Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   5 - மார்க்கண்டேயப் படலம்   next padalammArkkaNdEyap padalam

Ms Revathi Sankaran (7.84mb)
(1 - 70)



Ms Revathi Sankaran (7.32mb)
(71 - 140)



Ms Revathi Sankaran (7.19mb)
(141 - 210)



Ms Revathi Sankaran (6.55mb)
(211 - 285)




(நச்சகம் அமிர்தம்)

நச்சகம் அமிர்தம் அன்ன நங்கையர் நாட்ட வைவேல்
     தைச்சக மயக்கல் செய்யாத் தடுப்பருந் தவத்தின் மிக்கான்
          இச்சகம் புகழு கின்ற இருபிறப் பாளர் கோமான்
               குச்சகன் என்னும் பேரோன் கொடிமதிற் கடகம் வாழ்வோன். ......    1

(அவற்கொரு புதல்)

அவற்கொரு புதல்வன் உண்டால் அருமறை பயின்ற நாவான்
     கவுச்சிகன் என்னும் பேரோன் கரையொரு சிறிதுங் காணாப்
          பவக்கடல் கடக்கும் ஆற்றாற் பராபர முதல்வற் போற்றித்
               தவத்தினை இழைப்ப ஆங்கோர் தண்புனல் தடாகஞ் சார்ந்தான். ......    2

(அத்தலை ஒருசார்)

அத்தலை ஒருசார் எய்தி ஆனினந் தீண்டு குற்றி
     ஒத்தென அசைத லின்றி உயிர்ப்பொரீஇ உலக மெல்லாம்
          பித்தென உன்னி மாயாப் பேரின்ப அளக்கர் மூழ்கி
               நித்தன்ஐ யெழுத்தும் அன்னான் நிலைமையும் நினைந்து நோற்றான். ......    3

(ஓவிய மவுன)

ஓவிய மவுன முற்றாங் குணவொடும் உறக்கம் நீங்கித்
     தாவற நோற்கும் வேலைத் தடமரை கடமை யாதி
          மேவிய விலங்கு தத்தம் மெய்யகண் டூயம் யாவும்
               போவது கருதி அன்னான் புரத்திடை உரைத்துப் போமால். ......    4

(இப்பரி சியன்ற)

இப்பரி சியன்ற போழ்தும் யாவதும் உணரா னாகி
     ஒப்பற நோற்கும் வேலை ஒல்லையில் அதனை நாடி
          முப்புரஞ் சிதைய மேனாள் முனிந்தவன் அருளி தென்னாத்
               செப்பினன் இமையோர் சூழச் சேணிடைத் திருமால் சேர்ந்தான். ......    5

(அற்புதம் எய்தி மைந்த)

அற்புதம் எய்தி மைந்தன் அருந்தவம் புகழ்ந்து முன்போய்
     எற்படும் அவன்றன் மேனி எழின்மலர்க் கரத்தால் நீவி
          வெற்பன முனிவ நின்பேர் மிருககண் டுயன் என்னாச்
               சொற்பயில் நாமஞ் சாத்த எழுந்துகை தொழுது நின்றான். ......    6

(தொழுதெழு முனி)

தொழுதெழு முனியை நோக்கித் தூமதிச் சென்னி யோன்றன்
     முழுதுறு கருணை நின்பால் முற்றுக முன்னஞ் செய்த
          பழுதவை நீங்க வென்னாப் பரிவுசெய் தருளி வானோர்
               குழுவுடன் உவண வூர்தி கொம்மென மறைந்து போனான். ......    7

(போனபின் முனிவர்)

போனபின் முனிவர் மேலோன் புரமெரி படுத்த முக்கண்
     வானவன் அருளி னாலே வல்விரைந் தேகித் தாதை
          யானவன் முன்னர் எய்தி அடிமுறை வணங்க அன்னான்
               தானுள மகிழ்ந்து கண்டாங் கெடுத்தனன் தழுவிக் கொண்டான். ......    8

(தவத்திடை யுற்ற)

தவத்திடை யுற்ற தன்மை மொழிகெனத் தனயன் தானும்
     உவப்புறு தாதை கேட்ப உள்ளவா றுரைத்த லோடும்
          நிவப்புறு முவகை மிக்கு நின்குலத் தவர்க்குள் நின்போல்
               எவர்க்குள தினைய நோன்மை யாதுநிற் கரிய தொன்றே. ......    9

(பாருளார் விசும்பின்)

பாருளார் விசும்பின் பாலார் பயனுகர் துறக்க மென்னும்
     ஊருளார் அல்லா ஏனை உலகுறு முனிவர் தம்மில்
          ஆருளார் நின்னை ஒப்பார் ஐயநீ புரிந்த நோன்மை
               காருளார் கண்டத் தெந்தை யன்றிமற் றெவரே காண்பார். ......    10

(எனப்பல புகழ்)

எனப்பல புகழ்த லோடும் இவன்வழி மரபு தன்னில்
     மனப்படும் ஒருசேய் பின்னாள் மறலியைக் கடக்குங் கூற்றால்
          வினைப்பகை இயல்பு நீக்கும் விமலன தருளால் வேறோர்
               நினைப்பது வரலுந் தாதை நெடுமகற் குரைக்கல் உற்றான். ......    11

(கிளத்துவ துன)

கிளத்துவ துனக்கொன் றுண்டால் கேண்மதி ஐய மேனாள்
     அளப்பரு மறைக ளாதி அறைந்தன யாவ ரேனுந்
          தளத்தகு பரிசு மன்றால் சால்புடை அந்த ணாளர்
               கொளப்படு கடனே யாகும் நாற்பெருங் கூற்ற தன்றே. ......    12

(உனற்கரும் பிரம)

உனற்கரும் பிரமந் தன்னில் ஒழுகல்இல் லறத்தில் நிற்றல்
     வனத்திடைச் சேறல் பின்னர் மாதவத் துறவில் வாழ்தல்
          எனப்படும் அவற்றி னாதி இயற்றினை யின்று காறும்
               நினக்கது புகல்வ தென்னோ நீயவை அறிதி யன்றே. ......    13

(பின்னவை இரண்டும்)

பின்னவை இரண்டும் பின்னர்ப் பேணுதல் பேச வொண்ணா
     முன்னதும் இயற்ற லாலே முற்றிய திடையின் வைத்துச்
          சொன்னதோர் கடன்இஞ் ஞான்று தொடங்கிய வேண்டுந் தூயோய்
               அன்னதன் நிலைமை தன்னை ஆற்றினை கோடி யென்றான். ......    14

(முனிவரன் இதனை)

முனிவரன் இதனை ஆங்கண் மொழிதலும் இதனைக் கேளா
     இனியதோர் உறுதி சொற்றார் எந்தையார் எனக்கீண் டென்னா
          மனமுற முறுவல் செய்து மதலையாம் ஒருவற் கீது
               வினையறு தவத்தின் நீரும் விளம்புதல் மரபோ வென்றான். ......    15

வேறு

(பேதைப் படுக்கும்)

பேதைப் படுக்கும் பிறவிக் கடல்நீந்தும்
     ஓதித் திறத்தை உணர்ந்துடையோன் ஆதலினால்
          காதற் புதல்வன் கவுச்சிகனென் போன்தனது
               தாதைக் கினைய பரிசுதனைச் சாற்று கின்றான். ......    16

(முன்னருள பாச)

முன்னருள பாச முயக்கறுக்க வேண்டியநான்
     பின்னுமொரு பாசம் பிணிக்கப் படுவேனேல்
          தன்னிகரில் ஈசன் றனையெவ்வா றெய்துவன்யான்
               இன்னலெனும் ஆழி யிடைப்பட் டுலைவேனே. ......    17

(மொய்யான தில்லா)

மொய்யான தில்லா முடவன்ஒரு வன்தனது
     கையா னவையிரண்டுங் கந்தாத் தவழ்தருவான்
          ஐயா அதற்கும் அரும்பிணியொன் றெய்தியக்கால்
               உய்யானே யானும் உவன்போல் தளர்வேனோ. ......    18

(மொய்யுற் றிடவே)

மொய்யுற் றிடவே முயலுந் தவத்தினன்றிப்
     பொய்யுற்ற இல்லொழுக்கம் பூண்டுவினை போக்குவது
          மெய்யுற் றிடுதுகளை மிக்க புனலிருக்கச்
               செய்யற்சின் னீரிடத்துத் தீர்க்குஞ் செயலன்றோ. ......    19

(மண்ணுலகி லுள்ள)

மண்ணுலகி லுள்ள வரம்பில் பெரும்பவத்தைப்
     பெண்ணுருவ மாகப் பிரமன் படைத்தனனால்
          அண்ணல் அஃதுணர்தி அன்னவரைச் சிந்தைதனில்
               எண்ண வரும்பாவம் எழுமையினும் நீங்குவதோ. ......    20

(ஆதரவு கொண்டே)

ஆதரவு கொண்டே அலமந்த ஐம்புலமாம்
     பூதவகை யீர்க்கப் புலம்புற்ற புன்மையினேன்
          மாதரெனுங் கணமும் வந்தென்னைப் பற்றியக்கால்
               ஏதுசெய்கேன் அந்தோ எனக்கோ இதுவருமே. ......    21

(பன்னாளும் பாரிற்)

பன்னாளும் பாரிற் பருவரலின் மூழ்குவிக்கும்
     பின்னாள் நிரயப் பெரும்பிலத்தி னூடுய்க்கும்
          எந்நாளில் ஆண்டகையோர்க் கின்பம் பயந்திடுமோ
               மின்னார்கள் தம்மை விழைவுற்ற வேட்கையதே. ......    22

(துன்பம் நுகரும்)

துன்பம் நுகரும் வினையின் தொடர்ச்சியினோர்
     இன்பம் நுகர்வார்போல் ஏந்திழையார் கட்பட்டார்
          தன்பல் மிகநடுங்க ஞாளி தசையில்லா
               என்பு கறித்திட்டால் இருஞ்சுவையும் பெற்றிடுமோ. ......    23

(அஞ்சன வைவேற்)

அஞ்சன வைவேற்கண் அரிவையர்தம் பேராசை
     நெஞ்சு புகின்ஒருவர் நீங்கும் நிலைமைத்தோ
          எஞ்சல்புரி யாதுயிரை எந்நாளும் ஈர்ந்திடுமால்
               நஞ்சம் இனிதம்ம ஓர்நாளும் நலியாதே. ......    24

(கள்ளுற்ற கூந்தல்)

கள்ளுற்ற கூந்தல் கனங்குழைநல் லார்கருத்தில்
     கொள்ளப் படுமெண் குணிக்குந் தகைமையதோ
          தள்ளற் கரிதாகித் தம்மொடுபன் னாட்பழகி
               உள்ளுற்ற தேவும் உணர்தற் கரிதன்றோ. ......    25

(ஓதலும் ஒன்றா)

ஓதலும் ஒன்றா உளமொன்றாச் செய்கையொன்றாப்
     பேதை நிலைமை பிடித்துப் பெரும்பவஞ்செய்
          மாதர் வலைப்பட்டு மயக்குற்றார் அல்லரோ
               சாதல் பிறப்பில் தடுமாறு கின்றாரே. ......    26

(ஆனால் உலகில்)

ஆனால் உலகில் அருங்கற் பினையுடைய
     மானார் இலரோ எனவே வகுப்பீரேல்
          கோனான தங்கள் கொழுநன் இயல்வழுவாத்
               தேனார் மொழியாரும் உண்டு சிலர்தாமே. ......    27

(உற்ற வுலவையிடை)

உற்ற வுலவையிடை ஓர்புலிங்கம் ஊட்டியக்கால்
     கற்றை விடுசுடர்மீக் கான்று கனல்மிக்குப்
          பற்றுதல் செல்லாத பலவினும்போய்ப் பற்றிடுமால்
               அற்றெனலாம் ஈங்கோர் அரிவைமுயங் காதரமே. ......    28

(சந்திரற்கு நேரு)

சந்திரற்கு நேருவமை சாலுந் திருமுகத்துப்
     பைந்தொடிக்கை நல்லார் பலரும் புடைசூழக்
          குந்தமொத்த நாட்டத்துக் கோதமனார் பன்னியினால்
               இந்திரற்கு நீங்கா இடர்ப்பழிஒன் றெய்தியதே. ......    29

வேறு

(கூன்முகத் திங்கள்)

கூன்முகத் திங்கள் நெற்றிக் கோதையர் குழுவுக் கெல்லாந்
     தான்முதல் இறைவி யாகத் தன்கையாற் சமைக்கப் பட்ட
          மான்முக நோக்கி முன்னோர் மலரயன் மையல் எய்தி
               நான்முகன் ஆனான் என்ப நாமுண ராத தன்றே. ......    30

(மற்றுள முனிவர் தேவர் மாய)

மற்றுள முனிவர் தேவர் மாயமாங் காமந் தன்னால்
     உற்றிடு செயற்கை யெல்லாம் உரைப்பினும் உலப்பின் றாமால்
          அற்றெலா நிற்க யான்அவ் வாயிழை மடந்தை கூட்டம்
               பெற்றிடும் ஒழுக்கந் தன்னைப் பேணலன் பிறப்பு நீப்பேன். ......    31

(பூண்டகு விலங்கல்)

பூண்டகு விலங்கல் திண்டோட் புரந்தரன் முதலோர் சீரும்
     வேண்டலன் இல்வாழ் வென்னும் வெஞ்சிறை அகத்தும் வீழேன்
          மாண்டகு புலத்தின் மாயும் மயக்கொரீஇத் தவமென் றோதும்
               ஈண்டிய வெறுக்கை மேவி இன்பமுற் றிருப்ப னென்றான். ......    32

(இவைபல உரைத்த)

இவைபல உரைத்த லோடும் இருந்தகுச் சகன்தான் இந்தக்
     குவலய மதிக்கு மாற்றாற் கூறும்இல் லொழுக்கந் தன்னை
          நவையென இகழா நின்றான் நான்மறைத் துணிவுங் கொள்ளான்
               தவமயல் பூண்டான் என்னாத் துயர்கொடு சாற்ற லுற்றான். ......    33

