Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   29 - இந்திரன் அருச்சனைப் படலம்   next padalamindhiran aruchchanaip padalam

Ms Revathi Sankaran (3.11mb)




(கொடியுருக் கொண்டு)

கொடியுருக் கொண்டு முன்னங் குண்டிகை இருந்த பிள்ளை
     படிமிசை அதனைத் தள்ளப் படர்ந்தகா விரியின் றன்மை
          விடலருந் தளையின் நீக்கி வியனெறிப் படுத்த லோடும்
               அடிகளின் அருளாற் செல்லும் ஆருயிர் போன்ற தன்றே. ......    1

(பண்டொரு தந்தி)

பண்டொரு தந்தி யானோன் படர்சிறைப் புள்ளாய்த் தள்ளக்
     குண்டிகை இருந்த நீத்தங் குவலயம் படர்ந்த பான்மை
          எண்டருந் தடையால் வல்லோன் இருங்கடத் திட்ட பாந்தள்
               மண்டலத் தொருவன் நீப்ப வழிக்கொளல் போன்ற தன்றே. ......    2

(ஏதத்தின் ஒழுக்கு)

ஏதத்தின் ஒழுக்கு நீக்கும் இறைவனூல் ஒழுக்குந் தொல்லை
     வேதத்தின் ஒழுக்கும் நோற்று வீட்டினை அடையும் நீரார்
          போதத்தின் ஒழுக்கும் எங்கோன் புரிதரு கருணை யென்னும்
               ஓதத்தின் ஒழுக்கு மென்னக் காவிரி யோடிற் றன்றே. ......    3

(தள்ளரும் பரவை)

தள்ளரும் பரவை ஏழுந் தரணியைச் சூழ்ந்து நின்ற
     உள்ளுறு தொடர்பு நாடி யாவையும் ஒருங்கு நண்ணிப்
          பொள்ளெனப் புகுந்த தென்னப் புவியெலாம் பரவி ஆர்த்துத்
               தெள்ளிதிற் கலங்கி நீத்தந் தெளிகிலா தொழுகிற் றாமால். ......    4

(தெண்டிரைப் புணரி)

தெண்டிரைப் புணரி யெல்லாந் தினைத்துணை யாக வாரி
     உண்டருள் முனிவன் தீர்த்தம் ஒன்றினை வேண்டு மெல்லை
          அண்டர்தம் பெருமான் நல்க அன்னவன் கரத்தி லேந்துங்
               குண்டிகைப் புனற்கு நேராக் கூறுதற் குவமை உண்டோ. ......    5

(தொல்லையிற் குறி)

தொல்லையிற் குறியோன் வந்தான் துய்க்குமோ இன்னு மென்னா
     வல்லையில் தழைகள் பற்றி வாரிதி கூவிப் பாரின்
          எல்லையிற் படர்ந்த தென்ன இலைசெறி பொதும்பர் ஈட்டம்
               ஒல்லையிற் பரித்து மேல்கொண் டோடிய தொலிகொள் நீத்தம். ......    6

(சந்தமும் அகிலுஞ்)

சந்தமும் அகிலுஞ் சங்குந் தரளமுங் கவரி தானுஞ்
     சிந்துரத் தெயிறும் பொன்னும் மணிகளுந் திரைமேற் கொண்டு
          வந்திழி நதியின் தன்மை வருணன்இப் பொருள்க ளெல்லாம்
               இந்திரன் தன்பால் ஓச்ச ஏகுதல் போன்ற மாதோ. ......    7

(வரையெனுந் தடம்)

வரையெனுந் தடம்பொற் றேரும் மதகரித் தொகையும் மாந்தர்
     நிரைகளுந் தரங்க மாவும் நெறிக்கொடு மகவான் தன்பால்
          விரைவொடு சேறல் சூரன் விண்ணவர்க் கரசன் மீது
               பொரவிடு தானை வெள்ளம் போவன போன்ற தன்றே. ......    8

(ஆவதோர் இனைய)

