேறி
          நெட்டழல் வாயு நெடும்படை தன்னைத்
               தொட்டனன் ஆங்கது சூரன் அறிந்தான். ......    200

வேறு

(வீறாகிய அசுரர்)

வீறாகிய அசுரர்க்கிறை மிகமூரல் படைத்து
     மாறாகவொர் படைதொட்டிலன் வரிவில்லொடு நிற்பச்
          சூறாவளி அழல்மாப்படை சூரன்மிசை தாக்கி
               ஊறாயின நூறாயிரம் உதிராயின பிதிராய். ......    201

(காற்றின்படை கன)

காற்றின்படை கனலின்படை கண்டம்பல வாகக்
     கூற்றின்படை கதிரின்படை கூடத்தொடுத் திடலுஞ்
          சீற்றங்கெழு சூரன்மிசை சென்றேயவை தாமும்
               ஏற்றந்தனை இழந்தேகடி திறந்திட்டன அன்றே. ......    202

(அருணன்படை மற)

அருணன்படை மறலிப்படை அழிவெய்தலும் அம்மை
     சரணந்தனில் வருசத்திகள் தருமைந்தரில் தலைவன்
          வருணன்படை நிருதிப்படை மகவான்படை மூன்றும்
               முரணங்கொடு கொடியோன்உர மொய்ம்பிற்புக விடுத்தான். ......    203

(ஏயுற்றவை அவுணர்)

ஏயுற்றவை அவுணர்க்கிறை இருதோளுரம் எய்தி
     வீயுற்றன அதுகாலையில் வீரங்கெழு மொய்ம்பன்
          மாயப்படை அவுணப்படை வல்லேசெல விடுப்பப்
               போயப்படை யவன்மெய்யிடை புகுந்தேபொடி யான. ......    204

(விண்ணோர்படை)

விண்ணோர்படை இவையாவையும் விளிவாதலும் வீரன்
     நண்ணான்பெரு விறல்கண்டனன் நனிவிம்மித னாகி
          மண்ணோடுயிர்த் தொகையாவையும் வகுத்தோன்படை நளினக்
               கண்ணோன்படை யொடுகூட்டுபு கடிதிற்செல விடுத்தான். ......    205

(விடுக்குற்றிடும் அயன்)

விடுக்குற்றிடும் அயன்மால்படை விரைந்தேசினம் வீங்கி
     அடுக்குற்றிடும் உருமுப்புகை அழல்கால்பல படைகள்
          மடுக்குற்றிடு புணரித்தொகை வகுத்தெவ்வகை யுலகு
               நடுக்குற்றிட அவுணற்கெதிர் நடந்திட்டன மாதோ. ......    206

(ஆண்டேவரும் அயன்)

ஆண்டேவரும் அயன்மால்படை அவுணன்தட மார்பங்
     கீண்டேகுதும் என்றேஅவன் கிளர்தார்அக லத்தின்
          மூண்டேசின மொடுதாக்கிய முழுமாமணி வயிரச்
               சேண்டோய்கிரி துளைப்பான்முயல் சிறைவண்டின மெனவே. ......    207

(மாயோன்படை உலக)

மாயோன்படை உலகந்தரு மறையோன்படை அவுணத்
     தீயோனுரந் தனிற்பாய்ந்து திருத்தொல்வலி சிந்தி
          மீயோங்கிய அசுரேசரும் விண்ணோர்களும் நோக்கி
               ஏயோவென வசையெய்தி இரிந்திட்டன அன்றே. ......    208

(மீளுற்றவை இரியுஞ்)

மீளுற்றவை இரியுஞ்செயல் விழிதீயுற நோக்கி
     நீளுற்றிடு திறல்மொய்ம்பினன் நிமலன்வர முன்னிக்
          கோளுற்றிடு பெருவிம்மிதங் கொண்டுற்றிட அண்டம்
               ஆளுற்றிடும் அவுணர்க்கிறை நகைசெய்திவை அறைவான். ......    209

(முத்தேவரின் முதலா)

முத்தேவரின் முதலாகிய மூவாமுதல் வரத்தால்
     எத்தேவர்கள் படையுய்க்கினும் எனைவெல்கில எந்தப்
          புத்தேள்படை விடினும்மெதிர் பொரவேஒரு படையும்
               உய்த்தேதடை வினைசெய்கிலன் அவற்றின்வலி உணர்வேன். ......    210

(ஊனீத்திடு தவவி)

ஊனீத்திடு தவவிண்ணவர் உலகம்புகழ் அயன்மால்
     தானீத்துள படையென்னிடை சார்கின்றதொர் தன்மை
          மாநீத்தமெ லாமுண்டிடு வடவைத்தழல் அதனைத்
               தேனீத்தொகை தசையீதெனச் சேருந்திறன் அன்றே. ......    211

(தெரிந்திட்டனை)

தெரிந்திட்டனை நீயோச்சிய திறல்வெம்படை என்பால்
     புரிந்திட்டதொர் வயமொன்றிலை பொள்ளென்றுரம் மேவி
          முரிந்திட்டன மறிந்திட்டன முடிந்திட்டன பொடிந்தே
               எரிந்திட்டன கரிந்திட்டன இடைந்திட்டன அல்லால். ......    212

(வில்வன்மைகொள்)

வில்வன்மைகொள் சரவன்மையும் விண்ணோர்படைக் கலத்தின்
     பல்வன்மையும் பிறவாகிய படைவன்மையும் இயல்பாம்
          தொல்வன்மையுங் கண்டேயுனைத் தொலைவில்படை ஒன்றால்
               கொல்வன்எனக் காலந்தெரி கூற்றாமென நின்றேன். ......    213

(என்னாவசு ரன்செப்ப)

என்னாவசு ரன்செப்பலும் இளையோன்இனி ஒன்றால்
     ஒன்னார்களில் தலைவன்வலி உணர்வேனென உன்னாத்
          தொன்னாள்எயில் மூன்றட்டருள் தூயோன்படைக் கலத்தை
               மன்னாரருள் புரிசிந்தனை வழிபாட்டொடு விடுத்தான். ......    214

(விடுங்காலையின் இறை)

விடுங்காலையின் இறைவன்படை விடம்வெங்கனல் அசனி
     கொடுங்காலிருள் கதிர்வெய்யவன் கூற்றம்பல கூளி
          தொடுங்கார்முகச் சரமாரிகள் சூலம்புடை சுற்ற
               அடுங்காலமி தெனவேநெடி தார்த்துற்றதை யன்றே. ......    215

(உறுகின்றதொர் படை)

உறுகின்றதொர் படைநோக்கினன் உரமுற்றெனக் குடைந்தே
     இறுகின்றதொர் படைமற்றல ஈசன்படை ஈதால்
          பெறுகின்ற அப்படையாலிது பிழைசெய்குவல் என்னாச்
               செறுகின்றதொ ரவுணர்க்கிறை சிவன்றொல்படை எடுத்தான். ......    216

(ஊறேற்றிடு தன்சிந்தை)

ஊறேற்றிடு தன்சிந்தையின் உறுபூசனை நிரப்பி
     ஆறேற்றிடு சடிலத்தவன் அடல்மாப்படை தொடுப்ப
          நீறேற்றிடு மொய்ம்பன்விடு நிமலப்படை எதிர்போய்
               மாறேற்றமர் புரிந்திட்டது வையத்தவர் வெருவ. ......    217

வேறு

(காண்டகு நுதல்)

காண்டகு நுதல்விழிக் கடவுள் மாப்படை
     ஆண்டவை இரண்டும்நின் றாடல் ஆற்றியே
          மாண்டிடும் உலகென வானம் போற்றிட
               மீண்டன ஒல்லையில் விட்டு ளோர்கள்பால். ......    218

(அன்னது நோக்கியே)

அன்னது நோக்கியே அசுரர் மேலையோன்
     இன்னவை கொல்லுனக் கியன்ற வன்மைகள்
          உன்னுயிர் இன்னினி ஒழிப்பன் காண்கெனாத்
               தன்னெடுஞ் சிலைவளைஇச் சரங்கள் சிந்தினான். ......    219

(துன்புறு வடிக்கணை)

துன்புறு வடிக்கணை சூரன் சிந்தலும்
     தன்பெருஞ் சிலையினைத் தானும் வாங்கியே
          முன்புற நெடுஞ்சரம் முகிலின் தூவினான்
               பொன்புனை அலங்கலம் புயத்து வள்ளலே. ......    220

(அத்தகும் எல்லையில்)

அத்தகும் எல்லையில் அவுணர் மன்னவன்
     முத்தலை நெடுங்கணை மூவைந் தேவியே
          வித்தக மொய்ம்புடை வீர வாகுவின்
               கைத்தல வில்லினைக் கண்ட மாக்கினான். ......    221

(சிலையது துணித)

சிலையது துணிதலுஞ் சீறி வீரனோர்
     இலையுடை வேலினை யெடுத்து வீசலுந்
          தொலைவறு வரம்பெறு சூரன் மார்பெனும்
               மலையிடைக் குறுகியே மற்ற திற்றதே. ......    222

(இற்றுழி அவுணர்கள்)

இற்றுழி அவுணர்கள் இறைவன் மாலயன்
     மற்றுள கடவுளர் வலியுங் கொள்வதோர்
          கற்றையங் கதிர்மணிக் கதையொன் றோச்சினான்
               வெற்றிகொண் டுலவிய வீர வாகுமேல். ......    223

(திண்மைகொள்)

திண்மைகொள் பஃறலைச் சேடன் பாங்குளார்
     எண்மரொ டொன்றியோர் இயற்கைத் தாகியே
          உண்மலி யார்ப்புடன் ஒழுகிச் சென்றென
               வண்மணி கறங்கிட மணித்தண் டுற்றதே. ......    224

(வெங்கதை வருதலும்)

வெங்கதை வருதலும் வீர வாகுவோர்
     செங்கதை எதிருறச் செலுத்தி நிற்றலும்
          அங்கதை நீறுசெய் தவன்றன் மார்பிடைத்
               துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே. ......    225

(மேக்குயர் பெருஞ்)

மேக்குயர் பெருஞ்சின வீர வாகுவின்
     மாக்கிளர் அகலமேல் வயிர மாக்கதை
          தாக்கலும் விண்டது தாரைச் செம்புணீர்
               தேக்கிய நதிகளில் திரைத்துச் சென்றதே. ......    226