(புலத்தியன் போலு)

புலத்தியன் போலு மேலோய் பொருவின்மங் கலஞ்சேர்பொன்னின்
     கலத்தியல் வதுவை பூண்டோர் கன்னியைக் கலத்தல் செய்து
          குலத்தியல் மரபின் ஓம்பக் குமரரைப் பயந்தே அன்றோ
               நலத்தியல் தவத்தை ஆற்றி நண்ணருங் கதியிற் சேரல். ......    34

(மன்பதை உலக)

மன்பதை உலக மேபோல் மாலுறா மயங்கு காம
     இன்பநீ நுகர்தற் கேயோ இசைத்தனன் இறந்த மேலோர்
          துன்பமும் நிரயஞ் சேர்வுந் துடைத்திடுந் தொன்மை நோக்கி
               அன்புறு புதல்வர்க் காக அரிவையைக் கோடி ஐயா. ......    35

(சித்திரம் இலகு)

சித்திரம் இலகு செவ்வாய்ச் சீறடிச் சிறுவர் தம்மைப்
     புத்திர ரென்னுஞ் சொற்குப் பொருணிலை அயர்த்தி போலாம்
          இத்தக வதனை நாடி இல்லறம் பூண்டு நிற்றல்
               உத்தம நெறியே யாகும் தவத்தின தொழுக்கும் அஃதே. ......    36

(குவவுறு நிவப்பின்)

குவவுறு நிவப்பின் மிக்க கோடுயிர் குடுமிக் குன்றின்
     இவர்வுறு காத லாளர் இயற்படு சார லெய்தித்
          திவவொடு போத லன்றிச் சேணுற உகளுந் தன்மைக்
               குவமைய தாகும் இன்னே உயர்தவத் தொழுக உன்னல். ......    37

(தருவினில் விலங்கில்)

தருவினில் விலங்கில் அன்ன தகையன பிறவிற் சால
     வருபயன் கோடற் கன்றோ மற்றவை வரைதல் செய்யார்
          பெருகும்இல் லறத்தி னோடும் பெருமகப் பொருட்டால் நீயும்
               அரிவையை மணந்து பின்னாள் அருந்தவம் புரிதி அன்றே. ......    38

(இந்தநன் னிலை)

இந்தநன் னிலைமே னாளே எண்ணிலை இந்நாள் காறும்
     முந்துசெய் கடன தாற்றி முற்றினை முறையே பன்னாட்
          சிந்தனை செய்த வானோர்க் கவிமுதற் சிறப்புச் செய்யாய்
               மைந்தநீ இன்னே நோற்கும் வண்ணமே எண்ணற் பாற்றோ. ......    39

(இந்திரர் புகழு)

இந்திரர் புகழுந் தொல்சீர் இல்லறம் புரிந்து ளோர்க்குத்
     தந்தம தொழுக்கந் தன்னில் தகுமுறை தவறிற் றேனுஞ்
          சிந்திடுந் தீர்வும் உண்டால் செய்தவர்க் கனைய சேரின்
               உய்ந்திடல் அரிதால் வெற்பின் உச்சியின் தவற லொப்ப. ......    40

(சுழிதரு பிறவி)

சுழிதரு பிறவி யென்னுஞ் சூழ்திரைப் பட்டுச் சோர்வுற்
     றழிதரு துயர நேமி அகன்றிடல் வேண்டு மேனுங்
          கழிதரு நாளான் அல்லாற் கதுமெனத் துறக்க லாமோ
               வழிமுறை நும்மு னோரின் மற்றது புரிதி மன்னோ. ......    41

(தேவரும் முனிவர்)

தேவரும் முனிவர் தாமுஞ் செங்கண்மா லயனும் மற்றும்
     யாவரு மடந்தை மாரோ டில்லறத் தொழுகுந் தன்மை
          மேவரப் பணித்தான் அன்றே விமலையோ டணுகி மேனாள்
               தாவரும் புவன மாதி சராசரம் பயந்த தாணு. ......    42

(மறுக்கலை அவன்)

மறுக்கலை அவன்றான் செய்த வரம்பினை வழியை வேண்டி
     வெறுக்கலை எனது கூற்றை விலக்கலை உலகின் செய்கை
          செறுக்கலை இகலு மாற்றாற் செப்பலை சிறிது மாற்றந்
               துறக்கலை எமரை இன்னே தொன்முறை உணர்ந்த தூயோய். ......    43

வேறு

(ஆடக வனப்புடை)

ஆடக வனப்புடை அருந்ததியை நீங்கான்
     மாடுற இருத்தியும் வசிட்டமுனி யென்போன்
          நீடுதவ நோன்மைகொடு நின்றனன் அதன்றிப்
               பீடுகெழு ஞாலமிசை பெற்றபழி யுண்டோ. ......    44

(துயக்குறு பவ)

துயக்குறு பவத்திடை தொடர்ச்சியறு தூயோர்
     நயப்பொடு வெறுப்பகலின் நாளுமட மானார்
          முயக்குறினும் மாதவ முயன்றிடினும் அன்னோர்
               வியத்தகு மனத்துணர்வு வேறுபடு மோதான். ......    45

(மேனவியல் பான்)

மேனவியல் பான்வரையும் மெல்லியலை மேவில்
     தானமுள தாகும்அரி தானதவ மாகும்
          வானமுள தாகுமிவண் மண்ணு முளதாகும்
               ஊனமில தாகும்அரி தொன்றுமிலை யன்றே. ......    46

(காண்டகைய தங்க)

காண்டகைய தங்கணவ ரைக்கடவு ளார்போல்
     வேண்டலுறு கற்பினர்தம் மெய்யுரையில் நிற்கும்
          ஈண்டையுள தெய்வதமும் மாமுகிலு மென்றால்
               ஆண்டகைமை யோர்களும் அவர்க்குநிக ரன்றே. ......    47

(ஆயிழையொ டின்)

ஆயிழையொ டின்புறும் அறத்தைமுத லாற்றாய்
     தூயதவ நன்னெறி தொடங்கல்புரி வாயேல்
          மாயமிகு காமவிடம் வந்தணுகின் அம்மா
               மேயவிதி காக்கினும் விலக்கியிட லாமோ. ......    48

(துறந்தவர்கள் வேண்டி)

துறந்தவர்கள் வேண்டியதொர் துப்புரவு நல்கி
     இறந்தவர்கள் காமுறும் இருங்கடன் இயற்றி
          அறம்பலவும் ஆற்றிவிருந் தோம்புமுறை யல்லால்
               பிறந்தநெறி யாலுளதொர் பேருதவி யாதோ. ......    49

(மெத்துதிறல் ஆட)

மெத்துதிறல் ஆடவரும் மெல்லியல்நல் லாருஞ்
     சித்தமுற நன்கினொடு தீதுசெயல் ஊழே
          உய்த்தபடி யல்லதிலை யாம்உழவர் ஒண்செய்
               வித்துபய னேயலது வேறுபெற லாமோ. ......    50

(நற்றவம தாகுமில)

நற்றவம தாகுமில றந்தனை நடாத்திச்
     சுற்றமற நீங்குதுற வேதுறவ தம்மா
          மற்றது புரிந்திடின் உனக்குநவை வாரா
               அற்றது மறுத்துரையல் ஆணைநம தென்றான். ......    51

(அன்னபல மாமுனி)

அன்னபல மாமுனி யறைந்திடலும் ஓரா
     முன்னமறை யாதிய மொழிந்ததுணி வென்றார்
          பன்னகம் அணிந்திடு பரன்பணியும் என்றார்
               என்னினி உரைப்பதென எண்ணிஇனை கின்றான். ......    52

(தத்தமத ருட்குர)

தத்தமத ருட்குரவர் தாவில்வளம் நீங்கி
     அத்தியிடை யாழ்கெனினும் அன்பினது செய்கை
          புத்திரர்கள் தங்கள்கட னாம்புதுமை யன்றே
               இத்திறம் மறுக்கலன் இசைந்திடுவன் யானும். ......    53

(தந்தைசொல் மறு)

தந்தைசொல் மறுப்பவர்கள் தாயுரை தடுப்போர்
     அந்தமறு தேசிகர்தம் ஆணையை இகந்தோர்
          வந்தனைசெய் வேதநெறி மாற்றினர்கள் மாறாச்
               செந்தழல வாயநிர யத்தினிடை சேர்வார். ......    54

(ஆதலின் விலக்க)

ஆதலின் விலக்கல்முறை அன்றென வலித்துக்
     கோதறு குணத்தின்மிகு குச்சகர்தம் அம்பொற்
          பாதம திறைஞ்சிமுனி யேல்பணியில் நிற்பன்
               ஓதுவ துனக்குள தெனக்கழறல் உற்றான். ......    55

(தன்னுரைகொ ளாத)

தன்னுரைகொ ளாதமனை வாழ்க்கையது தன்னில்
     வெந்நிரயம் வீழும்வகை யேவிழுமி தம்மா
          அன்னரொடு மேவியமர் ஆடவர் தமக்குப்
               பின்னுமொரு கூற்றுமுள தோபிணியும் உண்டோ. ......    56

(என்னுரையி னிற்)

என்னுரையி னிற்சிறிதும் எஞ்சலில வாகி
     மன்னுமியல் பெற்றிடு மடந்தையுள ளேல்அக்
          கன்னிதனை யான்வரைவல் காயெரிமுன் என்னாச்
               சொன்னமொழி கேட்டுமகிழ் வுற்றுமுனி சொல்லும். ......    57

வேறு

(யானும் உய்ந்த)

யானும் உய்ந்தனன் என்கிளை யுய்ந்தன இனையதால் நினையீன்றாள்
     தானும் உய்ந்தனள் தவங்களும் உய்ந்தன தண்ணளி யதுமற்றால்
          வானும் உய்ந்தன மண்ணுல குய்ந்தன வாசவ னெனவாழுங்
               கோனும் உய்ந்தனன் என்னுரை மறாமலுட் கொண்டனை அதனாலே. ......    58

(வேண்டும் வேட்கை)

வேண்டும் வேட்கையை உரைத்தியால் மைந்தநீ விளம்பிய இயல்பெல்லாம்
     பூண்டு குற்றமோர் சிறிதுமில் லாததோர் பூவையைப் புவியின்பாற்
          தேண்டி நின்வயிற் புணர்க்குவன் அங்கது செய்கலா தொழிவேனேல்
               மாண்டி றந்திடுங் குறைமதிக் கதிரென மாய்கஎன் தவமென்றான். ......    59

(இனைய பான்மை)

இனைய பான்மையிற் குச்சகன் சூளுரை இயம்பலுந் திருமால்முன்
     புனையும் மெய்ப்பெயர் தரித்தசேய் ஆங்கவன் பொலங்கழல் தனைப்பூண்டோர்
          தனயன் உய்பொருட் டாலிது புகன்றனை தவத்தினில் தலையான
               முனிவ நீயுனக் கரியதாய் ஒருபொருள் முச்சகந் தனிலுண்டோ. ......    60

(ஆவ தேனும்யான்)

ஆவ தேனும்யான் உரைப்பதுண் டத்தனை யற்றவர் அருளும்யாய்
     சாவ தாயினர் தன்னையர் இல்லவர் தங்கையர் இலரானோர்
          காவ லாடவர் தம்முடன் உதித்திடார் காசினி தனிலன்னோர்
               வீவதாயினர் பெருங்கிளை இல்லவர் வியத்தகு திருவற்றோர். ......    61

(குடிப்பி றந்திலர்)

குடிப்பி றந்திலர் பிணியுறும் இருமுது குரவர்பாற் குறுகுற்றோர்
     கடுத்த யங்கிய மிடற்றிறை யாதியாங் கடவுளர் பெயர்கொள்ளா
          தடுத்த மாக்கடம் பெயர்பெறு பீடிலர் அலகைதன் நாமத்தோர்
               படித்த லந்தனில் புன்னெறிச் சமயமாம் படுகுழிப் பட்டுள்ளோர். ......    62

(பிணியர் மூங்கையர்)

பிணியர் மூங்கையர் பங்கினர் வெதிரினர் பிறர்மனை தனிற்செல்வோர்
     கணிகை மாதரின் விழிப்பவர் பன்முறை காளையர் தமைநோக்கி
          நணிய காதலான் முன்கடை நிற்பவர் நலம்பெறப் புனைகின்றோர்
               தணிவில் உண்டியர் துயில்மிகும் இயல்பினர் தன்னினும் மூப்புற்றோர். ......    63

(ஒருமை தங்கிய)

ஒருமை தங்கிய கோத்திர மரபினர் உயர்ந்தவர் குறளானோர்
     பருமை தங்கிய யாக்கையர் மெல்லுருப் படைத்தவர் பயனில்லாக்
          கருமை தங்கிய வடிவினர் பொன்னெனக் கவின்றெழு காயத்தோர்
               இருமை தங்கிய பசப்பினர் விளர்ப்பினர் எருவையின் உருமிக்கோர். ......    64

(நாணி லாதவர்)

நாணி லாதவர் ஆடவர் புணர்ச்சியில் நணியவர் நகைக்கின்றோர்
     ஏணி லாதவர் பெருமிடல் சான்றவர் இருமுது குரவோர்தம்
          ஆணை நீங்கினர் சினத்தினர் இகலினர் அடுதிறம் முயல்கின்றோர்
               காண வேண்டினர் நடமுத லாயின காமனாற் கவல்கின்றோர். ......    65

(ஈசன் அன்பிலர்)

ஈசன் அன்பிலர் பெருந்தகை முனிவரை இகழ்பவர் உயிர்மீது
     நேச மென்பன இல்லவர் தங்குல நெறிதனில் நில்லாதோர்
          மாசு தங்கிய குணத்தினர் நிறையிலார் மனமெனுங் காப்பில்லோர்
               தேசி கன்றனை மனிதனென் றுன்னினர் தேவரைச் சிலையென்றோர். ......    66