ஆவதோர் இனைய வாற்றால் அலையினால் அகல்வான் முட்டிக்
     காவதம் பலவாய் ஆன்று காசினி அளந்து கீழ்பாற்
          போவதோர் பொன்னி நீத்தம் புரந்தரன் இருந்து நோற்குந்
               தாவறு வனத்திற் போதார் தண்டலை புகுந்த தன்றே. ......    9

(ஓடுநீர் நீத்தப்)

ஓடுநீர் நீத்தப் பொன்னி யொல்லையிற் காமர் காவில்
     பீடுற வருத லோடும் பேதுறு மகவான் காணா
          ஆடினான் நகைத்தான் எங்கோன் அருச்சனை முடிந்த தென்று
               பாடினான் முதல்வன் றாளைப் பரவினான் படர்ச்சி தீர்ந்தான். ......    10

(சீரினை யகற்றி)

சீரினை யகற்றி நீங்காத் திருவினை மாற்றித் தொல்பேர்
     ஊரினைக் கவர்ந்து தன்னோர் உயிருக்கும் இறுதி நாடுஞ்
          சூரனை வென்றால் என்னத் தொலைவிலா மதர்ப்பு மிக்கான்
               ஆரவன் உளத்திற் கொண்ட உவகையை அறைதற் பாலார். ......    11

(பாடுறு பொன்னி)

பாடுறு பொன்னி நீத்தம் பாய்தலும் மகவா னேபோல்
     வாடுறு கின்ற தண்கா வல்லையிற் கிளர்ச்சி யெய்தி
          ஆடுறு பசிநோ யுற்றோர் அரும்பெறல் அமிர்தம் வந்து
               கூடுற நுகர்ந்தால் என்னக் குளிர்ப்பொடு தளிர்த்த தன்றே. ......    12

(வானிறை கின்ற)

வானிறை கின்ற கொண்மூ வார்துளி தலைஇய பின்றைக்
     கானிறை மரனும் பூடும் வல்லியுங் கவின்றா லென்ன
          மேனிறை அடைகள் மல்கி விரிதரு சினையும் போதுந்
               தானிறை கின்ற தம்மா சதமகன் வளர்த்த பூங்கா. ......    13

வேறு

(வானில மளவிட)

வானில மளவிட வளர்ந்த புன்னைகள்
     ஆனவை முழுவதும் அரும்பு கின்றன
          தூநகை நித்திலத் தொடையல் மெய்யுடை
               நீனிற மாயவன் நிலைஇய தொக்குமால். ......    14

(தண்ணுறு பாசடை)

தண்ணுறு பாசடை தயங்கு புன்னைகள்
     கண்ணுறு வியன்சினை கவினப் பூத்தன
          எண்ணுறு தாரகை ஈண்டி மொய்த்திட
               விண்ணுறு முகிலினம் விளங்கிற் றென்னவே. ......    15

(பண்படும் அளியி)

பண்படும் அளியினம் பயிலு றாதன
     சண்பக அணிமரந் தயங்கிப் பூத்தன
          எண்படு தபனியத் தியன்ற போதினை
               விண்படு தருக்கொடு மேவல் போன்றவே. ......    16

(புயற்பட லந்தொடும்)

புயற்பட லந்தொடும் புதுமென் பாடலம்
     வியற்பட மலர்ந்தபூ விழுமென் வண்டினம்
          அயற்பட வூதுவான் வயந்தக் கம்மியன்
               செயற்படு மணிச்சிறு சின்னம் போலுமால். ......    17

(விண்டொடர் மதி)

விண்டொடர் மதிகதிர் மிளிருந் தாரகை
     கண்டிட வைகலுங் கணிப்பில் கண்ணடி
          மண்டல நிரைத்துமண் மாது வைத்தெனக்
               கொண்டலை யளவிய கோங்கு பூத்தவே. ......    18

(மாமலர்க் கொன்றை)

மாமலர்க் கொன்றையும் மணிமென் பூவையுந்
     தாமிரு புடையுறத் தளிர்த்த செய்யமா
          ஏமுறு மாலயன் இடையில் வந்தெழு
               தோமறு பரஞ்சுடர்த் தோற்றம் போன்றவே. ......    19