(ஆழ்ந்திடு சோரியன்)

ஆழ்ந்திடு சோரியன் அவுணன் தண்டினால்
     போழ்ந்திடு மார்பினன் புகையும் நெஞ்சினன்
          தாழ்ந்திடும் விறலினன் தளரும் யாக்கையன்
               வீழ்ந்தனன் அமரர்கள் வெருவி யோடவே. ......    227

(ஆற்றலின் றாகியே)

ஆற்றலின் றாகியே அண்ணல் வீழ்தலும்
     மேற்றிகழ் வலவனாம் விசாலி என்பவன்
          தேற்றுறு பான்மையைச் சிந்தித் தோர்புடை
               காற்றெனத் தேர்கொடு கடிது போயினான். ......    228

(போந்திடு காலையில்)

போந்திடு காலையில் புலம்பி வீழ்ந்துளான்
     மாய்ந்திடுஞ் சரதமாம் என்று மாறிலான்
          ஆய்ந்தனன் சிலைகுனித் தப்பு மாரிதூய்க்
               காய்ந்தனன் சென்றனன் கணத்தின் தானைமேல். ......    229

(பொன்றிடா வரத்தி)

பொன்றிடா வரத்தினான் பூத சேனைமேற்
     சென்றனன் கணைமழை சிதறிக் கோறலும்
          நின்றவை இரிந்தன நெடிய தீங்கதிர்
               என்றினை அடைந்திடு பனியின் ஈட்டம்போல். ......    230

(தாக்கிகல் வீரருஞ்)

தாக்கிகல் வீரருஞ் சயங்கொள் மொய்ம்பனும்
     நீக்கமில் இராயிர நீத்தத் தானையும்
          ஊக்கிய வலியழிந் துடைந்த தன்மையை
               நோக்கினன் பன்னிரு நோக்கங் கொண்டுளான். ......    231

(ஆண்டது வேலை)

ஆண்டது வேலையில் ஆறு மாமுகன்
     பாண்டிலந் தேர்மிசைப் பாகை நோக்குறா
          ஏண்டகு சூரன்மேல் இரதம் ஒய்யெனத்
               தூண்டுதி என்றனன் சுரர்கள் போற்றவே. ......    232

வேறு

(இணைஅறு முருகன்)

இணைஅறு முருகன் இவ்வா றிசைத்தலும் இனைய தோரா
     உணர்வுறு பவனன் என்னும் ஒருதனிப் பாகன் நாகர்
          கணமணி செறிந்த பொற்பிற் காமரு கடவுட் டேரைத்
               துணையறு சூரன் முன்னர்த் துண்ணெனத் தூண்டி உய்த்தான். ......    233

(ஆயது காலை தன்னில்)

ஆயது காலை தன்னில் அவுணர்கோன் அநந்த கோடி
     ஞாயிறு திரண்டொன் றாகி ஞாலமேல் இருளை ஓட்டிச்
          சேயுயர் விசும்பை நீங்கிச் செருநிலத் துற்ற தென்னத்
               தூயதோர் குமரன் போரில் தோன்றிய தோற்றங் கண்டான். ......    234

(முண்டக மலர்ந்த)

முண்டக மலர்ந்த தன்ன மூவிரு முகமுங் கண்ணுங்
     குண்டல நிரையுஞ் செம்பொன் மவுலியுங் கோல மார்பும்
          எண்டரு கரமீ ராறும் இலங்கெழிற் படைகள் யாவுந்
               தண்டையுஞ் சிலம்பும் ஆர்க்குஞ் சரணமுந் தெரியக் கண்டான். ......    235

(சூரெனும் அவுணர் கோமான்)

சூரெனும் அவுணர் கோமான் தொல்லைநாள் நோற்ற வாறும்
     பாரிடை முடிவின் றாகிப் பல்லுகம் இருந்த வாறும்
          ஆரணம் அறிதல் தேற்றா ஆறுமா முகத்தெம் மையன்
               பேரெழில் உருவம் நோக்கிப் பெரும்பயன் கோடற் கேயோ. ......    236

(எஞ்சலில் அவுணர்)

எஞ்சலில் அவுணர் செம்மல் இங்ஙனம் அமர தாற்றித்
     துஞ்சிலென் தொலைவுற் றாலென் தூயவா லறிவின் மிக்கோர்
          நெஞ்சினும் அளத்தற் கொண்ணா நிருமலக் குமர மூர்த்தி
               செஞ்சுடர் வடிவங் கண்டு தீவினை நீங்கி உய்ந்தான். ......    237

(பூவுல கண்ட மெல்)

பூவுல கண்ட மெல்லாம் புரந்திடுஞ் சூரன் தன்னைத்
     தீவினை யாளன் என்றே செப்புவர் சிறப்பின் மிக்க
          மூவிரு முகத்து வள்ளல் முன்னர்வந் தெய்தப் பெற்றான்
               ஆவிவன் தவத்திற் கன்றி அறத்திற்கும் முதல்வன் அன்றோ. ......    238

(இன்னமும் முனிவர்)

இன்னமும் முனிவர் தேவர் யாவரும் இனையன் என்றே
     உன்னருந் தலைமைத் தாகும் ஒருதனிக் குமரன் தன்னைத்
          தன்னிரு விழியாற் கண்டான் தானவர்க் கிறைவன் என்றால்
               அன்னவன் தவத்தின் பேற்றை ஆரறிந் துரைக்கற் பாலார். ......    239

(பொருசமர் விளை)

பொருசமர் விளைப்பான் போலப் பொருக்கெனப் போந்து சூரன்
     இருவிழி தன்னிற் காண்பான் எளிதுதன் வடிவங் காட்டி
          அருளது புரிந்தான் என்னின் ஆதியங் குமரன் மாயத்
               திருவிளை யாடல் யார்க்குந் தெரிகில போலு மன்றே. ......    240

(சிந்தையால் அறித)

சிந்தையால் அறிதற் கொண்ணாத் திருவுரு விழியாற் கண்டு
     முந்துதான் நின்ற சூரன் முழுதுல கடுவான் நின்றோன்
          மைந்தனாம் இவனென் றுன்னி மனத்தினில் வெகுளி தூண்டக்
               கந்தவேள் தன்னை நோக்கி இனையன கழறல் உற்றான். ......    241

வேறு

(சேனை யாய்நினை)

சேனை யாய்நினைச் சூழ்ந்தவர் செருவலி அழிந்து
     போன போனதோர் மாதிரந் தெரிந்தில பூத
          மான வீரரும் அழிந்தனர் சிலைத்தொழில் வல்ல
               ஏனை யோர்களும் என்னொடு பொருதனர் இறந்தார். ......    242

(இற்ற நின்பெரும்)

இற்ற நின்பெரும் படைக்கெலாந் தலைவனாய் என்பால்
     ஒற்று வந்துள வீரனும் பொருதுயிர் ஒழிந்தான்
          மற்று நீயொரு பாலனோ என்னொடு மலைந்து
               கொற்றம் எய்துதி நன்றுநன் றுன்னுளக் குறிப்பு. ......    243

(மேல தாகிய நின்னுடை)

மேல தாகிய நின்னுடைத் தாதையும் விண்ணும்
     ஞால மும்புரிந் துதவிய நான்முகத் திறையும்
          மாலும் வெஞ்சமர் புரிதிறங் கருதிலர் மற்றோர்
               பாலன் வல்லைகொல் என்னொடு போர்த்தொழில் பயில. ......    244

(முந்தை நாள்வலி)

முந்தை நாள்வலி இல்லதோர் அடுக்கலும் முன்யான்
     தந்த செல்வத்தின் மயங்கிய தாரகா சுரனும்
          புந்தி நீங்கிய அவன்படைத் தலைவரும் போல
               மைந்த என்னையும் நினைந்தனை போலுநின் மனத்தில். ......    245

(தேக்கு சீரினேன்)

தேக்கு சீரினேன் வரத்தியல் உன்னலை சிதையா
     ஆக்கம் உன்னலை பெருமிடல் உன்னலை அடலின்
          வீக்கம் உன்னலை படைத்திறம் உன்னலை வெம்போர்
               ஊக்கம் உன்னலை சிறுவநீ பெருஞ்சமர்க் குற்றாய். ......    246

(கமல மேலுறை)

கமல மேலுறை பகவனும் மாயனுங் ககனத்
     தமரர் செம்மலும் மாதிரக் கிழவரும் அழுங்கச்
          சிமைய மங்கையும் இரங்குற என்னொரு சிலையால்
               இமையொ டுங்குமுன் நின்வலி அழிக்குவன் என்றான். ......    247

வேறு

(சூரனென் றுரை)

சூரனென் றுரைபெற் றுள்ள தொல்லையோன் இனைய தன்மை
     வீரமுந் திறலுஞ் சீரும் வெகுளியுங் கொண்டு செப்ப
          ஆரருள் உருவாய் நின்ற ஆதியங் குமரன் கேளா
               மூரலுஞ் சிறிது தோன்ற இத்திறம் மொழிய லுற்றான். ......    248

(வெற்றியும் உடையம்)

வெற்றியும் உடையம் ஆற்றல் மிகுதியும் உடையம் மேன்மை
     பற்றியும் உடையம் எண்ணில் படைகளும் உடையம் வீயாப்
          பெற்றியும் உடையம் தானைப் பெருங்கடல் உடையம் என்று
               மற்றினி அகந்தை கொள்ளேல் மாற்றுதும் வல்லை மன்னோ. ......    249

(வரமிகு சிறப்பி னேமை)

வரமிகு சிறப்பி னேமை மழவிளங் குமரன் கொல்லோ
     பொருதுவென் றிடுவான் வல்லன் என்றுநின் புந்தி கொண்டாய்
          பெரிதுநீ மடவை மாதோ பிரான்தனி நெற்றி நாட்டத்
               தொருசிறு பொறியே அன்றோ உலகெலாம் அடுவ தம்மா. ......    250

(அறிவுடை முதியர்)