(பத்தின் மேற்படும்)

பத்தின் மேற்படும் ஆண்டினர் பூத்திடு பருவம்வந் தணுகுற்றோர்
     ஒத்த பண்பிலர் அச்சமில் மனத்தினர் உருமென வுரைசெய்வோர்
          அத்தன் அன்னையீந் தருளுமுன் ஒருவர்பால் ஆர்வமுற்றவர்சேர
               வைத்த சிந்தையர் பெருமிதம் உற்றுளோர் மடமொடு பயிர்ப்பில்லோர். ......    67

(பிறப்பின் எல்லை)

பிறப்பின் எல்லையில் விழியிலார் தோற்றிய பின்றையே இழக்கின்றோர்
     மறுப்ப யின்றிடுங் கண்ணினர் படலிகை வயங்கிய நோக்கத்தார்
          குறிப்பின் மெல்லென வெஃகியே விழித்திடுங் குருடர்சாய் நயனத்தோர்
               சிறப்பில் பூஞையின் நாட்டத்தர் கணத்தினில் திரிதரு செங்கண்ணோர். ......    68

(தூறு சென்னியர்)

தூறு சென்னியர் நரைமுதிர் கூந்தலர் துகளுறும் ஐம்பாலார்
     வீறு கோதையர் சின்னமார் குழலினர் விரிதரும் அளகத்தோர்
          ஈறில் செம்மயிர்ப் பங்கியர் நிலனிடை இறக்கிய கேசத்தோர்
               ஊறு சேர்தரும் ஓதியர் விலங்கென உரமிகு குரலுள்ளோர். ......    69

(சிறுகு கண்ணினர்)

சிறுகு கண்ணினர் மிகநெடுந் துண்டத்தர் சேர்ந்திடு புருவத்தோர்
     குறிய காதினர் உயர்தரும் எயிற்றினர் கோணுறு கண்டத்தோர்
          மறுவி ராவிய முகத்தினர் சுணங்குறா மணிமுலை மார்பத்தோர்
               வெறிய தாகிய நுசுப்பிலர் சிலையென வியன்மிகு வயினுள்ளோர். ......    70

(காய நூல்முறை)

காய நூல்முறை உரைத்திடும் இயல்பிலாக் கடிதட நிதம்பத்தோர்
     வாயும் அங்கையும் நகமுமுள் ளடிகளும் வனப்புறு சிவப்பில்லோர்
          மேய சின்மயிர் பரந்திடு பதத்தினர் மென்சிறை எகினம்போல்
               தூய நன்னடை இல்லவர் அங்குலி தொல்புவி தோயாதோர். ......    71

(இனைய தன்மைய ராகி)

இனைய தன்மைய ராகிய மாதர்கள் ஏனையர் இவர்யாவரும்
     புனையு மங்கல மாகிய கடிவினை புரிதர வரையாதோர்
          அனைய ரேயெனின் வேண்டலன் முழுவதும் அவரியல் அணுகாத
               வனிதை யுண்டெனின் வேண்டுவன் தேர்ந்தனை மரபினில் தருகென்றான். ......    72

(காட்டில் நின்றிடு)

காட்டில் நின்றிடு குற்றியின் நோற்புறு கவுச்சிகன் இவைகூறக்
     கேட்டு மூரலும் உவகையுங் கிடைத்தனன் கேடில்சீர் உலகுள்ள
          நாட்ட கந்தனில் நாடிநல் லியல்புள நங்கையை நின்பாலிற்
               கூட்டுகின்றனன் மானுதல் ஒழிகெனக் குச்சகன் உரைசெய்தான். ......    73

(உரைத்த குச்சகன்)

உரைத்த குச்சகன் மைந்தனை நிறுவியே ஒல்லைசென் றகிலத்தில்
     திருத்த குஞ்சுடர் மலிதரு செம்பொனிற் செய்ததோர் அணிநாப்பண்
          அருத்தி சேர்தரக் குயிற்றிட வேண்டியோர் அருமணி தனைக்கொள்வான்
               கருத்தி லுன்னுபு தெரிபவன் போல்ஒரு கன்னியைத் தேர்கின்றான். ......    74

வேறு

(அன்னவன் தன்னேர்)

அன்னவன் தன்னேர் முனிவரர் சிலர்வந் தணுகலும் அவரொடும் வினாவிச்
     சென்னிதன் தேயத் தநாமயம் என்னுஞ் செயிரிலா வனத்துசத் தியன்பால்
          கன்னிகை யிருத்தல் உணர்ந்துமற் றவன்பாற் கதுமெனச் சேறலுங் காணூஉத்
               தன்னடி வணங்க வெதிருறத் தொழுது தழுவியே அவனொடுஞ் சார. ......    75

(மாசற வியன்ற)

மாசற வியன்ற உறையுளிற் கொடுபோய் வரன்முறை வழாமலே அமைத்த
     ஆசனத் திருத்திக் கன்னிகை யொடுதன் பன்னியை யாயிடை அழைத்துத்
          தேசிக னுற்றான் பணிமின்நீர் என்னாச் சென்னியால் இறைஞ்சுவித் துரிய
               பூசனை புரிந்து நகையொடு முகமன் புகன்றள வளாயினன் புனிதன். ......    76

(அறுசுவை கெழுவும்)

அறுசுவை கெழுவும் நறியசிற் றுண்டி அமுதினில் தூயன அருத்திக்
     குறைவறும் அடிகட் கென்னிடை வேண்டுங் கொள்கைய தென்னெனக் கூற
          மறுவறு தவத்துக் குச்சக முனிவன் மகிழ்ந்துநீ மாதவம் புரிந்து
               பெறுமகள் தன்னை யெனதொரு மகற்குப் பேசுவான் பெயர்ந்தனன் என்றான். ......    77

(இனையசொல் வின)

இனையசொல் வினவி முனிவரன் மகிழா என்மகள் விருத்தையை இயல்சேர்
     உனதுமைந் தற்கு நல்கமுன் செய்த உயர்தவம் என்கொலென் றுரைத்து
          மனமுற நகையும் உவகையுங் கிளர மணவினை இசைந்துமா தவத்துப்
               புனிதனை அங்கட் சிலபகல் இருத்திப் போற்றிசெய் தொழுகுறும் பொழுதின். ......    78

வேறு

(பங்கமில் உசத்தி)

பங்கமில் உசத்தியன் பன்னி யாகிய
     மங்கலை விடுத்திட மகள்வி ருத்தைதான்
          அங்குள இகுளையர் ஆயந் தன்னுடன்
               செங்கயல் பாய்புனல் திளைப்பப் போயினாள். ......    79

(காடுற வந்திடு)

காடுற வந்திடு கலுழி மாண்புனல்
     ஆடினள் மகிழ்சிறந் தணங்க னாரொடு
          மாடுறு பொதும்பர்போய் மலர்கொய் தன்னவை
               சூடினள் இருந்தனள் தொடலை ஆற்றியே. ......    80

(பாசிழை மங்கை)

பாசிழை மங்கையர் பண்ணை யோடெழீஇ
     ஆசறு பொதும்பினும் அணங்கை யன்னவள்
          மாசறு தாரகை மரபிற் சூழ்தருந்
               தேசுறு மதியெனத் திரும்பும் வேலையே. ......    81

(உருகெழு கனை)

உருகெழு கனையொலி உருமுக் கான்றிடுங்
     கருமுகில் இஃதெனக் கனன்று காய்கனல்
          சொரிதரும் விழியது சூர்த்த மெய்யது
               பெருமத நதியொடு பெயரு கின்றதே. ......    82

(தாழுறு கரத்தது)

தாழுறு கரத்தது தடத்தின் சால்பெனக்
     காழுறும் எயிற்றது கறைகொள் காலதால்
          ஏழுயர் குறும்பொறை இபமொன் றேற்றெதிர்
               பாழிய வரைதுகள் படுத்துச் சென்றதே. ......    83

(காண்டலும் வெரு)

காண்டலும் வெருவினர் கவன்றவ் வாறுசெல்
     ஆண்டகை யோர்களும் அகன்று சிந்தினார்
          நீண்டிடு கடலிடை நிமிர்ந்த வெவ்விடம்
               ஈண்டலும் இரிந்தபுத் தேளிர் என்னவே. ......    84

(கன்னிகை விரு)

கன்னிகை விருத்தையாள் கண்டு துன்புறா
     அன்னமென் னடையினர் அகன்று சிந்தலும்
          என்னினி இழைப்பதென் றிரங்கி யேங்கியே
               உன்னருங் கடுப்பினில் உஞற்றி யோடலும். ......    85

(கீழ்ந்தறை போகிய)

கீழ்ந்தறை போகிய கிளைஞ ராமெனத்
     தாழ்ந்திடு பசும்புதல் செறியத் தான்மறைந்
          தாழ்ந்திடு கூவலொன் றணுக அன்னதில்
               வீழ்ந்தனள் அழுந்தினள் விளிவுற் றாளரோ. ......    86

(முடங்குளை அல)

முடங்குளை அலங்குறு முதிய பூநுதல்
     மடங்கலின் ஏறெதிர் வரினும் மாறுகொள்
          கடங்கலுழ் மால்கரி கல்லென் ஆர்ப்பொடு
               நடந்தது மலையமா னாடு சாரவே. ......    87

(இரிந்திடு மாத)

இரிந்திடு மாதரார் யாண்டு மாகியே
     விரிந்திடு வோர்குழீஇ வியர்க்கு மேனியர்
          சரிந்திடு கூந்தலர் தளரும் நெஞ்சினர்
               பிரிந்திடும் உவகையர் பெயர்ந்து நாடினார். ......    88

(தண்டம தெங்க)

தண்டம தெங்கணுந் தானஞ் சிந்திடக்
     கொண்டலின் எய்திய கோட்டு மாதிரங்
          கண்டிலர் கன்னிகை தனையுங் காண்கிலர்
               உண்டிலை யெனவுயிர் உயிர்ப்பு நீங்கினார். ......    89

(மண்ணிடை யாறெ)

மண்ணிடை யாறென வழிக்கொண் டேகவே
     கண்ணிணை புனலுகக் கலுழ்ந்து சோர்வுறாத்
          துண்ணென உணர்வுறத் துளங்கிச் சூழ்கனல்
               புண்ணுறு வோரெனப் புலம்பல் மேயினார். ......    90

வேறு

(பெண்ணுக் கணி)

பெண்ணுக் கணிகலமே பேரழகுக் கோருருவே
     கண்ணுக் கணியே கமலத்துச் செந்திருவே
          மண்ணிற் புனல்படிந்தாய் வானதியும் ஆடுவதற்
               கெண்ணித் துணிந்தோ எமைவிட்டுப் போயினையே. ......    91

(வன்னப் புனலாட்டி)

வன்னப் புனலாட்டி வல்லே புறங்காத்தென்
     மின்னைத் தருதி ரெனவே விடைகொடுத்த
          அன்னைக்கென் சொல்வேம் அடுகளிற்றின் முன்னாக
               உன்னைத் தனிவிட் டுயிர்கொண்டு போந்தனமே. ......    92

(ஐயர் உசத்தியரும்)

ஐயர் உசத்தியரும் அன்னையெனும் மங்கலையும்
     வையம் பரவுகின்ற மாதுலராங் குச்சகருங்
          கையறவின் மூழ்கக் கரந்தாய் இனியொருகால்
               செய்ய முகமுந் திருநகையுங் காட்டாயோ. ......    93

(என்னப் பலவும் புலம்பி)

என்னப் பலவும் புலம்பி இரங்குற்றே
     உன்னற் கருஞ்சீர் உசத்தியன்றான் நற்றவத்தின்
          மன்னுற்ற தெய்வ வனத்தின் மனைவாழ்க்கைப்
               பன்னிக் கிவையுரைத்துப் பாவைநல்லார் ஆவலித்தார். ......    94

(கேட்டிடலும் அன்னை)

கேட்டிடலும் அன்னை வயிறதுக்கிக் கேழ்கிளர்தீ
     ஊட்டரக்கே யென்ன உருகி மனமறுகி
          வாட்டடங்கண் நீர்குதிப்ப வாய்வெரீஇத் தன்கணவன்
               தாட்டுணையில் வீழ்ந்து புகுந்தபடி சாற்றினளால். ......    95

(ஒன்றுபுரி காட்சி)

ஒன்றுபுரி காட்சி முனிவன் உவைகேட்டுக்
     கன்றுபிரி தாயின் கவன்றரற்றிக் கன்னியொடு
          சென்றுபிரி வுற்றோரை நோக்கிச் சினக்களிறு
               கொன்றதுவோ அஞ்சாது கூறுமெனச் செப்புதலும். ......    96

(தூயபுன லாடி)

தூயபுன லாடித் துறைபுகுந்து சூழ்பொதும்பில்
     ஆயமுடன் ஆடி யகன்றிங்கு வந்திடலுங்
          காயுமழல் வெங்கட் கடகளிறு வந்ததுகண்
               டோயுமுணர் வெய்தி எல்லோமும் ஓடினமால். ......    97

(ஓடி யுலையா)

ஓடி யுலையா ஒருவர் நெறியொருவர்
     கூடல் இலதா அணியின் குழாஞ்சிந்திச்
          சாடு மதகரியில் தப்பி விருத்தைதனைத்
               தேடியங்ஙன் காணாது சென்றனம்யாம் என்றிடலும். ......    98

(சென்றாங்கவ் வெல்)

சென்றாங்கவ் வெல்லைதனில் தேடித் தியங்குற்று
     நின்றான் மகள்தன் நிறங்கிளரும் பொற்கலனோர்
          ஒன்றாக வெவ்வே றொருநெறியில் சிந்திடக்கண்
               டென்றாய் படர்ந்தநெறி ஈதுகொலென் றேமுற்றான். ......    99

(பூண்போ கியநெ)

பூண்போ கியநெறியே தொட்டுப் புதல்விதனைக்
     காண்போ மெனவே கனங்குழையா ரோடேகி
          மாண்போய கூவலொன்று வந்தணுக ஆங்கதனில்
               சேண்போய தன்மகளைக் கண்டு தெருமந்தான். ......    100