(ஆதவன் மீதுபோய்)

ஆதவன் மீதுபோய் அசையுந் தாழைகள்
     மேதகு பாளைகள் மிசைதந் துற்றன
          பூதலம் அணங்கினார் புனைய நீட்டிய
               கோதறு நித்திலக் கோவை போன்றவே. ......    20

(வச்சிர மேனிய)

வச்சிர மேனிய வரைகொள் காட்சிய
     பச்சிளம் பூகம்வெண் பாளை கான்றன
          நச்சுறு சோலையா நங்கைக் கெண்ணிலார்
               எச்சமில் சாமரை இரட்ட ஏந்தல்போல். ......    21

(மேற்றிகழ் செங்கர)

மேற்றிகழ் செங்கர வீர மானவை
     ஆற்றவுஞ் சினைதொறும் அரும்பு கின்றன
          நாற்றடம் புயமுடை நாதற் கிந்திரன்
               ஏற்றிய மணிச்சுட ரென்ன லாயதே. ......    22

(அல்லிடை யன்றி)

அல்லிடை யன்றியே அலர்ந்த மாலதி
     வல்லிகள் தருவெனும் மகிழ்நர் தங்களைப்
          புல்லுவ பகலினும் பொருந்து மோவெனா
               முல்லைகள் மலர்ந்தன முறுவல் செய்வபோல். ......    23

(ஆசறு வாவியில்)

ஆசறு வாவியில் அலர்ந்த காவிகள்
     பாசடை யிடையிடை பரவு கின்றன
          தேசுறு தருநிழல் திருவில் துஞ்சிய
               வாசவன் விழிகளின் மல்கு கின்றவே. ......    24

(தொல்லையின் முறை)

தொல்லையின் முறைநெறி யொருவித் தோயமேல்
     வல்லையில் அங்கிகள் வந்துற் றாலென
          அல்லியுஞ் சேயன அரத்த ஆம்பலும்
               புல்லிய கிடங்கினிற் பொலிந்து பூத்தவே. ......    25

(பாயிரும் புனற்கயம்)

பாயிரும் புனற்கயம் பரந்த பாசடை
     ஆயின இடையிடை அவிழ்ந்த பங்கயச்
          சேயலர் வண்டினந் திளைப்பச் சேர்வன
               காயெரி புகையொடு கானம் புக்கபோல். ......    26

(எண்ணுமித் தரு)

எண்ணுமித் தருக்களுங் கொடியும் ஏனவுங்
     கண்ணுற மலர்வதும் அரும்புங் காட்சியும்
          வண்ணம தெற்றெனின் மாலைச் செக்கரும்
               விண்ணுறும் உடுக்களும் விரவிற் றொக்குமால். ......    27

(இந்திரன் மகிழ்வுற)

இந்திரன் மகிழ்வுற இனைய பான்மையால்
     நந்தன வனமெலாம் நன்று பூத்தலும்
          அந்தநன் மலர்கொடே யாதிக் கன்பினால்
               முந்துறு பூசனை முயல முன்னினான். ......    28

(விடியல்வை கறை)

விடியல்வை கறை*1 தனின் மேவி வண்டுதேன்
     புடையுறு முன்னரே புரையி லாததோர்
          கடிமலர் கொய்தனன் கொணர்ந்து கண்ணுதல்
               அடிகளில் விதிமுறை அருச்சித் தானரோ. ......    29

(அப்பெரு நாண்)

அப்பெரு நாண்முதல் ஆதி அண்ணலை
     இப்படி அருச்சனை இயற்றி வைகலும்
          ஒப்பற நோற்றரோ உம்பர் கோமகன்
               வைப்புறு சண்பக வனத்தின் வைகினான். ......    30

ஆகத் திருவிருத்தம் - 3166




*1. விஷயகல்வைகறை = மிக விடியற்காலம்.



previous padalam   29 - இந்திரன் அருச்சனைப் படலம்   next padalamindhiran aruchchanaip padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]