அறிவுடை முதியர் என்றும் ஆண்டிளை யோர்கள் என்றுஞ்
     சிறியவர் பெரியர் என்றும் திருத்தகு வளத்தர் என்றும்
          வறியவர் என்றும் வீரர் மதிக்கிலர் யாவ ரேனும்
               விறல்வலி படைத்து நேரின் வெஞ்சமர் விளைப்பர் அன்றே. ......    251

(நூற்றுடன் எட்ட)

நூற்றுடன் எட்ட தென்ன நுவலுறும் உகத்தின் காறும்
     பேற்றுடன் இனிது வைகும் பெரியநின் வலியை இன்னே
          தேற்றம துறாத கொள்கைச் சிறியநம் வன்மை தன்னால்
               ஊற்றுடைப் பாலிற் புக்க உறையென அடுதும் என்றான். ......    252

வேறு

(என்னு முன்வெகு)

என்னு முன்வெகுண் டவுணர்கோன் இருநிலந் தன்னை
     முன்ன ளந்தவன் போல்அண்ட முகடுதோய் வுற்ற
          கொன்னெ டுஞ்சிலை ஒன்றினைக் கரத்தொடு குனிப்ப
               அன்ன பான்மையைக் கண்டனன் ஆதியங் குமரன். ......    253

(மால யன்சுரர்)

மால யன்சுரர் பல்லியம் இயம்பிவாழ்த் தெடுப்ப
     ஆல மார்வனத் தெம்பிரான் ஆடிய அந்நாள்
          மேலை மூதண்ட முகடுற எடுத்ததோர் வியன்தாட்
               கோலம் என்னஓர் நெடுஞ்சிலை யெடுத்தனன் குமரன். ......    254

(அடற்பெ ருந்திறல்)

அடற்பெ ருந்திறல் சண்டிதன் பெருமிதம் அடக்கிப்
     படித்த லந்தனை அருளுவான் ஆடல்செய் பரமன்
          எடுத்த சேவடி பகிரண்டம் அட்டிடா இயல்பால்
               தடுத்த செங்கைபோல் குனித்தனன் அறுமுகன் தனுவை. ......    255

(குனித்த வில்லிடை)

குனித்த வில்லிடைக் குமரவேள் நாணொலி கொண்டான்
     அனைத்தும் அண்டங்கள் உடைந்தபேர் ஓதைபோல் அவுணன்
          சினத்து மாறுதன் குணத்திசை எடுத்தனன் செகத்தில்
               பனித்த டங்கடல் யாவுமார்த் துடைந்திடும் பரிசின். ......    256

(அள்ளி லைப்படை)

அள்ளி லைப்படை அவுணர்கோன் அடுசர மழைதூய்
     வள்ளல் தன்னையுந் தேரையும் உலகையும் மறைப்பத்
          தெள்ளி திங்கிவன் விஞ்சையென் றெந்தைசிந் தித்துக்
               கொள்ளை வெங்கணை துரந்தவை யாவையுங் குறைத்தான். ......    257

(குறைத்த காலையில் சின)

குறைத்த காலையில் சினவியே பின்னருங் கொடுநஞ்
     சுறைத்த பொற்கணை பலதொட வாளிகள் ஓச்சி
          அறுத்து மற்றவை குமரவேள் அவுணர்கோன் தன்னை
               மறைத்து விண்ணெறி மாற்றினன் பகழிமா மழையால். ......    258

(ஆன பான்மைசேர்)

ஆன பான்மைசேர் பகழியின் படலிகை அவுணன்
     சோனை வாளியால் துணித்திடை வீட்டியே சுரர்தஞ்
          சேனை காவலற் கண்டனன் வினைத்தளை சிந்தி
               ஞான நாயகத் தாணுவைக் காணுநற் றவர்போல். ......    259

(கண்டு தீயவன்)

கண்டு தீயவன் பத்துநூ றாயிரங் கணைகள்
     அண்ட நாயகன் குமரன்மேல் விடுத்தலும் அவற்றை
          எண்ட ருஞ்சர மாரியால் விலக்கியீ ரேழு
               புண்ட ருங்கணை உய்த்தனன் ஆங்கவன் புயமேல். ......    260

(கயப்பொ ருப்பினை)

கயப்பொ ருப்பினை உரித்தமால் வரைதரு காளை
     வயப்பொ ருப்பினை அடுகணை சூரனாம் வலியோன்
          புயப்பொ ருப்பினை எய்தியே துளைத்தில புரைதீர்
               அயப்பொ ருப்பையுற் றடல்பெறா அழலவன் கதிர்போல். ......    261

(மாயை தன்மகன்)

மாயை தன்மகன் வச்சிர யாக்கையின் வலியை
     நாய கன்திரு மதலைகண் டழலெழ நகைத்துத்
          தீய வன்பினும் விடுவதோர் சரமெலாஞ் சிந்தி
               ஆயி ரங்கணை யால்அவன் சிலையினை அறுத்தான். ......    262

(சிலையி னைத்து)

சிலையி னைத்துணித் திடுதலும் அவுணர்கோன் செயிர்த்து
     மலையி னைத்தடிந் தவன்மிசை மலரயன் தந்த
          இலைய யிற்படை ஒன்றினை எறிதலும் ஈரேழ்
               கொலையு டைக்கணை தூண்டியே அன்னதைக் குறைத்தான். ......    263

(ஏறு சேவகத் தவுணர்)

ஏறு சேவகத் தவுணர்கோன் அயிற்படை இறலும்
     வேறொர் கார்முகம் வாங்கினன் சரமழை வீசி
          மாறு மாறவன் தொடுந்தொடுங் கணையெலாம் மாற்றி
               ஆறு மாமுகன் புயத்திலேழ் வாளிதொட் டார்த்தான். ......    264

(செங்க திர்ப்பகை தன்னை)

செங்க திர்ப்பகை தன்னைமுன் உதவினான் செலுத்தும்
     வெங்க ணைத்தொகை பரஞ்சுடர் உருவமாம் விமலன்
          துங்க மிக்கதோள் புக்குநுண் தூளிய தாகிப்
               பொங்க னற்றிரள் பட்டதோர் பூளைபோன் றனவால். ......    265

(மொய்யி ருங்கணை)

மொய்யி ருங்கணை பட்டுநீ றாதலும் முருகன்
     வெய்ய சூர்வலி நன்றுநன் றாலென வெகுளா
          ஐயி ரண்டுவான் பகழியால் அவன்சிலை அறுத்துச்
               செய்ய தேரையும் ஆயிரங் கணையினால் சிதைத்தான். ......    266

(ஆழி பூண்டிடும்)

ஆழி பூண்டிடும் இரதமும் அங்கையிற் சிலையும்
     பூழி ஆதலும் அரசனுக் கேமமாய்ப் போந்த
          ஏழி ரண்டுநூ றாயிரந் தேரையும் இமைப்பின்
               ஊழி நாயகன் தன்சர மழையினால் ஒழித்தான். ......    267

(சேம மாகியே நின்றி)

சேம மாகியே நின்றிடு தேரெலாஞ் செவ்வேள்
     காமர் வாளியால் சிதைத்தலும் அன்னது கண்டான்
          தூம வெங்கனல் தூண்டிய விழியுடைச் சூரன்
               ஏம மாகியே கொண்டிடு சூலமொன் றெறிந்தான். ......    268

(நண்ண லன்விடு)

நண்ண லன்விடு முத்தலைப் படையைநாற் கணையால்
     பண்ண வன்திரு மாமகன் இருதுணி படுத்துத்
          துண்ணெ னக்கணை ஏழினால் அவன்குடை துணியா
               அண்ண லஞ்சுடர் முடியையோர் கணையினால் அறுத்தான். ......    269

(மணிப டுத்திய)

மணிப டுத்திய மவுலியை அறுத்தபின் வலியோன்
     பணிப டுத்தமெய் எங்கணும் பகழிகள் போக்கி
          அணிப டுத்தியே புனைதரு மதாணிகள் அனைத்தும்
               துணிப டுத்தினன் மறைகளுந் துணிந்திடற் கரியோன். ......    270

(ஆன காலையில் சூரபன்)

ஆன காலையில் சூரபன் மாவெனும் அரசன்
     மான வன்மையில் குறைந்தது நோக்கிமா டுள்ள
          சேனை காவலர் நாற்படை தன்னொடுஞ் சேர்ந்து
               சோனை யாப்படை வழங்கியே குமரனைச் சூழ்ந்தார். ......    271

(ஏழு நேமியும் எறிந்து)

ஏழு நேமியும் எறிந்துமே ருவைவளைந் தென்னக்
     கேழில் பல்படை வீசியே ஆர்த்துடன் கிளர்ந்து
          சூழும் வெய்யவர் தானையைக் கண்டனன் தொன்னாட்
               பூழி யாகவே அவுணரூர் அட்டவன் புதல்வன். ......    272

(குருதி வேற்படை)

குருதி வேற்படை கொண்டவன் தன்புடைக் குழுமிப்
     பொருதி றற்பெருந் தானையைப் பொள்ளென அடுவான்
          கருதி யாங்கொரு கரத்தினில் இருந்திடு கடவுட்
               பரிதி யம்படை தொட்டனன் இரவியிற் படர. ......    273

(இலகும் வெய்யவன்)

இலகும் வெய்யவன் நடுவுநாள் யாமத்தின் ஏகி
     அலகில் பேரிருள் அட்டென ஆழிபோய் அவுணர்
          தலையும் ஆகமுங் கைகளும் அடிகளுந் தடந்தோள்
               மலையும் வீசிய படைகளுந் துணித்தது மன்னோ. ......    274

(மேனி லாவிய தேர்)

மேனி லாவிய தேர்களைத் துணித்திடும் வெங்கண்
     மான யானைக ளியாவையும் துணித்திடும் வயமாத்
          தானை யாவையும் துணித்திடுஞ் சமரினைத் தாங்குஞ்
               சேனை காவலர் யாரையும் துணித்திடுந் திகிரி. ......    275

(அரந்து ணித்தவாள்)

அரந்து ணித்தவாள் அவுணர்கள் அடுசமர் உன்னின்
     உரந்து ணித்திடும் இகழின்நாத் துணித்திடும் உரப்பில்
          சிரந்து ணித்திடும் படைதொடு முயற்சிகள் செய்யிற்
               கரந்து ணித்திடும் எதிர்ந்திடில் துணித்திடுங் கழல்கள். ......    276