வேறு

(கூவலுறு வதுநோ)

கூவலுறு வதுநோக்கி நெடிதுயிர்த்து விழிவழிநீர் குதிப்பக் குப்புற்
     றாவலியா மகளையெடுத் தகன்கரையின் பாற்படுத்தி அழுங்கலோடும்
          பாவையர்கள் தழீஇக்கொண்டு புலம்பினரால் அதுகேட்டுப் பயந்த நற்றாய்
               காவிலுறு கோகிலம்போல் நெடிதரற்றிப் பெருந்துயரக் கடலுட் பட்டாள். ......    101

(தன்பால்வந் தவ)

தன்பால்வந் தவதரித்த நங்கைதனைக் கைவிட்டுத் தரியா ளாகி
     அன்பாலே உயிர்பதைப்ப வயிறதுக்கி ஆகுலியா அரற்றி யேங்கி
          மின்பாலோர் மின்படிந்த தன்மையென அவளாக மிசையே வீழ்ந்து
               தென்பாலிற் புகுந்தனையோ ஓமகளே யெனப்புலம்பித் தேம்ப லுற்றாள். ......    102

(அன்னேயோ அன்)

அன்னேயோ அன்னேயோ ஆகொடிய தறனேயோ அறியேன் அந்தோ
     முன்னேயோ நெடுங்காலங் குழவியின்றிப் பெருநோன்பு முயன்று பெற்ற
          மின்னேயோ உயிரிழந்து வெள்ளிடையிற் கிடந்திடுமால் விதியார் செய்கை
               இன்னேயோ யானொருத்தி பெண்பிறந்து பெற்றபயன் இதுவே யன்றோ. ......    103

(புலிக்கணங்கள்)

புலிக்கணங்கள் திரிகானில் ஒருமானை வளர்த்ததனைப் போக்கி நின்றே
     அலக்கணுறு வோரெனவே கைவிட்டுத் தமியேனும் அழுங்கா நின்றேன்
          மலர்க்கமலத் திருவைநிகர் என்மகளைக் கொல்லியமுன் வந்த தந்தக்
               கொலைக்க ளிற்றின் வடிவன்றே கொடியேன்செய் பெரும்பவத்தின் கோல மன்றோ. ......    104

(அறங்காட்டிற் சென்ற)

அறங்காட்டிற் சென்றதுவோ தெய்வதமும் இங்கிலையோ அரிதா முத்தித்
     திறங்காட்டுந் தவநெறியும் பொய்த்தனவோ கலியுமினிச் சேர்ந்த தேயோ
          மறங்காட்டும் வனக்களிறு வந்தடர்க்க ஈண்டெனது மாது மாண்டு
               புறங்காட்டிற் கிடந்திடுமோ என்னேயென் னேயிதுவோர் புதுமை யாமே. ......    105

வேறு

(என்றிவை பலவும் பன்னி இட - 1)

என்றிவை பலவும் பன்னி இடருழந் தரற்றும் வேலை
     மன்றலங் குழலின் மாதர் வளைந்தனர் இரங்கி மாழ்க
          ஒன்றிய கேளிர் அல்லா ரியாவரும் உருகி நைந்தார்
               அன்றவண் நிகழ்ந்த பூசல் ஆகுலம் அறைதற் பாற்றோ. ......    106

(கோட்டமில் சிந்தை)

கோட்டமில் சிந்தை யோனாங் குச்சகன் குறுகி யங்கண்
     நாட்டநீர் பனிப்பச் சோரும் நங்கையர் தம்பா லெய்தி
          மீட்டினித் தருவன் மாதை விம்மலிர் என்னா வேறோர்
               மாட்டுற விருந்த தந்தைக் கினையன வகுத்துச் சொல்வான். ......    107

(மறைமுத லாய)

மறைமுத லாய நுண்ணூல் மருளற உணரா மாக்கள்
     சிறியரே முதியர் பாலர் சேயிழை மகளிர் இன்னோர்
          உறுவதோர் அவலஞ் செய்தாய் ஊழ்வினை முறையும் ஓராய்
               அறிவநீ இன்னே யாயின் ஆரிது தணிக்கற் பாலார். ......    108

(கேளையா மனத்தில்)

கேளையா மனத்தில் துன்பங் கிளத்தலை கேடு நீங்கி
     நீளயா வுயிர்த்தார் போலிந் நேரிழைக் கன்னி தன்னை
          நாளையான் விளித்து நின்பால் நல்குவன் நல்க நீநங்
               காளையா னவற்குப் பின்னாட் கடிமணம் புரிதி அன்றே. ......    109

(ஐயமென் றுளத்தி)

ஐயமென் றுளத்தி லுன்னி அழுங்கலை விதியு மற்றே
     மெய்யுணர் வதனாற் கண்டாம் விருத்தைதன் யாக்கை தன்னை
          மொய்யுறு தயிலத் தோணி மூழ்குவித் திருத்தி யின்றே
               ஒய்யென நோற்று மீட்டுத் தருகுவன் உயிரை யென்றான். ......    110

(சாற்றிய துணர்ந்து)

சாற்றிய துணர்ந்து தாதை தயிலத்தி லிட்டு மாதைப்
     போற்றினன் இருப்ப மேலோன் போயொரு பொய்கை மூழ்கிக்
          கூற்றுவற் புகழ்ந்து நோற்பக் கொடுங்குழை மடவார் அஞ்சக்
               காற்றென முன்னர் வந்த களிறுமீண் டணைந்த தம்மா. ......    111

(தடமிகு புனலு)

தடமிகு புனலுட் புக்குத் தாளினால் உழக்கிச் சாடிப்
     படவர வனைய செய்கைப் பருவலித் தடக்கை தன்னால்
          இடைதொறுந் துழாவி நின்ற இருந்தவ முனிவற் பற்றிப்
               பிடர்மிசை யேற்றிக் கொண்டு பெரிதுசேண் பெயர்ந்த தன்றே. ......    112

(கோதறு குணத்தின்)

கோதறு குணத்தின் மேலாங் குச்சகன் என்னுந் தொல்பேர்
     மாதவன் உணர்ந்து பின்னர் மதக்களி றதனை நோக்கி
          ஈதெனைப் பற்றிச் செல்வ தென்கொல்கா ரணமென் றெண்ணி
               ஓதியின் வலியா லன்ன தூழ்முறை உன்ன லுற்றான். ......    113

வேறு

(மாவ தத்தினை)

மாவ தத்தினை இழைத்திடும் பூட்கையின் மதநீர்
     காவ தத்தினுங் கமழ்தரு கலிங்கநாட் டதன்பால்
          ஆவ தத்தநேர் மாக்கள்வாழ் அரிபுரம் அதனில்
               தேவ தத்தன்என் றுளன்ஒரு வணிகரில் திலகன். ......    114

(தவத்தின் அன்ன)

தவத்தின் அன்னவன் பெறுமகன் தருமதத் தன்எனப்
     புவிக்கண் மேலவர் புகழ்செய அறம்புரி புகழோன்
          கவற்சி யின்றியே மூவகைப் பொருளையுங் காண்போன்
               உவப்பு நீடிய இருநிதிக் கிறையினும் உயர்ந்தோன். ......    115

(தந்தை அன்னையும்)

தந்தை அன்னையும் இறத்தலுந் தமியனே யாகிச்
     சிந்தை வெந்துயர் உழந்துபின் ஒருவகை தேற
          அந்த வேலையின் அவன்பெருந் திருவினை அகற்ற
               வந்து தோன்றினன் மனமருள் செய்வதோர் வாதி. ......    116

(முண்டி தப்படு)

முண்டி தப்படு சென்னியன் தாதுவின் முயங்கு
     குண்ட லத்தினன் கோலநூல் மார்பினன் நீற்றுப்
          புண்ட ரத்தியல் நெற்றியன் கஞ்சுகன் புதியோன்
               கண்டி கைக்கலன் புனைந்துளோன் வேத்திரக் கரத்தோன். ......    117

(அவனைக் கண்ட)

அவனைக் கண்டனன் அடிமுறை வணங்கினன் அருவாஞ்
     சிவனைக் கண்டன னாமெனப் பெருமகிழ் சிறந்தான்
          புவனிக் குள்ளவர் என்னினுஞ் சாலவும் புதியர்
               தவமிக் கோரிவர் என்றுகொண் டுறையுளிற் சார்ந்தான். ......    118

(பொன்ன ருங்கல)

பொன்ன ருங்கலந் திருத்துபு குய்யுடைப் புழுக்கல்
     நன்ன லம்பெற அருத்தினன் முகமனும் நவின்றான்
          பின்னர் அன்னவன் றனையெதிர் நோக்கினன் பெரியோய்
               என்னி வண்வந்த தென்றனன் வணிகருக் கிறைவன். ......    119

(ஈசன் தந்திடு)

ஈசன் தந்திடு விஞ்சையொன் றெமக்குள தெவர்க்கும்
     பேசுந் தன்மைய தன்றது குரவர்பாற் பெரிதும்
          நேசம் பூண்டவர்க் குரைப்பது நெஞ்சினில் சிறிதும்
               மாசின் றாயநிற் குணர்த்துவன் அஃதென வகுத்தான். ......    120

(சரத மேயிது)

சரத மேயிது சம்புவின் வந்ததோர் தகைசால்
     இரத முண்டது பொன்னெனச் செய்தனம் எமக்கோர்
          அரிது மன்றது போல்வன பலவுள அவைதாம்
               விரத மாதவர் அல்லதி யார்கொலோ விரும்பார். ......    121

(காரி ரும்பையும்)

காரி ரும்பையும் நாகத்திற் காட்டுதுங் கரிய
     சீரி ரும்பினைப் பொன்னென உரைபெறச் செய்வாம்
          மேரு வுங்கயி லாயமும் என்றிரு வெற்பை
               யாரும் நோக்கவே காட்டுதும் இவைநமக் கரிதோ. ......    122

(எய்தும் ஈயமும்)

எய்தும் ஈயமும் இரதமும் வெள்ளிய தெனவே
     செய்து மன்றியும் வங்கத்திற் செம்பொனுந் தெரிப்பாம்
          நொய்தின் அன்னது வலியுறக் காட்டுதும் நுவலுங்
               கைத வம்பயில் மாக்களுக் கினையன கழறாம். ......    123

(இரும்பி னிற்செம்பு)

இரும்பி னிற்செம்பு வாங்குவம் ஈயமும் அற்றே
     வரம்பி லாததோர் தரணியண் டங்களை மரபின்
          அரும்பொன் வண்ணம தாக்குவம் வல்லவா றறைய
               விரும்பி னாமெனின் யாண்டுமோர் அளப்பில வேண்டும். ......    124

(ஒன்று கோடிபொன்)

ஒன்று கோடிபொன் னாக்குவங் கோடிய துளவேல்
     குன்று போலவே கோடியிற் கோடிசெய் குவமால்
          நின்ற னக்குள பொருளெலாந் தருதியேல் நினது
               மன்றல் மாளிகை நிதிக்கிடம் இல்லென வகுப்பாம். ......    125

(என்ன வேமொழி)

என்ன வேமொழி சோரனை வணங்கினன் இமைப்பின்
     முன்னர் உள்ளதுந் தான்றன துரிமையால் முயலப்
          பின்னர் எய்திய நிதியமும் பேழையான் அவற்றின்
               மன்னு பூண்களுங் கொணர்ந்தனன் முன்புற வைத்தான். ......    126

(வைத்த மாநிதி)

வைத்த மாநிதி நோக்கலும் வணிகரில் திலகர்
     உய்த்த செல்வமும் இதுகொலோ ஓவென உரையாக்
          கைத்த லங்கொடு கைத்தலம் புடைத்துடுக் கணங்கள்
               நத்த வேலையில் ஒருங்குபட் டாலென நகைத்தான். ......    127

(இந்த நின்பொருள்)

இந்த நின்பொருள் நம்முடை விஞ்சையில் இறைக்கும்
     வந்தி டாதுநாம் உருக்குறு முகந்தனில் வழுவிச்
          சிந்து கின்றதற் கிலையிது நமதுபின் திரியின்
               அந்த மில்பொருள் கொடுக்குவம் வைத்தியென் றறைந்தான். ......    128

(முனியல் ஐயநீ)

முனியல் ஐயநீ வேண்டிய பெருநிதி முழுதும்
     இனிது நாடியே கொணருவன் இருத்தியென் றுரைத்துப்
          புனையும் ஆடையும் நிலங்களும் மணிகளும் பூணும்
               மனையும் மாக்களும் பகர்ந்தனன் நிகரிலா வணிகன். ......    129

(பொரும தத்தினை)

பொரும தத்தினை இழைத்திடு மருப்புயர் புழைக்கைப்
     பெரும தக்கரி யென்னவே மயங்கினன் பெரிதும்
          வரும தத்தமென் றறத்தையும் பகர்ந்துமெய் வணிகன்
               தரும தத்தனாம் பெயரினை நிறுவினன் தரைமேல். ......    130

(இத்தி றத்தினில்)

இத்தி றத்தினில் தேடிய பெருநிதி எனைத்துங்
     கைத்த லங்கொடு தாங்கியே கரவன்முன் காண
          வைத்து நிற்றலும் மகிழ்ந்தனன் அவையெலாம் வாங்கி
               மொய்த்த செங்கனல் தீயிடை உருக்குதல் முயன்றான். ......    131

(திரட்டி யாவையும்)

திரட்டி யாவையும் ஓருரு வாக்கினன் செழும்பொன்
     இரட்டி தூக்கிய இரதமாங் கொருசிலை யிட்டு
          மருட்டி ஆடக முழுவதும் உரைத்தவை வலிதா
               உருட்டி மட்பெருங் குகையினில் மருந்தையுள் ளுறுத்தான். ......    132

(பண்ணு றுத்திய)

