Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

previous padalam   2 - கடல்பாய் படலம்   next padalamkadalpAi padalam

Ms Revathi Sankaran (2.45mb)




(அழுங்கிய கழற்கால்)

அழுங்கிய கழற்கால் வீரன் அவ்வழி அவனிக் கீழ்போய்
     விழுங்கிரி நிலைமை நோக்கி மீண்டுநீ எழுதி யென்னா
          வழங்கினன் வழங்கும் எல்லை வல்லையிற் கிளர்ந்து தோன்றி
               முழங்கிருங் கடலின் மாடே முந்துபோல் நின்ற தன்றே. ......    1

(வீரனங் கெழலும்)

வீரனங் கெழலும் அன்னோன் விண்படர் விசைப்பின் காலால்
     பாருறு வரைகள் யாவும் படர்ந்தன பாங்க ராகச்
          சாரதத் தலைவர் ஏனைத் தம்பியர் இலக்கத் தெண்மர்
               ஆருமங் கவன்தன் பாலாய் அணிந்துடன் சேற லென்ன. ......    2

(விரைந்துவான் வழி)

விரைந்துவான் வழிக்கொள் வீரன் விசைத்தெழு காலின் அண்டந்
     திரிந்தன உயிர்கள் முற்றுந் தெருமரல் உற்ற தெண்ணீர்
          சுரந்திடு கொண்டல் யாவுஞ் சுழன்றன வடவை உண்ண
               இருந்திடும் ஊழிக் காலும் ஆற்றலா திரியல் போன. ......    3

(பெருமிடல் பூண்ட)

பெருமிடல் பூண்ட தோன்றல் பெயர்தலும் விசைப்பின் ஊதை
     பரவின வெம்மை மாற்றிப் பரிதியைக் கனலைத் திங்கள்
          வருணன தியற்கை யாக்கி வடவையின் முகத்துத் தோன்றித்
               திரைகட லிருந்த ஊழித் தீயையும் அவித்துச் சென்ற. ......    4

(விரைசெறி நீப)

விரைசெறி நீபத் தாரோன் விரைந்துசெல் விசைக்கால் தள்ளத்
     திரைகடல் சுழித்துள் வாங்கித் திறன்மகேந் திரத்திற் சேறல்
          அரசியல் புரிவெஞ் சூரன் அனிகங்கள் அவன்மேற் சென்று
               பொருமுரண் இன்றித் தம்மூர் புகுவன இரிவ போலாம். ......    5

(விடைத்தனி யாற்ற)

விடைத்தனி யாற்றல் சான்ற விடலைகால் வெற்பி னோடும்
     படித்தலங் கீண்டு முன்னம் பாதலங் காட்டிற் றன்னான்
          அடற்படு விசையின் காலும் அளியதோ வலிய தன்றோ
               கடற்புவி கீண்டு நாகர் உலகினைக் காட்டிற் றன்றே. ......    6

(பாசிழை அலங்கல்)

பாசிழை அலங்கல் தோளான் படர்தலும் விசையின் காலைக்
     காய்சின உயிர்ப்புச் செந்தீக் கலந்துடன் தழீஇக்கொண் டேகி
          மாசுறு சூரன் வைகும் வளநகர் சுற்றி யன்னோன்
               தூசிய தென்ன முன்னங் கொளுவிய தூமஞ் சூழ. ......    7

(பூஞ்சிலம் பரற்று)

பூஞ்சிலம் பரற்றுந் தாளான் போதுமுன் விரைவின் ஓதை
     வேய்ஞ்சிலம் படுதோட் சூரன் வீரமா மகேந்தி ரத்தின்
          நாஞ்சிலம் புரிசை பொன்செய் நளிர்வரை குளிர்பூங் கிள்ளை
               தாஞ்சிலம் புற்ற சோலை அலைத்தன தரையில் தள்ளி. ......    8

(உறைபுகு நெடிய)

உறைபுகு நெடிய வேலான் உயிர்ப்புறு கனன்முன் னோடிச்
     செறுநனூர் கொளுவ அன்னான் சென்றிடு விரைவின் கால்போய்
          எறிபுனற் கடலைத் தாக்க இடைந்துமற் றதுதான் ஏகி
               முறைமுறை திரைக்கை நீட்டி மூண்டிடா தவித்துப் போமால். ......    9

(அண்ணலங் காளை)