(குடைது ணித்திடும்)

குடைது ணித்திடும் கவரிகள் துணித்திடும் கொடியின்
     தொடைது ணித்திடும் தேர்நிரை பூண்டமான் தொகையின்
          இடைது ணித்திடும் அவுணர்தங் கரங்களின் இருந்த
               படைது ணித்திடும் துணித்திடும் பல்லியத் தொகையும். ......    277

(கொற்ற மிக்கதோர்)

கொற்ற மிக்கதோர் கோல்கொடு வலியுடைக் குலாலன்
     சுற்றி விட்டிடு திகிரியின் விரைவொடு சுழன்று
          பற்ற லார்பெருந் தானையைப் பஃறுணி படுத்தி
               ஒற்றை நேமியம் பெரும்படை திரிந்ததால் உலவி. ......    278

(போர ழிந்திடும்)

போர ழிந்திடும் அவுணர்தம் உடற்குறை புகையாச்
     சோரி வன்னியா அதனிடைத் துணிந்துவீழ் பரியும்
          தேரும் யானையும் அவிகளா எம்பிரான் திகிரி
               வீர மாமகம் ஒன்றியற் றுவதென விளங்கும். ......    279

(வெஞ்ச மர்த்தொழில்)

வெஞ்ச மர்த்தொழில் புரிதரும் அவுணரை வீட்டி
     வஞ்ச கத்தொடு மாயமாம் பேரிருண் மாற்றி
          எஞ்ச லுற்றிடுங் குருதியம் பெருநிறம் எய்திச்
               செஞ்சு டர்க்கதி ராயதால் அறுமுகன் திகிரி. ......    280

(நச்சு தன்னிட)

நச்சு தன்னிடத் தமலையை இருத்திய நம்பன்
     இச்சு தன்தனி ஆழிசென் றாடுறும் இயல்பை
          அச்சு தன்கரத் தேந்திய நேமிகண் டதனை
               மெச்சு தன்மையிற் புகழ்ந்தது விம்மித மேவி. ......    281

(தீர்த்தன் உய்த்திடு)

தீர்த்தன் உய்த்திடு நேமியம் பெரும்படை செருவில்
     ஆர்த்த தானைநூ றாயிர வெள்ளமு மடைய
          மூர்த்தம் ஒன்றினில் துணித்தது மூவிரு முகத்தோன்
               வார்த்தை யால்அவை முழுவது மாற்றிய வாபோல். ......    282

(ஆடல் உற்றவேற்)

ஆடல் உற்றவேற் பண்ணவன் அலர்கதிர்ப் பரிதி
     பாடு சுற்றிய அவுணர்கோன் தானையைப் படுத்து
          மோடு பெற்றதொல் புகழொடு மீண்டது முளிபுற்
               காடு முற்றவுந் தனிபடர்ந் துண்டதோர் கனல்போல். ......    283

(கைம்ம லிந்திடு)

கைம்ம லிந்திடு குடைபல காம்பிடை துணிந்து
     மெய்ம்ம லிந்திடு விழுநிணச் சேற்றிடை வீழ்ந்து
          பொம்மல் கொண்டுநிற் புறுவன பூவலர் தடத்திற்
               செம்மல் கொண்டமர் தாமரைக் காடுபோல் திகழும். ......    284

(அழுங்கல் கொண்ட)

அழுங்கல் கொண்டதோர் கரிபரி அவுணர்பேர் அனிகம்
     வழங்கல் இன்றிவீழ்ந் தவிந்திடு களேவரம் மலிதல்
          தழங்கு தெண்டிரை உலகுள சயிலங்கள் அனைத்தும்
               ஒழுங்க தாகிவந் தாயிடைத் தொக்கவா றொப்ப. ......    285

(அகல்வி சும்புகா)

அகல்வி சும்புகா றோங்கிய களேவரம் அதன்பால்
     ஞெகிழி கொண்டவாய்ப் பேயின நிணனுண்டு சிரித்து
          மிகவும் ஆர்ப்பெடுத் தீண்டுவ மின்னியே இடித்து
               முகிலி ருங்கணம் முதுவரைச் சாரல்மொய்த் ததுபோல். ......    286

(மையல் யானையும்)

மையல் யானையும் அவுணர்த மியாக்கையும் மற்றும்
     ஒய்யெ னக்கொடு குருதியம் பேரியா றொழுகல்
          செய்ய தோர்பணி கருங்கடல் மறைத்தல்சிந் தித்து
               வெய்ய நஞ்சுமிழ்ந் திருநிலம் படர்தல்போல் விளங்கும். ......    287

(மாணி லைப்படு பேய்)

மாணி லைப்படு பேய்சில களேவர வரைபோய்ச்
     சோணி தப்புனல் ஆறுபாய்ந் திடஅதன் துவலை
          சேணி லத்துளார் அரிவையர் புனைகலை தெறிப்ப
               நாணல் உற்றனர் பூப்பென நகைப்பரென் றுன்னி. ......    288

(சொல்ல ருந்திறல்)

சொல்ல ருந்திறல் அவுணரில் சிலர்தலை துணிந்து
     வல்லை யிற்கிளர்ந் தார்த்தலும் வலியினால் தம்மை
          அல்லல் செய்திடு கோளிரண் டல்லதை அவைபோல்
               எல்லை யில்லவை வந்தஎன் றிரியுமால் இரவி. ......    289

(நீடி விண்படர்)

நீடி விண்படர் கொடிசில நிமிர்கவந் தத்தின்
     காடு தன்னிடைப் புகுந்துதந் தலைமிசைக் காட்டி
          ஆடல் யானையின் களேவரங் குத்துவ அடுபோ
               ரூடு காக்கையின் முகரும்வந் தார்கொலென் றுரைப்ப. ......    290

(நீட லுற்றசீர் அவுணர்)

நீட லுற்றசீர் அவுணர்கோன் ஆணையால் நிலமேல்
     வீட லுற்றிடு வயவர்க்குத் தம்முயிர் மீட்டுங்
          கூட லுற்றிடு திறனெனக் கூளிகை கொட்ட
               ஆட லுற்றிடும் உடற்குறை அநந்தகோ டிகளால். ......    291

(இனைய வெல்லை)

இனைய வெல்லையில் எம்பிரான் எரிகதிர்ப் பரிதி
     முனையில் வந்தடல் செய்ததை உணர்ந்திலன் முன்சூழ்
          கனையி ருங்கடற் படையெலாம் பட்டவா கண்டு
               மனம ருண்டொரு தமியனாய் நின்றனன் வலியோன். ......    292

(நீண்ட தன்னொரு)

நீண்ட தன்னொரு வேற்படை உய்த்துநீக் கினனோ
     பாண்ட ரங்கம தியற்றுவான் படையின்வீட் டினனோ
          மாண்டு போகவென் றொருமொழி தன்னின்மாற் றினனோ
               ஈண்டு தானையை முடித்ததெவ் வாறிவ னென்றான். ......    293

(தேரி ழந்தனன்)

தேரி ழந்தனன் சிலையதும் இழந்தனன் திறல்சேர்
     பேரி ழந்தனன் தானைகள் இழந்தனன் பெரும்பூண்
          ஏரி ழந்தனன் மவுலியுங் கவிகையும் இழந்தான்
               பாரி ழந்திடு மன்னர்போல் நின்றனன் படிமேல். ......    294

(நின்றி டுந்திறல்)

நின்றி டுந்திறல் அவுணர்கோன் நெடுஞ்சினம் நெஞ்சில்
     துன்ற மார்பகம் வியர்த்திட முடித்தலை துளக்கி
          நன்று நன்றொரு பாலகன் வலியென நகையா
               வென்றி நான்முகன் படைக்கலம் எடுத்துமேல் விடுத்தான். ......    295

வேறு

(சூர்ப்புயல் அன்ன)

சூர்ப்புயல் அன்னதொர் சூரன் விடுக்கும்
     மாற்படு போதன் வயப்படை சென்று
          பாற்படு மெல்லை பரஞ்சுடர் செங்கை
               வேற்படை சென்று விழுங்கிய தன்றே. ......    296

(விழுங்குதல் கண்ட)

விழுங்குதல் கண்டனன் வெய்யவன் நெஞ்சம்
     அழுங்குதல் செய்தனன் அச்சுத மூர்த்தி
          வழங்கிய தொல்லை வயப்படை ஏந்தி
               முழங்கழல் என்ன முனிந்துடன் விட்டான். ......    297

(விட்டிடு மாயவன்)

விட்டிடு மாயவன் வெம்படை ஏகி
     மட்டறு கண்ணர்தம் மாலுரு ஈன்று
          கிட்டிய காலை கிளர்ந்திடும் ஒள்வேல்
               அட்டது தன்னையும் ஆர்ந்தது மன்னோ. ......    298

(சயம்புனை செம்மல்)

சயம்புனை செம்மல் தனாதருள் நீரால்
     அயன்படை தன்னுடன் அம்புவி கேள்வன்
          வியன்படை தன்னையும் வேற்படை உண்ணக்
               கயம்படு சூரது கண்டுவிம் முற்றான். ......    299

(கறுத்திடு கின்ற)

கறுத்திடு கின்றதொர் கந்தர வள்ளல்
     விறற்படை தன்னை விடுத்திடின் யாரே
          மறுத்திடு வாரஃ தென்று மனத்திற்
               குறித்தனன் மாயை கொடுத்தருள் கோமான். ......    300

(முப்புரம் நீறெழ)

முப்புரம் நீறெழ மூரல் விளைத்தோன்
     மெய்ப்படை தன்னை விடுப்பது தேற்றி
          அப்படை ஏந்தி அருச்சனை நீரால்
               ஒப்பறு சீர்த்தியன் ஒய்யென உய்த்தான். ......    301

(அத்தகு வெம்படை)

அத்தகு வெம்படை ஆடல் இயற்றும்
     முத்தலை வேற்படை மூர்த்திகள் கோலம்
          எத்திசை தன்னினும் ஈண்டுற ஆர்த்து
               மெய்த்தழல் வீசி விரைந்தது மாதோ. ......    302

(ஆடியல் யானை)