பண்ணு றுத்திய கனகமுள் ளிட்டதன் பாலும்
     எண்ணு றுத்திய மிசைக்கணுங் களங்கமொன் றிட்டு
          மண்ணு றுத்திநற் றுகில்கொடு பொதிந்தனன் மருங்கிற்
               கண்ணு றுத்திய செந்தழற் புடைமிசை கரந்தான். ......    133

(நூற்று நான்கொடு)

நூற்று நான்கொடு நான்குகுக் குடபுடம் நொய்தின்
     வீற்று வீற்றதா விட்டது நோக்கினன் மிகவும்
          மாற்று வந்தது பழுக்குமோர் வராகியின் மருளேல்
               காற்றி லாததோர் உறையுள்காட் டென்றனன் கரவன். ......    134

(சேமஞ் செய்ததோர்)

சேமஞ் செய்ததோர் உறையுளைக் காட்டலுஞ் சென்று
     வாமஞ் செய்ததோர் இந்தனக் குவான்மிசை மறவோர்
          ஈமஞ் செய்தசெந் தழற்கொடு வராகிமே லிட்டுத்
               தூமஞ் செய்தனன் அங்கியும் அவனெதிர் துரந்தான். ......    135

(ஓங்கி நாட்டநீர்)

ஓங்கி நாட்டநீர் பொழிதர ஆருயிர் உலைய
     வீங்கு கின்றமெய் வெதும்புற எங்கணும் வியர்ப்ப
          மூங்கை யாமென மொழிகிலான் போவது முயலான்
               பாங்கி ருந்திடு வணிகர்கோன் பட்டதார் பகர்வார். ......    136

(எல்லை அன்னதிற் பொதி)

எல்லை அன்னதிற் பொதிந்திடு பொற்குகை யெடுத்து
     மெல்லெ னத்தன தாடையிற் கரந்தனன் வெய்யோன்
          வல்லை யக்குகை போலஒன் றிருந்தது மருங்கில்
               செல்ல வைத்தனன் தழற்பெரும் புகையையுந் தீர்த்தான். ......    137

(தத்த இக்குகை)

தத்த இக்குகை நின்கையில் தாங்கினை தழல்மேல்
     வைத்தி என்றனன் அவனது புரிதலும் மரபின்
          அத்த குஞ்செயற் குரியன யாவையும் அமைத்து
               வித்த கம்பெறச் சேமியா ஒருசெயல் விதித்தான். ......    138

வேறு

(உண்டி இகந்துரை)

உண்டி இகந்துரை யாடலை யாகிப்
     பெண்டிரை வெஃகல் பெறாய்பிறர் தம்மைக்
          கண்டிடல் இன்று கருத்தினில் எம்மைக்
               கொண்டிரு முப்பகல் கோதில் குணத்தோய். ......    139

(நெய்கமழ் செஞ்சடை)

நெய்கமழ் செஞ்சடை நீலிதன் முன்னோர்
     மொய்கனல் வேள்வி முடித்திடல் உண்டால்
          செய்கடன் அன்னது தீர்த்தபின் நாலாம்
               வைகலின் ஏகுதும் மற்றிவண் என்றான். ......    140

(அம்முறை செய்கென)

அம்முறை செய்கென ஆங்கவன் அடியை
     மும்முறை தாழ்ந்து முதற்பெரு வணிகச்
          செம்மல வன்புடை சென்றிலன் நின்றான்
               மைம்மலி சிந்தையன் வல்லை அகன்றான். ......    141

(காவத மோரொரு)

காவத மோரொரு கன்னலின் ஆகப்
     போவது செய்து புறத்துரு மாறி
          வாவினன் வேறொர் வளாகம துற்றான்
               ஏவலின் வைகினன் இத்தலை வணிகன். ......    142

(முப்பகல் போதலும்)

முப்பகல் போதலும் மூதறி வுள்ளோன்
     செப்பிய நாள்வரை சென்றுள வன்றே
          இப்பகல் வந்திலன் என்னை அவன்சொல்
               தப்புவ னோவென வேதளர் கின்றான். ......    143

(நீடிய தொல்புகழ்)

நீடிய தொல்புகழ் நீலி இருக்கை
     நாடினன் மேதகு நன்னகர் எங்கும்
          தேடினன் மாலுறு சிந்தைய னானான்
               வாடினன் மீண்டனன் மாளிகை வந்தான். ......    144

(அடுத்துமுன் வைத்த)

அடுத்துமுன் வைத்த அருங்குகை தன்னை
     எடுத்தது நோக்க இரும்பது வாக
          வடுத்தவிர் சிந்தையன் மாயைகொ லென்னா
               விடுத்தனன் அன்னது வீழுமுன் வீழ்ந்தான். ......    145

(அத்தம் அனைத்தும்)

அத்தம் அனைத்தும் அகன்றிட லோடும்
     பித்தின் மனத்தொடு பீழை யனாகி
          எய்த்தனன் ஆயுளின் எல்லையும் எய்தத்
               தத்தனும் விண்ணிடை சார்ந்தனன் அன்றே. ......    146

(அறந்தனை விற்ற)

அறந்தனை விற்ற அருஞ்செய லாலே
     மறந்தரு தத்தனு மால்கரி யாகிப்
          பிறந்தனன் முன்னுறு பெற்றிய தெல்லாம்
               மறந்தனன் என்று மனத்திடை கொண்டு. ......    147

(மாற்றுவன் இப்பவம்)

மாற்றுவன் இப்பவம் வல்லையி னென்னாச்
     சாற்றினன் முன்பு தவம்புரி வேலை
          நோற்றிடு மோர்பகல் நோன்பவை தான்இவ்
               வாற்றல்இ பத்துழை யாகுக வென்றான். ......    148

(இப்பரி சங்கண்)

இப்பரி சங்கண் இயம்புத லோடும்
     அப்பொழு தன்னவன் ஆண்டுறு வேழம்
          மெய்ப்படி வந்தனை வீட்டினன் யாருஞ்
               செப்பரி தாகிய தேவுரு வானான். ......    149

(அந்தர துந்துபி)

அந்தர துந்துபி யார்த்தன வானோர்
     சிந்தினர் பூமழை சேணிடை நின்றும்
          வந்தது தெய்வத மானம தன்பால்
               இந்திர னாமென ஏறினன் அன்றே. ......    150

(பாசிழை மங்கையர்)

பாசிழை மங்கையர் பற்பலர் சுற்றா
     வீசினர் சாமரை விண்ணுறை கின்றோர்
          ஆசிகள் கூறினர் அங்கவண் நிற்குந்
               தேசிக னாரடி செங்கை குவித்தான். ......    151

(நோக்கினன் மாதவ)

நோக்கினன் மாதவ நோன்மை யுளானை
     வாக்கினில் வந்தன வந்தனை செய்தான்
          நீக்கரும் வல்வினை நீக்கினை யென்னா
               மேக்குயர் புங்கவர் விண்ணுல குற்றான். ......    152

(விண்ணிடை யேய)

விண்ணிடை யேயவன் மேவுத லோடு
     மண்ணிடை நின்றிடு மாதவன் முன்போல்
          எண்ணரு நோன்ப தியற்றலும் அன்னோன்
               கண்ணிய தென்றிசை காவலன் வந்தான். ......    153

(முன்னுறு கூற்றுவன்)

முன்னுறு கூற்றுவன் முப்பகை வென்றோய்
     உன்னிலை நோக்கி உவந்தனம் நம்பால்
          என்னைகொல் வேண்டிய தென்றலும் அன்னோன்
               தன்னடி வீழ்ந்திது சாற்றுதல் உற்றான். ......    154

(உந்திய சீர்த்தி)

உந்திய சீர்த்தி உசத்தியன் மானென்
     மைந்தன் மணஞ்செய வந்தனன் அன்னாள்
          முந்துறு நென்னல் முடிந்தனள் முன்போல்
               தந்தருள் என்றிது சாற்றுத லோடும். ......    155

(அத்தகு போழ்தினில்)

அத்தகு போழ்தினில் அந்தகன் என்போன்
     இத்தவன் வேண்டிய ஏந்திழை ஆவி
          வைத்தன மேயது வல்லையின் மீட்டிங்
               குய்த்திடு வாயென ஒற்றொடு சொற்றான். ......    156

(கொற்றவன் இங்கிது)

கொற்றவன் இங்கிது கூறி மறைந்தான்
     சொற்ற துணர்ந்திடு தூதுவன் முன்போய்
          உற்றிடு மவ்வுயி ரைக்கொடு போந்து
               மற்றவள் யாக்கையுள் வந்திடு வித்தான். ......    157

வேறு

(உடற்குளுயிர் வந்தி)

உடற்குளுயிர் வந்திடலும் புகுந்ததுமெய் யுணர்வுசிறி துயிர்த்த நாசி
     துடித்தனகால் பதைத்ததுரந் துளங்கிமுகம் விளங்கியதால் துவண்ட தாகம்
          எடுத்தனகை யசைந்தனதோ ளிமைத்தனகண் விழித்தனவால் இனைய காலை
               மடக்கொடியுந் துயிலுணர்ந்தாள் போலெழுந்தாள் எல்லோரும் மருங்கிற் சூழ்ந்தார். ......    158

(அன்னையவள் தனை)

அன்னையவள் தனைத்தழுவி இரங்குற்றாள் தந்தையெடுத் தணைத்துப் பல்காற்
     சென்னிதனில் உயிர்த்தேதன் இருகுறங்கின் மீமிசையே திகழச் சேர்த்தி
          என்னடிகள் என்கடவுள் எனதுதவப் பயனாகும் எந்தை நென்னல்
               சொன்னபடி தவமியற்றி உய்வித்தான் இவளையென்று துணிவிற் சொற்றான். ......    159

(சுற்றுகின்ற கிளைஞர்)

சுற்றுகின்ற கிளைஞர்களும் அல்லோரும் அதிசயிப்பத் தொல்லை ஞாலம்
     பெற்றதிரு அனையாள்தன் பெண்ணணங்கை முகநோக்கிப் பேதை நீயீண்
          டுற்றதுவும் இறந்ததுவும் மீண்டதுவும் முறைப்படவே உரைத்தி யென்னப்
               பொற்றொடியாள் அதுவினவிப் புகுந்ததொரு பரிசனைத்தும் புகல லுற்றாள். ......    160

(நீடியமங் கையர்)

நீடியமங் கையர்பண்ணை தன்னுடனே போந்ததுவும் நெடுநீர்க் கான்யா
     றாடியதும் மீண்டதுவுங் கடகளிறு போந்ததுவும் அதனைக் கண்டே
          ஓடியதுந் தானொருத்தி தனித்ததுவுங் கூவலிடை உலைந்து வீழ்ந்து
               வீடியதும் மீண்டதுவுந் தென்றிசைக்கண் நிகழ்வனவும் விரித்துச் சொற்றாள். ......    161

(சொன்னமொழி யது)

சொன்னமொழி யதுகேளா மிகமகிழும் வேலைதனில் துகளில் தூயோன்
     கொன்னவிலும் முத்தலைவேற் கூற்றுவன்றன் அருள்பெற்றுக் குறுக லோடு
          முன்னுறவே எதிர்சென்று பெருங்கிளையும் பன்னியுமா முனியும் பெற்ற
               கன்னியும்வந் தடிவணங்கிப் போற்றிசெய வரன்முறையே கருணை செய்தான். ......    162

(என்னுயிரும் பெரு)

என்னுயிரும் பெருங்கிளைஞர் தம்முயிரும் இல்லறத்திற் கியன்ற பன்னி
     தன்னுயிரும் நட்டோர்கள் தமதுயிரும் நின்றிடயான் தவத்திற் பெற்ற
          மின்னுயிர்தந் தருளினையால் அரிதோநிற் கிதுவம்மா வேலை ஞாலம்
               மன்னுயிர்காத் தளிப்பவனும் நீயெனவே எனதுள்ளம் மதித்த தன்றே. ......    163

(வள்ளலையுன் றிரு)

வள்ளலையுன் றிருவுளத்தை யாருணர்வார் கவுச்சிகனா மகற்கியான் பெற்ற
     தெள்ளமிர்த மனையமொழி விருத்தையெனுங் கன்னிகையைத் திசையின் நாடிக்
          கொள்ளுதற்கு வந்தனையோ கூற்றுவனாற் போனவுயிர் குறுகி மீண்டு
               மெள்ளவரும் படியழைத்துத் தந்திடுவான் வந்தனையோ விளம்பு கையா. ......    164

(எனமுனிவன் தனை)

எனமுனிவன் தனைநோக்கி முகமன்கள் இவைபலவு மெடுத்துக் கூறி
     அனையவனை யுடன்கொண்டு சுற்றத்தா ரெல்லாரு மடைந்து சூழ
          மனைவியொடும் புதல்வியொடும் மடமாதர் தங்களொடும் வல்லை யேகித்
               தனதுறையுள் இடைப்புகுந்து வீற்றிருந்தான் ஆற்றரிய தவத்தின் மேலோன். ......    165

(பின்புமொரு சிலவை)

பின்புமொரு சிலவைகல் குச்சகனை அவணிருத்திப் பெரியோய் இங்ஙன்
     என்புதல்வி தனையளிப்பன் உன்மதலை தனைக்கொண்டேயேகு கென்னத்
          தன்புதல்வற் கொடுவரலும் விருத்தையெனுங் கன்னிகையைத் தழல்சான் றாக
               அன்பினொடு நன்னாளி லோரைதனில் விதிமுறையே அருள்செய் தானால். ......    166

வேறு

(அருள்புரிந் திடுலும் அன்)

அருள்புரிந் திடுதலும் அன்பி னான்இயைந்
     திருவரும் இல்லறம் இயற்றப் பல்பகல்
          கருணைசெய் குச்சகன் கண்டு மாதவம்
               புரிதர வேவட புலத்திற் போயினான். ......    167

(போதலும் இருந்திடு)

போதலும் இருந்திடும் புனித வேதியன்
     மாதவ வலியினால் மாதின் நோன்பினால்
          மேதினி வியந்திட மிருகண் டென்னவோர்
               காதலன் உதித்தனன் கணிப்பில் காட்சியான். ......    168

