Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

previous padalam   14 - காவலாளர் வதைப் படலம்   next padalamkAvalALar vadhaip padalam

Ms Revathi Sankaran (2.75mb)




(சுடரும் வேற்படை)

சுடரும் வேற்படைத் தொல்கும ரேசன
     தடிகள் முன்னி அருளுடன் ஆண்டகை
          படிய ளந்திடு பண்ணவ னாமென
               நெடிய பேருருக் கொண்டுநின் றானரோ. ......    1

(திசைய ளந்தன)

திசைய ளந்தன திண்புயஞ் சென்றுசேண்
     மிசைய ளந்தன மேதகு நீண்முடி
          வசுதை யாவும் அளந்தன வார்கழல்
               அசைவ ருந்திறல் ஆடவன் நிற்பவே. ......    2

(திருவு லாங்கழ)

திருவு லாங்கழற் சீறடிச் செம்மல்பேர்
     உருவு தாங்கி உகந்தனன் நிற்றலும்
          அரவின் வேந்தரும் ஆதியங் கூர்மரும்
               வெருவி னார்கள் வியன்பொறை ஆற்றலார். ......    3

(கதிரெ றித்திடு)

கதிரெ றித்திடு காமரு பூணினான்
     மதுகை பெற்ற வடிவொடு நிற்றலும்
          அதுப ரித்தற் கருமையின் ஆற்றவும்
               விதலை யுற்றது வீர மகேந்திரம். ......    4

(உலங்கொள் வாகு)

உலங்கொள் வாகுவின் ஒண்பதம் ஊன்றலும்
     விலங்கி யேதளர் வீர மகேந்திரம்
          இலங்கை நீர்மையெய் தாமல் இருந்ததால்
               குலங்கொள் தானவக் கோமகன் ஆணையால். ......    5

(சேண ளாவிய)

சேண ளாவிய சென்னியன் எண்டிசை
     காண நிற்புறு காட்சியன் கந்தவேள்
          ஆணை காட்டிநி றுவிய ஆடலாந்
               தாணு வென்னத் தமியன் விளங்கினான். ......    6

(சான்ற கேள்வி)

சான்ற கேள்வித் தலைமகன் தாட்டுணை
     ஊன்று கின்ற வுழிதொறும் மாநிலம்
          ஆன்று கீண்டிட அவ்வப் புழைதொறுந்
               தோன்று கின்றன சூழ்கடல் நீத்தமே. ......    7

(ஆத்தன் ஊன்றும்)

ஆத்தன் ஊன்றும் அடிதொறுந் தோன்றிய
     நீத்தம் யாவும் நெடுந்திறல் வெய்யசூர்
          வாய்த்த கோயில் வளைந்திறை போற்றிய
               வேத்த வைக்களந் தன்னினும் மேவிய. ......    8

(பூழை கொண்டு)

பூழை கொண்டு புறம்படர் நீத்தநீர்
     மாழை கொண்டவன் கோயில் வளைந்துராய்ப்
          பேழை கொண்ட பிணிப்பறு பாந்தள்போல்
               கூழை கொண்ட மறுகிற் குலாயதே. ......    9

(துய்ய பூழை தொறு)

துய்ய பூழை தொறுந்தொறுந் தோன்றுநீர்
     மையல் வெங்கரி வாம்பரி தேர்படை
          கைய ரிக்கொடு காசினி யாறுபோல்
               செய்ய மாநகர் யாங்கணுஞ் சென்றதே. ......    10

(தோட்ட தன்ன)

தோட்ட தன்ன சுழிப்படு வாரியின்
     ஈட்ட மாநகர் வீதிதொ றேகியே
          பாட்டின் மாளிகை பற்பல சாடியே
               மீட்டும் ஒல்லையின் வேலை மடுத்ததே. ......    11

(எம்மை யாளுடை எந்தை)

எம்மை யாளுடை எந்தைதன் தூதுவன்
     செம்மை நீடு திருவுரு நோக்கியே
          கைம்ம றிக்கொடு கண்டனர் யாவரும்
               அம்ம வோவென அச்சமுற் றோடினார். ......    12

(மாவு லாவரும்)

மாவு லாவரும் மன்னவன் கோயிலுட்
     காவ லாளர்இக் காளையைக் கண்ணுறீஇ
          ஓவி தோர்வஞ்சன் உற்றனன் ஈண்டெனாக்
               கூவி ளித்தனர் தத்தமிற் கூடினார். ......    13

(கூடு கின்ற குணி)

கூடு கின்ற குணிப்பருங் காவலோர்
     நீடு மெய்கொடு நின்றவற் கஞ்சியே
          ஆடல் பூண்டிலம் என்னின் அரசனே
               சாடு நம்மைச் சரதமென் றெண்ணினார். ......    14

(குமரி மாமதி)

குமரி மாமதிற் கோயிலுட் போற்றியே
     அமரி யோர்களொ ரைம்பது வெள்ளத்தர்
          திமிர மேனியர் தீயுகு கண்ணினர்
               சமரி யற்றத் தலைத்தலை மண்டினார். ......    15

(மண்டி மற்றவர்)

மண்டி மற்றவர் வல்லெழுத் தோமரம்
     பிண்டி பாலம் பெருங்கதை ஆதியாக்
          கொண்ட கொண்ட கொடும்படை வீசியே
               அண்டம் விண்டிட ஆர்த்தனர் ஆடினார். ......    16

(ஆடும் எல்லை)