ஆடியல் யானைக ளாயின எட்டும்
     வீடிய வேயென வீழ்ந்தயர் வுற்ற
          நீடிய நேமியின் நின்றிடு செந்தீ
               ஓடிய சேடனும் உட்கி உலைந்தான். ......    303

(படித்தலம் நெக்கது)

படித்தலம் நெக்கது பல்வகை மேகம்
     இடித்தொகை சிந்தி இரிந்தன பானுத்
          துடித்தது திங்கள் சுழன்றது மேரு
               வெடித்த திடந்தொறும் விண்டதிவ் வண்டம். ......    304

(இலக்கர் நடுங்கினர்)

இலக்கர் நடுங்கினர் ஏனைய வீரர்
     கலக்க மடைந்தனர் காண்டகு பூதர்
          மலக்கம தெய்தினர் மற்றிது தன்னை
               விலக்கரி தாலென ஓடினர் விண்ணோர். ......    305

(புடவி முதற்புவ னங்கள்)

புடவி முதற்புவ னங்கள் அனைத்தும்
     நொடிவரை செல்லுமுன் நொய்தென மாய
          முடிவ தியற்றிடு மூர்த்திதன் நாமப்
               படைவர அன்னது பார்த்தனன் வள்ளல். ......    306

(எந்தைதன் மாப்படை)

எந்தைதன் மாப்படை ஈதென ஐயன்
     சிந்தை புரிந்தொரு செங்கையை நீட்டி
          வந்திடும் அப்படை பற்றினன் மாதோ
               தந்தவன் வாங்கிய தன்மைய தென்ன. ......    307

(பெற்ற முயர்த்த)

பெற்ற முயர்த்த பெருந்தகை நாமக்
     கொற்ற நெடும்படை யைக்கும ரேசன்
          பற்றியொர் பாணி பரித்தனன் நின்றான்
               மற்றது கண்டனன் மாயவள் மைந்தன். ......    308

வேறு

(விட்ட விட்டதோர்)

விட்ட விட்டதோர் படைக்கெலாம் வேறுவே றொன்று
     தொட்டி லான்அத னாலது மாற்றுதல் துணியான்
          கிட்டும் எல்லையில் அவையெலாங் கவர்ந்தனன் கேடில்
               அட்ட மூர்த்திசேய் என்பது காட்டினன் அம்மா. ......    309

(என்னொ டேபொரற்)

என்னொ டேபொரற் கிவனலால் வேறிலை இனையோன்
     தன்னொ டேபொரற் கியானலா திலையிது சரதம்
          அன்ன பான்மையின் எனக்குநே ராம்இவன் அலது
               பின்னை யாருளர் தமியனுக் குவமையாப் பேச. ......    310

(மான வேற்படை)

மான வேற்படை வன்மையும் விற்றொழில் வலியும்
     ஏனை யாயுள வன்மையுங் கண்டனன் இனிமேல்
          பானல் வாய்மைந்தன் செய்வது பார்ப்பனென் றுன்னி
               மோன மாகியே நின்றனன் அவுணர்கள் முதல்வன். ......    311

(பொருளின் நீர்மை)

பொருளின் நீர்மையால் புனைகலன் மாற்றலிற் புவிமேல்
     இருளின் நீர்மையாய்த் தோன்றினோன் அற்புத மெய்தி
          மருளின் நீர்மையால் நின்றது நோக்கியே வள்ளல்
               அருளின் நீர்மையால் இனையன மாற்றங்கள் அறைவான். ......    312

(இந்தி ரன்தனி மதலை)

இந்தி ரன்தனி மதலையை இமையவர் தம்மை
     அந்த மில்பகல் சிறையிடைப் படுத்தனை அதற்கா
          முந்தொ ரொற்றனை விடுத்தனம் ஆங்கவன் மொழியுஞ்
               சிந்தை கொண்டிலை விடுத்திலை அமரர்தஞ் சிறையும். ......    313

(அன்ன தன்மையால்)

அன்ன தன்மையால் ஈண்டியாம் வந்தனம் அமரில்
     தன்னை நேரிலா திருந்திடு தாரகன் தன்னை
          முன்னம் அட்டிடு முறையென நின்னையும் முனிவால்
               இன்ன வைகலே அடுதுமென் றேகினம் மீண்டும். ......    314

(ஈண்டு நின்புடை)

ஈண்டு நின்புடை ஈண்டிய இலக்கம்வெள் ளத்து
     நீண்ட தானையும் நின்சிலை வன்மையும் நின்னால்
          தூண்டல் உற்றிடு தெய்வதப் படைகளுந் தொலைந்து
               மாண்டு போயது கண்டனை வறியனாய் நின்றாய். ......    315

(நெடிய தாரகற் செற்ற)

நெடிய தாரகற் செற்றவேல் இருந்தது நின்னை
     அடுதல் இங்கொரு பொருளுமன் றரிதுமற் றன்றால்
          படையி ழந்திடு நின்னுயிர் உண்டிடில் பழியாய்
               முடியு மென்றுதாழ்க் கின்றனம் தருமத்தின் முறையால். ......    316

(பன்னு கின்றதெ)

பன்னு கின்றதென் பற்பல விண்ணுளோர் பலரும்
     துன்னு தொல்சிறை விடுத்தியேல் உன்னுயிர் தொலையேம்
          அன்ன தன்மையை மறுத்திடின் ஒல்லைநாம் அடுதும்
               என்னை கொல்லுன தெண்ணங்கள் உரைத்தியால் என்றான். ......    317

(வேறு வேறுநின்று)

வேறு வேறுநின் றுலகெலாம் அளிப்பது வெஃகி
     ஆறு மாமுகம் பன்னிரு செங்கைகொண் டருள்வோன்
          ஊறு சேர்அவு ணன்றனக் கினையன உரைப்ப
               மாறொர் வாசகஞ் சொற்றிலன் உளத்திவை மதிப்பான். ......    318

(படையி ழந்தனன்)

படையி ழந்தனன் இவனென உன்னியே பாலன்
     இடைதெ ரிந்தனன் போலவே இமையவர் யாப்பை
          விடுதி என்னவும் வல்லனா யினன்விளி வில்லேன்
               அடலும் ஆற்றலுந் தெரிந்திலன் பிள்ளைமை யதனால். ......    319

(மன்ற லந்தொடை)

மன்ற லந்தொடை அறுமுகன் வரம்பிலா வைகல்
     நின்று பேரமர் புரியநான் வறிதுநின் றிடினுங்
          கொன்றி டுந்தொழில் வல்லனே தந்தைமுன் கொடுக்க
               என்றும் மாய்ந்திடா ஒருவரம் பெற்றிடும் என்னை. ......    320

(தொழுத குந்திரு)

தொழுத குந்திரு மவுலியுங் கவிகையுந் துணிய
     இழிவ தாகியே தமியன்நின் றமரியற் றிடினும்
          அழிவ தில்லையால் ஆவது மிலைபுகழ் அதனால்
               பழிய தொன்றுறும் அங்கது பாதுகாத் திடுவேன். ......    321

(வேற்று நீர்த்தட)

வேற்று நீர்த்தடங் கொள்வதை அன்றிவெள் ளங்கள்
     ஊற்று நீர்ப்பெரும் புணரியைக் கொள்வதற் குறுமோ
          ஏற்ற தானையைப் படைகளைத் தொலைப்பதே அன்றி
               மாற்று மோவென தழிவுறா வரத்தையும் மைந்தன். ......    322

(என்னை அங்கவன்)

என்னை அங்கவன் முடித்திடல் அரியதா லியானும்
     அன்ன வன்றனை இத்துணை வெல்வதும் அனைத்தே
          தொன்ன கர்ப்பெரு வளத்தொடும் படையொடுந் துன்னிப்
               பின்னர் வந்தமர் இயற்றியே பெருந்திறல் பெறுவேன். ......    323

(வசைய தன்றிது)

வசைய தன்றிது செருச்செய்வோர் பற்பகல் மலைந்து
     விசையம் எய்தினும் மேன்மையாம் வியப்புமாம் மேலுந்
          திசைவி ளங்குறு புகழுமாம் யானுமிச் செய்கை
               இசைவ தேகடன் அறிஞர்தஞ் சூழ்ச்சியும் இஃதே. ......    324

(என்று பற்பல சூழ்ச்சி)

என்று பற்பல சூழ்ச்சிகள் மனத்திடை எண்ணி
     ஒன்றொர் மாயையின் மந்திரந் தன்னையுள் ளுறுத்தி
          நின்ற மன்னவன் ஒல்லையின் மறைந்தவண் நீங்கிப்
               பொன்றி கழ்ந்திடும் மகேந்திரக் கோயிலுட் போனான். ......    325

(மறைந்து போயசூர்)

மறைந்து போயசூர் முயற்சியை மன்னுயிர் தோறும்
     உறைந்த நாயகன் கண்டனன் ஒருதனிச் செவ்வேல்
          எறிந்து மற்றவன் உயிர்கொள நினைந்திலன் இன்னும்
               மறிந்து தீயவன் உய்யுமோ வெனுந்திரு வருளால். ......    326

வேறு

(ஆய வேலைதனில்)

ஆய வேலைதனில் ஆறுமு கன்பால்
     மாயனும் மயனும் வானவர் கோவும்
          ஏய தேவர்களும் யாவரும் எய்தித்
               தூய வந்தனை யுடன்சொல லுற்றார். ......    327

(என்று காசிபன்)

என்று காசிபன் இடந்தனில் வந்தான்
     அன்று தான்முத லாவசு ரேசன்
          வென்றி யேகொடு வியப்பொ டிருந்தான்
               உன்ற னோடுபொரு தோடினன் இன்றே. ......    328

(நீடு சூரனுடன்)

நீடு சூரனுடன் நீஅமர் செய்தல்
     ஆடலே அலதை ஆங்கவன் ஆவி
          கோடல் சிந்தையிடை கொண்டனை என்னின்
               ஓடுமோ பொருதும் உய்திறம் உண்டோ. ......    329

(துங்க முற்றுடைய)

துங்க முற்றுடைய சூர்தனை வேலான்
     மங்கு வித்திடுதி மற்றதன் முன்னம்
          அங்க வற்கெதிர் அருஞ்சமர் ஆற்றல்
               எங்கண் வைத்துடைய இன்னருள் அன்றோ. ......    330