(அப்புதல் வற்கியா)

அப்புதல் வற்கியாண் டாறு சென்றுழி
     மெய்ப்பிர மச்செயல் விளங்கு பான்மையால்
          முப்புரி நூல்வினை முடித்துத் தாதைபோல்
               செப்பரு மாதவஞ் செய்யப் போயினான். ......    169

(ஊற்றமா மிருககண்)

ஊற்றமா மிருககண் டூயன் என்றிடும்
     ஆற்றன்மா முனிவரன் அகல வன்னவன்
          தோற்றமா கியசுதன் தொன்மை நாடியே
               போற்றினன் ஆதியிற் புரியுஞ் செய்கடன். ......    170

(சொற்கலை தெரிமரு)

சொற்கலை தெரிமருத் துவதி யென்றிடும்
     முற்கலன் மகள்தனை முறைவ ழாதுபின்
          நற்கலை யணிகலன் நல்கி நீக்கிய
               வற்கலை யுடையினான் வதுவை முற்றினான். ......    171

(இருந்தனன் அநாம)

இருந்தனன் அநாமயம் என்னும் பேரொடு
     பொருந்திய வனத்திடைப் புதல்வர் இன்றியே
          வருந்தினன் தமரொடும் மாது தன்னொடும்
               அருந்தவன் காசியை அடைதல் மேயினான். ......    172

(அடைந்ததோர் பொழு)

அடைந்ததோர் பொழுதினில் அமரர் யாவருங்
     கடைந்திடு திரைக்கட லனைய கங்கைநீர்
          குடைந்தனன் ஆடினன் குழுமி மாதவர்
               மிடைந்திடு மறுகிடை விரைவில் மேவினான். ......    173

(பொன்றிரண் மாம)

பொன்றிரண் மாமதில் புடைய தாமணி
     கன்றிகை யென்பதோர் கடவுள் ஆலயஞ்
          சென்றனன் சூழ்ந்தனன் திங்கள் வேணியான்
               மன்றமர் திருவடி வணங்கிப் போற்றினான். ......    174

(மெய்ப்படு மறையு)

மெய்ப்படு மறையுணர் மிருகண் டென்பவன்
     அப்பெருங் கோயிலுக் கணித்தொர் பாங்கரில்
          செப்புறும் ஆகமத் தெளிவு நாடியே
               மைப்பெருங் கண்டனை வழிபட் டானரோ. ......    175

(ஆதவம் பனிமழை)

ஆதவம் பனிமழை அனிலத் தச்சுறாப்
     பாதவ மாமெனப் பருவ மாறினும்
          பேதைபங் குடையவெம் பிரானை உன்னியே
               மாதவம் புரிந்தனன் மதலை வேண்டியே. ......    176

(அருந்தவம் ஓரியாண்)

அருந்தவம் ஓரியாண் டாற்றத் தொல்லைநாட்
     பொருந்திய மூவெயில் பொடித்த புங்கவன்
          வரந்தனை உதவுவான் வந்து தோன்றலும்
               இருந்தவ முனிவரன் இறைஞ்சிப் போற்றினான். ......    177

(முந்துறு முனிவரன்)

முந்துறு முனிவரன் முகத்தை நோக்கிநீ
     சிந்தையில் விழைந்ததென் செப்பு கென்றலும்
          மைந்தனை வேண்டினன் வரத்தை நல்கென
               எந்தையும் முறுவல்செய் தினைய கூறுவான். ......    178

வேறு

(தீங்குறு குணமே)

தீங்குறு குணமே மிக்குச் சிறிதுமெய் யுணர்வி லாமல்
     மூங்கையும் வெதிரு மாகி முடமுமாய் விழியும் இன்றி
          ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி யுழப்போ னாகி
               ஈங்கொரு புதல்வன் தன்னை யீதுமோ மாத வத்தோய். ......    179

(கோலமெய் வனப்பு)

கோலமெய் வனப்பு மிக்குக் குறைவிலா வடிவ மெய்தி
     ஏலுறு பிணிகள் இன்றி எமக்குமன் புடையோ னாகிக்
          காலமெண் ணிரண்டே பெற்றுக் கலைபல பயின்று வல்ல
               பாலனைத் தருது மோநின் எண்ணமென் பகர்தி யென்றான். ......    180

(மாண்டகு தவத்தின்)

மாண்டகு தவத்தின் மேலாம் மறைமுனி அவற்றை யோரா
     ஆண்டவை குறுகி னாலும் அறிவுள னாகி யாக்கைக்
          கீண்டொரு தவறு மின்றி எம்பிரான் நின்பா லன்பு
               பூண்டதோர் புதல்வன் தானே வேண்டினன் புரிக வென்றான். ......    181

(என்றிவை துணி)

என்றிவை துணிவி னாலே இசைத்தலும் ஈசன் நிற்கு
     நன்றிகொள் குமரன் தன்னை நல்கின மென்று சொல்ல
          நின்றிடு முனிவன் போற்றி நெஞ்சகம் மகிழ்ச்சி யெய்தி
               ஒன்றிய கேளி ரோடும் உறைந்தனன் உறையும் நாளில். ......    182

(பூதல இடும்பை)

பூதல இடும்பை நீங்கப் புரைதவிர் தருமம் ஓங்க
     மாதவ முனிவர் உய்ய வைதிக சைவம் வாழ
          ஆதிதன் னருளி னாலே அந்தகன் மாள அன்னான்
               காதலி உதரத் தாங்கோர் கருப்பம்வந் தடைந்த தன்றே. ......    183

(அடைதலும் அதனை)

அடைதலும் அதனை நோக்கி அறிதரு முனிவன் ஆண்டை
     விடையவன் அடியார் யார்க்கும் வேண்டிய வேண்டி யாங்கே
          நெடிதுபல் வளனும் ஈந்து நிறைதரு திங்க டோறுங்
               கடனியல் மரபு மாற்றிக் காசியின் மேவி னானே. ......    184

(கறையுயிர்த் திலங்கு)

கறையுயிர்த் திலங்கு தந்தக் காய்சின அரவங் கவ்வக்
     குறையுயிர்ப் படிவத் திங்கள் அமிர்தினைக் கொடுத்திட் டாங்கு
          மறையுயிர்த் தருளுஞ் செவ்வாய் மதலையை வயாவின் மாழ்கிப்
               பொறையுயிர்த் தருளில் தந்தாள் பொறைதரு திருவைப் போல்வாள். ......    185

(மீனமும் முடிந்த)

மீனமும் முடிந்த நாளு மேவுற மிதுனஞ் செல்ல
     ஊனமில் வெள்ளி தானும் ஒண்பொனும் உச்ச மாகுந்
          தானமுற் றினிது மேவத் தபனனே முதலா வுள்ள
               ஏனையர் முனிவர் நாகர் இடந்தொறும் இருப்ப மன்னோ. ......    186

(நன்ணினன் புவி)

நன்ணினன் புவியின் மைந்தன் நவமணிக் குலமும் பொன்னுஞ்
     சுண்ணமும் மலருந் தாதுந் தூயமென் கலவைச் சாந்தும்
          தண்ணுறு நானச் சேறுந் தலைத்தலைக் கொண்டு தாவில்
               விண்ணவர் மண்ணு ளோர்கள் வியப்புற வீசி ஆர்த்தார். ......    187

(தேவதுந் துபிகள்)

தேவதுந் துபிகள் ஆர்த்த செய்தவை யோம்பி மாற்றும்
     மூவர்கள் அன்றி ஏனோர் முறைமுறை ஆசி செய்தார்
          யாவதென் றுணர்தல் தேற்றா திந்நகர் அன்றி நேமி
               காவல்செய் உலகம் யாவுங் களிமயக் குற்ற வன்றே. ......    188

(தந்தையும் அதனை)

தந்தையும் அதனைக் கேளாத் தடம்புனற் கங்கை மூழ்கி
     அந்தணர் முதலோர்க் கெல்லாம் ஆடகம் பலவும் நல்கி
          முந்துறு கடன்கள் ஆற்ற முளரிமேல் முனிவன் மேவி
               மைந்தனுக் குரிய நாமம் மார்க்கண்டன் என்று செய்தான். ......    189

(மறுப்படாத் திங்கள்)

மறுப்படாத் திங்கள் போல வளர்தலும் மதியந் தோறும்
     உறுப்படை உபநிட் டானம் ஓதனம் பிறவும் முற்ற
          நெறிப்படு மோரி யாண்டின் நெடுஞ்சிகை வினையும் ஆற்றிச்
               சிறப்புடை இரண்டாம் ஆண்டிற் செவிநெறி புரித லுற்றான். ......    190

(ஏதமில் ஐந்தின்)

ஏதமில் ஐந்தின் முந்நூல் இலக்கண விதியுஞ் செய்தே
     ஓதிடுங் கலைக ளெல்லாம் உள்ளுற வுணர்த்துங் காலை
          வேதமும் பிறவுங் கொண்ட வியன்பொருள் தெரிந்து மேலாம்
               ஆதியே சிவனென் றெண்ணி அவனடி அரணென் றுற்றான். ......    191

(அரனைமுன் இறை)

அரனைமுன் இறைஞ்சி யன்னான் அன்பரைத் தாழ்ந்து தங்கள்
     குரவனை வணக்கஞ் செய்து கோதறு முனிவர் தம்மைப்
          பரவியே பயந்த மேலோர் பாதபங் கயங்கள் சூடிப்
               பிரமமாம் ஒழுக்கம் நாளும் பேணினன் பிறப்பு நீப்போன். ......    192

(இந்தவா றியலு)

இந்தவா றியலுங் காலை எண்ணிரண் டான யாண்டும்
     வந்ததால் அதனை நோக்கி மைந்தனை நோக்கி வாளா
          தந்தையும் பயந்த தாயுந் தனித்தனி இருந்து சால
               வெந்துயர்க் கடலின் மூழ்கி விம்மலுற் றிரங்கி நைந்தார். ......    193

(ஆங்கது மதலை)

ஆங்கது மதலை காணா அடியிணை வணங்கி அன்னோர்
     பாங்குற அணுகி நீவிர் பருவரல் உறுகின் றீரால்
          ஈங்கிது வென்னே என்னும் யாதுமொன் றறிதல் தேற்றேன்
               நீங்குமின் அவலம் நும்பால் எய்திய நிகழ்த்து மென்றான். ......    194

(கூறிய மொழியு)

கூறிய மொழியுட் கொண்டு குமரநீ யிருக்க நம்பால்
     வேறொரு துயர மெய்தி மெலிவதும் உண்டோ மேனாள்
          ஏறுடை அமல மூர்த்தி யாண்டுநின் தனக்கீ ரைந்தும்
               ஆறுமென் றளித்தான் அந்நாள் அடைதலின் அவலஞ் செய்தேம். ......    195

(என்றுரை செய்த)

என்றுரை செய்த தாதை இடருறு முகத்தை நோக்கி
     ஒன்றுநீர் இரங்கல் வேண்டாம் உயிர்க்குயி ராகி யென்றும்
          நின்றிடும் அரனை யேத்தி அருச்சனை நிரப்பிக் கூற்றின்
               வன்றிறல் கடந்து நும்பால் வல்லைவந் தடைவன் மன்னோ. ......    196

(இருத்திரால் ஈண்டே)

இருத்திரால் ஈண்டே என்னா ஏதுக்கள் பலவுஞ் செப்பிக்
     கருத்துற நெடிது தேற்றிக் கான்முறை வணங்கி நிற்பத்
          திருத்தகு குமரற் புல்லிச் சென்னியும் மோந்து முன்னர்
               வருத்தமும் நீங்கிச் சிந்தை மகிழ்ந்தனர் பயந்த மேலோர். ......    197

(இருமுது குரவர்)

இருமுது குரவர் தத்தம் ஏவலின் ஈசன் என்னும்
     ஒருவன தருளும் அன்பு முடனுறு துணையாய்ச் செல்லப்
          பொருவரு மகிழ்ச்சி பொங்கப் பொள்ளெனப் பெயர்ந்து போகித்
               திருமணி கன்றி கைப்பேர்ச் செம்பொன்ஆ லயத்திற் புக்கான். ......    198

(என்புநெக் குருக)

என்புநெக் குருகக் கண்ணீர் இழிதர வலஞ்செய் தீசன்
     முன்புற வணக்கஞ் செய்து முடிமிசை யடிகள் சூடித்
          தென்புலத் தொருசா ரெய்திச் சிவனுருச் செய்து பன்னாள்
               அன்புடன் அருச்சித் தேத்தி அருந்தவம் இயற்றி யிட்டான். ......    199

வேறு

(ஈசனும் அவ்வழி)

ஈசனும் அவ்வழி யெய்தி நற்றவம்
     பூசனை அதனொடு புரிதி யாலது
          மாசில தாதலின் மகிழ்ந்து நீயினிப்
               பேசுக வேண்டிய பெறுதற் கென்னவே. ......    200

(ஐயனே அமலனே)

ஐயனே அமலனே அனைத்து மாகிய
     மெய்யனே பரமனே விமல னேயழற்
          கையனே கையனேன் காலன் கையுறா
               துய்யநேர் வந்துநீ உதவென் றோதலும். ......    201

(அஞ்சலை அஞ்சலை)

அஞ்சலை அஞ்சலை அந்த கற்கெனாச்
     செஞ்சரண் இரண்டையுஞ் சென்னி சேர்த்தலும்
          உஞ்சனன் இனியென ஓத வொல்லையில்
               நஞ்சணி மிடற்றினான் மறைந்து நண்ணினான். ......    202

(நண்ணிய பின்ன)

நண்ணிய பின்னரே நவையின் மைந்தனுக்
     கெண்ணிரண் டாண்டெனும் எல்லை செல்லலும்
          விண்ணிடை முகிலென விசைகொண் டொல்லையில்
               துண்ணென வோர்யம தூதன் தோன்றினான். ......    203

(பண்டுமுப் புரமெரி)