ஆடும் எல்லை அடுபடைத் தானவர்
     பாடு சூழ்ந்த பரிசினை நோக்கினான்
          நீடு சான்ற இடித்தொகை ஆயிர
               கோடி போற்புயங் கொட்டிநின் றார்ப்பவே. ......    17

(அலைக்க வந்த)

அலைக்க வந்த அவுணப் படையெலாங்
     கலக்க மூழ்கிக் கருத்துணர் வஃகியே
          உலக்கு றாத உருமிடி உண்டிடும்
               புலைக்க டுந்தொழிற் புள்ளென லாயவே. ......    18

வேறு

(பன்மழைக் குலங்க)

பன்மழைக் குலங்களிற் படைக்கலங்கள் யாவையும்
     வன்மைபெற்ற வீரருய்ப்ப வந்துமேனி படுதலுஞ்
          சின்மயத்தன் ஒற்றன்மிக்க செய்யவீழ் விழுத்திய
               தொன்மரத் தியற்கைபோன்று சோரிசோர நின்றனன். ......    19

(ஆனகாலை வீரவாகு)

ஆனகாலை வீரவாகு அறிவனங்கி யிற்சினைஇ
     மானவீரர் மீதலாது வாளெடுக்க லேனெனாத்
          தேனின்மாப் பெருங்கடல் திளைத்தலைக்கு மத்தெனத்
               தானவப் பதாதியைத் தடிந்தலைத்தல் மேயினான். ......    20

(மிதித்தனன் கொதி)

மிதித்தனன் கொதித்தனன் விடுத்திலன் படுத்தனன்
     சதைத்தனன் புதைத்தனன் தகர்த்தனன் துகைத்தனன்
          உதைத்தனன் குதித்தனன் உருட்டினன் புரட்டினன்
               சிதைத்தனன் செகுத்தனன் செருக்கினன் தருக்கினன். ......    21

(சிரத்தினை நெரித்த)

சிரத்தினை நெரித்தனன் திறற்புயம் இறுத்தனன்
     கரத்தினை முரித்தனன் களத்தினைத் திரித்தனன்
          உரத்தினைப் பிரித்தனன் உருத்தனன் சிரித்தனன்
               புரத்தினை உரித்தனன் பொடித்தனன் படைத்திறம். ......    22

(எடுத்தனன் சுழற்றி)

எடுத்தனன் சுழற்றினன் எறிந்தனன் சிலோர்தமைப்
     புடைத்தனன் இடித்தனன் புயத்தினாற் சிலோர்தமைப்
          பிடித்தனன் பிசைந்தனன் பிழிந்தனன் சிலோர்தமை
               அடித்தலங் கொடித்தலத் தரைத்தனன் சிலோர்தமை. ......    23

(பெருத்தனன் சிறுத்த)

பெருத்தனன் சிறுத்தனன் பெயர்ந்தும்வேறு பல்லுருத்
     தரித்தனன் நடந்தனன் தனித்தனி தொடர்ந்தனன்
          மருத்தெனக் கறங்கினன் வளைந்தனன் கிளர்ந்தனன்
               ஒருத்தன்வெள்ளம் ஐம்பதும் உலக்குறக் கலக்கினான். ......    24

(மஞ்ஞை அன்னம்)

மஞ்ஞை அன்னம் ஒண்புறா மடக்குயில் திரட்பயில்
     செய்ஞ்ஞலங்கொள் மாடமீது சேனங்கூளி பிள்ளைகள்
          பிஞ்ஞகன் குமாரனாடு பேரமர்க் களம்படும்
               அஞ்ஞையாளர் குருதியூன் அருந்துமா றிருந்தவே. ......    25

(மானினஞ் செறிந்தி)

மானினஞ் செறிந்திரைந்து வந்தவெல்லை தன்னிடைத்
     தானொர்சிங்க ஏறுபுக்க தன்மைபோல அவுணர்தங்
          கோனிருந்த உறையுளிற் குலாயகாவ லாளராஞ்
               சேனைவெள்ளம் ஐம்பதுஞ் சினத்தின்வல்லை சிந்தினான். ......    26

(முறிந்தனர் உறுப்பி)

முறிந்தனர் உறுப்பியாக்கை முற்றும்வேறு வேறவாய்ப்
     பிறிந்தனர் தகர்ந்தனர் பிறங்குசென்னி சோரியுட்
          செறிந்தனர் புதைந்தனர் சிதைந்தனர் உருண்டனர்
               மறிந்தனர் இறந்தனர் மடிந்தனர் கிடந்தனர். ......    27

(இன்னபான்மை வீற்று)

இன்னபான்மை வீற்றுவீற்றின் அவுணர்தானை யாவையுஞ்
     சின்னபின்ன மாகியே சிதைந்துவீழ்ந் துலந்திட
          உன்னுகின்ற முன்னமட் டுலம்பினான் சிலம்பினின்
               மன்னன்மங்கை நூபுரத்தின் வந்தவீர வாகுவே. ......    28

(வள்ளல்நின்று சமரி)

வள்ளல்நின்று சமரிழைப்ப மாண்டவீரர் யாக்கையின்
     உள்ளதாது வானஏழும் உருவம்வேறு காண்கிலா
          தள்ளலாகி யொன்றுபட்ட தங்கிதன்னின் உருகியே
               வெள்ளியாதி உலகம்யாவும் விரவும்வண்ணம் என்னவே. ......    29

ஆகத் திருவிருத்தம் - 4401



previous padalam   14 - காவலாளர் வதைப் படலம்   next padalamkAvalALar vadhaip padalam

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]