(என்றி யம்புதலும்)

என்றி யம்புதலும் எந்தை வினாவி
     நன்று நன்றென நகைத்தினி நம்முன்
          சென்று நின்றுசமர் செய்திடின் வல்லே
               வென்று சூர்முதலை வீட்டுது மென்றான். ......    331

(ஆடல் சேரும்அவு)

ஆடல் சேரும்அவு ணன்சமர் ஆற்றா
     தோடி னாரும்உறு கண்ணுள ராகி
          வீடி னார்களென வீழ்ந்தயர் வாரும்
               கூடி னார்குமர வேள்புடை வந்தார். ......    332

(சங்க மாகியுறு)

சங்க மாகியுறு சாரதர் ஆனோர்
     எங்கள் நாயகனை எய்தி இகற்சூர்
          மங்குல் வானிடை மறைந்தது தேரா
               அங்கண் ஞாலமலை வுற்றிட ஆர்த்தார். ......    333

(திகழ்ந்த பூதர்கள்)

திகழ்ந்த பூதர்கள் செருத்தனில் எம்மை
     இகழ்ந்த சூர்நகரின் இம்மதில் வீட்டி
          அகழ்ந்து கோபுரம் அகன்கட லிட்டு
               மகிழ்ந்து மீண்டிடுதும் வம்மின மென்றார். ......    334

(வம்மின் வம்மினென)

வம்மின் வம்மினென வல்லைவி ளித்துத்
     தம்மி னங்களொடு சாரதர் மேலோர்
          அம்ம கேந்திரம் அழுங்குற ஆர்த்திட்
               டிம்மெ னக்கடி தெயிற்புறம் உற்றார். ......    335

(உற்ற காலைதனில் ஒண்)

உற்ற காலைதனில் ஒண்மதில் காக்குங்
     கொற்ற வீரன்அதி கோரன் மருங்கிற்
          சுற்று தானையொடு சோர்விலன் நின்றான்
               செற்று பூதர்படை சென்றன கண்டான். ......    336

(கண்டு ளான்நனி)

கண்டு ளான்நனி கனன்றிதழ் கவ்வித்
     திண்டி பேரிதி மிலைப்பறை ஆர்ப்பத்
          தண்ட லின்றிஅமர் தானைக ளோடு
               மண்டு போர்புரிய வந்தெதிர் புக்கான். ......    337

(எதிர்பு குந்திடலும்)

எதிர்பு குந்திடலும் ஏற்றெதிர் சென்றார்
     அதிர்பு குங்கழலின் ஆடுறு பூதர்
          பொதிர்பு குந்தவிருள் போந்துழி எண்ணில்
               கதிர்பு குந்தனைய காட்சி படைத்தார். ......    338

(தோம ரம்பரசு)

தோம ரம்பரசு சூலமொ டெஃகம்
     ஏம ருங்கதைகள் ஏவினர் கோரன்
          மாம ருங்கவுணர் மற்றிவர் குன்றங்
               காம ரம்படைக லந்து விடுத்தார். ......    339

(எடுத்து வேழநிரை)

எடுத்து வேழநிரை எற்றினர் தேரை
     ஒடித்தெ றிந்தனர் உகண்டுகள் பாய்மாப்
          பிடித்தொர் கைகொடு பிசைந்தனர் வீரர்
               துடித்தி டும்படி துகைத்தனர் பூதர். ......    340

(எறிவர் பல்படையும்)

எறிவர் பல்படையும் எய்குவர் வெங்கோல்
     குறிய ஈட்டிகொடு குத்துவர் வாளால்
          செறுநர் தங்களுடல் சிந்துவர் இவ்வா
               றறியும் வெஞ்சமரை ஆற்றினர் தீயோர். ......    341

(சோரி பொங்கின)

சோரி பொங்கின சொரிந்தன மூளை
     சாரு றுங்குடர் சரிந்தன சேனங்
          காரி பம்பின கணங்களும் ஏனை
               வீர ராம்அவுண ரும்பலர் வீந்தார். ......    342

(ஈடு றுஞ்சமர்)

ஈடு றுஞ்சமர் இழைத்துழி இவ்வா
     றாடல் வெங்கணவர் ஆற்ற முனிந்தே
          சாடி வன்மையொடு தாக்கலும் நில்லா
               தோடி னார்அவுண ராயுளர் முற்றும். ......    343

(கோர மிக்கஅதி)

கோர மிக்கஅதி கோர னெனும்பேர்
     வீரன் மற்றதனை நோக்கி வெகுண்டே
          ஓரெ ழுத்தனை உரத்தொடு பற்றிச்
               சார தப்படைஞர் தம்மொடு நேர்ந்தான். ......    344

(தலைத னிற்கரத)

தலைத னிற்கரத லத்தினின் மொய்ம்பின்
     மலையி னிற்பெரிய மார்பின் முகத்தின்
          ஒலிக ழற்கணம் உலைந்திட மோதிக்
               கொலைவி ளைத்தொருவ னேகுல வுற்றான். ......    345

(ஈடி லாததொ ரெழு)

ஈடி லாததொ ரெழுப்படை பற்றா
     ஓடி யோடிஉரு முற்றென மோதி
          வீடு றாதமர் விளைத்திடு பூதர்
               கோடி கோடியொ ரிமைப்பிடை கொன்றான். ......    346

(இந்த வாறவன்)

இந்த வாறவன் எழுக்கொடு தாக்க
     முந்து தூசிமுரி வுற்றது கண்டான்
          கந்தன் ஏவல்செய் கணப்படை மன்னன்
               சிந்து மேகன்முனி வோடெதிர் சென்றான். ......    347

(சென்ற பூதரிறை)

சென்ற பூதரிறை செங்கையில் வைகுங்
     குன்றம் ஒன்றைஅதி கோர னெனும்பேர்
          வென்றி யான்மிசை விடுத்தலும் நோக்கித்
               தன்த டக்கையெழு வால்தகர் வித்தான். ......    348

(தகரும் எல்லைதரி)

தகரும் எல்லைதரி யார்கடல் வற்ற
     முகிலின் உண்டிடு முரட்பெயர் அண்ணல்
          வெகுளி யோடவுணர் வேந்தனை எய்தி
               அகல மீதினில் அடித்தனன் மாதோ. ......    349

(அடித்த லோடும்)

அடித்த லோடும்அவு ணர்க்கிறை யானோன்
     இடுக்கண் எய்திஇவன் ஆவியை இன்னே
          முடிப்பன் என்றுமுச லங்கொடு மொய்ம்பில்
               புடைத்த னன்உருமு வீழ்வது போல. ......    350

(பூதன் மொய்ம்பிடை)

பூதன் மொய்ம்பிடை புடைத்த எழுத்தான்
     ஏதமா முரிய ஏற்றெதிர் தெவ்வைக்
          காது கைகொடு கபோலம் அதன்கண்
               மோத வேயவுணன் ஆவி முடிந்தான். ......    351

(வாய்தல் போற்றிய)

வாய்தல் போற்றிய வயப்படை வீரன்
     சாத லுற்றுழி தலைத்தலை ஆர்த்துப்
          பூத சேனையர்கள் பொம்மென ஏகி
               மூதெ யிற்றலை முதற்கடை சென்றார். ......    352

(ஆண்டி யோசனை)

ஆண்டி யோசனை ஒராயிரம் வான்போய்
     ஈண்டு செம்மணிக ளால்இய லுற்று
          மாண்ட தீயவட வாமுக மேபோல்
               நீண்ட தோர்சிகரி நின்றது கண்டார். ......    353

(கண்ட தோர்சிகரி)

கண்ட தோர்சிகரி கைகொடு தொட்டுத்
     தெண்டி ரைக்கடலின் மேற்செல விட்டார்
          மண்டு மேருவரை யின்குவ டேந்திச்
               சண்ட வாயுவிடு தன்மைய தென்ன. ......    354

(அன்ன வேலையில் அலை)

அன்ன வேலையில் அலைந்தது ஞாலம்
     பன்ன கேசனும் மிகப்பட ருற்றான்
          மன்னு சூருறை மகேந்திர மூதூர்
               துன்னு தானவர் துளங்கி அயர்ந்தார். ......    355

(ஈண்டு பூதரெறி)

ஈண்டு பூதரெறி யுஞ்சிக ரந்தான்
     ஆண்டவ் வேலையிடை ஆழ்ந்தது தொன்னாள்
          நீண்ட மேனிஇறை நின்றளி யாமுன்
               மாண்டு சாய்ந்துவிழு மந்தர மென்ன. ......    356

வேறு

(பொலங்கெழு சிகரி)

பொலங்கெழு சிகரிஅப் புணரி சேர்தலின்
     கலங்கின விரிதிரைக் கைம்ம றித்ததால்
          மலங்கின மொடுசுறா அருந்தி மிங்கில
               கிலங்களும் இரிந்ததங் கிளைக ளோடுமே. ......    357

(மாதலம் புகுந்தி)

மாதலம் புகுந்திடுஞ் சிகரி வாரியுட்
     பூதரங் குய்த்திட விரைவிற் போவது
          வேதமுன் கொணர்தரு மீனம் வேலையில்
               பாதலம் புகுந்திடு பான்மை போலுமே. ......    358

(கழற்கறங் கிய)

கழற்கறங் கியதெனுங் கண்ணர் உந்திய
     அழற்கொழுந் தாகிய சிகரத் தாய்மணி
          நிழற்பொலிந் திடுவன நீல வேலையில்
               தழற்பரந் தெழுவதோர் தன்மை போலுமே. ......    359

(நாகர மணிவெயில்)

நாகர மணிவெயில் நணுகும் வேலையில்
     சீகரம் உம்பர்போய்த் தெறித்து மீள்வது
          சாகரம் உற்றது தழலென் றுன்னியே
               மாகர வாரிநீர் வழங்கல் போலுமால். ......    360

(காமரு சிகரியில்)

காமரு சிகரியில் கவைஇய மாமணி
     ஏமுற நிழற்றிய எழிலை நோக்கியே
          பூமது நுகர்தரு பொறிவண் டானவை
               தாமரை வனமென அயிர்த்துச் சாருமால். ......    361

(பங்கய மணிநிழற்)