பண்டுமுப் புரமெரி படுத்த புங்கவன்
     புண்டரீ கப்பதம் பரவும் பூசனை
          கண்டனன் வெருவிமார்க் கண்டன் தன்னையான்
               அண்டுவ தரிதென அகன்று போயினான். ......    204

(தீயெழ நோக்கி)

தீயெழ நோக்கியே சென்றி டாதுசேண்
     போயதோர் வல்லியம் போலுந் தன்மையான்
          வேயென வந்துபின் மீண்டு தென்புல
               நாயகன் அடிதொழா நவிறல் மேயினான். ......    205

(இந்திரர் புகழ்தரும்)

இந்திரர் புகழ்தரும் இறைவ கேட்டியால்
     அந்தியின் நிறமுடை அண்ணல் பாலுறு
          சிந்தையன் அவனடி சேருஞ் சென்னியோன்
               சந்தத மவன்புகழ் சாற்றும் நோன்மையோன். ......    206

(ஈசன தருச்சனை)

ஈசன தருச்சனை இயற்று கின்றனன்
     ஆசறு மனத்தினன் அறிவன் அந்தணன்
          காசியின் இடத்தன்மார்க் கண்ட னாமெனப்
               பேசிய சிறப்புடைப் பெயர்பெற் றோங்குவான். ......    207

(அன்னதோர் பாலனை)

அன்னதோர் பாலனை அணுக அஞ்சினன்
     முன்னரும் ஏகலன் முக்கண் எம்பிரான்
          தன்னுழை இருந்தனன் தண்ட நாயக
               உன்னுதி இதுவென உணரக் கூறினான். ......    208

(கூறிய அளவை)

கூறிய அளவையிற் கூற்றன் துப்பினை
     ஆறிய செந்தழற் கருத்தி னாலெனச்
          சீறினன் உயிர்த்தனன் சிறுவன் ஆங்கவன்
               ஈறில னாகிய இறைவ னோவென்றான். ......    209

(தருதியென் கணக)

தருதியென் கணகரை யென்று தண்டகன்
     உரைசெய நின்றதோர் ஒற்றன் ஓடியே
          வருதிர்நும் மழைத்தனன் மன்னன் என்றிடக்
               கரணர்கள் வந்தனர் கழல்வ ணங்கினார். ......    210

(இறையவன் அவ்வழி)

இறையவன் அவ்வழி எவருங் காணொணா
     அறைகழல் அண்ணலை யருச்சித் தேத்திய
          மறுவறு காட்சியான் மார்க்கண் டப்பெயர்ச்
               சிறுவனுக் கிறுவரை செப்பு மென்னவே. ......    211

(சித்திர குத்தரென்)

சித்திர குத்தரென் றுரைக்குஞ் சீரியோர்
     ஒத்திடும் இயற்கையர் உணர்வின் மேலையோர்
          கைத்தல மிருந்ததங் கணக்கு நோக்கியே
               இத்திறங் கேளென இசைத்தல் மேயினார். ......    212

(கண்ணுதல் இறை)

கண்ணுதல் இறையவன் கருதி மேலைநாள்
     எண்ணிரண் டாண்டென இறுதி கூறினான்
          அண்ணலே சென்றதால் அதுவும் ஆங்கவன்
               பண்ணிய பூசனை அறத்தின் பாலதே. ......    213

(முதிர்தரு தவமுடை)

முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்
     பொதுவறு திருவொடு பொலிவ ராயினும்
          மதியின ராயினும் வலிய ராயினும்
               விதியினை யாவரே வெல்லும் நீர்மையார். ......    214

(ஆதலின் அமரு)

ஆதலின் அமருல கடைவ தாயினன்
     பேதுறு நிரயமும் பிழைத்து நீங்கினான்
          ஈதவன் நிலைமையென் றிருவ ருஞ்சொல
               மேதகு தண்டகன் வெகுட்சி எய்தினான். ......    215

(அந்தகன் அத்துணை)

அந்தகன் அத்துணை யமைச்ச னாகிய
     வெந்திறற் காலனை விளித்துக் காசியில்
          அந்தணன் ஒருமகன் அவன தாவியைத்
               தந்திடு கென்றலுந் தரணி எய்தினான். ......    216

(மற்றவன் காசியில்)

மற்றவன் காசியில் வந்து மாசிலா
     நற்றவன் இருந்துழி நணுகி நான்மறைக்
          கொற்றவன் பூசையுங் குறிப்பும் நோக்கியே
               எற்றிவன் வருவதென் றெண்ணி யேங்கினான். ......    217

(விழியிடைத் தெரி)

விழியிடைத் தெரிவுற மேவி மைந்தனைத்
     தொழுதனன் யாரைநீ சொல்லு கென்றலும்
          முழுதுல குயிரெலா முடிக்கும் ஆணையான்
               கழலிணை யடிமைசெய் கின்ற காலன்யான். ......    218

(போந்ததிங் கெவ)

போந்ததிங் கெவனெனப் புகலு வீரெனின்
     ஆய்ந்தது மொழிகுவன் ஆதி நாயகன்
          ஈந்திடு காலமெண் ணிரண்டு நென்னலே
               தேய்ந்தது தென்புலஞ் சேர்தல் வேண்டுநீர். ......    219

வேறு

(தடுக்குந் தன்மை)

தடுக்குந் தன்மைய தன்றிது சதுர்முகத் தவற்கும்
     அடுக்குந் தன்மையே புதுவது புகுந்ததோ அன்றே
          கொடுக்குந் தன்மைபோற் காத்திடுந் தன்மைபோற் கூற்றன்
               படுக்குந் தன்மையுங் கறைமிடற் றிறையருட் பணியே. ......    220

(ஆத லால்உமை)

ஆத லால்உமை விளித்தனன் அன்றியும் அமலன்
     பாத மாமலர் அருச்சனை புரிவது பலரும்
          ஓத வேமன மகிழ்ந்துமைக் காணிய வுன்னிக்
               காத லாகியே நின்றனன் தென்றிசைக் கடவுள். ......    221

(அடுத லோம்பிய)

அடுத லோம்பிய செய்கையன் என்பதால் அவனைக்
     கொடியன் என்பரால் அறிவிலார் செய்வினை குறித்து
          முடிவில் ஆருயிர் எவற்றிற்கும் முறைபுரிந் திடலால்
               நடுவன் என்கின்ற தவன்பெயர் உலகெலாம் நவிலும். ......    222

(சிந்தை மீதினில்)

சிந்தை மீதினில் யாவதும் எண்ணலீர் தென்பால்
     அந்த கன்புரம் அடைதிரேல் அவனெதிர் அணுகி
          வந்து கைதொழு தேத்தியே நயமொழி வழங்கி
               இந்தி ரன்பதம் நல்குவன் வருதிரென் றிசைத்தான். ......    223

(மாற்ற மிங்கிது)

மாற்ற மிங்கிது கேட்டலும் மதிமுடி அரனைப்
     போற்று மன்பர்கள் இந்திரன் உலகினும் போகார்
          கூற்று வன்றன துலகினும் நும்மொடு குறுகார்
               ஏற்ற மாகிய சிவபதம் அடைந்தினி திருப்பார். ......    224

(நாத னார்தம தடி)

நாத னார்தம தடியவர்க் கடியவன் நானும்
     ஆத லான்நும தந்தகன் புரந்தனக் கணுகேன்
          வேதன் மாலமர் பதங்களும் வெஃகலன் விரைவில்
               போதி போதியென் றுரைத்தலும் நன்றெனப் போனான். ......    225

(போன காலனும்)

போன காலனும் மறலியை வணங்கியே புகுந்த
     பான்மை யாவையும் உரைத்தலும் உளம்பதை பதைப்ப
          மேனி மார்பகம் வியர்ப்புற விழிகனல் பொழியக்
               கூனல் வார்புரு வக்கடை நிமிர்ந்திடக் கொதித்தான். ......    226

(அழைத்திர் மேதி)

அழைத்திர் மேதியை யென்னலும் போந்ததால் அதன்மேல்
     புழைக்கை மால்கரி யாமென வெரிநிடைப் புகுந்து
          நிழற்று கின்றதோர் கவிகையுந் துவசமும் நிவப்ப
               வழுத்தி வீரர்கள் சுற்றிட அந்தகன் வந்தான். ......    227

(போந்து காசியின்)

போந்து காசியின் முனிமகன் இருந்துழிப் போகிச்
     சேந்த குஞ்சியும் முகில்புரை மேனியுஞ் சினத்திற்
          காந்து கண்களும் பிடித்ததோர் பாசமுங் கரத்தில்
               ஏந்து தண்டமுஞ் சூலமு மாகியே எதிர்ந்தான். ......    228

வேறு

(வந்து தோன்றலும் மார்)

வந்து தோன்றலும் மார்க்கண்ட னென்பவன்
     அந்த கன்வந் தணுகின னாமெனச்
          சிந்தை செய்தவன் செய்கையை நோக்கியே
               எந்தை யாரடி யேத்தி இறைஞ்சினான். ......    229

(அன்ன வேலையில் அந்த)

அன்ன வேலையில் அந்தகன் மைந்தநீ
     என்நி னைந்தனை யாவ தியற்றினை
          முன்னை யூழின் முறைமையும் முக்கணான்
               சொன்ன வாறுந் துடைத்திட லாகுமோ. ......    230

(சிறிதும் ஊழ்வினை)

சிறிதும் ஊழ்வினைத் திண்மையுந் தேர்கிலாய்
     உறுதி யொன்றும் உணர்கிலை போலுமால்
          இறுதி யேபிறப் பென்றிவை யாவரும்
               பெறுவர் அன்னது பேசுதல் வேண்டுமோ. ......    231

(பீடு சாலும் பெருந்த)

பீடு சாலும் பெருந்தவர்க் காயினுங்
     கூடு றாவிது கூடுமென் றுன்னியே
          நாடி யின்னணம் நண்ணுதல் கற்றுணர்
               ஆட வர்க்கும் இயற்கைய தாகுமோ. ......    232

(ஈச னார்தம் இணை)

ஈச னார்தம் இணையடி மீமிசை
     நேச நெஞ்சினை நித்தலும் நீபுரி
          பூசை வெம்பவம் போக்குவ தன்றியான்
               வீசு பாசம் விலக்கவும் வல்லதோ. ......    233

(சிந்து வின்கட் செறி)

சிந்து வின்கட் செறிமணல் எண்ணினும்
     உந்து வானத் துடுவினை எண்ணினும்
          அந்த மின்றியென் ஆணையின் மாண்டிடும்
               இந்தி ரன்றனை எண்ணிட லாகுமோ. ......    234

(இற்ற வானவர்)

இற்ற வானவர் தம்மையும் என்னின்நீ
     றுற்ற தானவ ராகியுள் ளோரையும்
          முற்ற ஓதில் முடிவில தாதலால்
               மற்றை யோரை வகுத்திடல் வேண்டுமோ. ......    235

(கனக்கு முண்டக)

கனக்கு முண்டகக் காமரு கண்ணினான்
     தனக்கு முண்டு சதுர்முகற் குண்டுமற்
          றெனக்கு முண்டு பிறப்பிறப் பென்றிடின்
               உனக்கு முண்டென் றுரைத்திடல் வேண்டுமோ. ......    236

(வாச மாமல ரிட்டு)

வாச மாமல ரிட்டு வழிபட
     ஈச னார்முன் எனக்கருள் செய்தன
          ஆசி லாவிவ் வரசியல் ஏந்திய
               பாச சூலம் படைமழுத் தண்டமே. ......    237

(தேவர் காப்பினு)

தேவர் காப்பினுஞ் செய்தளித் தீறுசெய்
     மூவர் காப்பினும் மொய்ம்பின ராயினோர்
          ஏவர் காப்பினுங் காத்திட இன்றுநின்
               ஆவி கொண்டன்றி மீண்டும் அகல்வனோ. ......    238

(துன்ப மென்பது)

துன்ப மென்பது கொள்ளலை சூலிதன்
     அன்ப ராயினும் அந்தம்வந் தெய்திடில்
          தென்பு லந்தனிற் சேர்த்துவன் திண்ணமே
               என்பின் நீயினி யேகென் றியம்பலும். ......    239

(மைந்தன் ஆங்கது)

மைந்தன் ஆங்கது கேட்டு மறலிகேள்
     எந்தை யாரடி யார்தமக் கில்லையால்
          அந்தம் என்பதுண் டாயினும் நின்புரம்
               வந்தி டார்வெள்ளி மால்வரை ஏகுவார். ......    240

(அனையர் தன்மை)

அனையர் தன்மை அறைகுவன் ஆங்கவர்
     புனித மாதவ ராயினும் பொற்புடை
          மனையின் வாழ்க்கையின் மல்கின ராயினும்
               வினையின் நீங்கிய வீட்டின்பம் எய்துவார். ......    241

(ஏதந் தீர்சுடர்)

ஏதந் தீர்சுடர் தன்னையும் எண்ணும்ஐம்
     பூதந் தன்னையும் போதிகன் தன்னையும்
          பேதஞ் செய்வர் பிறப்பொழித் தோரவர்
               பாதஞ் சேர்தல் பரபதஞ் சேர்வதே. ......    242

(உன்னை எண்ண)

உன்னை எண்ணலர் உம்பரை எண்ணலர்
     மன்னை எண்ணலர் மாமலர்ப் பண்ணவன்
          தன்னை எண்ணலர் தண்டுள வோனையும்
               பின்னை எண்ணலர் பிஞ்ஞகன் அன்பினோர். ......    243

(நாதன் தன்னை)

நாதன் தன்னையும் நாதன தம்புயப்
     பாதஞ் சேர்ந்து பரவினர் தம்மையும்
          பேதஞ் செய்வது பேதைமை நீரென
               வேதங் கூறும் விழுப்பொருள் பொய்க்குமோ. ......    244

(செம்மை யாகிய)

செம்மை யாகிய சிந்தையர் சீரியோர்
     வெம்மை என்பதை வீட்டி விளங்கினோர்
          தம்மை யுந்துறந் தேதலை நின்றவர்
               இம்மை தன்னினும் இன்பத்தை மேவுவார். ......    245