அண்ணலங் காளை ஏக உயிர்த்தகால் அவன்செல் லோதை
     கண்ணழல் துண்டம் ஓச்சுங் கடுங்கனல் எதிரா தோடும்
          உண்ணிறை புணரி யாவும் ஒன்னலன் பதிமேற் சென்று
               விண்ணிலம் ஒழிந்த பூதம் அடுதலின் விளைத்த பூசல். ......    10

(வெள்வரைக் குவ)

வெள்வரைக் குவவுத் திண்டோள் வெலற்கருந் திறலோன் எண்காற்
     புள்விசை கொண்டு செல்லப் புறந்தரப் புணரி அங்கண்
          உள்வளைந் துலாய சின்னை ஒண்சுறாப் பனைமீன் நூறை
               தெள்விளித் திருக்கை தந்தி திமிங்கிலம் இரிந்து பாய்ந்த. ......    11

(நாயகன் தூதன்)

நாயகன் தூதன் ஏக நளிர்கடல் எதிர்ந்தி டாது
     சாய்வது மீன முற்றுந் தரங்கவெண் கரங்கள் தாங்கித்
          தீயசூர் மூதூர் உய்த்துச் சென்றது பொன்று வோர்க்கு
               மேயின விச்சை யுண்டி மிகத்தமர் வழங்கு மாபோல். ......    12

(காழ்தரு தடக்கை)

காழ்தரு தடக்கை மொய்ம்பன் கடுமைசொல் செலவின் ஓதை
     சூழ்தரு கின்ற காலைத் துண்ணெனத் துளங்கி விண்மீன்
          வீழ்தர வேலை தன்னில் வேலையும் மறிந்து செல்ல
               வாழ்திரை எறிமீன் முற்றும் அந்தரம் புகுவ மாறாய். ......    13

(காமரு நயக்கு)

காமரு நயக்குங் காளை கதுமெனச் செல்லப் பாங்கில்
     தூமலர்க் கரத்தி லிட்ட சுடர்மணிக் கடக வாள்போய்
          நேமியங் குவடு சூழ்ந்து நிமிர்தரு திமிர மோட்டி
               ஏமநல் லண்ட வில்லோ டெதிர்ந்து போய் இகல்செய் கின்ற. ......    14

(விண்ணவர் யாரு)

விண்ணவர் யாருந் தேரும் படையுமாய் விரவ மேலோன்
     நண்ணலர் புரமே லோச்சு நகையழல் போதல் ஒத்தான்
          கண்ணழற் செலவும் போன்றான் கார்முகம் பூட்டி உய்த்த
               மண்ணுல கிடந்த கூர்வாய் வாளியும் என்னச் சென்றான். ......    15

(தரைதனை அலை)

தரைதனை அலைத்து நோற்குந் தாபதர்க் கலக்கண் செய்து
     சுரர்திருக் கவர்ந்து வாட்டுஞ் சூரனைக் கிளையி னோடும்
          விரைவுடன் முடிப்பான் முன்னி வெகுண்டுசெவ் வேளங் குய்த்த
               ஒருதனிச் சுடர்வேல் போன்றும் போயினன் உயர்திண் டோளான். ......    16

(இமிழ்தரு தரங்க)

இமிழ்தரு தரங்கப் பாலின் எறிகடன் மதித்து வானோர்க்
     கமிர்தினை அளிப்பான் வேண்டி அகிலமும் உண்டு தொன்னாள்
          உமிழ்தரு திருமா லுன்ன உணர்ந்துமந் தரமாம் ஓங்கல்
               நிமிர்தரு புணரி செல்லும் நிலைமைபோல் வீரன் போந்தான். ......    17

(சேண்டொடர் உலகு)

சேண்டொடர் உலகும் பாருந் தெருமர அனலம் வீசிக்
     காண்டகு விடத்தை ஈசன் களத்திடை அடக்கி வைப்ப
          ஈண்டெமை விடுத்தி யென்னா ஏத்தலும் அவனங் குய்ப்ப
               மீண்டது கடல்போந் தென்ன வீரருள் வீரன் சென்றான். ......    18

(பொலங்கழல் வீர)

பொலங்கழல் வீர வாகு புணரிமேல் இவ்வா றேகி
     அலங்கலந் திண்டோள் வெஞ்சூர் அணிநகர் வடாது பாலின்
          விலங்கலில் வீரன் யாளி வியன்முகத் தவுணன் போற்றும்
               இலங்கையந் தொல்லை மூதூர் அணித்தெனும் எல்லை சென்றான். ......    19

ஆகத் திருவிருத்தம் - 3784



previous padalam   2 - கடல்பாய் படலம்   next padalamkadalpAi padalam

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]