பங்கய மணிநிழற் பரப்பை நோக்கியே
     இங்கிவை தசையென எண்ணிப் புட்குலம்
          நுங்கிய செல்வன நொய்தின் எய்தியே
               அங்கிகொ லெனச்சில அகன்று போயின. ......    362

(தெழித்திடும் வேலை)

தெழித்திடும் வேலையிற் செய்ய சோதியால்
     தழற்பொலி கோபுரந் தரிப்பின் றேகலால்
          கிழித்தன பணிபதி கிளர்ந்து மற்றவர்
               விழித்தனர் உருமென வெருவி ஓடினார். ......    363

(பூதர்கள் யாம்விடு)

பூதர்கள் யாம்விடு பொலங்கொள் கோபுரம்
     ஓதநெஞ் சடைதலும் உதிரங் கான்றதால்
          சேதன மோவிது செப்பும் என்றனர்
               மீதுறு கதிர்மணி வெயிலென் றுன்னலார். ......    364

(பொற்பகல் சிகரி)

பொற்பகல் சிகரியுட் பொருந்தி ஆழ்பவர்
     அற்பகல் நுகருமீன் அவரை நுங்குமால்
          முற்பக லோர்பழி முடிக்கின் மற்றது
               பிற்பகல் தமக்குறும் பெற்றி என்னவே. ......    365

(ஆனதொர் கோபுரம்)

ஆனதொர் கோபுரம் அளப்பி லாதமர்
     தானவர் கிளையொடும் வீழ்ந்த தன்மையால்
          மீனுறு திரைக்கடல் வெள்ள மேற்செலா
               மாநகர் எயில்தனை வளைந்து புக்கதே. ......    366

(காதிடும் இயற்கை)

காதிடும் இயற்கையில் கால்கொண் டேகலிற்
     பூதலம் வெருக்கொளப் பொங்கும் ஆர்ப்பினின்
          மீதமர் காரினில் விமலன் விட்டிடும்
               பூதரை நிகர்த்ததப் புரிசை சூழ்புனல். ......    367

(மைக்கடல் புவியினும்)

மைக்கடல் புவியினும் மகேந்தி ரப்புரம்
     மிக்கது போலுமென் றைய மேற்கொளா
          இக்கணம் நாடுதும் என்று சென்றபோல்
               புக்கது நகரிடைப் புணரி நீத்தமே. ......    368

(மீனெனும் மைந்த)

மீனெனும் மைந்தரை மிசைந்த தானவர்க்
     கானதொ ரிறுவரை அணுகிற் றிவ்விடை
          யானவர்ப் பொருவனென் றெண்ணிச் சேறல்போல்
               போனதப் பதியினுட் புணரி நீத்தமே. ......    369

(இவ்வகை நிகழ்ந்திட)

இவ்வகை நிகழ்ந்திட எறிந்த கோபுரம்
     பௌவமுற் றிடுதலும் பைம்பொன் மாமதில்
          வெவ்வலி அரசர்கள் விளிய ஈறிலாக்
               கௌவைகொள் திருநகர்க் காட்சித் தாயதே. ......    370

(எல்லைமற் றனை)

எல்லைமற் றனையதில் ஈண்டு சாரதர்
     மல்லலம் புரிசையின் வடாது பாங்கரை
          ஒல்லையில் தம்பதத் துதைப்பச் சாய்ந்தது
               செல்லுற வீழ்ந்திடு சிகர மேயென. ......    371

(மாமதில் சாய்தலும்)

மாமதில் சாய்தலும் வலிய பூதர்கள்
     காமரு நகரினுட் கலந்து நண்ணினார்
          ஏமரு கடங்கலுழ் இபங்கள் ஈண்டியோர்
               தாமரை மலர்த்தடந் தன்னிற் புக்கபோல். ......    372

(கானுறு பங்கய)

கானுறு பங்கயக் கடவுட் கிப்பகல்
     போனதோர் காலையிற் புணரி யாவையும்
          மாநிலங் கொள்வது மானப் பூதவெஞ்
               சேனைகள் மகேந்திர புரத்திற் சென்றவே. ......    373

(புக்கனர் வீரர்கள்)

புக்கனர் வீரர்கள் புயலின் மேனியுஞ்
     செக்கரங் குஞ்சியாந் தீயுங் கைகளாய்
          மிக்கெழு புணரியும் வேறு வேறுறா
               மைக்கடல் உலப்பில வருவ போலவே. ......    374

(துதித்திட அரியவன்)

துதித்திட அரியவன் நகரில் துண்ணென
     எதிர்த்திடு தானவர் இனத்தை ஒல்லையில்
          சிதைத்தனர் மாளிகை சிகரம் யாவையும்
               உதைத்தனர் வீட்டினர் உயர்ந்த பூதரே. ......    375

(மதரொடு குறுகும்)

மதரொடு குறுகும்அவ் வயவெம் பூதர்கள்
     அதிர்கழல் அடிகளால் அளப்பில் மாளிகை
          பிதிர்பட உந்தலும் பிறங்கு பூழிகள்
               கதிருறு கதியினுங் கடந்து போனவே. ......    376

வேறு

(அங்கவ் வெல்லையிற்)

அங்கவ் வெல்லையிற் சாரத வேந்தர்கள் அயில்வேற்
     புங்க வன்தனை நீங்கியாம் அவுணர்கோன் புரத்துள்
          இங்கி னிப்படர் கின்றது தக்கதன் றென்னாச்
               செங்க ளந்தனின் மீண்டனர் சேனையுந் தாமும். ......    377

(ஆன காலையிற்)

ஆன காலையிற் பூதர்தஞ் செய்கைகள் அனைத்தும்
     ஞான நாயகன் காண்குறா நல்லருள் புரிந்து
          மான வேற்படை வீரரும் அமரரும் வழுத்தச்
               சேனை யாவையுங் கொண்டுதன் பாசறை சேர்ந்தான். ......    378

(பாச றைப்புகு)

பாச றைப்புகு குமரவேள் பாரிடப் பகுதி
     ஆச றப்புனை ஆவணச் சூழல்போய் அமர
          வாச வத்தனிக் கடவுளா தியர்புடை வழுத்த
               ஈச னிற்சிறந் தரியணை தன்னில்வீற் றிருந்தான். ......    379

(ஈண்டு தானவர்)

ஈண்டு தானவர் இலக்கம்வெள் ளத்தரும் இன்னே
     மாண்டு போயினர் அனையரை மலிகதிர்க் கரத்தால்
          தீண்டி வான்மையிற் குறைந்தனன் என்றுசெஞ் சுடரோன்
               ஆண்டு மூழ்குவான் புக்கென அளக்கரை அடைந்தான். ......    380

வேறு

(புரந்தர னாதியர்)

புரந்தர னாதியர் புன்மை நீக்கியே
     பெருந்திரு வுதவுவான் பிரான்தன் காதலன்
          இருந்தனன் பாசறை ஈது நின்றிடத்
               திருந்தலர் மாட்டுறுஞ் செய்கை செப்புவாம். ......    381

(ஒருவரும் உளத்தினும்)

ஒருவரும் உளத்தினும் உணர்வு றாவகை
     அருவம தாகியே அகன்று சூர்முதல்
          பொருவரு மகேந்திர புரத்துக் கோயிலுள்
               திருமகள் மணமனைச் சேறல் மேயினான். ......    382

(பஞ்சடி நூபுரப்)

பஞ்சடி நூபுரப் பதுமை கோயில்போய்
     அஞ்சியல் அடுத்தமெல் லமளி மேலுறாத்
          துஞ்சலன் யாரொடுஞ் சொல்லும் ஆடலன்
               வெஞ்சமர் வினையமே உன்னி மேவினான். ......    383

(ஆனதொ ரெல்லையில் அர)

ஆனதொ ரெல்லையில் அரசன் போர்செயப்
     போனதும் பொருததும் புறந்தந் தோமென
          மாநகர் அதனிடை வறியன் வந்ததும்
               பானுவின் பகைஞனுக் கொற்றர் பன்னினார். ......    384

(சொன்னடை மந்திர)

சொன்னடை மந்திரத் தொடர்பும் மாயமும்
     தன்னுறு படைகளும் சாதனஞ் செய்வோன்
          அன்னது கேட்டலும் அலக்கண் எய்தியே
               மன்னுறு கடிநகர் வல்லை ஏகினான். ......    385

(மணிநிரை இகலி)

மணிநிரை இகலியே மாறு வில்லுமிழ்
     இணையறு சினகரம் எய்திச் சேக்கைமேல்
          தணிவறு சூழ்ச்சியோ டமர்ந்த தாதைதன்
               துணையடி வணங்கியே தொழுது கூறுவான். ......    386

(மாற்றலர் யாவரும்)

மாற்றலர் யாவரும் மறிய வல்லைபோர்
     ஆற்றுதி யாலென ஐய முற்பகல்
          சாற்றினை விடுத்தனை தமியன் ஏகியே
               ஏற்றவர் தம்முடன் இகல்செய் தேனரோ. ......    387

(உற்றிலன் அறுமுகன்)

உற்றிலன் அறுமுகன் ஒழிந்த வீரர்கள்
     சுற்றிய படையொடு துவன்றிப் போர்செய்தார்
          பற்றிய மோகமாப் படையைத் தூண்டியான்
               மற்றவர் உணர்ச்சியும் வலியும் மாற்றினேன். ......    388

(சென்றமர் இயற்றிய)

சென்றமர் இயற்றிய செறுநர் யாரையும்
     வென்றனன் அத்துணை விமலன் மாமகன்
          ஒன்றொரு மாப்படை உய்ப்ப என்படை
               வன்றிறல் நீங்கியே வருந்தி மீண்டதே. ......    389

(அன்னதோர் பான்மை)

அன்னதோர் பான்மையால் அனையர் யாவரும்
     பின்னுணர் வெய்தியே பெயர்ந்து போயினார்
          என்னிது வெற்றியென் றியானும் மீண்டனன்
               உன்னொடும் உரைத்திலன் உள்ளம் வெள்கினேன். ......    390

(நெற்றியங் கண்ணுடை நிமலன்)

நெற்றியங் கண்ணுடை நிமலன் ஏனையோர்
     முற்றரு படைகளால் முடிவின் மாயையால்
          பற்றலர் யாரையும் படுத்து நாளையே
               வெற்றிகொள் குவனெனா நென்னல் மீண்டனன். ......    391