(இன்மை யாவதி)

இன்மை யாவதி யாண்டுமில் லாதவர்
     நன்மை என்ப தியல்பென நண்ணினோர்
          புன்மை யான பொருள்விரும் பார்அவர்
               தன்மை யாவரே சாற்றவல் லார்களே. ......    246

வேறு

(அன்னார் தன்மை)

அன்னார் தன்மை தேர்கிலை வையத் தவர்போல
     உன்னா நின்றாய் ஆங்கவர் தம்பா லுறுகின்ற
          என்னா விக்குந் தீங்கு நினைத்தாய் இவையெல்லாம்
               உன்னா விக்கும் இத்தலை மைக்கும் ஒழிவன்றோ. ......    247

(தீதா கின்ற வாசக)

தீதா கின்ற வாசகம் என்றன் செவிகேட்க
     ஓதா நின்றாய் மேல்வரும் ஊற்ற முணர்கில்லாய்
          பேதாய் பேதாய் நீயிவண் நிற்கப் பெறுவாயோ
               போதாய் போதாய் என்றுரை செய்தான் புகரில்லான். ......    248

(கேட்டான் மைந்தன்)

கேட்டான் மைந்தன் கூறிய மாற்றங் கிளர்செந்தீ
     ஊட்டா நின்ற கண்ணினன் யானச் சுறுமாற்றல்
          காட்டா நின்றாய் நம்முயிர் கூற்றன் கைக்கொள்ள
               மாட்டான் என்றே எண்ணினை கொல்லோ வலியில்லாய். ......    249

(என்றான் வான)

என்றான் வானத் தேறென ஆர்த்தான் இவன்நேரே
     நின்றால் வாரான் என்று நினைந்தே நெடுநீலக்
          குன்றா மென்னப் பாலகன் முன்னங் கொலைவேலான்
               சென்றான் பாசம் வீசுவ தற்குச் சிந்தித்தான். ......    250

(எறிந்தான் பாசம்)

எறிந்தான் பாசம் ஈர்த்திடல் உற்றான் இதுபோழ்தில்
     அறிந்தான் தானும் ஈசனை ஏத்தி அடிநீழற்
          பிறிந்தான் அல்லன் மற்றினி இந்தப் பெருமைந்தன்
               மறிந்தான் அன்றோ என்றிமை யோரும் மருளுற்றார். ......    251

(ஈர்க்கும் பாச)

ஈர்க்கும் பாசங் கந்தர முற்றும் இடரில்லா
     மார்க்கண் டன்முன் தோன்றினன் நின்பால் வருதுன்பந்
          தீர்க்கின் றாம்நீ அஞ்சலை என்றே திரையாழிக்
               கார்க்கண் டத்துக் கண்ணுதல் ஐயன் கழறுற்றான். ......    252

(மதத்தான் மிக்கான்)

மதத்தான் மிக்கான் மற்றிவன் மைந்தன் உயிர்வாங்கப்
     பதைத்தான் என்னா உன்னிவெ குண்டான் பதிமூன்றுஞ்
          சிதைத்தான் வாமச் சேவடி தன்னால் சிறிதுந்தி
               உதைத்தான் கூற்றன் விண்முகில் போல்மண் ணுறவீழ்ந்தான். ......    253

(வீழுங் காலத் தம்)

வீழுங் காலத் தம்புய னாதி விண்ணோர்கள்
     வாழுந் தன்மைத் தெவ்வுல கென்னா மறுகுற்றார்
          சூழும் வேலை ஆர்த்தில தண்டத் தொகையெல்லாங்
               கீழும் மேலும் நெக்கன பாருங் கிழிந்தன்றே. ......    254

(பாங்காய் நின்ற)

பாங்காய் நின்ற தானையும் ஊரும் பகடுந்தான்
     ஏங்கா நின்றே பார்மிசை வீழா இறவுற்ற
          தீங்காய் நின்ற செய்வினை யாளர் சிதைவாகிப்
               போங்கா லத்திற் சேர்ந்தவர் தாமும் போகாரோ. ......    255

(அந்தக் காலத் தெம்)

அந்தக் காலத் தெம்முயிர் காப்பான் அரனுண்டால்
     வந்தக் கூற்றன் என்செய்வ னென்னா வடதொன்னூல்
          சந்தப் பாவிற் போற்றுதல் செய்தே தனிநின்ற
               மைந்தற் காணூஉ எம்பெரு மானும் மகிழ்வுற்றான். ......    256

வேறு

(மைந்த நீநமை)

மைந்த நீநமை வழுத்தி மாசிலா
     முந்து பூசனை முயன்ற தன்மையால்
          அந்த மில்லதோர் ஆயுள் நிற்கியாந்
               தந்து நல்கினாம் என்று சாற்றினான். ......    257

(சாற்றும் எல்லை)

சாற்றும் எல்லையில் தனது தாளிணை
     போற்று கின்றவன் பூசை செய்திடும்
          ஏற்ற தாணுவுக் கிடைய தாகவே
               கூற்றின் கூற்றுவன் குறுகுற் றானரோ. ......    258

(மறைய வன்கணும்)

மறைய வன்கணும் மன்னு தென்புலத்
     திறைய வன்கணும் இகல்பற் றின்றரோ
          அறிவர் தேர்குறின் ஐயன் செய்தன
               முறைய தாகுமால் முதன்மைப் பாலதே. ......    259

(நின்ற மைந்தனும்)

நின்ற மைந்தனும் நித்தன் மேனியை
     ஒன்றும் அன்பினால் உன்னி யேமணி
          கன்றி கையெனுங் கடவுள் ஆலயஞ்
               சென்று நாதன்றாள் சென்னி சேர்த்தினான். ......    260

(புந்தி நைந்திட)

புந்தி நைந்திடப் புலம்பி நாட்டநீர்
     சிந்தும் வேலையில் திளைத்துச் சாம்பிய
          தந்தை அன்னைதாள் தழுவித் தாழ்ந்திடா
               முந்து மாகுலம் முழுதும் மாற்றினான். ......    261

(அங்கண் சில்பகல்)

அங்கண் சில்பகல் அமர்ந்து நீங்கியே
     செங்கண் ஏறுடைச் செல்வன் மல்கியே
          தங்கு கின்றநற் றானம் யாவையும்
               பொங்கு காதலிற் போற்றல் மேயினான். ......    262

(அத்தன் ஆலயம்)

அத்தன் ஆலயம் அனைத்தும் வைகலும்
     பத்தி யோடுமுன் பரவி யேமிகுஞ்
          சுத்த னாகியே தொலைவில் ஆருயிர்
               முத்தி யெய்தினான் முழுது ணர்ந்துளான். ......    263

(விண்ணின் பாலு)

விண்ணின் பாலுளன் விரும்பிப் போற்றுவோர்
     கண்ணின் பாலுளன் கருத்தின் பாலுளன்
          மண்ணின் பாலுளன் மற்ற வன்செயல்
               எண்ணின் பாலதோ இசையின் பாலதோ. ......    264

(முண்ட கத்திடை)

முண்ட கத்திடை முளைத்த வன்துயில்
     கொண்ட வெல்லையைக் குணிக்கி லாவதென்
          அண்டம் நல்கியோன் துஞ்ச ஆங்கவன்
               கண்ட கற்பமோ கணக்கி லாதவே. ......    265

(அன்ன வன்றனை அல)

அன்ன வன்றனை அலக்கண் செய்திடுந்
     தென்ன வன்உயிர் சிதைந்து போதலால்
          பன்ன கத்திறை பரித்த பார்மிசை
               மன்னு பல்லுயிர் வளர்ந்து மல்கிற்றே. ......    266

(முடிவின் றாமுயிர்)

முடிவின் றாமுயிர் முற்றும் பற்பகல்
     மடிவின் றாகியே மலியும் பான்மையால்
          படியின் மங்கையும் பரம்பொ றாதுமால்
               அடியின் வீழ்ந்துதன் அயர்வு கூறினாள். ......    267

(கொண்டல் வண்ண)

கொண்டல் வண்ணனுங் குலிச பாணியும்
     புண்ட ரீகமேற் பொலிந்த போதனும்
          அண்டர் யாவரும் அணுகி ஆலமார்
               கண்டன் மேவுறுங் கயிலை மேவினார். ......    268

(காவி யம்மலர்)

காவி யம்மலர் கடுத்த கந்தரத்
     தேவு பொற்பதஞ் சென்னி சேர்த்தியே
          தாவில் பங்கயச் சதுர்மு கத்தனும்
               பூவை வண்ணனும் போற்றல் மேயினார். ......    269

(நீல கண்டனாம்)

நீல கண்டனாம் நிமலன் முன்னரே
     சாலும் அன்பொடுந் தாழ்ந்து போற்றலும்
          மாலை நோக்கிநீர் வந்த தென்னென
               ஏலு மாற்றினால் இதனைக் கூறுவான். ......    270

வேறு

(பங்கய மிசைவரு பகவன்)

பங்கய மிசைவரு பகவன் ஆதியா
     இங்குள தலைவர்கள் எவரும் இத்துணைத்
          தங்கள்தம் அரசியல் தவாது போற்றினார்
               அங்கவர் தமக்குநீ அளித்த வண்ணமே. ......    271

(ஐயநீ எனக்குமுன்)

ஐயநீ எனக்குமுன் அளித்த காப்பினைத்
     துய்யநின் திருவருள் துணைய தாகவே
          வைகலும் புரிகுவன் வழாது மற்றதற்
               கெய்திய தோர்குறை இசைப்பன் கேட்டிநீ. ......    272

(நின்பெருந் திரு)

நின்பெருந் திருவருள் நினைகி லாமையால்
     தென்புலக் கோமகன் சிதைந்து போயினான்
          மன்பதைக் குலம்பிற வளர்ந்து மிக்கன
               துன்பமுற் றனள்அவை சுமக்கும் பூமகள். ......    273

(தன்புடை எவற்றை)

தன்புடை எவற்றையுந் தாங்கு கின்றவள்
     துன்புற உயிரெலாந் தோன்றித் தோன்றியே
          பின்பிற வாமலே பெருகி வைகுமேல்
               என்படும் என்படும் எனது காவலே. ......    274

(இறுத்திடும் அரசி)

இறுத்திடும் அரசினுக் கெவரு மில்லைநீ
     செறுத்திடல் அந்தகன் செய்த தீமையைப்
          பொறுத்தருள் அவன்றனைப் புரிதி ஈங்கிது
               மறுத்திடல் என்றடி வணங்கி வேண்டவே. ......    275

(அந்தக எழுகென)

அந்தக எழுகென அமல நாயகன்
     முந்தருள் புரிதலும் முடிந்த கூற்றுவன்
          வந்தனன் தொழுதனன் வணங்கித் தாள்பட
               உய்ந்தனன் அடியனென் றுணர்ந்து போற்றினான். ......    276

(போற்றிடு தருமனை)

போற்றிடு தருமனைப் புராரி நோக்கியே
     சாற்றிடு கின்றனன் தயங்கு கண்டிகை
          நீற்றொடு புனைந்தெமை நினையும் நீரர்பால்
               கூற்றுவன் யானெனக் குறுகு வாயலை. ......    277

(நண்ணருங் கதி)

நண்ணருங் கதிபெறு நமது தொண்டரை
     மண்ணுல கத்தவர் மனித ரேயென
          எண்ணலை அவர்தமை யாமென் றெண்ணுதி
               கண்ணுறின் அன்னவர் கழலின் வீழ்தியால். ......    278

(கண்ணிய மனமொழி)

கண்ணிய மனமொழி காயம் ஈறதா
     எண்ணிய கருவிகள் இடைய தாகவே
          புண்ணிய மொடுபவம் புரியும் ஏனையர்
               விண்ணொடு நிரயமேல் மேவச் செய்திநீ. ......    279

(என்றருள் புரிந்து)

என்றருள் புரிந்துநின் படையொ டேகென
     மன்றமர் அடிமிசை வணங்கி முன்னரே
          பொன்றிய பகட்டொடும் பொருநர் தம்மொடும்
               தென்றிசை புகுந்துதன் செயலின் மேவினான். ......    280

(சித்தசற் புரிதரு)

சித்தசற் புரிதரு செங்கண் மான்முதல்
     மொய்த்திடு கடவுளர் முனிவர் மும்முறை
          நித்தனை வணங்கினர் கயிலை நீங்கினர்
               தத்தம துறையுளில் சார்தல் மேயினார். ......    281

(கொன்னவில் அடு)

கொன்னவில் அடுபடைக் கூற்றன் பண்டுபோல்
     இன்னமும் விளைகுவ தென்கொ லோவெனா
          மன்னருள் பெற்றமார்க் கண்டன் மாக்கதை
               பன்னினர் முன்னமும் படர்தற் கஞ்சுமால். ......    282

(ஆதலிற் குச்சகன்)

ஆதலிற் குச்சகன் அருந்த வத்திலோர்
     மாதுயிர் அளித்தனன் மால்க ளிற்றினைக்
          காதுகை நீக்கியொண் கடவு ளாக்கியே
               மேதகு விண்ணிடை மேவச் செய்தனன். ......    283

(உதவிய மிருககண்)

உதவிய மிருககண் டூயன் மால்அயன்
     முதலவர் புகழ்தரு முதன்மை பெற்றனன்
          விதிமுறை அவனருள் மிருகண் டொப்பிலோர்
               புதல்வனைப் பெற்றனன் புரிந்த நோன்மையால். ......    284

(அப்பெருந் திரு)

அப்பெருந் திருமகன் ஆற்றும் நோன்பினால்
     தப்பரும் விதியினைத் தணந்து கூற்றுவன்
          துப்பினை அகற்றியே தொலைவு கண்டுபின்
               எப்பொழு தத்தினும் இறப்பின் றாயினான். ......    285

ஆகத் திருவிருத்தம் - 2269



previous padalam   5 - மார்க்கண்டேயப் படலம்   next padalammArkkaNdEyap padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]