(ஞாயிறு வந்தபின்)

ஞாயிறு வந்தபின் நண்ண லார்மிசைப்
     போயமர் இயற்றிடப் புறத்திற் சென்றனன்
          ஆயதன் முன்னரே அனிகந் தன்னுடன்
               ஏயென ஏகினை எந்தை நீயென்றார். ......    392

(வரந்தனில் அழிவுறா)

வரந்தனில் அழிவுறா வள்ளல் ஈண்டுறு
     திருந்தல ருடன்அமர் செய்தற் காகவோர்
          அருந்துணை வேண்டலை அதனை உன்னிமீண்
               டிருந்தனன் இப்பகல் ஈதென் செய்கையே. ......    393

(ஓர்ந்திலை இத்திறம்)

ஓர்ந்திலை இத்திறம் உணர்வு ளாரொடுந்
     தேர்ந்திலை என்னையும் விளித்துச் செப்பிலை
          சார்ந்திடு நாற்பெருந் தானை தன்னொடும்
               பேர்ந்தனை அமர்க்கிது பெருமைப் பாலதோ. ......    394

(அமரருக் காக்கமும்)

அமரருக் காக்கமும் அவுணர்க் கேக்கமும்
     இமையவர் முதல்வனுக் கின்பும் நல்கினை
          குமரனைக் கணங்களைக் குறித்து மன்னநீ
               சமரினுக் கேகுதல் தலைமை யாகுமோ. ......    395

(திகழ்ச்சிகொள் மேல)

திகழ்ச்சிகொள் மேலவர் சிறியர் தம்மொடு
     நிகழ்ச்சிகொள் போரிடை நேர்வ ரேயெனில்
          புகழ்ச்சிய தில்லையால் பொருது வெல்லினும்
               இகழ்ச்சியின் பாலதாம் எவரெ வர்க்குமே. ......    396

(சென்றது கிடந்திட)

சென்றது கிடந்திடச் சிறியன் என்னினும்
     ஒன்றிவண் மொழிகுவன் உள்ளங் கோடியால்
          இன்றிர வகன்றபின் ஏகி யாரையும்
               வென்றிகொண் டேகுவன் விடுத்தி யாலெனை. ......    397

(கொற்றவை சிறு)

கொற்றவை சிறுவனைக் கொற்றங் கொள்வதும்
     சுற்றுறு படையையான் தொலைக்குந் தன்மையும்
          ஒற்றுவர் கண்டுமுன் உரைக்க எந்தைநீ
               தெற்றென மகிழ்ச்சியிற் சிறந்து வைகுதி. ......    398

வேறு

(கூரிய வேற்படை கொண்)

கூரிய வேற்படை கொண்டுடை யோனை
     வீரர்கள் தம்மொடு வெற்றிகொ ளேனேல்
          வாரலன் ஈண்டு மகிழ்ந்திறை நல்கும்
               பேரர சாட்சி பிடிக்கிலன் என்றான். ......    399

(என்பது கேட்டலும்)

என்பது கேட்டலும் எவ்வுல கிற்குந்
     துன்பு புரிந்திடு சூரபன் மாவாம்
          முன்பன் மகிழ்ந்து முகத்தெதிர் நிற்குந்
               தன்புதல் வற்கிது சாற்றுதல் உற்றான். ......    400

(மூவர்கள் தாங்களும்)

மூவர்கள் தாங்களும் முச்சக முள்ள
     தேவரும் ஐயிரு திக்குடை யோரும்
          ஏவரும் ஏற்கினும் எம்பியை அட்ட
               மேவலன் ஆற்றலை வெல்லரி தம்மா. ......    401

(பன்னிரு செங்கை)

பன்னிரு செங்கை படைத்துள சேயோன்
     தன்னொ டெதிர்ந்து சமர்த்தொழில் செய்வார்
          என்னல தில்லை இவன்சிறி யோனென்
               றுன்னலை வன்மையின் ஒப்பில னேகாண். ......    402

(குன்றம் எறிந்திடு)

குன்றம் எறிந்திடு கூரிய வேற்கை
     வன்றிற லாளனை வன்மையில் யானே
          வென்றிடு கின்றனன் மேலது நிற்க
               ஒன்றுள தைய உரைப்பது கேண்மோ. ......    403

(ஒற்றென வந்துநம்)

ஒற்றென வந்துநம் மூர்அலை வித்துப்
     பற்றலர் நீடு படைக்கிறை யாகுங்
          கொற்ற வனைத்தனி கூவி மலைந்து
               செற்றனை ஏகுதி சேனையொ டென்றான். ......    404

(தந்தை புகன்றிடு)

தந்தை புகன்றிடு தன்மையை ஓரா
     எந்தை பிராற்குளம் இத்திற மாமேல்
          முந்திறை தன்னின் முடிப்பனி தென்ன
               மைந்தனை நோக்கி மகிழ்ந்தனன் மன்னன். ......    405

(அடுசமர் செய்வகை)

அடுசமர் செய்வகை ஆங்கவன் ஏக
     விடையது நல்கி வியத்தகு மன்னன்
          இடையுறு சூழ்ச்சிக ளியாவும் இகந்து
               மிடைதரு தொல்வள மேவி இருந்தான். ......    406

(தாதைதன் ஏவல்)

தாதைதன் ஏவல்த லைக்கொடு சென்றே
     ஆதவன் மாற்றல னாகிய மைந்தன்
          ஏதமில் தன்குலம் ஏகலும் அங்கண்
               தூதுவர் பற்பலர் துண்ணென வந்தார். ......    407

(துங்கம துற்றுள)

துங்கம துற்றுள சூர்தரு மைந்தன்
     செங்கம லம்புரை சீறடி தன்னைத்
          தங்கண் முடிக்கொடு தாழ்ந்தனர் நின்றே
               இங்கிவை கேட்க எனாமொழி குற்றார். ......    408

வேறு

(மன்னவன் இன்று)

மன்னவன் இன்றுபோய் மலைந்து மீண்டபின்
     ஒன்னலன் மாட்டுறும் உலப்பில் பூதர்கள்
          இந்நகர் வடாதுசார் எய்திக் காவலோன்
               தன்னுயிர் கொண்டனர் தானை சிந்தினார். ......    409

(தகுவர்தம் மாப்படை)

தகுவர்தம் மாப்படை தலைய ழிந்தபின்
     அகலிரு விசும்பளந் தாண்டு நின்றிடு
          சிகரியைக் கீண்டுதஞ் செங்கை யாலெடா
               வெகுளியொ டளக்கரின் மீது வீசினார். ......    410

(நீடிய சிகரிபோய்)

நீடிய சிகரிபோய் நேமி புக்கபின்
     மாடுறு வடபுல மதிலை முற்றவுஞ்
          சாடினர் மீண்டனர் தலைவ இந்நகர்
               கோடில தாங்கடற் குட்டம் போன்றதே. ......    411

(என்றலும் வினவியே)

என்றலும் வினவியே ஏந்தல் தன்புடை
     சென்றிடும் வயவரிற் சிலரை நோக்கியே
          வன்றிற லுடையநம் மரபில் தச்சனை
               ஒன்றொரு கணத்தின்முன் உய்த்திர் என்னவே. ......    412

(ஆயவர் விரைந்து)

ஆயவர் விரைந்துபோய் அவுணத் தச்சனை
     மேயினர் இறைமகன் விளித்து ளானெனக்
          கூயினர் வருகெனக் கொடுவந் துய்த்தனர்
               மாயிருங் கதிரைமுன் வெகுண்ட மைந்தன்முன். ......    413

(தன்னடி வணங்கி)

தன்னடி வணங்கியே தச்சன் நிற்றலும்
     மன்னவர் மன்னவன் மதலை வல்லைநீ
          இந்நகர் வடமதில் சிகரி ஏனவுந்
               தொன்னெறி அமைக்கெனச் சொற்றுத் தூண்டினான். ......    414

(எல்லைமற் றன்ன)

எல்லைமற் றன்னதின் எல்லை தன்பகை
     கல்லுயர் மொய்ம்பன்மா காயன் என்பதோர்
          வல்லவு ணன்தனை வருதி என்றுகூய்
               ஒல்லையின் இனையதொன் றுரைத்தல் மேயினான். ......    415

(சேயுயர் வடமதி)

சேயுயர் வடமதிற் சிகரி தன்னிடைப்
     போயினை அந்நெறி புரத்தி யால்எனா
          ஆயிரப் பத்தெனும் அனிக வெள்ளமோ
               டேயினன் தானுறும் இருக்கை எய்தினான். ......    416

(அத்துணை ஏகியே)

அத்துணை ஏகியே அவுணர் கம்மியன்
     உத்தர நெடுமதில் ஓங்கு கோபுரஞ்
          சித்திர வுறுப்பொடு சித்தத் துன்னியே
               வித்தக வன்மையால் விதித்துப் போகவே. ......    417

(அடுகரி புரவிதேர்)

அடுகரி புரவிதேர் அவுணர் தானையாங்
     கடலுடன் சென்றுமா காயன் என்பவன்
          வடமதிற் சிகரியின் வாய்தல் போற்றியே
               சுடர்கெழு தீபிகை சுற்ற வைகினான். ......    418

(ஆயது நிகழ்வுழி)

ஆயது நிகழ்வுழி ஆழி வெற்பின்வாய்
     ஞாயிறு நணுகநள் ளிருளின் யாமினி
          போயது மெய்ப்புலன் புந்தி சேர்வுழி
               மாயைய தகன்றிடும் வண்ணம் என்னவே. ......    419

(கங்குலென் றுரை)

கங்குலென் றுரைபெறு கடவுட் கற்புடை
     நங்கையை மேவுவான் நயப்பு மேற்கொளா
          அங்கவ ளைத்தொடர்ந் தணுகு வானெனச்
               செங்கதிர் அண்ணல்கீழ்த் திசையில் எய்தினான். ......    420

ஆகத் திருவிருத்தம் - 5766




பா-ம் *1. திரள்.



previous padalam   4 - இரண்டாநாட் சூரபன்மன் யுத்தப் படலம்   next padalamiraNdAnAt sUrapanman yuththa padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]